• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் – 49

Joined
Jan 15, 2026
Messages
99
விவாதக் காதல் – 49

மகிழினி கணவனை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம், "அத்தை அத்தை இந்தாங்க தண்ணி” என்று கூப்பாடு போட்டு கொண்டே வேணு அறைக்குள் நுழைய, அந்த சத்தத்தில் கொடிவீரன் எழ, எதிரில் மகிழினி நின்றிருந்தாள்.

“என்ன மாமா சாப்பிடாம படுத்துட்டீங்க. ஓ... அந்த ரேஷ்மா ஆண்ட்டி கூட சாப்பிட்டுட்டு வந்துட்டீங்களா? போச்சு போங்க எங்க அத்தை வேற உங்களுக்கு தானியம் எல்லாம் போட்டு தோசை ரெடி பண்ணி, உங்களுக்கு பிடிச்ச சாம்பார் எல்லாம் செய்து கொண்டு வந்துருக்காங்க ஆனா, நீங்க தூங்குறத பார்த்தா இதெல்லாம் நான்தான் சாப்பிடணும் போலயே” என்று வேணு மூச்சு விடாமல் பேச, மகிழினி கடுங்கோபத்துடன் கொடிவீரனை முறைத்தாள்.

“ஏங்க இந்த குட்டி சாத்தான் சொல்றத எல்லாம் நம்பாதீங்க. நான் பசி மயக்கத்துல தான் தூங்கிட்டேன். ரேஷ்மா கூட போய் நான் பச்சத்தண்ணி கூட குடிக்கலைங்க. என்னை நம்புங்க” என்றான் பாவமாகவே.

“ஓ... பச்சத்தண்ணி கூட குடிக்கலைன்னா அப்போ சூடா மசாலா பால் குடிச்சீங்களா?” இடுப்பில் கை வைத்து மாமனை அத்தையிடம் கோர்த்து விடுவதிலேயே குறியாக இருந்தான்.

“அடேய் உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன். ஏன்டா என் பொண்டாட்டிகிட்ட என்னை இப்படி மாட்டி விடுற. இப்போ என்னடா, உனக்கு நான் பொண்டாட்டி கையாள அடிவாங்குறதை பார்த்தா தான், நிம்மதியா தூக்கம் வருமா. ஏங்க இவன் ஆசைக்காகவாது நீங்க என்னை ரெண்டு அடி அடிச்சுக்கோங்க. ஆனா, பிளீஸ் இப்படி அந்த அழகான கண்ணால என்னை கொல்லுற மாதிரி முறைக்காதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றான்.

“என்ன கஷ்டமா இருக்கு?”

“ம்... உங்க விழிகள் பேசும் அழகை ரசிக்காம, இப்படி உங்கிட்ட விதண்டாவாதம் மட்டுமே பேசிகிட்டு இருக்க ரொம்ப கஷ்டமா இருக்குங்க.”

“நீங்க ஆள் எப்படி? எல்லா பொண்ணுகிட்டயும் இப்படி தான் விழி, பழி, குழின்னு பேசி கரெக்ட் பண்ண பார்ப்பீங்களோ?” என்றாள் கிண்டலாக.

“ம்க்கும் கட்டின பொண்டாட்டியையே கரெக்ட் பண்ண கையாலாகாத மக்கு புருஷன்ங்க நான். நான் எப்படிங்க வேற பொண்ண எல்லாம் கரெக்ட் பண்ண ட்ரை பண்ணப்போறேன்?” என்றான் அப்பாவியாக.

“ஓஹோ!”

“ஏன் என்னை பார்த்தா எல்லா பொண்ணுங்க கூடவும் கடல போடுற ஆளு மாதிரி உங்களுக்கு தெரியுதா?”

“நீங்க கடல போட்டாலும் சரி. அவங்க உங்க தலையில கல்லை போட்டாலும் சரி. எனக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம். வாங்க வந்து சாப்பிடுங்க.”

