Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 49
- Thread Author
- #1
விவாதம் - 24
“என்னங்க அப்படி பாக்குறீங்க?” என்று தன் புருவம் உயர்த்திய கொடியின் அருகில் வந்தாள் மகிழினி.
“நீங்க நீங்க ஊருக்கு போகலையா.?” என்று மகிழினி தயக்கத்துடன் கேட்டதும்...
“ம்... போகலாம். இப்போ என்ன அவசரம்” என்றவன் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
“சாரி” என்று அவன் பார்வையின் கேள்வியை புரிந்து கொண்ட மகிழினி, தானாக முன் வந்து மன்னிப்பு கேட்டாள்.
“அந்த மண்ணை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுறது? எனக்கு அதெல்லாம் வேணாம்” என்று காட்டமான குரலில் அவன் பேசுவதை கேட்டு சற்று மனம் வாடினாள் மகிழினி.
“ஏங்க இப்படி பண்ணுறீங்க. நான் உங்கள கேன்டீன் வரை போய் தேடிட்டு வந்தேன் தெரியுமா?” என்று அவன் சொன்னதும் மகிழினி அவனை பார்க்காமல் தலை குனிந்து கொண்டாள்.
“முதல்முறை நானா தாங்க உங்ககிட்ட பேசுனேன். பட் உங்களுக்கு என்னோட அதிகப்படியான பேச்சும், உங்க மேல என்னையே அறியாம நான் காட்டுன அக்கறையும், உங்கள பல முறை முகம் சுழிக்க வைத்தது என்னமோ உண்மை தான். அதனால தான், நானே முடிவு பண்ணி உங்கிட்ட இருந்து விலகி நின்றேன். ஆனா, அப்புறம் நம்ம ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி, நல்ல நட்பின் அடிப்படையில் தானே பழகலாம்னு முடிவு பண்ணோம். ஆனா, இப்போ சட்டுன்னு நீங்க வீட்டுக்குள்ள இருந்துகிட்டே, என்னை ஏன் இப்படி அவாய்ட் பண்ணுறீங்க?” என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் மகிழினியை கேள்வி கேட்டான்.
“ஐயோ! ஏன் நீங்க இவ்ளோ யோசிக்கிறீங்க. அந்த அளவுக்கு இப்போ என்ன நடந்துடுச்சு. நீங்க ஊருக்கு போகும்போது, நான் உங்க முன்னாடி வர கூடாதுன்னு தான், வீட்டுக்குள்ள இருந்துகிட்டே பாட்டிகிட்ட சொல்லி, இல்லைன்னு சொல்ல சொன்னேன்.” என்றாள் மகிழினி
“அதான் ஏங்க அப்படி சொல்ல சொன்னிங்க?” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டான் கொடி
“நீங்க நல்ல காரியத்துக்கு போறீங்க. அப்போ என்னை பார்த்துட்டு போனா அது நல்லா இருக்காதுன்னு தான்” என்று தன் வார்த்தையை நீட்டினாள் மகிழினி.
“இதெல்லாம் ஒரு காரணமா? இல்லிங்க நான் இத நம்பமாட்டேன்/ உங்களுக்கு என் அக்கா கல்யாணத்துக்கு வர பிடிக்கல. அதுக்காக தான் இப்போவே என்னை அவாய்ட் பண்றீங்க.” என்று கொடி தன் குரலில் கோவத்தை காட்டினான்
“இல்லிங்க அப்படி எல்லாம் இல்ல. நீங்களா எதாவது நினைச்சிக்காதிங்க” என்று முகம் மாறினாள் மகிழினி
“என் அம்மாவும், என் அக்காவும் உங்கள எங்க வீட்டு பெண்ணாக தான் நினைக்கிறாங்க. ஆனா நீங்க? சரி விடுங்க. நான் ஒரு பைத்தியம். உண்மையில் நான் இந்த வீட்டுல குடி இருக்குற ஒரு டெனன்ட் அவ்வளவு தானே. நான் எப்படி நீங்க எங்க வீட்டு விஷேசத்துக்கு வரணும்னு ஆசை பட முடியும். சரிங்க நான் கிளம்புறேன்” என்றவன் வேகமாக மாடிப்படியில் கால் பதித்தான்.
“ஏங்க ஏங்க இருங்க ஏன் இப்படி கோவப்படுறீங்க. நான் சொல்ல வந்ததை நீங்க புரிஞ்சிக்கவே மாட்டீங்களா” என்றவள். தானும் அதே வேகத்துடன் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கினாள்
“புரிஞ்சுதுங்க. நல்லாவே புரிஞ்சுது.” என்றவன் வாசலில் காத்து இருக்கும் ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், ஆட்டோ வேகமாக அந்த தெருவில் இருந்து மறைந்தது.
