• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 36

Joined
Jan 15, 2026
Messages
73
விவாதக் காதல் – 36


கடிகாரத்தின் நொடி முள் வேகமாக சுழல, விடியும் முன்பு தன் படுக்கையில் இருந்து வாரிச்சுருட்டி எழுந்த மகிழினி முகம், வேர்த்து விருவிறுத்துப் போயிருந்தது. சில நொடிகளில் தன்னிலை உணர்ந்தவள்.

நேற்று இரவு நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து கண்கள் கலங்கினாள்.

"எதுக்காக நம்ம சசி அக்கா கல்யாணத்துக்கு வந்தோம். நம்ம வந்ததால தானே, அந்த வனிதாவை நம்ம இங்க பார்க்க வேண்டியதா போச்சு. நம்மை பழி வாங்க தானே அந்த வனிதா என்னுடன் சேர்ந்து கேவியோட பெயரையும் கெடுக்க பார்த்திருக்கா. இப்போ நான் என்ன பண்ணுறது? எங்க மேல தப்பே இல்லைனு சொன்னாலும் இந்த ஊர் அதை நம்ப மாட்டுது. போதக்குறைக்கு இந்த கீதா அம்மா வேற. ஏற்கனவே கேவிக்கும் எனக்கும் கல்யாணம் நடக்க இருந்ததா ஊர் மக்கள் எதிர்க்க பொய் சொல்லிட்டாங்க. இத நம்பி அவங்க எல்லாம், சசி அக்கா கல்யாணம் நடக்கும் போதே எங்களுக்கும் கல்யாணம் நடக்கணும்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.”

“ஐயோ இப்போ நான் என்ன தான் பண்ணுறது? கேவி என்ன முடிவு பண்ணிருக்காருன்னு தெரியலையே. நான் வேற நேத்து நைட்டு அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்னா, எனக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொல்லிட்டு வந்துட்டேன். அவரு என்ன முடிவு பண்ணிருப்பாரு. ஆயிரம் தான் இருந்தாலும் நான் இன்னொருவனின் மனைவி. அவரு எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவாரு? இப்போ நானா போய் இந்த கல்யாணம் வேணான்னு சொன்னாலும், இல்ல அவரே வந்து வேணான்னு சொன்னாலும், இதுல பாதிக்கப்போறது சசி அக்காவின் கல்யாணம் தான். சசி அக்காவுக்கு இப்போ கல்யாணம் நடக்கலைன்னா, நம்ம ஜெயா அம்மாவோட நிலைமை என்ன ஆகும்.?”

“ஐயோ இதெல்லாம் நினைச்சு பார்த்தா, எனக்கு தலைவலி அதிகமா ஆகுது. பேசாம வீரன் போன போதே என்னையும் சேர்த்து அழைச்சிட்டு போய் இருக்கலாம். என்னால யாருக்கும் நிம்மதியில்ல. என்னோட ராசி இந்தக் கல்யாணத்துக்கு நான் வந்ததால தான் இவ்ளோ பிரச்சனை போல. இப்போ நான் என்ன பண்ணுறது? இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம். நா... நான் என் வீரனோட மனைவி. நான் எப்படி மறுபடியும் வேறொருவர் கையாள கட்டுற தாலியை ஏத்துக்குறது?”

“ஆனா, இந்தக் கல்யாணம் நடக்கலைனா, சசி அக்கா கல்யாணம் நின்னு, என்னால கேவி பெயரும் கெட்டு, ஜெயா அம்மா, என் பாட்டின்னு இவங்க எல்லோரோட நிம்மதியும் கெட்டு போய்டுமே. ஹ்ம் இப்போ என்ன பண்ணுறது? பேசாம நம்ம கேவி கிட்டையே இதுக்கு என்ன முடிவுன்னு கேட்டுடலாமா?” என்று பல நூறு கேள்விகளை அவனிடம் கேட்க நினைத்தவள், ஒரு நொடியும் தாமதிக்காமல் வெளியே வர, எதிரில் கீதா கையில் கைப்பேசியுடன் அமர்ந்து இருந்தார்.

“என்னம்மா எழுந்துட்டியா? சரி போ. போய்க் குளிச்சிட்டு, சசி கல்யாணத்துக்கு கட்டிக்க எடுத்துட்டு வந்தல்ல. அந்தப் பட்டுப்புடவையை கட்டிக்கோ.” என்றார்.

"பாட்டி எங்க.?”

“ஜெயாவும், உன் பாட்டியும் கோவிலுக்கு கிளம்பிட்டாங்க.”

“கோவிலுக்கா? இப்போவா? ஏன்?”

