• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 33

Joined
Jan 15, 2026
Messages
67
விவாதம் – 33

"என்ன சசி. என்னாச்சு? இங்க என்ன ப்ராப்ளம்?” என்று சிவா சசியிடம் விசாரித்தான்.

"என்னன்னே தெரியல. அதோ அங்க நிக்கிறாறே அவரு தான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க தங்கி இருக்குற வீட்டுக்கு வந்து, என் தம்பியும் சித்ராவும் கோவில் ரூம்ல...” என்று வார்த்தையை சொல்ல முடியாமல் தவித்து நின்றாள்.

சசி பேசியதை காதில் வாங்கிய கொடிவீரன், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் தன் மீது கை வைத்த நபரை தடுக்கப்போக, இன்னொருவன் மகிழினியின் முன் வந்து நின்றான்.

"இந்தாமா. நீ எல்லாம் பொம்பளையா. நல்ல குடும்பத்துல பிறந்து இருந்தா இப்படி ஒரு கேவலத்தை பண்ணிருப்பியா? ச்சீ... இந்த வேலை பாக்குறதுக்கு நீ போய் பிச்சை எடுத்து பிழைக்கலாம். உங்க உடம்பு சுகத்தை தீர்த்து கொள்ள, உங்களுக்கு கோவில் தான் கிடைச்சுதா” என்று அந்த நபர் கேட்டதும், தன் காலரைப் பிடித்து இருந்தவனை கீழே தள்ளிவிட்ட கொடிவீரன், மகிழினியை தவறாகப் பேசிய அந்த நபரின் கன்னத்தில் ஒரு அறை கொடுக்க, மகிழினியின் கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாத ஜீவநதியாக பெறுகிக்கொண்டு இருந்தது.

"ஏய், என்ன தைரியம் இருந்தா, இப்படி ஒரு கேவலமான செயலை பண்ணிட்டு என் மேலேயே நீ கை வைப்ப” என்று அவன் எகிற,

"டேய்! நிறுத்துங்க. என்ன பிரச்சனை இங்க? எதுக்காக நைட்டு ஒரு மணிக்கு பஞ்சாயத்தை கூட்டி இருக்கிங்க? விடிந்தால் என் மச்சான் சிவாவுக்கு இந்த கோவில்ல கல்யாணம் நடக்கப்போறது உங்களுக்கு எல்லாம் தெரியுமா இல்லையா?” என்று கேட்ட நாராயணன் வெளி வேஷம் போட்டான்.

"ஐயா! நீங்க என்னங்க. இவங்கனால நம்ம கோவில் புனிதமே கெட்டு போச்சுன்னு நாங்க சொல்லுறோம். நீங்க என்னடானா கல்யாணம் காட்சியை பற்றி பேசுறீங்க” என்று அந்த ஒருவன் சொல்ல,

இவர்கள் போட்ட திட்டம் நிறைவேறிக்கொண்டு இருப்பதை நினைத்த வனிதா மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

"என்ன சொல்லுறீங்க? அப்படி என்ன இவங்களால இந்த கோவிலின் புனிதம் கெட்டு போச்சு?” என்று வனிதா தான் சொல்லி தந்த திட்டதுக்கு சாதகமான விடையை எதிர்பார்த்தே அந்த ஒருவனிடம் கேள்வி கேட்டாள்.

"அம்மா, இவங்க ரெண்டு பேரும் கோவில்னு கூட பாக்காம அந்த ரூம்ல ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து” என்று பொய் சொன்னான்.

"போதும் நிறுத்துங்க. இனி ஒரு முறை எங்களப் பற்றித் தப்பா பேசுனீங்க, உங்களுக்கு மரியாதை கெட்டு போய்டும் சொல்லிட்டேன்” என்று இவர்களை கண்டித்தாள் மகிழினி.

"ஐயோ சித்ரா. என்ன மா இதெல்லாம்" என்று பாட்டி அலற.

