• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 44

Joined
Jan 15, 2026
Messages
89
விவாதக் காதல்

விவாதம் – 44


“இங்க பாரும்மா. என் மாறன் என்னை நல்லா தான் பாத்துக்குறாரு” என்றாள் மகி.

“அடியே வக்கீலுக்கு படிச்சும், வாழ்க்கையை தொலைத்த என் அருமை மகளே. நல்லா பார்த்துக்குறதுனா நீ போகும்போதும், வரும்போதும் உன்னையே பார்த்துகிட்டு இருக்குறதுக்குப் பெயர் நல்லா பார்த்துக்குறது இல்ல. உன்மேல அன்போடு காதலா பார்த்துக்கணும். அதுக்கு பெயர்தான் நல்லா பார்த்துக்குறது.”

“அத்தை” என்று மாறன் இடையிட,

“வாயை மூடுடா. ஏதோ என் மக கழுத்துல தாலி கட்டிருக்கனு பாக்கறேன். இல்லைனு வை...”

“உங்க புருஷனை பழனிக்கு அனுப்பி வச்ச மாதிரி, என்னையும் அனுப்பி வைச்சிடுவீங்களா?”

“ஏய் அவரை பற்றி எல்லாம் நீ பேசாத.”

“அவர பற்றி நீங்களே பேசுறது இல்ல” என்றான் பதிலுக்கு.

“ஐயோ மாமா கொஞ்சம் சும்மா இரு.” என்றாள் மகி.

“இப்போ என்ன நான் உன் அம்மா தலையில பேனா பார்த்துகிட்டு இருக்கேன். சும்மா இருனு சொல்ற.”

“ஆமா இந்த வாய்க்கு ஒன்னும் குறை இல்ல. புருஷனா லட்சணமா வேலைக்கு போய், என் மகளை காப்பாத்தாம, அவ சம்பாதிப்பாலாம். இவரு கபடி ஆடிக்கிட்டு சுத்திகிட்டு இருப்பாராம். இவர் கெட்டக்கேடுக்கு நான் இவர பார்த்ததும் மாப்பிளன்னு தூக்கி மடியில வச்சி கொஞ்சணுமாம்” என்று கீதா நக்கலாக பேச,

“அம்மா” என்று அதட்டினாள் மகி.

“இப்போ என்ன உங்க பிரச்சனை? நான் கபடி ஆடுறது தான் உங்க பிரச்சனையா?”

“ஆமா நீங்க கபடி விளையாட போறது எனக்கு பிடிக்கல. நான் இவ அப்பாகிட்ட சொல்லி நீங்க படிச்ச படிப்புக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கி தர சொல்லுறேன். இந்த கபடி காத்தாடி எல்லாம் ஏரகட்டிட்டு வேலைக்கு போய் என் பொண்ணை காப்பாத்துற வழியை பாருங்க.”

“அப்படி இல்லைனா?”

“நான் என்னைக்குமே உங்கள என் மருமகனா ஏத்துக்க மாட்டேன். நீங்களும் என்னை இனி அத்தைன்னு கூப்பிடக்கூடாது” என்றார்.

“அம்மா” என்று மகி அலற,

“அத்தை என்ன இதெல்லாம்? ஏன் இப்படி பேசுறீங்க?” என்று கொடிவீரன் கேட்க,

“ஹ்ம் சரி மகி. நான் கிளம்புறேன். நீ வரியா இல்ல இங்க இருந்துட்டு வர போறியா?”

“நானும் வரேன் மாமா” என்றாள் அவள்.

“ம்... சரிடா தம்பி. நான் கிளம்புறேன். நேரம் இருக்கும்போது உன் பொண்டாட்டியை கூப்பிட்டுக்கிட்டு பாண்டிச்சேரிக்கு வா.” என்றான் மாறன்.

“அண்ணா இருங்க. இப்போ தானே வந்திங்க. அதுக்குள்ள எங்க கிளம்பிட்டிங்க?”

