- Thread Author
- #1
விவாதக் காதல்
அத்தியாயம் - 1
"இல்ல இல்ல. இது சரிவராது. மாப்பிள்ள போலீஸ்காரர்னா எனக்கு வேணாம். உண்மையைச் சொல்லனும்னா எனக்கு பயமா இருக்கு." என்று தலையை சொறிந்தார் சித்ரமகிழினியின் தாய் வழிப் பாட்டி.
"என்னமா இப்படி சொல்றிங்க? மாப்பிள்ள சொக்க தங்கம் தாயி. சென்னையில இருக்குற ஆதரவற்ற இல்லத்துல தான்மா அவரு வளந்து இருக்காரு. அவரோட பத்து வயசுல ஒரு பெரிய மனுஷன், மாப்பிள்ளைக்கு தேவையான மொத்த செலவையும் ஏத்துகிட்டு, அவரே மாப்பிளையை படிக்க வச்சி, இப்போ அவரே சென்னையில மாப்பிள்ளைக்கு வேலையும் வாங்கி தந்து இருக்காருமா." என்றார் புரோக்கர்.
"நீ சொல்றது எல்லாம் சரி தான்ப்பா. சித்ராவும் தங்கமான பொண்ணு. அவளும் அவ அண்ணனும், இவளோட பதினாறு வயசுல, ஒரு விபத்துல அவங்க அம்மா, அப்பாவை இழந்து அனாதையா இங்க வந்தாங்க. அன்னையில இருந்து இன்னைவரைக்கும், அவங்கள என் பிள்ளைங்களா தான் நான் வளத்துட்டு வரேன். எனக்கு அவ வயசுல என் மகன் வழி பேர பிள்ளைங்க இருந்தாலும், எனக்கு சித்ரா மேல ஒரு தனிப் பாசம் இருக்கு. அதான் நீங்க போலீஸ்கார மாப்பிள்ளைன்னு சொன்னதும் கொஞ்சம் பயமா இருக்கு." என்றார் நம் கதையின் நாயகி சித்ரமகிழினியின் பாட்டி.
"நீங்க என்னம்மா போலீஸ்காரர்னா, இந்த படத்துல வர மாதிரி ஆளுங்கன்னு நினைச்சீங்களா? இல்ல இல்லமா. இந்தப் பையன் தங்கமான பிள்ளைமா." என்று மாப்பிள்ளைக்காக வாதாடினார் புரோக்கர்.
"சரி. நான் எதுக்கும் சித்ராகிட்ட பேசிட்டு உனக்கு தகவல் சொல்றேன். நீ மாப்பிள்ள போட்டோவை கொடுத்துட்டுப் போ." என்று கையை நீட்டிய பாட்டியிடம், மாப்பிளை போட்டோவை தந்த புரோக்கர், தன் தலையை தடவ,
"சரி சரி. இந்தா 500 ரூபாய். மாப்பிள்ளையை மட்டும் சித்ராக்கு பிடிக்கட்டும். அப்புறமா உன்னை வெயிட்டா கவனிக்கிறேன்" என்று சொன்ன பாட்டி, மாப்பிளையின் புகைப்படத்தை பார்த்தார்.
பார்த்ததும் கவரும் முகம். மையிட்டது போல கண்கள். கருமையான தலை முடி. அடர்த்தியான புருவம். மெழுகு போல சவரம் செய்த கன்னங்கள் என்று அழகான தோற்றதுடன் காட்சி தந்த, அந்த புகைபடத்தில் இடம் பெற்றிருந்த இளைஞனை பார்த்ததும் பாட்டி மனதில், இவன் தான் சித்ராக்கு ஏற்ற மன்னவன் என்று ஒரு பட்சி சொல்லியது.
"என்னம்மா மாப்பிள அழகா இருக்காரா?" என்று புரோக்கர் கேட்டார்.
"யாருக்கு பாட்டிம்மா மாப்பிள்ளை பார்க்கறீங்க? உங்களுக்கா?" என்று சிரித்த முகத்துடன் கையில் கொண்டு வந்த திருநீரை பாட்டி நெற்றியில் இட்டுவிட்டாள் சித்ரமகிழினி.