"இங்க பாருமா பொண்ணே. உனக்கு எவ்வளவு திமிர்? இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிட்டு, இவ்வளவு தைரியமா பேச முடியுது” என்று ஒருவன் கேட்க,

"என்ன இது? நீங்களே ஆள் ஆளுக்கு பேசிகிட்டு இருந்தா, அப்போ எங்கள ஏன் வர சொன்னிங்க?” என்று நாராயணன் கேட்க,

"அதானே. என்ன தான் நடந்துச்சு? யாராவது ஒருத்தவங்க சொல்லி தொலைங்களேன்” என்று வனிதா கேட்க,

"அம்மா நாங்க கோவிலை பூட்டும்போது இவங்க அந்த ரூம்ல இருந்ததை நாங்க கவனிக்கலமா. ஆனா, நான் என்னோட செல்போனை எடுக்க மறுபடியும் என் மச்சானை அழைச்சிகிட்டு கோவிலுக்குள்ள வரும்போது, அங்க இவங்க ரெண்டு பேரும் உள்ள, ச்சி, எனக்கு சொல்லவே கேவலமா இருக்கு” என்று அந்த நபர் மீண்டும் அசிங்கமான தோரணையில் சொன்னதும், மகிழினியின் கண்கள் அதிகமாக கலங்கியது.

"ஏய் ஏய், ஏன் இப்படி அபாண்டமா பொய் சொல்றிங்க. நான், நான் எப்படி அந்த ரூமுக்குள்ள இருந்தேன்னு எனக்கு சத்தியமா தெரியாது. நான் மயக்கத்துல இருந்து கண் விழிக்கும் போது தான் நானே இவங்கள பார்த்தேன். அங்க இவங்களும் அந்த ரூம்ல மயக்கத்துல இருந்தாங்க. நான் இவங்கள எழுப்பி, இவங்க எப்படி அங்க வந்தாங்கன்னு கேக்குறதுக்கு முன்னாடி, அந்த ரூமுக்கு வெளிய நின்னுகிட்டு எங்கள பற்றி நீங்க தப்புப்தப்பா பேச ஆரம்பிச்சிட்டீங்க” என்று கொடிவீரன் பதற்றதுடன் அங்கே நடந்த விஷயங்களை சொன்னான்.

வாய்விட்டுச் சிரித்த வனிதாவின் கண்கள் மகிழினியை மட்டுமே பழிவாங்கும் எண்ணத்தோடு எதிர்நோக்கி இருந்தது.

"ஓ... இதெல்லாம் உங்க வேலை தானா? இப்போ எதுக்காக நீங்க இந்த நாடகத்தை எல்லாம் அரங்கேற்றம் பண்ணுறீங்க” என்று துல்லியமாக கணித்தவள் நேரடியாகவே வனிதாவிடம் கேள்வி கேட்டாள்.

"என்னமா பாப்பா சொல்ற? என்னைப் பார்த்தா பேசுற? நான் என்ன நாடகம் போடுறேன், முதல்ல இங்க என்ன நடக்குதுனே எனக்கு புரியலமா பாப்பா. நாளைக்கு என் தம்பியோட மச்சானுக்கு நடக்க இருக்குற கல்யாணத்துக்காக, நாங்க எல்லாம் ஓடி ஆடி வேலை செய்துட்டு இருக்கும் வேளையில், இவனுங்க என் தம்பிக்கு போன் பண்ணி, ஒரு ஆணும் பெண்ணும் கோவில்னு கூட பாக்காம, உள்ள அசிங்கமா நடந்துக்குறாங்க. நீங்க வந்து என்னனு பாருங்கன்னு போன்ல சொன்னாங்க, அவங்க சொன்னதை வச்சிதான் நானும், என் தம்பியும் இங்க கிளம்பி வந்தோம். இங்க வந்த பின்னாடி தான் தெரியுது, உங்கனால தான் இந்த பஞ்சாயத்தே கூடி இருக்குன்னு" என்றாள் வனிதா சாமர்த்தியாமான வார்த்தைகளை கோர்வையாக கோர்த்து.

"போதும் நிறுத்துங்க உங்க வசனத்தை. நீங்க சொல்ற மாதிரி இங்க எதுவுமே நடக்கல. இன்னும் கேட்டா நான் எப்படி இந்த கோவிலுக்குள்ள வந்தேன்னு கூட எனக்கு தெரியல. ஆனா, இப்போ நீங்க இவ்ளோ தூரத்துக்கு தெளிவா பேசும்போது தான் எனக்கு புரியுது. இதெல்லாம் உங்க ஏற்பாடுன்னு. ச்சீ, நீங்க எல்லாம் என்ன பெரிய மனுஷங்க. இப்போ இந்த மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணி, நீங்க என்ன நிரூபிக்க ட்ரை பண்ணுறீங்க” என்று கடுங்கோபத்துடன் கேட்டான் கொடிவீரன்.

"தம்பி இரு இரு. யாரு சீன் போடுறாங்க. நாங்களா? ஏன்பா நீ ஊர் விட்டு ஊர் வந்து, இந்த பொண்ணு கூட கோவில்ல உல்லாசமா இருந்துட்டு, அதை என்னன்னு நாங்க கேட்க வந்தா, நீ எங்களையே சீன் போடுறோம்னு சொல்லுறியா” என்று கிண்டலாக கேட்டான் நாராயணன்.

