Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 83
- Thread Author
- #1
விவாதம் - 41
"ஜீவா சார் நீங்க மியூச்சுவல் டிவோர்ஸ் பண்ண பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு என்னோட கேண்டீன் நம்பருக்கு கால் பண்ணுங்க. நானே வந்து பேப்பர்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிறேன். இவர்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்னு எனக்கு தெரியும்" என்று மகிழினி நம்பிக்கையாக சொல்ல,
"சித்ரா, முதல்ல நான் உன்னையும் அவரையும் கோவில்ல பார்க்கும் போதே, உங்க ரெண்டு பேர்குள்ள என்னமோ ஒன்னு இருக்குன்னு நினைச்சேன். இப்போ பாரு யாருமே எதிர்பார்க்காம உனக்கு அவர் கூடவே கல்யாணமும் நடந்திருக்கு. இதெல்லாம் கண்டிப்பா கடவுளோட செயல் தான். அதனால நீ உனக்கு அமைந்த வாழ்க்கையை நல்லபடியா வாழ முயற்சி பண்ணு" என்று தன் தோழிக்கு அறிவுரை கூறினாள் மீனா.
"அவரு என்கூட வாழ்ந்தா அவரோட வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்காது. அதனால தான் நான் இந்த விவாகரத்து ஏற்பாடே பண்ணுறேன். அதனால நீ எனக்கு அறிவுரை சொல்றதை விட்டுட்டு, சீக்கிரம் உன் மாமாகிட்ட சொல்லி எங்களுக்கு டிவோர்ஸ் வாங்கி தரச்சொல்லு" என்றவள் ரேஷ்மாவை பார்த்தபடி ஆட்டோவில் ஏற, அடுத்த சில நிமிடங்களில் மகிழினி கேண்டீன் வாசலை சென்றடைந்தது.
வழியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்த கொடிவீரனின் மனதை படிக்கத் தெரியாமல், மகிழினியும் அதே அமைதியை கடைபிடித்தாள். ஆட்டோவுக்கு பணம் தந்தவன் தன் பைக்கில் ஏறி கிளம்பத் தயாராக,
"கேவி சார் வந்து சாப்பிட்டுப் போங்க" என்று மகிழினி அழைக்க,
தன் ஆத்திரத்தை வெளி காட்டாத கொடிவீரன் மலர்ந்த முகத்துடன், "நீங்கதான் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க மேடம். நீங்களே வயிறு நிறைக்க உண்டு மகிழுங்கள். நான் வரேன்" என்றவன் பைக்கை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
மகிழினியோ அவன் மனநிலையை புரிந்து கொள்ள முயலாது, தன் அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கினாள்.
கொடிவீரன் தன் அலுவலக பையை எடுப்பதற்காக, மீண்டும் மகிழினியின் வீட்டுக்கு செல்ல, வாசலிலேயே வழி மறித்தாள் அவனின் அத்தை கீதா.
"என்ன மருமகனே உங்க பொண்டாட்டிக்கு என்னதான் வேணுமாம்?" என்று கீதா கேட்க,
"ம்... வேற என்ன டிவோர்ஸ் தான்" என்றவன் வேகமாக மாடிக்கு சென்று அலுவலகப் பையை தூக்கிக்கொண்டு கீழே இறங்க, அவனிடம் சின்ன லஞ்ச் பாக்ஸ் ஒன்றை நீட்டினார் கீதா.
"என்ன அத்தை மதிய சாப்பாடா?" என்று கேட்க,
"ம்... உன் பொண்டாட்டி அவங்க பாட்டிக்கு போன் பண்ணி, நீ காலையில் இருந்து சாப்பிடல. அதனால லஞ்ச் பேக் பண்ணி கொடுத்துடுங்கன்னு சொல்லிருக்கா."
சிரித்துக்கொண்டே, "பாட்டி எங்க" என்று வினவினான்.
"அவங்க உன் பொண்டாட்டி பண்ற பைத்தியக்கார வேலையை நினைச்சு ரொம்ப கவலையா இருக்காங்க. ஏன் உங்க முன்னாடி வரக்கூட சங்கோஜப்படுறாங்க" என்று கீதா சொன்னதும், கொடிவீரன் வாசலில் தன் காலணிகளை கழட்டியவன், பாட்டி இருக்கும் வீட்டுக்குள் நுழைய, பாட்டி சோபாவில் கவலையில் அமர்ந்து இருந்தார்.
