- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
11
மாலை மயங்கும் வேளையில் சென்னையில் வந்திறங்க, ஆரத்தியுடன் சிரித்த முகமாக வந்த சந்திராவைப் பார்த்த தாரிணிக்கு மயக்கம் வராத குறைதான். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்லும் வழியில், “ஹேய் பாக்கி எப்படிடி ஆன்ட்டி சமாதாமானாங்க? நான் கோவப்படுவாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்” என தோழியின் காதைக்கடித்தாள்.
“ம்... முதன்முதல்ல எங்க வீட்டுக்கு வரும்பொழுது எந்தவித உறுத்தலும் இருக்கக்கூடாதில்லையா. அதான் பேசி சரி பண்ணினேன்.” நம்பாமல் பார்த்த தோழியின் பார்வையை தவர்த்தவளுக்கு, முந்தின தினம் நடந்தது கண்முன் விரிந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் திருப்பூர் செல்ல, சென்னை வந்தவளுக்கு தாயை எப்படி சமாளித்து சம்மதிக்க வைப்பதென்ற பயம் எழுந்தது. மாலை வீடு திரும்பிய தாயிடம் நடந்த அனைத்தும் சொல்லிவிட்டாள். கோவத்தில் கைநீட்டப் போனவர் தன்னை அடக்கி, “இன்னும் எத்தனை பேரை நீ கஷ்டப்படுத்துவ? உனக்காக உனக்காகன்னு.. ப்ச்... போடி” என்று மனம் கலங்கியவரைக் கண்டு தானும் பதறி, “அம்மா! தாரிணி...”
“என்னடி தாரிணி தாரிணின்னு உருகுற? அப்ப உனக்காக உருகுறவங்க மனுஷங்களா தெரியலையா? சிந்து பற்றி ஒரு செகண்ட் நினைச்சிப் பார்த்தியா? நீ யாரைத்தான் நினைச்சிப் பார்த்த. அப்படி நினைச்சிருந்தா மேரேஜ் பண்ணிக்கிற வரை போயிருப்பியா?” என்றார் தன்னையறியாது.
“அம்மாஆஆ..” என்ற அதிர்ந்து அழைத்ததும்தான் தன் வார்த்தையின் வீரியம் உணர்ந்து, “சே... என்னை பேச வைக்கிறடி நீ? உன்னோட செயலால என்னோட இயல்பு மாறிப் பேசுறேன்.”
“சாரிம்மா. உங்களை காயப்படுத்தணும்னு இல்ல. அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்டு சரின்னு சொன்னதும் தான்ம்மா...”
“சரின்னு சொல்லாம? சொல்லு சரின்னு சொல்லாம என்ன சொல்லச் சொல்ற? ஜம்பமா எல்லார் முன்னாடியும் எங்கண்ணனுக்கு பொண்ணு கொடுங்கன்னு கேட்டுட்டு, உங்கப்பாவுக்கு கால் பண்ணினா, என்னடி பண்ணுவாங்க? அந்த டைம்ல உன்னோட கௌரவம்தான் பெருசுன்னு சம்மதிச்சிட்டாங்க. இனிமேல் என்கிட்ட பேசாதே” என்று சுற்றிலும் வேலையாட்கள் யாராவது இருக்கிறார்களா என பார்க்க, இல்லையென்றதும் தான் தெரிந்தது, மகள் அனைவரையும் ஒதுக்கியிருப்பது.
தாயின் வார்த்தையில், “அம்மாஆஆ” என அதிர, அதை சிறிதும் கண்டுகொள்ளாது நகர்ந்தவரிடம், “ம்மா.. இப்படில்லாம் சொல்லாதீங்கம்மா. நான் செஞ்சது தப்புத்தான். ப்ளீஸ்மா என்கிட்ட பேசுங்க” என்றபடி தாயை வழிமறித்து, “சாரிம்மா” என கெஞ்சினாள்.
“உன்னோட சாரி எனக்குச் சொந்தமானதில்லை. உங்கப்பாகிட்ட போய்ச் சொல்லு உன் சாரியை” என்று மகளின் கையை நகர்த்தி வேகமாக தன்னறைக்குள் சென்றவர்தான், அன்று முழுவதும் வெளியே வரவேயில்லை. மகளின் கெஞ்சலோ, அழுகையோ அவரை அசைக்கவில்லை.