"கடவுளே! இங்க என்ன நடக்குது? டேய்! தம்பி, நீ எப்படிடா பூட்டின கோவிலுக்குள்ள போன? சித்ரா, நீ எப்படி அந்த ரூம்ல?" என்று சசி ஊர் மக்களின் சந்தேகத்தை தெளிவுப்படுத்த மகிழினியிடம் கேள்வி கேட்டாள்.

"அக்கா, நான் இன்னைக்கு சாய்ங்காலம் இந்த கோவிலுக்கு வந்தேன்ல, அப்போ நான் தெப்பக்குளத்துல உக்காந்து இருந்தேன். அப்போ கோவில் மணி அடிச்ச சத்தம் கேட்டு எனக்கு தலை வலிக்க ஆரம்பிச்சு மயக்கம் வர மாதிரி இருந்துச்சு. அப்போ நான் கோவிலுக்குள்ள இருக்குற ஒரு அம்மாகிட்ட தண்ணி கேட்டேன். அவங்க ஒரு ரூம்ல இருந்து தண்ணி கொண்டு வந்து தந்தாங்க. அந்த தண்ணியை நான் குடிச்சேன். ஆனா, அப்புறம் நான் எப்படி அந்த கோவில் ரூம்ல இருந்தேன்னு சத்தியமா எனக்கு இப்போ வர புரியல” என்றாள் அதே குழப்பதுடன்.

"என்னம்மா சொல்ற? உன்னை காணாமல் தானே என் மருமகன் உன்னை தேடி கோவிலுக்கு வந்தான்” என்றார் கீதா.

"அத்தை. நான் இவங்களத் தேடி கோவிலுக்கு வரும்போதே, கோவில் வாசல் பூட்டி இருந்துச்சு. இவங்க வீட்டுக்கு திரும்ப வந்து இருப்பாங்களான்னு எனக்கும் ஒரு சந்தேகம் தோணுச்சு. ஆனா, நான் சசி அக்காகிட்ட விவரம் கேட்கலாம்னு என் போனை தேடி பார்த்தா, நான் போனை சார்ஜ்ல போட்டுட்டு வெளிய வந்துட்டேன். சரி இவங்க எங்க தான் போயிருப்பாங்கன்னு தெரியலையேன்னு, நான் குழப்பத்துல இருக்கும்போது, என் பின் தலையில யாரோ பலமா அடிச்ச மாதிரி இருந்தது. அதோட எனக்கு என்னாச்சுன்னு தெரியல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் கண்ணை திறந்து பார்க்கும் போது தான் தெரிஞ்சுது, நான் அந்த கோவில் ரூம்ல மயங்கி இருந்தேன்னு. அதே ரூம்ல தான் இதோ இவங்களும் மயக்கத்துல இருந்தாங்க. அப்போ நான் தான் இவங்க முகத்துல தேங்காய் தண்ணி தெளித்து இவங்கள மயக்கத்துல இருந்து எழுப்பினேன். ஆனா, நாங்க ரெண்டு பேரும் எப்படி அங்க வந்தோம்னு நாங்க பேசி தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே, இந்த ஊர் மக்கள் எல்லாம் கூடி, ஆளாளுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” என்றான் முகம் இறுகிய நிலையில்.

"எப்பா... எப்பா... என்ன சூப்பரா கதை சொல்றிங்க நீங்க ரெண்டு பேரும். பரவாயில்ல நல்லா இருக்கு” என்று அவர்களை கிண்டல் செய்தான் நாராயணன்.

"இங்க பாருங்க. எந்த கதையும் சொல்லணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல. நாங்க சொல்றது தான் உண்மை” என்றான் தைரியமாக.

"என்ன நீங்க ஆளாளுக்கு பேசிகிட்டு இருந்தா இதுக்கு என்ன தான் முடிவு?” என்று ஒருவர் கேட்க,

"ஏங்க, அதான் என் மருமகன் தெளிவா சொல்லுறானே. இவங்க ரெண்டு பேருக்கும் ஆகாத யாரோ தான் இவங்கள இப்படி ஒண்ணா கோவில் ரூம்ல மயக்கமடைய வச்சி, இவங்க பெயரை கெடுக்க பிளான் பண்ணுறாங்க” என்று சரியாக சொன்னார் கீதா.
 