வாசலில் நின்று ஆட்டோ மறையும் வரை கண் எடுக்காமல் இங்கே நடப்பதை கவனித்து கொண்டு இருந்த வேணு, “என்ன அத்த? என்ன பிரச்சனை?” என்று ஏதும் புரியாமல் கேட்டான்.
வாசலையே வெறிக்க பார்த்த மகிழினி தன் தலையில் தானே அடித்து கொண்டவள் “ஒண்ணுமில்லடா. கதவை பூட்டிட்டு போய் படு.” என்று சொன்னவள். பொறுமையாக மாடிக்கு சென்றாள்.
அங்கே மல்லி பூ தோட்டத்தின் நடுவே இருந்த மஞ்சள் ரோஜா செடியை கையில் எடுத்தவள், “இது எப்படி சாத்தியம்? நான் தந்த ஒரு ரோஜா மலர் எப்படி இவ்ளோ அழகான செடியா மாறுச்சு?” என்று மகிழினி அந்த ரோஜா மலரையே பார்த்து கேள்வி கேட்க,
“அதுவா மாறல அத்த. கொடி மாமா தான் அதை என்னென்னமோ பண்ணி மாத்துனாரு” என்று வேணு சொல்லிக்கொண்டே மகிழினி அருகில் வந்தான்.
“என்னடா சொல்ற மாமாவா? இது என்ன புதுசா?” என்று கோவமாக கேட்டாள் மகிழினி.
“அப்பா தான் அப்படி கூப்பிட சொன்னாரு” என்று வேணு சொல்ல,
“உன் அப்பா உனக்கு நல்லது எதுவும் சொல்லி தர மாட்டாரா?” என்று மகிழினி கேட்க,
சத்தமாக சிரித்த வேணு, “அதுக்கு முதல்ல, அவருக்கு அந்த நல்லதை யாரேனும் சொல்லி தரணும் அத்த” என்று அவன் சொன்னதும் மகிழினி அவனை சிரிப்பை அடக்கிக்கொண்டு முறைத்தாள்.
“நீங்க முறைத்தாலும் நான் சொல்றது தானே உண்மை. எங்க அப்பாவுக்கு சுத்தமா விவரம் பத்தல. எப்போ பாரு எங்க அம்மாகிட்ட மிதி வாங்குறதே அவருக்கு வேலையா போச்சு” என்று வேணு மீண்டும் அவன் அப்பாவை கிண்டல் செய்ய,
“டேய் என் அண்ணனை பற்றி எல்லாம் அப்படி பேசாத” என்று முகம் மாறினாள் மகிழினி
“சரி அதை விடுங்க. ஏன் இந்த மாமா உங்கிட்ட சண்டை போட்டுட்டு போறாரு. சரியான கோவக்கார மனுஷன் போல அந்த ஆளு. பேசாம நீங்க இனிமே அந்த ஆளுகிட்ட பேசாதீங்க அத்த” என்ற வேணுவின் வாயில் ஒரு அடி வைத்தாள் மகிழினி
“ஆ... ஏன் அத்த அடிக்கிறீங்க?” என்று வேணு கத்த
“பெரியவங்கள அப்படி எல்லாம் பேசக்கூடாது. அதுவும் இல்லாம கோவம் இருக்குற இடத்துல குணம் இருக்கும். நம்ம பண்ற சின்ன தப்பை கூட நம்ம முகத்துக்கு நேரா சுட்டிக்காட்டுற ஆளுங்க தான், நமக்கு உண்மையானவங்க. ஐயோ இத சொன்னா அவங்க கோச்சிப்பாங்க, அத சொன்னா இனி அவங்க நம்மகூட பேச மாட்டாங்கன்னு நினைத்து, நம்ம கேக்க வேண்டிய கேள்வியையும், பேச வேண்டிய விஷயத்தையும், கேக்காம, பேசாம விட்டுட்டா, அந்த உறவுல உண்மை இருக்காது. நம்ம எப்படி இருக்குறோமோ, அப்படியே நம்மள ஏற்றுக்கொள்ளும் ஒரு உறவு கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். நானும் அவரும் அடிக்கடி சண்டை போட்டாலும், நாங்க அடுத்தமுறை பாக்கும் போது நார்மலா பேசுறோம் பாரு, அது தான் புரிதல். அதுக்கு அஸ்திவாரம் தான் எங்க நட்பு. நீ சின்ன பையன். உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது” என்று தான் கொடிவீரன் மேல் கொண்ட எண்ணத்தை வேணுவிடம் சொன்னாள் மகிழினி
“ஒரு பக்க வசனம் பேசிட்டு, இப்போ வந்து நான் சின்ன பையன்னு சொல்ற. ஏன் இத பேசுறதுக்கு முன்னாடி தெரியாது” என்று வேணு மகிழினியை முறைக்க
அதே சமயம், “சித்ரா சித்ரா. உனக்கு போன் வந்து இருக்கு. டேய் வேணு, கீழே வந்து போனை வாங்கிட்டு போய் உன் அத்தைக்கிட்ட கொடு” என்று பாட்டி கீழ் தளத்தில் இருந்து குரல் கொடுக்க, வேணு வேகமாக ஓடி போனவன், பாட்டி கையில் இருந்த போனை வாங்கி வந்து மகிழினியிடம் தந்தான்.