“இந்த வயசுக்கு மேல கல்யாணம் பண்ணி நான் என்ன பண்ண போறேன். உனக்கு தான்மா மாப்பிள பாக்குறேன். இந்தா இந்த மாப்பிள்ள போட்டோவை பார்த்து உனக்கு பிடிச்சி இருக்கான்னு சொல்லு. அவரை பெண் பார்க்க வர சொல்லலாம்.” என்று பாட்டி சொன்னதும், சித்ரா மாப்பிளையின் புகைப்படத்தை தன் கையில் வாங்கியவள் கண் முழுதும் நிறைந்து இருந்தான் அவன்.
“என்னமா. மாப்பிளையை வர சொல்லலாமா?” என்று பாட்டி கேக்க,
“உங்க இஷ்டம் பாட்டி. எனக்கு இது நாள்வரை நீங்கதானே எல்லாமே பார்த்து பார்த்து பண்ணீங்க. இப்போ மட்டும் ஏன் என் சம்மதத்தை கேக்குறீங்க. நீங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாலும் நான் பண்ணிப்பேன்.” என்று சொன்ன மகிழ் மாப்பிளையின் போட்டோவை கையோடு எடுத்து சென்றவளின் செயலை பார்த்து பாட்டி முகம் மலர்ந்தார்.
“சரி. நாளைக்கு மாப்பிளையை பெண் பார்க்க அம்மன் கோவிலுக்கு வர சொல்லுங்க. நான் இவளை அங்க அழைச்சிட்டு வரேன்.” என்று பாட்டி சொன்னதும், புரோகர் மனநிறைவோடு அங்கு இருந்து வெளியேறினார்.
“சித்ரா, சித்ரா.” என்று பாட்டி அழைத்ததும், இந்த நொடிவரை மாப்பிள்ளையை புகைப்படம் வாயிலாக ரசித்து கொண்டு இருந்தவள், அந்த புகைப்படத்தை தன் தலையணை கீழ் பதுக்கி வைத்தப்படி வேகமாக பாட்டியின் குரலுக்கு பதில் தரச் சென்றாள்.
சித்து நாளைக்கு சாயங்காலம் அந்த போட்டோல இருக்குற தம்பியை நம்ம அம்மன் கோவிலுக்கு வர சொல்லிருக்கேன். நீ தயாரா இரு. நம்ம அங்க வச்சி மாப்பிளையை பார்த்து பேசிடலாம்.” என்று பாட்டி சொன்னதும், மகிழினியின் மனதில் ஒரு வித பயம் படர்ந்தது.
“என்னம்மா. போகலாம் தானே?” என்று பாட்டி கேக்க.
“ஹாங் போகலாம். ஆனா அண்ணன்கிட்ட சொல்ல வேணாவா?” என்று இவள் கேட்டாள்.
“ஏன் சொல்லணும்? நீ ஒருத்தி இருக்குறது நினைவு இல்லாமல் அவன் பாட்டுக்கு கூடப் படிக்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊரை விட்டே ஓடி போயிட்டான் இல்ல. இனிமே அவன்கிட்ட நமக்கு என்ன பேச்சு.” என்று கத்திய பாட்டியை சமாதானம் செய்தாள் சித்ரமகிழினி.
தனக்கு கல்யாணம் என்ற செய்தியை கேட்டு சித்ரமகிழ்க்கு அன்றைய தினம் முழுதும் வேலை ஓடாமல் போக, எப்படியோ அன்றைய தினத்தை தள்ளி மறுநாள் மாலையே இவளே எட்டி பிடித்தது போல எண்ணம் தோன்றியது.
மாலை 5 மணி அளவில். பாட்டியுடன். ஒரு ஆட்டோவில் டிசைனர் சாரீயில் சித்ரமகிழினி அம்மன் கோவிலுக்கு செல்ல, அங்கே புகைப்படத்தில் பார்த்த அதே வாலிபன். கூடுதலாக தன் நெற்றியில் சந்தன பொட்டு குங்குமத்துடன், அம்மன் சன்னதியின் படிக்கட்டில் புரோக்கருடன் அமர்ந்து இருந்தான்.