“நம்ம டீம் பசங்களுக்கு ட்ரைனிங் தரணும்டா. நான் கிளம்புறேன்.”

“மேட்ச் எப்போ?”

“நாளைக்கு ஈவினிங்.”

“அப்போ ரெண்டு நாள் அண்ணி உங்க கூடதானே இருப்பாங்க.”

“ம்... ஆமாடா. அவ என்னை விட்டு எங்க போக போறா.”

“அப்போ அண்ணி இங்க இருக்கட்டும். நீங்க போய் டீம் பசங்க கூட இருங்க. நான் நாளைக்கு வேலை முடிச்சிட்டு அண்ணியை மேட்ச் நடக்குற இடத்துக்கு அழைச்சிட்டு வரேன்.”

“ஐயோ வேணாம் கொழுந்தனாரே. என் மாறனுக்கு மரியாதை இல்லாத இடத்துல நானும் இருக்க மாட்டேன். நாங்க கிளம்புறோம்.” என்றதில் கீதா விழிக்க, அங்கிருந்த மகிழினியைப் பார்த்தவள், “இவங்க தான் உன் பொண்டாட்டியா? ஹாய்மா” என்றாள்.

“வணக்கம்ங்க” என்று மகிழினி சொல்ல,

“சாரி. நாங்க உங்களுக்கு வாழ்த்து சொல்ல தான் வந்தோம். பட் வந்த இடத்துல எங்க பர்சனல் ப்ராப்ளம்ல உங்கள கண்டுக்க முடியல.”

“அச்சோ இல்லங்க. பரவாயில்ல.”

“சரிடா தம்பி. நாளைக்கு ப்ரீயா இருந்தா மேட்ச் பார்க்க வா.”

“ம்... ட்ரை பண்ணுறேன் அண்ணா.” என்றான் கொடிவீரன்.

“என்ன கொழுந்தனாரே கபடி களமே கதின்னு படுத்து இருந்த காலம் எல்லாம் மறந்து போச்சா. இப்போ நேரம் இருந்தா வரேன்னு சொல்லுறீங்க.” என்று கிண்டலாகக் கேட்டாள் மகி.

“என் சின்ன மாப்பிளை வாழ்க்கைக்கு எது தேவையோ அதில் சரியா இருக்கார். மத்தவங்க மாதிரி கபடி கதகளினு இவரு ஊர் சுத்திகிட்டு இருந்தா, இன்னைக்கு இவரால இவரோட அக்காவுக்கு கால்யாணம் பண்ணி வச்சிருக்க முடியுமா?”

“ஐயோ அதெல்லாம் இல்ல அத்தை. கால மாற்றம் எனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? அப்போ ஒரு டைம்ல சோறு தண்ணி இல்லாம கபடி களத்துல காட்டுத்தனமா துள்ளி குதிச்சுகிட்டு இருந்ததை, இப்போ நினைச்சாலும் மனசுக்கு தெம்பா தான் இருக்கு. ஆனா, என்ன பண்ண அம்மாவுக்கு பிடிக்கலன்னு சொல்லும்போது, நம்ம விருப்பு வெறுப்பை எல்லாம் தள்ளி வைக்க வேண்டியதா தானே இருக்கு” என்றான் கொடிவீரன்.

“நீ தான்பா தங்கமான பிள்ள.”

“ஆமா அவன் தங்கம் தான். அவனை அப்படியே மோதிரம் செய்து உங்க காதுல மாட்டிக்கோங்க” என்று மாறன் சொல்லவும் கீதா முறைக்க, “மகி வா போகலாம்” என்றான்.

“இருங்க சாப்பிட்டு போகலாம்.” மகிழினி அழைக்க,

“இல்லமா பரவாயில்ல. நாங்க இன்னோரு நாள் வரும்போது சாப்பிட்டுட்டு போறோம்.”

“அண்ணா மேட்ச் முடிஞ்ச பின்னாடி நீங்க நம்ம வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கிட்டு தான் போகணும்.”

