Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 65
- Thread Author
- #1
விவாதக் காதல் – 32
கோவில் மேற்பணி செய்யும் விஷயமாக, கோவில் நிர்வாகிககள் நாராயணன் மற்றும் வனிதாவிடம் கலந்துரையாடியபடி தெப்பக்குளத்தின் பக்கம் வருகை தந்து இருக்க,
இவர்களை கவனிக்காத மகிழினி நிலவின் வெளிச்சத்தில் குளத்து நீரில் ப்ரதிபலிக்கும் வெள்ளை நிலவை ரசித்து கொண்டு இருக்க, அவளை பார்த்து வனிதாவின் முகம் இறுகிப்போனது.
தன் அக்கா வனிதாவை கவனித்த நாராயணன், மகிழினிக்கும் வனிதாவுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க, வனிதா, மகிழினி ரன் பண்ணும் கேண்டீன் மேல் ஆசை கொண்டதையும்... அதற்காக, மகிழினி தன்னை மீடியா முன் அசிங்கப்படுத்தியதும் சொல்லி முகம் கடுத்தாள்.
"என்ன அக்கா சொல்ற. இவ உன்னை அசிங்க படுத்தினாளா? பார்க்க சின்ன பொண்ணு போல இருக்கா. இவ எப்படி” என்று வனிதாவிடம் நாராயணன் ஆச்சிரியமாக வினாவினான்.
“ம்... உண்மை தான்டா. இவ என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டா. டிபார்ட்மென்ட்ல என் பெயர் நாறிடுசசி. மீடியால என் முகத்தை போட்டு ஊர் பெயர் தெரியாத ஆளுங்களாம், என்னை கமெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க. இவளால நான் ரொம்ப அவமானப்பட்டுட்டேன்” என்று தன் தம்பியிடம் உறுமினாள் வனிதா.
"அக்கா, இப்போ சொல்லு. இவள என்ன பண்ணலாம்” என்று நாராயணன் வன்மத்தை சுமந்தபடி கேட்டான்.
"பண்ணனும்டா தம்பி. பிசுரு தட்டாமல் பண்ணனும். அவ வாழ்க்கையில என்னை மறக்க முடியாத அளவுக்கு எதாவது ஒன்றை பண்ணனும். எந்த மீடியா முன்னாடி இவ என்னை அசிங்கப்படுத்தினாளோ, அதே மீடியால இவ பெயர் அசிங்கப்படனும்” என்ற வனிதா மகிழினியை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.
நாராயணனும், வனிதாவும் தெப்பக்குளத்தின் நுழைவாயிலில் நின்று பேசிக்கொண்டு இருந்ததை கவனிக்காத மகிழினி, இன்னமும் நீரில் நீந்தி கொண்டு இருக்கும் நிலவின் நகலை மட்டுமே கண்டு ரசித்துக்கொண்டு இருந்தாள்.
"சரி சொல்லுக்கா. என்ன பண்ணலாம்?” என்று கேட்க,
"ஆமா. இவளுக்கும் உன் மச்சான் சிவா கல்யாணம் முடிக்ப் போறானே அந்த சசி, அவனுக்கும் என்ன சம்மந்தமாம்” என்று விசாரிக்க,
"சசியோட தம்பி, வேலைக்கு போன இடத்துல, இவ வீட்டு மாடியில தான் தங்கி இருக்கான் போல. அந்த நட்பின் அடிப்படையில தான் இந்த பொண்ணு சிவா, சசி கல்யாணத்துக்கு வந்து இருக்காள்” என்று விளக்கமாக சொன்னான் நாராயணன்.
"ஓ... அவனா? நான் கூட இவ இந்த ஊருல இருக்கக்கூடாதுன்னு சொன்னதுக்கு, இவ கையை எல்லாம் பிடித்து ரொம்ப சீன் போட்டான் இல்ல” என்று வனிதா தன் புருவம் உயர்த்தி கேட்க,
“ம்... ஆமா அக்கா. நானும் பாத்தேன். அப்போவே நான் இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். ஆனா, என் மச்சான் அந்த சிவா இருக்கான் இல்ல, அவனால தான் நான் அமைதியா இருக்க வேண்டியதா போச்சு” என்று முகம் சிவந்தான் நாராயணன்.