கோவில் வாசலில் சூர தேங்காய் உடைப்பதை பார்த்து, அடித்து பிடித்து ஓடி ஒரு துண்டு தேங்காயை எடுத்துக் கடித்தவன் எதிரில் நின்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்த மகிழினியை பார்த்து, தன் தேங்காய் பத்தையை முதுகுக்கு பின்னாடி ஒளித்தவனின் தோளை தட்டினார் புரோக்கர்.
“என்ன மாப்பிள்ள தம்பி. போலீஸ் வேலைக்கு போனாலும் இன்னும் தேங்காய் பொறுக்குற தொழிலை விடல போல?” என்று புரோக்கர் கிண்டலாகக் கேட்டார்.
ஏனோ அந்த மாப்பிள்ளையை சித்ரமகிழினி கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
“என்ன மாப்பிள்ள தம்பி. உங்களுக்கு தேங்காய்னா ரொம்ப பிடிக்குமோ?” என்று பாட்டி கேக்க.
மாப்பிள்ளை கையில் இருந்த தேங்காயை தன் பாக்கெட்டில் வைத்து கொண்டவன், “என் பல நாள் பசியை போக்கியது இந்த தேங்காய் தான்.”
என்றான் மகிழினியை பார்க்க வந்த மாப்பிள்ளை பையன்.
“சரி சரி. மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா பேசட்டும். நம்ம இப்படி ஓரமா உக்காருவோம்” என்று சொன்னபடி புரோக்கர் மாப்பிள்ளையயை பார்த்து கண் அடித்தார்.
“என்ன சித்ரா. நீ எதாவது மாப்பிளைக்கிட்ட பேசணுமா?” என்று பாட்டி கேட்டதும். மகிழ் ‘இல்லை’ என்று தலை அசைக்க,
“ஐயோ என்னமா நீ. மாப்பிள உன் கூடப் பேசதான் ரெண்டு மணி நேரமா காத்துகிட்டு இருக்காரு.” என்றார் புரோக்கர்.
“சரி சரி. சித்து போமா. சாமியை கும்பிட்டுட்டு போய் பேசிட்டு வாங்க.” என்று பாட்டி சொன்னதும், சித்ரமகிழினி தன் பாட்டியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சாமி சன்னிதானத்தை சுற்றி வர, மாப்பிள்ளைப் பையன் மகிழினியை சுற்றினான்.
“மகிழ் ஒரு நிமிஷம் இருங்க. இப்படியே நான் உங்கள சுத்திகிட்டு இருந்தா, நான் மறுபடியும் ஊர் போய் சேர நள்ளிரவு ஆகிடும். சோ பிளீஸ்.” என்று மாப்பிள்ளை சட்டென்று மகிழினியை வழி மறைத்து பேச, சித்ரா குனிந்த தலையை நிமிராமல் அதே இடத்தில் நின்று இருந்தாள்.
“சரி. அங்க தான் தெப்பகுளம் இருக்கு. வாங்களேன் அங்க போய் பேசலாம்.” என்று மாப்பிள்ளை சொன்னதும். சித்ரமகிழினி தெப்பக்குளத்தை நோக்கி நகர பின் தொடர்ந்தான் மாப்பிள்ளை பையன்.
“இதோ இங்க உக்காரலாமா?” என்று அவன் கைகளை காட்ட, சித்ரமகிழினியும் அவன் சொன்ன இடத்தில் அமர, பத்தடி தள்ளி மாப்பிளை பையனும் அமர்ந்து கொண்டான்.
“ஏன் எதுமே பேசாம இருக்கீங்க?” என்று அவன் அவள் முகத்தை பார்த்து கேட்க,
“என்ன பேசுறது?” என்று விழித்தாள் மகிழினி.
“என்னங்க நீங்க. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? நம்ம கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு இஷ்டமா? இல்ல இந்த சினிமால எல்லாம் வர மாதிரி, உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. நீங்க நல்லா படிச்சி இந்த ஊருக்கு கலெக்டர் ஆனதுக்கு பிறகு தான் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு எதாவது கொள்கை லட்சியம் எல்லாம் வச்சி இருக்கீங்களா.” என்று படபடவென மாப்பிள்ளை பையன் பேசினான்.