“என்னங்க நீங்களாவே டின்னர் மாடிக்கு கொண்டு வந்துட்டீங்களா?” நம்பாது பார்த்தான் மனைவியை.

“பின்ன அதுவா மாடிக்கு ஏறி தனியா வருமா?”

“ஐயோ செம்ம காமெடிங்க. கண்டிப்பா சாப்பிட்டு முடிச்சிட்டு மறுபடியும் ஒருமுறை நீங்க சொன்ன காமெடியை நினைச்சு சிரிக்கிறேன்.”

“ஹலோ என்ன லந்தா?”

“சரி கோவப்படாதிங்க. ஆமா வேணு, பாட்டி, அத்தை எல்லாம் சாப்பிட்டாச்சா?”

“ம்... ஆச்சு.”

“நீங்க சாப்ட்டிங்களா?”

“இன்னும் இல்ல.”

“ஓ... புருஷன் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவிங்களா” என்றதும் மகிழினி முறைக்க, “ஓகே ஓகே முறைக்காதிங்க” என்றான்.

“பாஸ் நான் நட்பின் அடிப்படையில தான் சாப்பாடு கொண்டு வந்தேன். இப்போ சாப்பிட வரிங்களா, எனக்கு தூக்கம் வருது.”

“ம்... நட்பு.! அது சரி. நீங்க போங்கங்க நான் டிரஸ் மாத்திட்டு சாப்பிடுக்குறேன். நீங்க நேரத்தோட சாப்பிட்டு போய்ப்படுங்க.” என்றவன் இரவு உடையை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றவன், சில நிமிடங்களில் வெளியே வர, மகிழினி இரவு உணவை ஹாட்பாக்ஸில் இருந்து தட்டில் எடுத்து வைத்தாள்.

“கீழ உக்கார முடியுமா? இல்ல பெட்ல உக்காந்து சாப்பிட போறிங்களா?”

“நான் எடுத்து வச்சி சாப்பிடுக்குறேன். நீங்க போங்க.”

“ப்ச் நீங்க தானே சொன்னிங்க. யாராவது பரிமாறனா நல்லா சாப்பிடலாம்னு. நீங்க உக்காருங்க நானே எடுத்து வைக்கிறேன்.”

“யாராவது ஊட்டி விட்டா கூட தான் நான் நல்லா சாப்பிடுவேன்.” என்று பல்லைக் காட்டினான்.

“ஓ... எத்தனை பேர் சாருக்கு ஊட்டி விட்டுருக்காங்க?”

“ம்... என் அப்பா. என் அம்மா. என் அக்கா. அப்புறம்...” என்று நிறுத்த, அவளோ முறைக்க, “சரி வேணாம் விடுங்க. அதை தெரிந்து நீங்க என்ன பண்ண போறீங்க?” என்றான்.

“பரவாயில்ல சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன்.”

“உங்களுக்கு என்னை பற்றி தெரிஞ்சிக்க, இது மட்டும்தான் கேட்க தோணுதா?”

“ஏன் வேற என்ன உங்கள பற்றி நான் தெரிஞ்சிக்கணும்?”

“ம்... எப்போடா என் பொண்டாட்டி, என் காதல ஏத்துப்பான்னு நான் காத்து இருக்குறத பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கணும்னு நீங்க ஆசைப்படவே மாட்டிங்களா?”

“காதலா? நீங்க யாரையாவது காதல் பண்ணுறீங்களா? ப்ச் பார்த்திங்களா என்கிட்ட நீங்க சொல்லவே இல்ல. சரி யார லவ் பண்ணுறிங்க?” என்றவளுக்கு ஆர்வமும் ஒருவித எரிச்சலும் இருந்தது.

“ம்... இருங்க வரேன்” என்று எழுந்து சென்றவன் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வர,

“ஹலோ சார் பொண்ணு யாருன்னு கேட்டா, சுவத்துல இருக்குற கண்ணாடியை ஏன் எடுத்துட்டு வரீங்க?” என்று கேட்டாள்.