காலையில் வெளியே வந்த சந்திரா, தன் அறை வாயிலிலேயே சுருண்டு படுத்திருந்த மகளைப் பார்த்து பதறியபடி வந்து, “அம்மு எழுந்திரு” என்றெழுப்ப, தாயின் குரல் கேட்டு எழுந்த வேகத்தில், “அம்மா சாரிம்மா. ப்ளீஸ்ம்மா பேசாம மட்டும் இருந்துராதீங்கம்மா.”
அழும் மகளையே பார்த்திருந்தவர் அவளின் கண்துடைத்து, “ஓகே இதான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் இந்த மாதிரி எதாவது நடந்தது, அத்தோட என்னை மறந்திரு” என கட்டளையிட்டு, “சரி கிளம்பு இன்னைக்கு வர்றவங்களை வரவேற்கணும்” என்றார்.
அதை தற்பொழுது நினைத்தவள் நினைவுகளைத் தள்ளிவிட்டு, “அம்மாவை சமாதானப்படுத்த முதலில் பயந்தேன் தர்ணி. அப்புறம் சரியாகிட்டாங்க” என்றாள்.
இரவு உணவின் போது, “சந்திரா காலையில சீனுகிட்டப் பேசணும். நியாபகப்படுத்துறியா?” என்று கணபதி கேட்டார்.
“ம்... சரிங்க. நானே அவன்கிட்ட பேசணும்னு இருந்தேன்.”
“ம்மா... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். தாரிணி கல்யாணத்துக்கு சிந்து அண்ணி, அண்ணா வந்திருந்தாங்க” என்றாள்.
“அம்மூ என்ன சொல்ற? இதை ஏன் முதல்லயே சொல்லல?”
“இல்லம்மா. இருந்த டென்சன்ல மறந்திருச்சி” என்றாள்.
மகளை முறைத்து, “நேற்று காலையில மேரேஜாகிருக்கு. கோவத்துல திட்டுறதுக்காகக் கூட போன் பண்ணல. இவனை என்ன செய்யலாம்? ஒரு நிமிஷம்” என்று கைபேசியை எடுத்தவர், ஸ்ரீனிவாசனுக்கு அழைப்பு விடுத்து அவனின், ‘ஹலோ’ தன்னை வந்து சேரும் முன், “சீனு சென்னையிலயா இருக்க?” என்றார் நேரடியாகவே.
“ஏன் அத்தை? என்ன விஷயமா பேசணும்?”
“தெரிஞ்சே தெரியாத மாதிரி எனக்கும் நடிக்கத் தெரியும். விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடியே, என்ன விஷயமா பேசணும் கேட்கிற. நான் பேசத்தான் கூப்பிடுறேன்னு உனக்கு தெரிஞ்சிருக்குல்ல. இப்ப எங்கயிருக்க சொல்லு?”
“இங்க சென்னைலதான் இருக்கேன்” என்றான் குரல் இறங்க.
“அப்ப சரி. காலைல வீட்டுக்கு வா பேசணும்.”
“இல்ல வேண்டாம். நடந்ததுக்கு யாரும் பொறுப்பில்லை. பொறுப்பாக்கவும் வேண்டாம்” என்றவன் அங்கு செல்வதை தவிர்க்க நினைத்தான்.
“நீ வீட்டுக்கு வர்ற. இது என்னோட ஆர்டர். இப்ப குட் நைட்” என்று சந்திரா போனை வைத்தார்.
ஒரு பக்கம் சந்தோஷமும், மறுபக்கம் சங்கடமும் சேர போனையே பார்த்திருந்தவன் சின்ன ஏக்கப் பெருமூச்சுடன் வைத்தான்.
“என்னமா? என்ன சொல்றான் உன் மருமகன்?”
“ம்... நடந்ததுக்கு யாரும் பொறுப்பில்லையாம். யாரையும் பொறுப்பாக்கவும் வேண்டாம்னு வரல சொல்றான்” என்று மகளையே பார்க்க, அதில் பாகீரதி தலைகவிழந்தாள்.
“ஓ... நீ என்ன சொன்ன?”
“கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டேன். இவன்கிட்ட பேசிட்டு, சிந்துட்டயும் பேசிக்கலாம்.”
“ஏய் பாக்கி யாரந்த சிந்து? ஓவரா பில்டப் கொடுத்துக் குடும்பமே சிந்து பாடுறீங்க. இதுவரை நீ அந்த நேம் யூஸ் பண்ணினதே இல்லையே?” என்றாள் பாகீரதியின் புறம் குனிந்து.