“சசி, சிவாக்கு மட்டும் தானே கல்யாணம் நடக்குறதா இருந்துச்சு. இப்போ அந்தக் கடவுள் போட்ட முடிச்சில, உனக்கும், என் மாப்பிளைக்கும் கல்யாணம் நடக்க போகுதுல்ல. அதான் கோவிலுக்கு போய் மணமேடை ரெண்டா அமைச்சுட்டு, அப்படியே அங்க சில பல வேலைகளை கண்காணிக்க போயிருக்காங்க.”

“ம்... சசி அக்கா எங்க.?”

“அவ ரூம்ல இருந்துக்கிட்டு சிவா தம்பி கூட போன்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்கா.”

“ஓ... அப்ப வேணு?”

“அவனும் உன் பாட்டிக்கூட போயிருக்கான். நீயும் சசியும் ரெடி ஆனதும், நான் போன் பண்ணா நம்மள அழைச்சிட்டு போக கார் வரும். என்னம்மா. வேற எதாவது சொல்லனுமா.?”

“ம்...” என்றாள் அவள்.

“என்ன விஷயம்?”

“அ...அவரு எங்க?” என்றாள் திணறலாக.

“யாரு? என்று தெரியாதது போல் கேட்க,

“கேவி.”

“என்ன கேடியா? அது யாரு?”

“இல்லம்மா. கேவி.”

“ஓ... கொடிவீரனைச் சொல்றியா?” என்றதும் அவள் தலையசைக்க, “அவனும் கோவில்ல தான் இருப்பான்.”

“அ...அவரு ஏதும் சொன்னாராமா?”

“எத பற்றி கேக்குற?”

“எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லமா.” என்றாள் பட்டென்று, கீதா விழிக்க, “ஆனா, இப்போ இந்த கல்யாணம் நடந்தாகணும். அதுக்கு ஒரே வழிதான் இருக்கு. அதைப்பற்றி தான் நான் உங்க மாப்பிளைகிட்ட பேசலாம்னு நினைச்சேன்.”

“என்ன சொல்ற நீ? சம்மதம் இல்லைனு சொல்ற. அப்புறம் கல்யாணம் நடக்கணும்னும் சொல்ற. ம்... நீ என்ன சொல்றனே எனக்கு புரியலையே. ஒரே இடியாப்பம் போல சிக்கலா இருக்கே உன் பேச்சு.”

“ம்... அம்மா. நான் ஒரு கடிதம் தரேன். அதை எப்படியாவது முகூர்த்தத்துக்கு முன்னாடி நீங்க கேவிகிட்ட தந்துடுறிங்களா. ப்ளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.

“என்ன காதல் கடிதமா?” என்றார் வேகமாக.

“ப்ளீஸ். காமெடி எல்லாம் பண்ணாதீங்க. நீங்க சொன்ன ஒரு பொய்யால தான் எங்களுக்கு இன்னைக்கு இப்படி ஒரு நிலைமை. ஆனா, இந்த சூழ்நிலைக்கு முழுக்க முழுக்க நான் மட்டும் தான் காரணம். என்னை பழி வாங்க அந்த வனிதா, கேவியையும், சசி அக்காவையும் பகடைக்காயாக யூஸ் பண்ண பாக்குறா.”

“சரி விடுமா. இப்போ என்ன. உன்னை எங்களுக்கு ரொம்ப்ப பிடிச்சிச்போச்சு. உனக்கும், என் மாப்பிளைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நானும், ஜெயாவும் உன் பாட்டிகிட்ட சம்மதம் கேட்டது எல்லாம் அந்த கடவுள் மேல் ஆணையாக சத்தியம்.” என்றார்.

உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்னு தெரியல. சரி விடுங்க. நான் ஒரு லெட்டர் தரேன் அதை மட்டும் நீங்க கேவிகிட்ட கொடுத்து. எனக்கு முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி அதுக்கு உண்டான பதிலைச் சொல்ல சொல்லுங்க.

“ஆனா, நான் அவனை இப்போ எங்கன்னு போய்ப் பார்த்து இதைத் தரது. அவன் தான் இப்போ கோவில்ல இருக்கானே.”

“ப்ளீஸ்ம்மா. அவரு எங்க இருந்தாலும் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி இந்த லெட்டரை மட்டும் அவர்கிட்ட கொடுத்துடுங்க” என்று வேகமாக அறைக்குள் நுழைந்தவள், தன் பையில் இருக்கும் நாள் குறிப்பு புத்தகத்தில் இருந்து ஒரு தாளைக் கிழித்து, தன் மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் எழுதியவள். அந்த தாளை கொண்டு வந்து கீதாவிடம் தந்து.