“ம் பாப்போம்டா. கீதா போயிட்டு வரேன்” என்று மாமியாரை வம்பிழுத்தான்.

“ஏய் என்ன திமிரா?”

“நீங்க தானே உங்கள அத்தைன்னு கூப்பிட வேணான்னு சொன்னிங்க. அதான் அப்படி கூப்பிட்டேன். ஹான் அப்புறம் முக்கியமான விஷயம். வயசான காலத்துல தம் கட்டிக்கிட்டு அதிக வசனம் எல்லாம் பேசாதீங்க. அப்புறம் உங்களுக்கு எதாவது ஒன்னுனா, உங்க மாப்பிள்ள நான்தான் ஓடி வரணும்.”

“டேய் எனக்கு எல்லாம் ஒன்னும் ஆகாதுடா. நீ போய் ஒழுங்கா கதகளி ஆடு போ” என்றார்.

“ம்... உன் அம்மாவுக்கு கிண்டல் ரொம்ப அதிகம்தான் மகி.”

“உங்களுக்கு மட்டும் என்ன கம்மியாவா இருக்கு.”

“எனக்கு எதுமே கம்மி இல்லடி. உன் மேல இருக்குற காதலையும் சேர்த்து.”

“எதாவது பேசுனா அழகா பேசி வாயை அடச்சீடுவிங்க.” என்று குரலை இறக்க,

“பேசி மட்டும் தானா உன் வாயை நான் அடைச்சு இருக்கேன்.” அவன் கேலி பேச,

“ம்... போதும் போகலாம் மாமா.” மாறன் தன் மனைவியுடன் வெளியே செல்ல,

கோவமாக சோபாவில் அமர்ந்த கீதாவின் கண்கள் கலங்குவதை பார்த்த மகிழினி, “அம்மா என்னாச்சு ஏன் அழறீங்க?” என்று கேட்டாள்.

“அத்தை இப்போ என்ன மாறன் அண்ணன் பேசுனத நினைத்து அழறீங்களா?”

“இல்ல மாப்பிள்ள. என் மக இன்னைக்கு சந்தோஷமா தான் இருக்கா. ஆனா, இவன் இப்படி கபடி கபடின்னு சுத்திகிட்டு இருந்தா, அவளுக்கு எங்க இருந்து இந்த சந்தோஷம் நிலைக்கும் சொல்லுங்க?”

“இவங்க என்ன சொல்லுறாங்க?” என்று மகிழினி புரியாது கேட்க,

“அத்தை உங்க பயம் எனக்கு புரியுது. ஆனா, நீங்க பயப்புடுற மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்க வாங்க நம்ம போய் சாப்பிடலாம். ஆமா பாட்டி எங்க?”

“பாட்டி பக்கத்து தெருவுக்கு சீட்டு கட்ட போயிருக்காங்க” என்றான் வேணு.

“சரி அவங்க வரும்போது வரட்டும் அத்தை. நீங்க வாங்க நம்ம சாப்பிடலாம்.”

“இல்ல மாப்பிள்ள. எனக்கு மனசு சரியில்ல. நான் கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடுறேன்.”

“சரி இருங்க. நான் வண்டியில அழைச்சிட்டு போறேன்.”

“இல்ல மாப்பிள்ள. நான் நடந்தே போய்ட்டு வரேன்” என்றான்.

“பாட்டி இருங்க. நானும் வரேன்” என்றதும் வேணுவை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்

“ஆமா ஏன் உங்க அத்தை இவ்ளோ எமோஷனல் ஆகுறாங்க? ஏன் கபடி ஆடுறது அவ்ளோ பெரிய குத்தமா?”

“ஐயோ இல்ல. இல்லிங்க. கபடி விளையாட அதிக சக்தியும் திறனும் இருக்கனும். கபடி விளையாடும் போது தல, கண்ணு, கால், கைன்னு எங்க வேணா அடிபட வாய்ப்பு இருக்கு. ஏன் ஒரு சிலவங்களுக்கு உயிரே போய் இருக்கு...”