“அ...அது தரணி, சிந்து அண்ணி, அண்ணனுக்கு பார்த்த பொண்ணு” என்று திணறி முடிக்க,
“வாட்?” என்று அதிர்ந்ததில் குடித்த தண்ணீர் புரையேறியது.
“ஹேய் பார்த்து” என்று ப்ரவீண் தலையில் தட்டினான்.
அவனையே பார்த்திருந்தவள் முறைத்தபடி அவன் கைகளை விலக்க, என்னவென்பது போல் அவன் பார்க்க, வேகவேகமாக சாப்பிட்டு எழுந்தாள்.
அவள் பின்னே வந்த பாகீரதி தோழியின் மனம் புரிந்தவளாய், “என்ன தர்ணி இவ்ளோ அவசரம்?” என்றாள் வம்படியாக.
“ஒண்ணுமில்லையே. சாப்பிட்டு முடிச்சதால எழுந்து வந்துட்டேன்.”
“ஓ... ஒண்ணுமே இல்லையா! சரி நீ ரெஸ்ட் எடு. நான் ஹாலுக்கு போறேன்” என நகர்ந்தவள் கைபிடித்து, “ப்ளீஸ் சொல்லுடி. யார் அந்த சிந்து? ஏற்கனவே நேத்திலிருந்து கன்ப்யூஸ் பண்றாங்கடா ரேஞ்சில புலம்பிட்டிருக்கேன். நான் பாவம்லயா. உங்கண்ணனுக்கு பார்த்த பொண்ணுன்னா நிச்சயம் முடிஞ்சிதா. எப்போ முடிஞ்சிது? என்கிட்ட சொல்லல?” என்று படபடப்பாக கேட்டவள் இதயம், பதில் வருவதற்குள் தாறுமாறாய் எகிறியது.
அவளின் அவஸ்தையைப் பார்த்து பாகீரதி சிரிக்கவும், அங்கு வந்த ப்ரவீணோ மனைவியின் பதற்ற முகத்தையே பார்த்திருக்க, “ப்ச்.. சிரிக்காத பாக்கி. எனக்கு பிபி எகிறுது.”
“ஓகே ஓகே. சிந்து அண்ணியை ஒரு பங்க்ஷன்ல பார்த்து, பொண்ணு கேட்டு, ரெண்டு மாசம் கழிச்சி மேற்கொண்டு பேசிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அண்ணனோ, அவங்களோ நேர்ல பார்த்துக்கிட்டதோ, பேசினதோ கிடையாது. உன்னை கேட்டப்ப அவங்க சுத்தமா என் மைண்ட்ல இல்ல தர்ணி. அண்ணாவுக்கு நீதான்னு இருக்கு. என்ன பண்றது விதியை மாத்தியா எழுத முடியும்” என்று கண்ணடித்தாள்.
“உன்னை...” என அவளை விரட்டியபடி, “அறிவிருக்காடி. ஒரு பொண்ணை பேசியிருக்கீங்க. அந்தப் பொண்ணு மனசுல இவங்கதான் ஹஸ்..ஹஸ்பண்ட்னு நினைச்சிருந்தா அது பாவம்லயா. இது அவங்களை ஏமாத்தின மாதிரிதான?”
“நீ நினைக்கிறது தப்பு தர்ணி. அவங்க அப்படி நினைக்கிறவங்க கிடையாதுன்னு உறுதியா சொல்ல முடியும். ப்ராக்டிகலா யோசிக்கிறவங்க. நேத்து நடந்த மேரேஜை அவங்க அண்ணன் சொல்லாமலா இருப்பாங்க. நமக்கு தர்மசங்கடம் கொடுக்கக்கூடாதுன்னு தான் அவங்க போன் கூட பண்ணல. அம்மாவா அவங்க அண்ணனைக் கூப்பிட்டப்ப கூட மாட்டேன்னுதான் சொன்னாங்க. சோ யூ என்ஜாய் பேபி.”
“உன்னை என்ன பண்றேன் பாரு” என்று அவளை விரட்ட, இருவரும் சிரித்தபடி ஓடியாடி சண்டையிட்டதை பார்த்தவன், அந்த நிமிடம் முழுதாக உணர்ந்தான். ‘இவள்தான் தனக்கானவள் என்று.’
இரவு தங்கையுடனேயே தாரிணியை தங்க வைக்க, பெரியவர்களின் சந்தேகப் பார்வைக்கு எதுவும் சொல்லாமல், அவனெடுத்த முடிவில் தெளிவாக இருந்தான்.