“ப்ளீஸ்மா இத மட்டும் கேவி கிட்ட கொடுத்துடுங்க. இந்த லெட்டரை படிச்சிட்டு, அவருக்கு ஓகே னா கண்டிப்பா இந்க்த கல்யாணம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடக்கும்.” என்றவள் குளியல் அறைக்குள் சென்றாள்.

மகிழினி தந்த லெட்டரை, கேவியிடம் தரலாமா, வேண்டாமா என்று யோசனையில் இருக்க, அடுத்த சில நிமிடங்களில் இவர்கள் இருக்கும் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது.

“அச்சோ. கார் வந்துடுச்சி. சசி கிளம்பிட்டியா?” என்று கீதா சத்தமாக கத்த, அவளோ தயாராகி மகிழினியின் அறைக்குள் நுழைய, அங்கே கொடிவீரன் வாங்கி தந்த புதுப்புடவையில் கலக்கமான மனநிலையுடன் அமர்ந்து இருந்தாள்.

“சித்ரா.” என்று அவளின் தோளில் கைவைக்க,



“அக்கா” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

“உன் சூழ்நிலை எனக்கு புரியுதுமா. வேணும்னா சொல்லு, நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்” என்றாள் கவலையாக.

“ஐயோ வேணா அக்கா. எல்லாம் என் தலையெழுத்து போல நடக்கட்டும்” என்றாள் கேவி மேல் உள்ள நம்பிக்கையில்.
 
Joined
Jan 15, 2026
Messages
73
“சரி கார் வந்துடுச்சி. போகலாமா?” என்று கேட்க,

“ம்... போகலாம்” என்றவள் ஏதேதோ எண்ணங்களை சுமந்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

திருமணம் நடக்கப்போகும் கோவில் இரண்டு தெருவே தள்ளி அமைந்துள்ளதால், சில நொடிகளில் கார் கோவில் வாசலை சென்று அடைந்தது.

“ரெண்டு பேரும் காருல இருந்து இறங்குங்க.” என்றார் கீதா.

முகம் மலர்ந்து இவர்கள் இருவரையும் வரவேற்க, மீண்டும் மணக்கோலத்தில் தன் பேத்தியை பார்த்த பாட்டி முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.

தன் மகள் சசியையும், தன் மருமகள் சித்ரமகிழினியையும் ஒருசேர பார்த்த ஜெயாவின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

தூரத்தில் இருந்து இந்த காட்சியினை பார்த்து கொண்டு இருந்த வனிதாவும், நாராயணனும் மஞ்சளில் குரங்கு செய்ய நினைக்க, அது பிள்ளையராக மாறிப்போன கவலையில் நின்று இருந்தனர்.

“அம்மாடி சித்ரா. வாமா. வந்து சாமியை கும்பிடு. சசி நீயும் வா.” என்று ஜெயா இவர்களை கோவிலுக்குள் அழைக்க.

கோவில் வளாகத்தில் மங்கள வாத்தியம் முழங்கியது. அங்கே ஊர் மக்கள் கூடி இருக்க, வெற்றிலைக்கு பதிலாக, நேற்று இரவு நடந்த கலவரத்தை பற்றி தீவிரமாக பேசி கொண்டு இருந்தனர்.

சசியையும், மகிழினியையும், கீதா மணமேடைக்கு அழைத்து சென்றார்.

"அம்மா. நான் அவர்கிட்ட லெட்டர் தர சொன்னேனே” என்று மகிழினி கேட்க,

"என்ன லெட்டர்?" என்று புருவம் உயர்த்தி கேட்டாள் சசி.

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க ரெண்டு பேரும் கல்யாண பொண்ணா அமைதியா இப்படி உக்காருங்க” என்று சொன்ன கீதா கொடிவீரனை தேடி செல்ல, எங்கே தேடியும் அவன் கண்ணில்படாத காரணத்தால், மீண்டும் சித்ராவை தேடி வந்தவர்,

"சித்துமா. உன் கேவி பயலை எங்கே தேடியும் காணோம். இந்தா இந்க்த கடிதத்தை நீயே எப்படியாவது அவன்கிட்ட சேர்த்துடு. நான் போய் உங்க கல்யாணத்துக்கு தேவையான சடங்கை எல்லாம் ஆரம்பிகிறேன்” என்று சொன்ன கீதா, தன் கையில் இருந்த லெட்டரை மகிழினியிடம் தந்து, கண் இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்து நகர்ந்துவிட்டார்.

மகிழனியோ தன் மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம், கொடிவீரனிடம் தெரியப்படுத்தக் காத்திருந்தாள்.

ஐயர் இன்னும் சில நிமிடங்களில் நடக்கவிருக்கும் இரண்டு திருமணத்துக்கும், செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து கொண்டு இருக்க, மகிழினியைப் பார்த்த வேணு வேகமாக அவள் அருகில் ஓடி வந்தான்.