“யாருடா போன்ல?” என்று வேணுவை கேட்டுக்கொண்டே, “ஹலோ” என்றாள் மகிழினி,
“என்னமா சித்ரா. வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா?” என்று கொடியின் அம்மா அன்பாக மகிழினியை விசாரித்தார்.
முகம் மலர்ந்த மகிழினி, “அம்மா நீங்களா? எப்படி இருக்கீங்க? அக்கா எப்படி இருக்காங்க?” என்று நலம் விசாரித்தாள்
“நாங்க எல்லாம் நலம் தான்மா. அப்புறம் என் மகன் கிளம்பிட்டானா? அவனுக்கு போன் பண்ணா ரிங் போகுது எடுக்கமாட்டுறான்” என்று ஜெயா சொன்னதும்,
“அவரு இப்போ தான்மா கிளம்புனாரு. ஒரு வேளை போன் சைலண்ட்ல போட்டு இருப்பாரு போல” என்றாள் மகிழினி.
“ம்... சரிமா. அப்புறம் நீ கல்யாணத்துக்கு முன்னாடி நாளே வந்துடனும். அவரு போன பின்னாடி நாங்க சொந்த பந்தங்களை எல்லாம் ரொம்ப நாடுறது இல்ல. இந்த சசி பொண்ணுக்கு இது வர எத்தனையோ முறை, கல்யாணம் கூடி வந்து நின்னு போய் இருக்கு. இந்த வருஷம் மட்டும் இவளுக்கு கல்யாணம் நடக்கலைனா, காலத்துக்கும் இவ என் கூட தான் இருக்கனும் போல. இவ கழுத்துல தாலியை பாக்குற வரை எனக்கு தான் நெஞ்சில நெருப்பை வச்சிக்கிட்டு சுத்துற மாதிரி இருக்கு” என்று ஜெயா உரிமையாக மகிழினியிடம் புலம்பினார்.
“அம்மா கவலைப்படாதீங்க. கண்டிப்பா நம்ம சசி அக்கா கல்யாணம் நல்லபடியா முடியும்” என்று அவருக்கு தைரியம் சொன்னாள்.
“ஆமாம்மா. சசிக்கு முடிந்த கையோடு, கொடி வீரனுக்கும் ஒரு கல்யாணத்தை முடித்து வச்சிட்டா, நான் நிம்மதியா காசி ராமேஸ்வரம்னு பையை தூக்கிட்டு கிளம்பிடுவேன்” என்றார் ஜெயா.
“ஏன் அங்க எல்லாம் போறீங்க? உங்க பையனுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு நீங்க இங்கே வந்துடுங்க. நான் உங்ககூட இருக்கேன்” என்று மகிழினி அன்பாக சொன்னாள்.
“கண்டிப்பா வரேன்மா. எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த ரெண்டு இம்சைகளையும் கல்யாணம் பண்ணி துரத்திட்டு, நான் உன்கூட வந்துடுறேன்” என்று ஜெயா சொன்னதும், மகிழினியின் மனம் மகிழ்ச்சியில் நெகிழ்ந்தது.
“சரிமா. நீ நேரத்தோடு படு. கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு. நான் உனக்கு இன்னோரு நாள் போன் பண்ணுறேன். ஆங் ரெண்டு நாள் முன்னதாகவே, நீங்க நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்துடனும்” என்று ஜெயா அன்பு கட்டளையிட்டவள் தன் கைபேசி இணைப்பைத் துண்டித்தார்.
கொடி மகிழினியின் தயக்கத்தை புரிந்துகொள்ள முடியாது, இவள் மீது வருத்தத்துடனே தன் சொந்த ஊருக்கு சென்றான்.