Joined
Jan 15, 2026
Messages
67
"இங்க பாருங்க, இவங்க சொல்ற கதையெல்லாம் நம்ப நாங்க தயாரா இல்ல. இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா அந்த கோவில் அறையில கட்டிப்பிடிச்சிகிட்டு இருந்தாங்கன்னு சாட்சி சொல்ல இங்க ரெண்டு பேர் இருக்காங்க/. ஆனா, இந்தப் பொண்ணும், பையனும் சொல்றது போல, இவங்கள யாரேனும் திட்டம் போட்டு மயக்கமடைய வச்சி, இந்த மாதிரி ஒரு கேவலத்தை பண்ணிருந்தா, அப்படி யாரு பண்ணாங்கன்னு இவங்க பக்கம் சாட்சி தான் சொல்லணும்” என்று வனிதா நல்லவளை போல சபையில் அழகாக பேசினாள்.

"ஏங்க, நீங்கல்லாம் சொல்றது போல அங்க அப்படி ஒரு விஷயமே நடக்கலன்னு நாங்க சொல்லுறோம். நடக்காத விஷயத்துக்கு சாட்சியை கேட்டா நாங்க எங்கேங்க போவோம்” என்றான் கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு.

"அதானே. என்ன விளையாடுறிங்களா? என் தம்பியும் சரி, சித்ராவும் சரி, நீங்க சொல்ற மாதிரி அசிங்கத்தை பண்ணிருக்க வாய்ப்பே இல்ல” என்றாள் சசி கோவமான மனநிலையில்.

"ஐயா, என் மகன் அப்படிப்பட்டவன் இல்லைங்க. சித்ராவும் அப்படிப்பட்ட பொண்ணு இல்லிங்க ஐயா. உங்களை எல்லாம் கையெடுத்து கும்பிடுறேன். தயவு செய்து இவங்க பெயரை கெடுக்குற மாதிரி பேசாதீங்க ஐயா” என்று தன் இரு கரங்களை கூப்பி கண்கள் கலங்கினார் ஜெயா.

"அம்மா, முதல்ல கையை கீழே இறக்குங்கம்மா. எங்கள வச்சி இவங்க எல்லாம் நாடகம் போடுறாங்க. அதைப் புரிஞ்சிக்காம நீங்க என்ன இவங்க முன்னாடி கையை கூப்பிகிட்டு நிக்குறிங்க” என்று கோவமாக சொன்ன கொடிவீரன், தன் அம்மாவின் கரங்களை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

"டேய்! தம்பி, இந்த வனிதாதான்டா, நம்ம சித்ராவை பழிவாங்க ஏதோ தில்லாலங்கடி வேலை பார்த்து உங்களை இதுல சிக்க வச்சிருக்கா. நம்ம இதுக்கெல்லாம் பயப்படணும்னு எந்த அவசியமும் இல்லை. நீ சித்ராவை அழைச்சிட்டு வாடா நம்ம போகலாம்” என்று சசி கடுப்புடன் சொன்னாள்.

"என்னம்மா, என்ன பேசுற நீ? விடிந்தால் உனக்கு கல்யாணம். நீ இந்த ஊருல தான் வாழப்போற. கொஞ்சமாவது எங்கமேல எல்லாம் உனக்கு மரியாதை இருக்கனும் புரியுதா” என்று தன் சட்டை கை மடிப்பை மேலும் மடித்துக்கொண்டு நாராயணன் குரலை உசத்தினான்.

"யாருக்கு, எப்போ, எந்த மாதிரி மரியாதை தரணும்னு எங்களுக்கு தெரியும். நீங்க எனக்கு இந்த வெண்டைக்காய் கதை எல்லாம் சொல்லித்தர வேணாம். டேய்! தம்பி, நீ வா நம்ம போகலாம். சித்ரா நீயும் வா” என்ற சசி, மகிழினியை கையோடு அழைக்க,

"சசி, ஏன் இப்போ நீ இவ்வளவு கோவப்படுற? நீ இரு. நான் மாமாகிட்ட பேசுறேன்” என்று சிவா நாராயணனை நோக்கி, "மாமா, என்ன இதெல்லாம்? சசியோட தம்பி ரொம்ப நல்ல பையன். பாவம் அந்தப் பொண்ணும் கூட ரொம்ப அமைதியான பொண்ணா தான் தெரியுறாங்க. தீர விசாரிக்காம நீங்க ஏன் இவங்கள பஞ்சாயத்துல நிக்க வச்சி இப்படி அசிங்கப்படுத்துறீங்க?” என்று கேட்டான்.