"ஐ அத்தை. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இன்னைக்கு உங்களுக்கு கல்யாணமா? கொடிவீரன் மாமா தான் உங்க புருஷனா?” என்று மகிழிச்சியுடன் கேட்க,

"டேய்! வா வா. நல்ல நேரத்துல வந்த. இந்தாடா. இந்த லெட்டரை எப்படியாவது நீ உன் மாமாகிட்ட தந்து படிக்க சொல்லிடு” என்றவள் தன் கையில் இருந்த கடிதத்தை அவனிடம் தர, அந்தக் கடிதத்தை பாக்கெட்டில் வைத்து கொண்டவன், வேகமாக கொடிவீரனை தேடி சென்றான்.

பந்தி நடக்கப்போகும் இடத்தின் ஒரு மூலையில், தன் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு பல யோசனைகளை சுமந்தபடி நின்றிருந்தவனைக் கண்டு, “மாமா. நீங்க இங்க தான் இருக்கீங்களா?” என்றான்.

“தம்பி. சாப்பாடு ரெடி ஆகிடுச்சிபா. முகூர்த்தம் முடிந்ததும் பந்தி ஆரம்பிக்க வேண்டியது தான்” என்று ஒருவர் சொல்ல,

“ஏங்க. சாப்பாட்டுல வடை எல்லாம் உண்டா?” என்று இவன் கேட்க,

“இருக்குப்பா. அதோ பாரு அங்க சுட்டு வச்சிருக்கோம்” என்று சமையல்காரர் சொன்னதும்,

"ஐ வட” என்று தன் கண்களை உருட்டி ஆசையாக சொன்ன வேணு, வந்த வேலையை மறந்து வடை பக்கம் தன் நடையை எடுத்து வைத்தான்.

"மாப்பிள்ளைகளை வர சொல்லுங்க” என்ற ஐயரின் குரல் கேட்டு, கொடிவீரன் மேடையை நோக்கி வர,

அவனை பார்த்த ஜெயா, "வீரா. எங்க போன நீ? போய் மணமேடையில உக்காருபா” என்றார்.

சிவா ஒரு மேடையிலும், கொடிவீரன் ஒரு மேடையிலும் அமர்ந்து, ஐயர் சொன்ன மங்கள வார்த்தையை எல்லாம், இவர்களும் திரும்ப சொல்லி முடிக்க, "பொண்ணுங்கள அழைச்சிட்டு வாங்க” என்று ஐயர் சொன்னதும், சசி சிவாவின் அருகில் அமர்ந்தாள்.

கொடிவீரன் அருகில் வந்து அமர்ந்த மகிழினியை பார்த்து, ‘உனக்கு இந்த திருமணத்தில் சம்மதமா?’ என்று கண்களால் சம்மதம் கேட்டிட, அவனின் சைகையை தான் கொடுத்த கடிதத்தை வாசித்த பின்தான், தன்னை கொடிவீரன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளான் என்று நம்பிய மகிழினி, சம்மதம் என தலையசைத்து அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

"என்னடா தம்பி இது. இவ மேல பழியைப் போட்டு. இவ நிர்வாணமா இந்த ஊரை சுற்றி வரும்போது, யாருக்கும் தெரியாம இவளை படம் எடுத்து, எந்த மீடியால இவளால என் பெயர் கெட்டுச்சோ, அதே மீடியால இவ பேரை நாராடிக்கணும்னு பார்த்தா, நம்ம கண் முன்னாடியே இவளுக்கு மறுமணம் நடக்குறதை பார்க்க வேண்டியதா போச்சே” என்று வனிதா புலம்ப,

"ஆமா அக்கா. எனக்குமே இந்த கல்யாணம் தலையில இடி விழுந்த மாதிரி தான் இருக்கு” என்று நாராயணன் சொல்லி வாயை மூடுவதற்குள்,

"ஐயோ அம்மா” என்று வனிதா கத்த.

"கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று ஐயர் சொல்ல, சிவா. சசி கழுத்திலும். கொடிவீரன். சித்ரமகிழினி கழுத்திலும் மாங்கல்யத்தை அணிவித்தனர்.

கூடி இருக்கும் அனைவரும் அக்ஷதை போட்டு, மணமக்களை வாழ்த்தி கொண்டு இருந்த தருணத்தில், வேணு அடித்த கோவில் மணி வனிதாவின் மண்டையில் விழ, அப்படியே நாராயணனின் காலிலும் விழுந்தது.

இவர்கள் கண்முன்💙 கேவி 💛 சிஎம்💙மணமக்களாக காட்சி தந்தனர்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top