"டேய்!! உன் மச்சான் அந்த சிவாவை எல்லாம் இப்போவே நீ தட்டி வைக்கணும். இல்லைனா அவன் உன்னை சுத்தமா மதிக்கமாட்டான்” என்று வனிதா சொல்ல,
சில நொடிகள் யோசித்த நாராயணன், "ஏன் அக்கா, ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சா எப்படி இருக்கும்” என்றவன். தன் அக்கா வனிதாவிடம் ஒரு யோசனையை சொல்ல, கேவலமாக வாய் விட்டு சிரித்தாள் வனிதா.
"என்ன அக்கா பிளான் ஓகே தானே” என்று நாராயணன் கேட்க,
"அடி தூள்டா தம்பி. நம்ம பிளான் மட்டும் சரியா நடந்ததுன்னா, கண்டிப்பா இந்த கல்யாணமும் நின்னு, இதோ அங்க இருக்காளே, அவளோட வாழ்க்கையும் நாசமாகும்” என்றாள் அரக்கியாக மாறிய வனிதா.
"அது மட்டும் இல்ல அக்கா, உன்னை எதிர்த்து பேசிய அந்த சசியோட தம்பியின் தலையெழுத்தும் மாறப்போகுது பாரு” என்றான்.
“ம்... ஆமாடா. ஆனா, ஒன்னு மட்டும் நினைவில் வச்சிக்கோ, எக்காரணத்தை கொண்டும் நம்ம நேரடியா இந்த பிளான்ல இன்வால்வ் ஆகக்கூடாது. ஏன்னா நமக்கு இந்த ஊருல ரொம்ப நல்ல பெயர் இருக்கு. நம்ம இந்த மாதிரி கேவலமா பிளான் போடுறது மட்டும் யாருக்காவது தெரிய வந்தா, அப்புறம் நம்ம குடும்பத்துக்கு தான் கெட்ட பெயர்.”
"நீ கவலையை விடுக்கா. நான் நமக்கு நம்பிக்கையான ஆளை வச்சி நைசா காயை நகர்த்துறேன்” என்று நாராயணன் ஒரு திட்டம் போட,
"டேய்!! இந்த விஷயம் உன் பொஞ்சாதி ஆண்டாளுக்கு கூட தெரியக்கூடாது. ஏன்னா, ஆயிரம் இருந்தாலும் நாளைக்கு நிக்கப்போறது உன் பொஞ்சாதி தம்பியோட கல்யாணம். இப்போ நீ போய் நம்ம திட்டத்தை உன் பொஞ்சாதிக்கிட்ட சொல்லிட்டனா, அவ நம்மள ரொம்ப கேவலமா நினைப்பாள்” என்று சொன்ன வனிதாவின் திட்டத்தை நிறைவேற்ற நாராயணன் எடுக்கப்போகும் முடிவு ஒரு பக்கம் இருக்க,
மறுபக்கம், நாளை காலை நடக்க இருக்கும் சசியின் கல்யாணத்துக்கு வருகை தந்த அனைவரும் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர்.
“என்ன சசிமா. கோவிலுக்கு போன சித்ரா ஏன் இன்னும் வரல?” என்று ஜெயா கேட்க,
"அம்மா. அவ என்ன தனியாவா போயிருக்கா. கூட நம்ம அத்தையும் தானே போயிருக்காங்க” என்று சொன்ன நேரம் வேணுவுடன் வீட்டுக்குக் வந்த கீதாவை பார்த்த சசி, "அதோ அத்தையே வந்துட்டாங்க பாருங்க. அத்தை சித்ரா எங்க? அம்மா என்னமோ சின்ன பிள்ளையயை காணோம்னு தேடுற மாதிரி, அவளை தேடிகிட்டு இருக்காங்க” என்று சொன்னவளின் கண்கள் சித்ராவைத் தேடியது.
"என்ன இன்னும் சித்ரா வரலையா?" என்று கீதா கேட்டதும், அதிர்ந்து போனார் மகிழினியின் பாட்டி.