“ஐயோ” என்று அலறினாள்.

“ம்... அப்படி ஒருமுறை நாங்க விளையாடும் போது, எங்க பங்காளி ஒருவர் கபடி களத்துலேயே வீர மரணம் அடைஞ்சுட்டாரு. அதுல இருந்து எங்க அம்மா என்னை கபடி பக்கமே அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆனா, மாறன் அண்ணன் மட்டும் இப்போ வரை எல்லா போட்டியிலும் கலந்துகிட்டு இருக்கார். இன்னும் கேட்டா அண்ணன் கபடி ஆடுற திறமையை பார்த்துதான், மகி அண்ணி அவர லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ஆனா, அண்ணன் தொடர்ந்து கபடி ஆடுனா அவருக்கு எதாவது ஆகிடுமோன்னு அத்தைக்கு பயம்.” என்றான்.
 
Joined
Jan 15, 2026
Messages
89
“ஓ... அப்போ உங்க அத்தைக்கு அவங்க மருமகன் மேல இருக்கிறது வெறுப்பு இல்ல. அவர் மேல இவங்களுக்கு இருக்குற அக்கறையில தான், கபடி விளையாட போக வேணான்னு சொல்லுறாங்க. அதுவும் இல்லாம உங்க பங்காளி ஒருவர் இறந்ததை பார்த்தும், உங்க அத்தை எப்படி தன்னோட மக வாழ்க்கையை நினைச்சு கவலைப்படாம இருக்க முடியும் சொல்லுங்க?”

“அதுக்கு என்ன பண்ணுறது? அண்ணனுக்கு கபடி தான் உயிர். அதை யாருக்காவும் விட்டு தர மாட்டார்.”

“அப்போ நீங்க மட்டும் ஏன் உங்க அம்மா சொன்னதும் கபடி ஆடுறதை விட்டுட்டீங்க?” என்றாள் கேள்வியாக.

“ம்... ஆமா இல்ல. அம்மா சொன்னதுக்காக எல்லாம் நான் கபடி விளையாடுறதை விட்டுருக்கக் கூடாது. நான்தான் தப்பு பண்ணிட்டேன்” என்றதும் மகிழினி விழிக்க, “சரிங்க. அப்ப நாளைக்கு சாயங்காலம் நடக்க இருக்குற கபடி போட்டிக்கு நான் போய் விளையாடிட்டு வரேன்” என்றான்.

“என்ன நீங்க விளையாட போறிங்களா?” என்று அதிர்ந்து கேட்க,

“ம்... ஆமா.” என்றான் கூலாக.

“இல்லயில்ல நீங்க அங்கெல்லாம் போகக்கூடாது.”

“ஏன் கூடாது?”

“அதான் அந்த விளையாட்டால உயிருக்கே ஆபத்துன்னு சொல்லுறாங்களே.”

“இருந்துட்டு போகட்டுமே” என்றதும் அவள் முறைக்க, “இப்போ நான் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க? அதான் என் அம்மாவ பார்த்துக்க சசி அக்கா இருக்காங்க. அப்படியே கபடி விளையாடும் போது எனக்கு எதாவது ஆச்சுன்னா கூட, உங்க ரூட் கிளியர் ஆகிடும்தானே.”

“என்ன? என் ரூட் கிளியர் ஆகிடுமா?”

“ஆமாங்க நாளைக்கே எனக்கு எதாவது ஆச்சுன்னா?” என்றதில் அவனை கொலைவெறியுடன் பார்க்க, “நமக்கு டிவோர்ஸ் ஆகுறவரை எல்லாம் என் தொல்லையை தாங்கிக்க வேணாம் இல்ல” என்றான்.

“போதும் நிறுத்துங்க. நானும் நீங்களும் சேர்ந்து வாழ முடியாதுன்னு நான் சொன்னேனே தவிர, நீங்க வாழவே கூடாதுன்னு நினைக்குற அளவுக்கு நான் அரக்கி இல்ல.” என்றாள் கோபமாக.