"என்ன பாட்டி இப்போ நீங்க கவலைப்படுற மாதிரி இங்க என்ன நடந்துச்சு?" என்று கேட்டு உரிமையாக அவரின் அருகில் அமர்ந்து கொண்டான்.
"என்ன தம்பி இப்படி கேக்குறீங்க? கல்யாணம் முடிந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள இந்த பொண்ணு டிவோர்ஸ் அது இதுன்னு சொன்னா நல்லாவா இருக்கு" என்று முகம் வாடினார்.
"இதுக்கு ஏன் நீங்க இவ்ளோ டென்சன் ஆகுறீங்க?"
"அவளோட சந்தோஷத்தை மட்டுமே நினைச்சு, உன்னைப்பற்றி யோசிக்காம முடிவு எடுத்தா, நான் எப்படிப்பா இதெல்லாம் பாத்துகிட்டு கவலைப்படாமல் இருக்க முடியும்" என்று பாட்டி அவர் மனதில் உள்ள கவலையை சொன்னார்.
“பாட்டி உங்க பேத்தி என் சந்தோஷம் முக்கியம்னு நினைச்சு தான் இந்த விவாகரத்தையே கேக்குறாங்க.” என்றான்.
“என்னப்பா சொல்ற?” என்று பாட்டியும்,
“என்ன மாப்பிள்ள சொல்றிங்க?” என்று கீதாவும் கேட்க,
“ம்... ஆமா அவங்களால எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காதாம். ஏன் இன்னும் கேட்டா, என் மனசுல அவங்க இல்லாம, சூழ்நிலை காரணமா தான், நான் அவங்க கழுத்துல தாலி கட்டினேனேனு நினைச்சுகிட்டு இருக்காங்க. இனிமே அவங்க மேல நான் எந்த அளவுக்கு பிரியம் வச்சிருக்கேன்னு எடுத்துச் சொல்லணும்.”
“நீங்க சொன்னா அவ புரிஞ்சிப்பாளா?” என்றார் கீதா.
“புரியுற மாதிரி சொல்லணும் அத்தை.”
“இவதான் அதுக்கு எல்லாம் அவகாசமே தராமல் விவாகரத்து அது இதுன்னு சொல்லுறாளே தம்பி.”
“பாட்டி கடைக்குப் போய் பணம் தந்து மிட்டாய் வாங்குற மாதிரிலாம், விவாகரத்து பண்ண இயலாது. அதுக்குன்னு ஒரு சட்ட திட்டம் இருக்கு. எப்படி இருந்தாலும் கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் தம்பதிகளா ஒரே வீட்ல வாழனும். அப்பதான் டிவோர்ஸ் கேட்க முடியும். இதெல்லாம் உங்க பேத்தி நம்ம சொன்னா ஏத்துக்கமாட்டாங்க. அதனால தான் நானே அவங்கள வக்கீல் ஆபீஸ்க்கு அழைச்சிட்டு போனேன்.” என்றான் விளக்கமாக.
“அப்ப ஒரு வருஷத்துக்கு பிறகு என்ன பண்ணப்போறீங்க?”
“ம்... நாங்க அம்மா அப்பாவாக மாற என்ன பண்ணணுமோ அதைப் பண்ண வேண்டியது தான்.” என்றதும் கீதா வாயில் கைவைக்க, “ஏன் அத்தை நீங்க வேற. இங்க பாருங்க பாட்டி எனக்குமே நேத்து நடந்த திடீர் கல்யாணத்துல விருப்பம் இல்ல. இத்தனைக்கும் நான் என் சிஎம் மேல அளவுக்கு அதிகமான அன்பை வச்சிருக்கேன். என்னாலையே இந்த கல்யாணம் நடந்த விதத்தை முழுசா ஏத்துக்க முடியல. இப்படி இருக்கும் போது உங்க பேத்தி என்னை அவங்க நண்பனா மட்டுமே பார்த்தவங்க. இப்போ நான் ஒரு கயிறு கட்டினதால, அவங்களோட உடல், பொருள், ஆவி எல்லாம் கொடுத்து என்னை நேசிக்கணும்னு எந்த அவசியமோ, அவசரமோ இல்ல.”