“ம்... என் கண்ணுக்குள்ள இருக்குற என் காதலியை தான் உங்க கண்ணுக்கு தெரியல. அட்லீஸ்ட் இந்த முகம் காட்டும் கண்ணாடியில தெரியுற பிம்பத்தையாவது பார்த்து தெரிஞ்சிக்கோங்க, என் காதலி நீங்கதான்னு.” மகிழினியின் முன்பு முகம் காட்டும் கண்ணாடி இருந்தாலும் அவளின் பார்வை என்னவோ கொடிவீரனை மட்டும்தான் உள்வாங்கி இருந்தது.

“ம்... முகம் காட்டுற கண்ணாடிக்கு, உங்க மனசையும் காட்டுற சக்தி இருந்தா, இந்நேரம் நம்ம ஜாலியா ஹனி மூன் போய் இருக்கலாம்.”

“ஓ... சாருக்கு அந்த ஆசையெல்லாம் வேற இருக்கா?”

“நான் என்ன உணர்ச்சி இல்லாத ஜடமா. எனக்கும் என் பொண்டாட்டி கூட தேன்நிலவு போகணும். பார்க், சினிமா, பீச், ஹான் முக்கியமா கோவிலுக்கு எல்லாம் போகணும்னு ஆசை இருக்காதா?”

“ஓஹோ சாருக்கு வேற என்ன எல்லாம் ஆசை இருக்கு.?”

“அதெல்லாம் ஏகப்பட்டது இருக்குங்க.”

“ஏகப்பட்டதுல இப்போ மனசுக்குபட்ட ரெண்டு மூணு விஷயத்தை சொல்லுங்க கேப்போம்.” என்றாள்.

“ம்... நம்ம ஒருவரை ஒருவர் புரிஞ்சிகிட்டு, நம்ம லைஃபை அழகா ஸ்மூத்தா கொண்டு போகணும். அங்கேங்க கல்லு, முள்ளு, மேடு, பள்ளம் எல்லாம் வந்தா கூட ஸ்லிப் ஆகலாம். பட் அங்கேயே ஸ்லீப் ஆகக்கூடாது. காலையில சண்ட போட்டா கூட நைட்டுக்குள்ள சமாதானம் ஆகிடணும்.”

“ஓ... எப்படி? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க சாரி கேட்டீங்களே. அப்படி கேட்டா.”

“ம்... ஆமா. தப்பு பண்ணா சாரி கேக்குறது தப்பு இல்லையே.”

“ம்... தப்பு இல்ல.”

“வெளி ஆளுகிட்ட எல்லாம் அனாவசியமா நான் சாரி கேட்கமாட்டேன். என் சாரிக்கு வேல்யூ இருக்கு.”

“அப்போ என்கிட்ட எப்படி கேட்டீங்க?”

“ப்ச் நீங்க என்ன வெளி ஆளா. நீங்க என் பொண்டாட்டிங்க. அந்த சிவன் கூட தன்னோட பாதியை தான் சக்திக்கு தந்தான். ஆனா, நான் இந்த வேலன், என்னைக்கு உங்க கழுத்துல தாலி கட்டினேனோ, என்னோட ஆதியில் இருந்து அந்தம்வரை அன்னைக்கே உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணிட்டேன்.” என்று தன் காதலைச் சொன்னான்.

“வேலனா! அது யாரு வேலன்.?”

”அதுவும் நான்தான்.”

“என்ன சொல்லுறீங்க? உங்க பெயர் கொடிவீரன் தானே.?”

“என் முழுப்பெயர் கொடிவீர கந்தவேலன். நான் எங்க அம்மா வயத்துல இருக்கும்போது, எங்க அம்மாவுக்கு மஞ்சள்காமாலை ரத்தத்துல கலந்து சாக பிழைக்க கஷ்டப்பட்டு இருக்காங்க. அப்போ என் அப்பா எங்க அம்மாவையும் என்னையும் நல்லபடியா அந்த கடவுள் காப்பாற்றி கொடுத்தா, அந்த பழனி ஆண்டவனுக்கு வெள்ளியில வேல் சாற்றி, எனக்கும் அந்த கோவில் சன்னதியில பெயர் வச்சி, சாமிக்கு அபிஷேகம் பண்ணுறேன்னு வேண்டுகிட்டாறாம். அதான் எனக்கு இவ்ளோ பெரிய பெயர்.”