"மச்சான், நீ என்ன மச்சான் சுத்த விவரம் இல்லாம பேசுற. இவங்க ரெண்டு பேரும் நம்ம கிராமத்துக் கோவிலை கலங்கப் படுத்திருக்காங்க. இவங்களுக்கு கண்டிப்பா நம்ம தண்டனை தரணும். அப்படி நம்ம இவங்கள ஏதும் பண்ணாம விட்டுட்டா, அது சாமி குத்தமா மாறி, இந்த ஊரே அம்மன் கோவத்துக்கு ஆளாக்கிடும் மச்சான்” என்றார் நாராயணன் அதிகபட்ச நடிப்பை வெளிகாட்டியபடி.

"ஏங்க, நீங்க என்ன ராம நாராயணன் படம் பாப்பிங்களா. ரொம்ப ஓவரா உருட்டிகிட்டு இருக்கிங்க. அதான் சம்மந்தப்பட்ட ரெண்டு பேருமே சொல்லுறாங்க இல்ல. உள்ள அப்படி எதுவும் நடக்கலன்னு. இன்னும் உங்களுக்கு என்னங்க தெரியணும்” என்று சீறினாள் சசி.

இங்கே நடக்கும் கூத்தை பார்த்து, ஜெயாவும், பாட்டியும் நெஞ்சை பிடித்து கொண்டு சரிய காத்துகொண்டு இருக்கும் வேளையில்,

"என்ன இங்க ஆளாளுக்கு பேசிகிட்டு இருக்கிங்க? இதோ பாரு தம்பி, எங்க ஊருக்குன்னு ஒரு மரியாதை இருக்க. தெரிந்தோ தெரியாமலையோ உங்க ரெண்டு பேர் மேலயும் இப்படி ஒரு பழி விழுந்து இருக்கு. இப்போ இந்த பழியை போக்கி, நீங்க ரெண்டு பேரும் கலங்கம் இல்லாதவங்கன்னு நீங்க நிரூபணம் பண்ணா தான், நாங்க மேற்கொண்டு உங்களை இந்த ஊரை விட்டு அனுப்புவோம். ஏன் நாளைக்கு உன் அக்காவுக்கு நடக்க இருக்கும் கல்யாணம் கூட அப்போ தான் நடக்கும்” என்று வயதில் மூத்த முதியவர் ஒருவர் சொன்னார்.

"எங்க மேல எந்த தப்பும் இல்லைனு நாங்க நிரூபிக்க இப்போ நாங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க” என்று மகிழினி எந்த பயமும் இல்லாமல் கேட்க,

"என்ன கரகாட்டக்காரன் படத்துல கடைசியா தீச்சட்டி கையில எடுத்துக்கிட்டு, தீயில நடக்க சொன்ன மாதிரி, நீங்களும் நடக்க சொல்ல போறீங்களா? ”என்று கோபமாகக் கீதா கேட்க,

"நீங்க சொல்றது பாதி சரி தான். ஆனா, இந்த கிராமத்து வழக்கப்படி, இப்படி எதாவது ஒரு வகையில இந்த கோவிலுக்கு கலங்கம் ஏற்பட்டுட்டா, அதை சரி செய்ய சம்மந்தப்பட்ட பொண்ணு நிர்வாணமாக கையில் தீச்சட்டியை எடுத்திகிட்டு இந்த கிராமத்தை சுற்றி வரணும். அப்படிச் சுற்றி வந்த பின்னாடி, ஆண், பெண் ரெண்டு பேரும் எந்த ஒரு தவறும் பண்ணலைன்னு அந்த அம்மன் ஏத்துக்கிட்டா, அம்மனே மாரியா மாறி, இந்த கிராமத்தை மழை நீரால் குளிர செய்வாள். அப்படி அந்த பொண்ணு தீச்சட்டி தூக்கிக்கிட்டு இந்த கிராமத்த சுத்தி வந்ததுக்குப் பிறகும் மழை பொழியலைன்னா, அவங்க ரெண்டு பேரும் கோயிலுக்குள்ள தப்பு பண்ணாங்க என்பதை அம்மனே நமக்கு தெரியப்படுத்திட்டான்னு தான் அர்த்தம்" என்று நாராயணன் நல்லவனை போல சபையில் சொன்னதும், வனிதா முகம் மலர்ந்தபடி, மகிழினியை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

அவளை கண்டு கொடிவீரனும், சித்ரமகிழினியும் செய்வதறியாமல், சூழ்நிலை கைதியாக நின்று இருந்த தருணத்தில், "ஐ..." என்று சொன்னான் வேணு.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top