“அப்ப உங்க ரெண்டு பேர் நடுவுல எப்போ தான் இந்த சங்கடம் எல்லாம் நீங்கி, நீங்க அன்னியோனியமா வாழ ஆரம்பிப்பிங்க?” என்றார் பாட்டி.
“ம்... கண்டிப்பா இதெல்லாம் சீக்கிரம் நடக்கும். ஆனா, அதுக்கு முன்னதாக, அவங்க என் அன்பை உணர்ந்து, எனக்காக அவங்க பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வரணும். கண்டிப்பா வருவாங்க. நான் வர வைப்பேன்” என்றான் உறுதியாக.
“அதுவரை?”
“வேற என்ன, அது வரைக்கும் என் பொண்டாட்டியை காதலிக்க வேண்டியது தான்” என்று சிரித்தான்.
“அது சரி.”
“இதுதான் சரி அத்தை. நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இவங்க கண்ணை பார்த்துதான் இவங்க மேல ஆசைப்பட்டேன்னு தெரிந்தபோதே, அவங்கள அளவுக்கு அதிகமா நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா, என் காதலை அவங்க உணர்ந்து என்னை ஏத்துகிட்ட பின்னாடி தான், நான் இவங்கள மேரேஜ் பண்ணனும்னு நினைச்சேன். பட், சிட்டுவேசன் எங்கள இப்போ கணவன் மனைவியா உங்க முன்னாடி நிக்க வச்சிருக்கு. ஆனா, ஒன்னு மட்டும் நான் சொல்லுறேன். என் அன்பை புரிஞ்சிகிட்டு என் சிஎம் எனக்காக அவங்க மனசை மாத்திப்பாங்க. பட், அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். அதுவரை நான் அவங்கள லவ் பண்ணிட்டு மட்டும் இருக்கேன். அவங்க என் அன்பை புரிஞ்சிகிட்ட பின்னாடி, நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து ஒருவரை ஒருவர் லவ் பண்ணிக்கிறோம். சோ, நீங்க இதெல்லாம் நினைத்து கவலைப்படாம ஜாலியா என் அத்தை கூட ஊர் சுற்றிப் பாத்துட்டு வாங்க” என்று தன்னம்பிக்கையுடனும், தன் காதல் மீதுள்ள நம்பிக்கையுடனும், கொடிவீரன் தெளிவாக அவன் மனதில் உள்ளதை எடுத்து சொன்னான்.
“நீங்க இவ்வளவு நம்பிக்கையா பேசுறதை கேட்க, எனக்கு சந்தோசமா இருக்குபா. உன் அத்தை சொன்னது போல, எல்லாம் அந்த ஈசனின் அருள். சரி நீ பார்த்து வேலைக்கு கிளம்பு.” என்றார் பாட்டி.
“ம்... சரி பாட்டி. ஆமா எங்க சுரேஷ் வேணு?”
“வேணு அவன் அப்பனை அழைச்சிட்டு அவன் அத்தைக்கும் உனக்கும் கல்யாண பரிசு வாங்க போயிருக்கான்.”
“சரி பாட்டி. நான் வரேன். அத்தை நான் கிளம்புறேன். சிஎம் வந்தா நீங்க அவங்கள எதுவும் கேட்டு வைக்காதிங்க. அதேபோல அம்மா அக்காக்கு போன் பண்ணி லைவ் டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க.”
“எங்களுக்கு எல்லாம் தெரியும். நீங்க கிளம்புங்க வரும்போது எனக்கு...”
“பஞ்சாமிர்தம் வேணுமா?”
“இல்ல பலூடா வாங்கி வாங்க.”
“ம்... கண்டிப்பா அத்தை” என்றுவிட்டு அலுவலகம் சென்றவன் தன்னோட வேலைகளை எல்லாம் முடித்த பின்னர், மதிய உணவை சாப்பிட நினைத்த நேரம், அவன் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் நினைவுக்கு வர, ஆசையாக திறந்தவன் வயிறார உண்டான். வேலை முடியும் வேளை, ஜீவாவிடமிருந்து அழைப்பு வந்தது.