“ம்...” என்று அவள் உதட்டை சுளிக்க,

“என்னை யாருக்கு எப்படி கூப்பிடணும்னு தோணுதோ அப்படி கூப்பிடுவாங்க.”

“அப்போ வேலனும், வீரனும் உங்க பெயர் தானா?”

“ம்... ஆமா. ஏன் கேக்குறீங்க?” என்று கேட்டான்.

“ஹ்ம் சும்மா தான். சரி சாப்பிடுங்க ஆறிடப்போகுது.”

“ம்... நீங்களும் இங்கேய சாப்பிடுங்களேன்.

‘இல்ல ஒரு தட்டுதான் இருக்கு. நீங்க சாப்பிடுங்க.” என்றாள் மகிழினி.

“நான், என் அம்மா, அக்கா எல்லாரும் ஒரே தட்டுல தான் சாப்பிடுவோம். அப்படி சாப்பிடலாமே.”

“என்ன ஒரே தட்டுலையா?”

“ம்... அம்மாவே எங்களுக்கு உருண்டை பிடிச்சி கொடுப்பாங்க. நாங்க வயிறார சாப்பிடுவோம். ம்... நம்மளும் இந்த ஒரு தட்டுலயே சாப்பிடலாம். நீங்களே உங்க கையாள சாப்பாடு கொடுங்க. நான் சாப்பிடுக்குறேன்” என்றான்.

“நானா?”

“ம்... ஆமா. ஏன் எனக்கு நீங்க உங்க கையாள சாப்பாடு தரமாட்டிங்களா?”

“ம்... இல்ல நான்...” என்று அவள் தடுமாற,

“அட கொடுங்கங்க. ரொம்ப கஞ்சம் போலங்க நீங்க. உங்க காதலை தான் எனக்கு தர மாட்டுறீங்கன்னு பார்த்தா, உங்க கையாள சாப்பாடு கூட தரமாட்டீங்க போல.”

“சரி ரொம்ப ஓட்டாதீங்க. இந்தாங்க சாப்பிடுங்க” என்றவள் தன் கையால் கணவனுக்கு இரவு உணவை எடுத்து கொடுக்க,

“நீங்களும் சாப்பிடுங்க” என்று இன்று மனைவியிடம் மனம் விட்டு பேசிய சில நிமிடங்களை ரசித்தபடியே, அவள் தந்த உணவையும் ருசிக்க தொடங்கினான்.
 
Joined
Jan 15, 2026
Messages
99
மகிழினியும் இவனுடன் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நேரம் கொடிவீரனின் கைபேசியில் சசியிடம் இருந்து வீடியோ கால் அழைப்பு வர, மலர்ந்த முகத்துடன் அழைப்பை எடுத்தான். அம்மா அக்கா இருவரும் போன் திரையில் தெரிய, அதே நேரம் மகனும், மருமகளும் அருகருகில் அமர்ந்து இருக்க, இவர்களை சுற்றி இரவு உணவு இருப்பதை பார்த்து முகம் மலர்ந்தார் ஜெயா.

“என்னப்பா உன் பொண்டாட்டியும் நீயும் சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டோமா?”

“அதெல்லாம் இல்லம்மா.”

“அம்மா எப்படி இருக்கீங்க? அக்கா சாப்பிட்டீங்களா?” நலம் விசாரித்தான் கொடிவீரன்.

“சாப்புடுறது இருக்கட்டும்டா தம்பி. அங்க என்ன நடக்குது” என்று சிரிப்புடன் கேட்டாள் சசி.

