Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 81
- Thread Author
- #1
விவாதக் காதல்
விவாதம் - 40
அடுத்த நாள் காலை, மகிழினி எழுவதற்கு முன்பே, மாடியில் உள்ள தன் அறைக்கு சென்று காலை வேலைகளை முடித்தவன், தலையை துவட்டியப்படி தன் ரூமில் இருந்து வெளியே வர,
வண்ணப் புடவையில் கூந்தல் பின்னி புருவத்துக்கு மத்தியில் அழகாய் சின்னதாய் பொட்டிட்டு, மீண்டும் புதிதாய் பூத்த மலரைப்போல, அவள் உயிரினும் மேலாக எண்ணும் தன் மல்லிப்பூ செடிகளுக்கு நீர் ஊற்றி கொண்டு இருந்தாள்.
அருகில் இருந்த மஞ்சள் ரோஜா செடியை பார்த்து முறைத்தபடி அதற்கு மட்டும், தண்ணீர் ஊற்றாமல் கீழே இறங்க பார்த்தவளை தடுத்து, “ஏன் சிஎம், அந்த எல்லோ ரோஸ்க்கு தண்ணி ஊத்தல?” என்று கேட்டான்.
"ம்... நீங்க என்னோட ஃப்ரண்ட்னு நினைச்சு தான், நான் உங்களுக்கு அந்த பூவை தந்தேன். ஆனா, இனிமே நீங்க எனக்கு நண்பன் இல்ல” என்றாள் கோவமாக.
“அப்கோர்ஸ்யா. இப்போ நான் உங்க ஹஸ்பன்ட்.”
அவனை எரிப்பதை போல முறைத்தவள், “உளராதீங்க. நான் இப்போ கேண்டீன் போறேன். நீங்களும் சீக்கிரம் ரெடி ஆகிட்டு என் கேண்டீன்கு வந்துடுங்க. வரும்போது ஜீவா சார் அட்ரஸ் எடுத்துட்டு வாங்க” என்றாள் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையை போல.
“ப்ச் காலையிலயே ஆரம்பிக்காதீங்க சிஎம். போங்க போய் கேண்டீன்ல உருப்படியான வேலையை பாருங்க. என்றான் கோவத்தை தலைதூக்க விடமால்.
“என்னோட முதல் வேலையே நமக்கு விவாகரத்து வாங்குறது தான். பிளீஸ் புரிஞ்சிக்கோங்க. முதல்ல போய் கிளம்பிட்டு சீக்கிரமா கேண்டீன்கு வாங்க” என்றவள் அவன் பதில் எதிர்பாராது இறங்கிச் செல்ல, வாசலில் நின்றிருந்த சுரேஷ் தன் தங்கையை பார்த்து கண்கள் கலங்கி வார்த்தை வெளிவராமல் அவளை கட்டிக்கொண்டான்.
“அண்ணா என்னாச்சு? ஏன் இப்போ அழற?” என்று கடுப்பாக கேட்டாள்,
“அம்மாடி உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சின்னு பாட்டி சொன்னாங்க. பார்த்தியா ஒரு அண்ணனா இருந்து உனக்கு ஒரு நல்லது நடக்கும்போது உன்கூட இருக்க முடியலையே” என்று கண்கள் கலங்கினான்.
“நீ நினைக்குற அளவுக்கு எல்லாம் இங்க எந்த நல்லதும் நடக்கல. நீ முதல்ல உள்ள வா. அண்ணி பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தாள்
“என்னமா நீ? என் நண்பனோட அக்கா கல்யாணத்துக்கு போன இடத்துல உனக்கு ஏதோ பிரச்சனை வந்து, அதனால உன் கழுத்துல கொடிவீரன் தாலி கட்டிட்டான்னு பாட்டி சொன்னதும், நான் என்ன ஏதுன்னு விசாரிக்க ஓடி வந்தா, நீ என்னமோ எதுவுமே நடக்காதது போல பேசுற” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது கொடிவீரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வர, அவனை பார்த்து சுரேஷ் வேகமாக சென்று கட்டித் தழுவி, “மச்சான்” என்று அழைத்தான்.
”அதான் உங்க மச்சான் ஆகிட்டாரே என் மருமகன்” என்று சுரேஷ் கையில் காபியை தந்தார் கீதா.