"என்ன அத்தை இப்படிக் கேக்குறீங்க. சித்ரா உங்ககூட தானே கோவிலுக்கு வந்தா” என்று சசி பதட்டமாக கேட்க,
வேறொரு அறையில் இருந்து வெளியே வந்த கொடிவீரன், "என்னாச்சு அக்கா? ஏன் இப்படி கத்திகிட்டு இருக்க?” என்று கேட்டு கையில் இருந்த கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு சசியின் அருகில் வந்தான்.
"டேய்! இங்க பாருடா இந்த அத்தையை. சித்ரா இவங்க கூட தான் கோவிலுக்கு போனாள். ஆனா, இப்போ இவங்க மட்டும் வேணு கூட வந்துட்டு, சித்ரா இன்னுமா வரலன்னு கேக்குறாங்க” என்று சொல்லி கீதாவை முறைக்க,
"அடியே! நீ என்னடி. நான் என்னமோ ஒரு வயசு குழந்தையை கோவிலுக்கு கூட்டிட்டு போய் தொலைச்சிட்டு வந்தது போல என்கிட்ட சண்டைக்கு வர” என்று கீதா முகம் சுளிக்க,
"கடவுளே என் பேத்திக்கு என்னாச்சுன்னு தெரியலையே. மணி ஒன்பதுகிட்ட ஆகுது. அவ ஏன் இன்னும் வீட்டுக்கு வரல. அவளுக்கு இந்த ஊர்ல வேற யாரையும் கூட தெரியாதே” என்று பாட்டி புலம்ப.
"அம்மா அம்மா, இருங்க பயப்புடாதிங்க. இங்க இருக்குற கோவிலுக்கு தானே போய் இருக்கா. இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாள்” என்று ஜெயா மகிழினியின் பாட்டியை சமாதானம் செய்தார்.
"ஏன் அத்தை. நீங்க எல்லாம் ஒண்ணா தானே போனீங்க? இப்போ எப்படி நீங்களும் வேணுவும் மட்டும் தனியா வரீங்க?” என்று கொடிவீரன் கேட்க,
"டேய்!! இந்த பொடிப் பையனுக்கு கோவில்ல இருக்கப் பிடிக்கலன்னு சொன்னான். அதான் நான் அவனை என் ஒண்ணுவிட்ட தங்கச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன்.” என்றார்.
"அப்போ சிஎம் எங்க” என்று கொடி வீரனும் பதற்றதுடன் கேட்க,
"நான் இவனை வெளிய அழைச்சிட்டு போகும்போது, உன் சிஎம் அந்த கோவில் தெப்பக்குளத்தில் தான்டா உக்காந்துட்டு வரேன்னு சொன்னாள்” என்று கீதா சொன்னதும்,
"ஓ... அப்போ அவங்க அங்கதான் அக்கா உக்காந்து இருப்பாங்க” என்று இயல்பாக சொன்னான்.
"என்னடா சொல்ற” என்று புரியாமல் கேட்டாள் சசி.
"ஆமா அக்கா. அவங்க கோவிலுக்கு போனா தெப்பக்குளத்துல மணிகணக்குல உக்காந்து இருக்குறது வழக்கம். சோ, இன்னைக்கும் அப்படி தான் அங்க உக்காந்துட்டு வருவாங்க” என்று சொன்னான்.
"தம்பி, இருந்தாலும் எனக்கு என்னமோ பயமாவே இருக்குப்பா” என்று மகிழினியின் பாட்டி கலகத்துடன் சொன்னதும்.
"தம்பி, எதுக்கும் நீ கோவில்ல போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாப்பா” என்று ஜெயா சொல்ல,
“ம்... சரிம்மா” என்று சொன்னவன், வீட்டில் இருந்து வெளியேறி. கோவிலை நோக்கிச் சென்றான். கோவில் நுழைவாயில் பூட்டி இருப்பதை பார்த்தவன், " என்ன இது கோவில் பூட்டி இருக்கு? அப்போ இவங்க எங்க போய் இருப்பாங்க. இந்த கோவிலுக்கு வந்ததா தானே அத்தை சொன்னாங்க. ஒருவேளை வீட்டுக்கு திரும்பி போய் இருப்பாங்களா. சரி அக்காவுக்கு போன் பண்ணி பாப்போம்” என்று தனக்குள் எண்ணியவன் தன் பாக்கெட்டில் இருந்த கைபேசியை தேடினான்.