“இங்க யாருமே நடக்கலையே.”

“டேய் மொக்கை போடாதடா.” என்றாள் சசி.

“அம்மாடி சித்ரா நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணுங்க. நான் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.”

“நாங்க முடிச்சாச்சும்மா. நீங்க சொல்லுங்க” என்றாள் மாமியாரிடம்.

“என்னம்மா எதாவது பிரச்சனையா?”

மகனின் பதற்றக் குரலில். “அச்சோ அதெல்லாம் இல்லப்பா. வர ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லா இருக்கு. அதான் சித்ராக்கும், சசிக்கும் தாலி பெருக்கி போடலாம்னு நினைச்சேன். உங்களுக்கு வேலை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வெள்ளிக்கிழமை காலையிலேயே இங்க வர முடியுமான்னு பாரேன்.”

“இல்லம்மா எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா...” என்று மனைவியைப் பார்த்து, “நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று கேட்டான்.

“ம்... உங்க இஷ்டம்.”

“என்ன!?” என்றான் உடனே ஒத்துக்கொண்டதை நம்பமுடியாது.

“உங்க இஷ்டம்ன்னு சொன்னேன்.” என்று அழுத்திச் சொன்னாள்.

“பின்ன என்னப்பா, அதான் உன் பொண்டாட்டியே சொல்லிட்டா இல்ல. நீ சீக்கிரம் வந்து உன் கையாள தாலி செயினை பண்ணிக்கொடு” என்றார் ஜெயா.

“ம்... சரிம்மா பண்ணிடலாம். நான் வந்து பாத்துக்குறேன்.”

“சரிப்பா. அப்புறம் நான் கீதா அண்ணியையும், சித்ராவோட பாட்டியையும் நாளைக்கே இங்க வர சொல்லிட்டேன். அதனால நீங்க வெள்ளிக்கிழமை காலையில இங்க இருக்குற மாதிரி வந்துடுங்க. அப்போ தான் அன்னைக்கே தாலி செயின் பண்ண முடியும்” என்றார் ஜெயா.

“ம்... சரிம்மா நான் பாத்துக்குறேன்.” மன நிறைவோடு கைபேசி இணைப்பை துண்டிக்க,

“நீங்க தாலி செயின் பண்ணுவிங்களா?” என்று கேட்டாள்.

“ம்... அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். நீங்க எப்படி இந்த சடங்குக்கு சம்மதம் சொன்னிங்க?”

“ஏன் அப்போ வேணான்னு சொல்லவா?” என்று கொஞ்சம் அதட்டலாய் கேட்டாள்.

“இல்லங்க. இனிமே நீங்க என்னையும் சேர்த்து வேணான்னு சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க” என்றான் புன்னகையுடன்.

“அவ்ளோ நம்பிக்கை எல்லாம் என்மேல வைக்காதிங்க. நான் தேள் மாதிரி. நேரம் வரும்போது கொட்டிடுவேன்.”

“என்ன தேளா? ஐயோ எனக்கு தேள்னா பயம்ங்க. பிளீஸ் பிளீஸ் என்னை காப்பாத்துங்க. எங்க தேளு?” என்றவனின் கரங்கள் பயத்தில் மகிழினியின் இடையை தன்வசம் அணைத்துக்கொள்ள, இதை சற்றும் எதிர்பாராத பேதையவள் உடல் நடுங்கி கொடிவீரனை அவளிடம் இருந்து தள்ள, அவளின் இதயவடிவு பதக்கத்தை கொண்ட தங்க செயின், அவன் சட்டை பட்டனில் மாட்டிக்கொண்டது.

அவனிடம் இருந்து பின் வாங்கியவளின் கால்கள், கீழே இருந்த பாத்திரத்தில் தடுக்க, தடுமாறப்போன பெண் மலரை, மேலும் தன் இதயத்தோடு இணைத்து கொண்டவனின் கரங்களில், புது விதமான தவிப்போடு தயங்கி இருக்க, அவளின் கண்கள் இரண்டிலும் நிறைந்து இருந்த சமயம், சட்டென்று அவன் வசம் இருந்து எழுந்தவள் தன் புடவையை சரி செய்துகொள்ள, இவனோ தர்மசங்கடமாக உணர்ந்தான்.