”என்ன மச்சான் எப்படி இருக்க?” என்றவன் சுரேஷை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
“என்னடா ஒரு அண்ணனா இன்னைக்காவது இங்க இருந்து, உன் தங்கச்சிக்கு பண்ண வேண்டிய முறை எல்லாம் பண்ணுவியா? இல்ல அதையும் நான்தான் பண்ணனுமா?” என்று பாட்டி கேட்க,
முறை அது இதென்று பேசியதில் முகம் மாறியவள், இருக்கையில் இருந்த தன் பையை எடுத்துக்கொண்டு, “இந்த ட்ராமா எல்லாம் பார்க்க எனக்கு நேரம் இல்ல. சீக்கிரமா கேண்டீன் வாங்க” என்று கொடியை பார்த்து சொன்னவள், வேகமாக தன் வீட்டில் இருந்து வெளியேறினாள்.
“அவ கிடக்குறா தம்பி. நீங்க இதெல்லாம் பாருங்க” என்றார்.
“என்ன பாட்டி என்ன இது?” என்று கேட்டவன் கையில், நகை பெட்டியை தந்த பாட்டி, அதனுடன் சேர்த்து தான் வசிக்கும் வீட்டுப் பத்திரத்தையும் கொடிவீரன் கையில் கொடுக்க, சுரேஷும் சந்தோஷமாக முகம் மலர்ந்தான்.
“பாட்டி என்ன இதெல்லாம்?” என்று இவன் கோவமாக கேட்க,
“என் பேதிக்காக நான் சேர்த்து வச்சச்சதுபா” என்றார் பாட்டி
“அதை ஏன் என்கிட்ட தரிங்க?” என்றவன் தன் கையில் இருந்த பொருளை எல்லாம் மேசை மேல் வைத்தான்.
“எல்லாம் உனக்கு தான்பா” என்றார் அவன் மீது உள்ள அதிகப்படியான அன்பை வெளிப்படுத்தும் விதமாக.
“ஏன் பாட்டி இதெல்லாம் நீங்க எனக்குத் தரலன்னா, உங்க பேத்திய என்னால சந்தோஷமா பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கிறிங்களா?” என்றான் தன்மானத்துடன்.
“ஐயோ இல்ல தம்பி. இதெல்லாம் ஒரு சீர் முறைதானே. ஏன் சசிக்கு நீங்க இதெல்லாம் பண்ணலையா என்று கேட்க,
“ம்...” பண்ணோம் தான் ஆனா, அக்கா கதை வேற. சிவா மாமா குடும்பத்துல அதெல்லாம் எதிர் பார்த்தாங்க அதனால தான் நாங்க பண்ணோம் ஆனா, எங்க விஷயத்துல நானோ என் அம்மாவோ உங்கிட்ட இருந்து சல்லிக்காசு எதிர்பார்க்கல. இந்த சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு எல்லாம் நான் அவங்க கழுத்துல தாலி கட்டல” என்றான் மகிழினி மீது இவன் கொண்ட காதலை மட்டுமே நம்பி.
“ஐயோ தம்பி நீங்க இதுக்கெல்லாம் ஆசைப்பட்டிங்கன்னு நான் சொல்லவே இல்லையே. ஆனா, இதெல்லாம் என் பேத்திக்காக நான் தரணும்னு சேர்த்து வச்சதுப்பா. அதான் உங்ககிட்ட இதெல்லாம் தரேன். தயவுசெய்து இதெல்லாம் வாங்கிக்கோ தம்பி” என்றார் அவர்.
“ப்ச்... இல்ல பாட்டி. அப்பா சேர்த்து வச்ச சொத்து இல்லாம, மாமனார் வீட்டுல வாங்குன வரதட்சணை இல்லாமல், என் பொண்டாட்டியை எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும் பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க இதெல்லாம் கொடுத்து நான் என் சிஎம் மேல வச்சிருக்க அன்பை கொச்சைப்படுத்தாதீங்க” என்றான் அவள் மீதுள்ள விலைமதிப்பில்லா காதலுடன்.
“இல்ல தம்பி...” என்றவரின் வாயை அடைக்கும் விதமாக,
“அதான் இதெல்லாம் வேணாம்னு என் மாப்பிள சொல்லிட்டாரு இல்ல. முதல்ல இதெல்லாம் எடுத்து வையுங்க” என்று கீதா சொன்னதும் மறுப்பேச்சு பேசாமல் அங்கே இருந்த பொருளை எடுத்து வைத்தார்.