“என்னங்க கோச்சுகிட்டீங்களா? ஐயோ நான் விளையாட்டா தான் சொன்னேன்.”

“எது விளையாட்டு? ஏற்கனவே என் கழுத்துல தாலி கட்டுன பாவத்துக்கு ஒருத்தரை சாகடிச்சிட்டு, இன்னைக்கும் அவரோட மரணத்துக்கு நான்தான் காரணமுன்னு தினம் தினம் உள்ளுக்குள்ள செத்து செத்து பிழைக்கிறனே, அதைப் பார்த்தா உங்களுக்கு விளையாட்டா இருக்கா?”

“ஏங்க நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்.”

“ம்... போதும். இனிமே நீங்க என்கிட்ட எதுவும் பேசக்கூடாது. இப்போ என்ன உங்களுக்கு எதாவது ஆகணும். அதுக்கும் நான்தான் காரணம்னு என்னையே நான் நொந்து நொந்து சாகனும். அதானே உங்களுக்கு வேணும்?”

“ஐயோ சிஎம்! நான் இல்லைனா நீங்க சந்தோஷமா இருப்பிங்களேன்னு தான் சொன்னேன். வேற எதுக்காகவும் இல்ல.” என்றான் பதறியபடி.

“நீங்க எதுவும் சொல்ல வேணாம். இனி நீங்க என் எதிர்ல வந்துடாதீங்க” என்று கோவமாக சொல்ல, அன்றைய நாள் முழுதும் கொடிவீரன் எவ்வளவோ சமாதானம் செய்தும், தன் கோவத்தை கைவிடாதவள் அன்றைய இரவும் கூட அவனிடன் பேச மறுத்த நிலையில், காலை பொழுது விடியும் முன்பே கேண்டீன்கு கிளம்பி சென்றவள், மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பினாள்.

“வாமா சித்ரா. என்ன இவ்ளோ லேட்?” என்று கீதா கேட்க,

“வேல கொஞ்சம் அதிகம்மா.”

“காலையில உன் அத்தை போன் பண்ணிருந்தா. உன் புருஷனுக்கு நேரம் சரியில்லையாம். அதனால உன்கிட்ட சொல்லி கோவிலுக்கு போய் அவன் பெயர்ல ஒரு அர்ச்சன பண்ணி, நெய் தீபம் போட சொன்னா” என்றதும் மகிழினி அதிர,

“அத்தை மணி என்னாகுது? ஏன் இன்னும் மாமாவை காணோம்?” என்று வேணு கேட்க, அதே சமயம் மகிழினியின் வீட்டு வாசலில் வந்து நின்ற காரில் இருந்து, கால் கையில் கட்டுடன் இறங்கும் கொடிவீரனை பார்த்து மகிழினி மற்றும் கீதா அதிர்ச்சி அடைந்து பதறிப்போய் அவன் அருகில் செல்ல, ஜீவா, கொடிவீரனை கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்து வந்தான்.

மீனா மற்றும் ரேஷ்மா என்று அனைவரும் ஒன்றாக வருவதை பார்த்து பயந்த மகிழினி, “என்னாச்சு? ஐயோ கை கால்ல எல்லாம் இப்படி அடிபட்டு இருக்கு. என்னங்க ஆச்சு உங்களுக்கு?” என்று இவள் பதற,

“மாப்பிள்ள என்னாச்சு உங்களுக்கு?” என்று கண்கள் கலங்கி கேள்வி கேட்டார்.

“சின்ன ஆக்சிடண்ட் தான். பிளீஸ் யாரும் பயப்படாதீங்க” என்றவனை சோபாவில் அமர வைத்தான் ஜீவா.