“சாரிங்க நீங்க திடீர்னு தேள்னு சொன்னதும் நான் பயந்துட்டேன்.”

“ம்...” என்றாள் ஓரெழுத்தில்.

வேணும்னே எல்லாம் பண்ணலைங்க. பிளீஸ் என்னை தப்பா நினைச்சிடாதீங்க” என்றான் கெஞ்சலாக.

“இல்ல அதெல்லாம் நினைக்கல. சரி நீங்க டேப்லெட் போட்டுட்டு படுத்துக்கோங்க. நான் கீழே போறேன்.”

“இருங்க நானே பாத்திரம் எல்லாம் கீழே கொண்டு வந்து தரேன்.”

“இல்ல நான் பார்த்துக்குறேன். நீங்க படுங்க” என்றவள் அவன் முகத்தை பாராமல் வேகமாக பாத்திரங்களை அள்ளி கொண்டு கீழே சென்றாள்.

தன் கையை மடக்கி மேசை மேல் குத்தியவன், “ச்சீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கேன். இப்போ தான் அவங்களே நம்ம கண்ணபார்த்து நார்மலா பேச ஆரம்பிச்சாங்க. அதுக்குள்ள இப்படி அதிகமா உரிமை எடுத்து சொதப்பி வச்சிட்டோமே. போச்சு இனிமே இவங்க நம்ம இருக்குற பக்கம் கூட வரமாட்டாங்க. போதாக்குறைக்கு அம்மா வேற தாலி பெருக்கி போடணும்னு இவங்கள அழைச்சிட்டு வர சொன்னாங்க. ம்... இப்போ நடந்த விஷயத்தை எல்லாம் நினைத்து பார்த்து நம்மள நம்பி வருவாங்களா? என்னடா வீரா நீ இப்படி பண்ணி வச்சிருக்க. ப்ச்... இப்போ இவங்க என்ன மனநிலையில இருப்பாங்கன்னு கூட தெரியலையே பேசாம கீழ போய் என்ன ஏதுன்னு பாக்கலாமா. ஆமா இங்க இருந்துகிட்டு தூங்காம புலம்புறதுக்கு, நேரா கீழேயே போய் அவங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்த்துடுவோம்” என்று தனக்குள் பல நூறு கேள்விகளை கேட்டுக்கொண்டு கீழே சென்றான்.

கொடிவீரனை பார்த்த கீதா, சோபாவில் அமர்ந்தபடி தன் பையில் துணிகளை அடுக்கி கொண்டு இருக்க, இவனின் கண்கள் என்னவோ மகிழினியின் வதனத்தை காண தான் ஏங்கி இருந்தது.”

“என்ன மாப்பிள உங்க அம்மா போன் பண்ணி விவரம் சொன்னாங்களா?” என்று கீதா கேட்டதும்

“ஹாங் சொன்னாங்க அத்தை” என்றவன் மகிழினி அறையை எட்டிப்பார்க்க

“அங்க யாரை தேடுறீங்க உங்க பொண்டாட்டியையா?” என்று கீதா சத்தமாக கேட்க,

“என்ன தம்பி மகிழினியையா தேடுறீங்க?” என்று பாட்டி சமையல் அறையில் இருந்து வெளியே வர, அவரை தொடர்ந்து மகிழினி ப்ளாஸ்கில் சுடு தண்ணீருடன் வந்தாள்.

“நானே உங்களுக்கு சுடுதண்ணி கொண்டு வந்து தரலாம்னு தான் இருந்தேன்” என்று அவள் இயல்பாக சொன்னதும் தான் கொடிவீரனின் இதயம் சீராகத் துடிக்க ஆரம்பித்தது.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top