சுரேஷும், கொடியும் சகஜமாகப் பேசி கொண்டிருக்கும் வேளையில், பாட்டியின் கைபேசி சிணுங்க எடுத்துப் பேசியவர், கைபேசி இணைப்பை கோவமாக துண்டித்தார்.
“என்ன பாட்டி? யாரு போன்ல?” என்று கேட்டதும்,
“உன் தங்கச்சி தான். அவளுக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு போல” என்று கோவமாக கத்தினார்.
“என்ன பாட்டி? என்னை கேண்டீன்கு வரச்சொல்லி போன் பண்ணாங்களா?” என்று கொடி கேட்டதும்
“ம்... ஆமா தம்பி. உன்னை கேண்டீன்கு வர சொல்லுறா. நீங்க அங்க இருந்து அப்படியே வக்கீல் வீட்டுக்கு போகணுமாம்” என்றார் கடுப்பாக
“ம்... சரி பாட்டி நான் கேண்டீன் போயிட்டு அப்படியே அவங்கள ஜீவா ஆபீஸ்கு அழைச்சிட்டு போறேன்” என்றவனை கேள்வியாக அனைவரும் பார்க்க,
“என்ன பாக்குறீங்க? உங்க பேத்தி வழியில போய் தான் அவங்கள நான் என் வழிக்கு அழைச்சிட்டு வரமுடியும். அதனால கொஞ்ச நாளைக்கு நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க. அத்தை நீங்களும் இதெல்லாம் அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்காதிங்க” என்றான் ஒரு முடிவோடு.
கீதா - யூ டோன்ட் வொர்ரி மாப்பிள. நான் சொல்ல மாட்டேன் யூ கேரி ஆன்.” என்று கீதா இவன் செயலுக்கு பச்சைக்கொடி காட்ட, சுரேஷை பார்த்து, “போய்ட்டு வந்துடுறேன் மச்சான்” என்று வீட்டில் இருந்து கிளம்பிய பைக், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீரன் கேண்டீன் சர்வீஸ் வாசலை சென்றடைந்தது.
உரிமையாக கேண்டீன்குள் நுழைந்தவனை பார்த்த மகிழினி, “ஒரு பத்து நிமிஷம் இருங்க. ஆட்டோ சொல்லிருக்கேன். வந்ததும் போயிடலாம்” என்றதும் கொடிவீரன் சிரிக்க, “இப்போ நீங்க கிண்டலா சிரிக்கிற அளவுக்கு நான் என்ன ஜோக் பண்ணேன்?” என்று கேட்டாள்.
மீண்டும் வாய் விட்டு சிரித்தவனைப் பார்த்து கடுப்பாக, அதற்குள் அங்கே பணி புரியும் சில பெண்மணிகள் இவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.
“மகிழு இந்த பையன் தான் உன் புருஷனா?”
“ஐயோ அம்மா...” என்று அவள் எதோ சொல்ல வர,
“அப்படி சொல்லக்கூடாதுங்க. ஐ ஆமாம்னு சொல்லணும்.” என்றான் கொடிவீரன்.
“நீங்க கொஞ்சம் வாயை மூடுங்க.” என்று சிடுசிடுக்க,
“ஒய்?” என்றான்.
“அம்மா நீங்க கேண்டீன் பாத்துக்கோங்க. நான் இவர் கூட வெளிய போயிட்டு வரேன்” என்றாள் அங்கிருந்த பெண்மணியிடம்.
“ம்... பரவாயில்ல தம்பி. எங்க மகிழினி உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு, அவங்க பாட்டி நேத்து நைட்டு எங்களுக்கு போன் பண்ணி சொல்லும்போது கூட நாங்க நம்பல. ஆனா, இப்போ இப்படி உங்கள ஜோடியா பாக்கும்போது தான் மனசு நிறைவா இருக்கு.” என்றார்.
கொடிவீரன் முகம் சந்தோஷத்தில் குதிக்க, அவனை முறைத்து, “அம்மா போதும். போய் வேலையை பாருங்க அந்த எஸ்எஸ்ஐடி கம்பெனி ஆளுங்க வந்தாங்கன்னா இந்த மன்த் மெனு என்னன்னு கேட்டு வச்சிடுங்க” என்றாள்.
“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். முதல்ல நீ உன் புருஷன் கூட ஜாலியா வெளிய போயிட்டு வா.” என்றதும் கொடிவீரன் வாய்பொத்தி சிரிக்க, இவளோ முறைத்தாள்.