“என்ன ஆக்சிடன்டா? எப்படி அடிபட்டுச்சு? டாக்டர் என்ன சொன்னாரு? பெருசா ஏதும் பிரச்சனை இல்லையே?” என்று பதறியவள் கொடியின் நிலையை கண்டு கண்கள் கலங்கினாள்.

“ஐயோ சிஎம். பிளீஸ் அழாதீங்க. எனக்கு ஒன்னும் இல்ல. வண்டியில வரும்போது சின்ன விபத்து அவ்வளவுதான்” என்றவன் ஜீவாவை பார்த்து கண் ஜாடை காட்ட,

“என்ன மாப்பிள்ள சொல்லுறிங்க? வண்டியில வரும்போது விபத்தா? ஆனா, நீங்க பைக் பொறுமையா தானே டிரைவ் பண்ணுவீங்க?” என்றார் சந்தேகமாக.

“ஆமா அத்தை. நான் பொறுமையா தான் வந்தேன். ஆனா...”

“சரி சரி. அதான் பெருசா ஒன்னும் ஆகலையே. அதுவரை சந்தோசப்பட்டுக்கோங்க. ஏய் சித்ரா முதல்ல அழறதை நிறுத்திட்டு, போய் இவருக்கு குடிக்க எதாவது கொண்டு வா. போ” என்றாள் மீனா உரிமையாக

“நீ இரு சித்ரா. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்ற கீதா சமையல் அறைக்கு செல்ல,

“ஜாக்கிரதையா போகக்கூடாதா? வேற எங்காவது அடிபட்டுருக்கா? தலையில எல்லாம் அடி படலையே?” என்றவளின் கண்களில் கண்ணீர் அவளை அறியாமல் வெளிவந்தது.

“சிஸ்டர் நாங்க ஃபுல் செக்அப் பண்ணி தான் அழைச்சிட்டு வந்தோம். கையில தான் கொஞ்சம் ப்ராக்சர் அதிகம். மத்தபடி கால்ல உள்ள காயம் ரெண்டு நாளில் ஆறிடும்னு டாக்டர் சொன்னாரு” என்றவன் மீனா கையில் இருந்த மருந்து கவரை வாங்கி மகிழினியிடம் தந்தான்.

“அண்ணா நாம வேணும்னா வீராவை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா? இங்க இவருக்கு அவ்வளவா வசதியா இருக்காது போல” என்றவள் கொடியின் அருகில் உரிமையாக அமர்ந்துகொள்ள, கொடிவீரன் தான் தர்ம சங்கடமாக உணர்ந்தான்.

“வேணு நீ என்ன பயந்து போய் நிக்குற. வந்து மாமாகிட்ட உக்காரு” என்று அழைக்க குடுகுடு என்று ஓடி வந்த வேணு ரேஷ்மா காலை மிதித்து வாட்டமாக கொடிவீரன் அருகில் அமர்ந்து கொண்டான்.

“மாப்பிள்ள இந்தாங்க டீ எடுத்துக்கோங்க. நீங்களும் எடுத்துக்கோங்க” என்று சொல்ல,

“கொடுங்க வீரா. நான் ஆத்தி கொடுக்குறேன்” என்ற ரேஷ்மா கொடி கையில் இருந்த டீயை வாங்கி, “எக்ஸ்கியூஸ்மீ இன்னோரு கிளாஸ் தரீங்களா?” என்று கேட்டாள்.

“பாப்பா நானே நல்லா ஆத்தி தான்மா கொடுத்துருக்கேன்” என்று சொன்னதும்,

எதையும் யோசிக்காமல் ரேஷ்மா அந்த டீயை பருகி பார்த்தவள், “ம்... ஆமா சரியான சூடுல தான் இருக்கு. வீரா இந்தாங்க டீ குடிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க” என்ற ரேஷ்மா டீ கிளாசை கொடியிடம் தந்ததும், மகிழினியின் பார்வை அவனை மட்டுமே உள்வாங்கி இருக்க, கொடியோ அவள் தந்த டீயை பருகாமல் கையில் வைத்திருந்தான்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top