New member
- Joined
- Jan 20, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
வருணமேகமே
இருள் சூழ்ந்த இரவு….. ஊரே அடங்கி அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஆனால், ஒரு இடத்தில் மட்டும் அந்த அமைதியைத் தகர்த்தெறிந்து புலம்பலால் நிறைந்திருந்தது.
“மச்சா அவள் என் அஞ்சலடா! என்னை விட்டுப் போயிட்டா….. நான் வேண்டாமா அவளுக்கு?” என்று வலி நிறைந்த குரலில் கையில் நுரை பொங்கும் பீருடன் அவன் சொல்ல,
அதைக்கேட்டு, அவனின் நண்பன் அசோக் சலிப்புடன், “டேய் உனக்கு இது அநியாயமா தெரியலையா. உன்னோடுதே ஒரு பக்க காதல்… இதுல தோல்வி வேற, வலிக்கும் தான் அதுக்காக மூன்று மணி நேரமா இதே தான் சொல்லிட்டு இருக்க, பேசாமல் வா மண்டபம் பக்கத்தில் தானே இருக்கு கடத்திட்டு வந்திடலாமே” என
அதற்குள், முரளி அவனின் மற்றொரு நண்பன் “ஆமா கடத்தல் ஒன்று தான் குறை. நீ அஞ்சல அஞ்சல சொல்லித் தான் உன் காதல் கை கூடவில்லை போல” என்று மொக்கை காரணம் கொண்டு நண்பனைச் சமாளிக்க,
நேரம் செல்ல செல்ல அவனின் புலம்பல் தான் அதிகம் ஆனது. அதைக் கடுப்புடன் கேட்ட முரளி பக்கத்திலிருந்த முழு பொத்தலையும் வாயில் சரித்துக் கொண்டு “போதும் டா கடுப்பா இருக்கு, கிளம்பலாமா” என்று எழுந்துவிட்டான்.
அசோக் “இவன் கூட நான் கிளம்பறேன் டா. உனக்குப் பக்கத்தில் தானே வீடு, நீ பார்த்து போய்டுவ தானே. இவனைத் தனியா அனுப்ப முடியாது போல டா” என அவனும் “எனக்குத் தெரியும் கிளம்பு” என்று கடுப்புடன் சொல்லவும், இருவரும் கிளம்பினர். போகும் அவர்களையே இவன் வெறித்துக் கொண்டு இருந்தான்.
எட்டு வருடங்களுக்கு பின்,
தென்காசி மாவட்டத்தின் அழகிய நகரமான சுரண்டையில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற அகத்தீஸ்வர் குகை கோவில். இக்கோவில் தென்னகத்தின் காசி என்று போற்றப்படுகிறது.
சூரியன் இன்னும் தனது பொன்னிழைகள் பூமியை வருடாமல் இருந்த நேரம். கோவிலின் வளாகம் அமைதியாக இருந்தது. பூசாரியைத் தவிர, வெகு சிலரே அங்கிருந்தனர், அதில் நம் நாயகியும் ஒருத்தி. அவள் தான் வருணிகா.
அவளின் பெயரில் மட்டும் வண்ணம் இருந்தது. ஆனால், அவளின் வாழ்க்கை ஊடுருவிப் பார்ப்பவர்களுக்கு அது கருமை நிறைந்ததாகவே தோன்றும், சோகமே அவளின் நிழலாகத் தொடர்ந்து இருந்தது.
அவளை வழக்கம்போல கோவிலில் பார்த்த வயதான பெண்மணி, அருகிலிருந்தவரிடம், “இந்த பொண்ணுக்கு எப்பதான் விடிவு வருமோ தெரியலை! இவ்வளவு வருஷமா, நாளும் தவறாமல் கோவிலுக்கு வருகிற அவள் வேண்டுதல் தான் பலிக்க காணோம்”
அதற்கு அருகிலிருந்தவர் ஆழ்ந்த கவலையோடு, “அது வாங்கி வந்த வரம் கனகா… நம்ம கவலைப்பட்டு என்ன பண்றதும், அவள் வீட்டில் இருக்கிறவங்களுக்கு இவ நல்ல மனசு புரியலை. இந்த பொண்ணு எந்த தப்பும் பண்ணிருக்காதுனு புரியலை ” என்று பேசிக்கொண்டே சென்றனர்.
வருணிகா எதிரே இருக்கும் ஈஸ்வரனிடம் “எட்டு வருசமா போராடிட்டு இருக்கேன் இன்னும் போராடலாம் தான். ஆனால் என் மனசிலும் தைரியம் இல்ல உடம்பிலும் தெம்பு இல்ல. இப்ப நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். எட்டு வருஷம் முன்ன எந்த தப்பை நான் பண்ணதா சொல்லி இத்தனை வருடம் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கேனா அந்த தப்பையே பண்ண போறேன். சந்தோசம் தான் என் வாழ்க்கையில் இல்ல, இனி நிம்மதியாவது கொடு. நீ இருக்கிற நம்பிக்கையில் தான் இந்த பெரிய முடிவை எடுத்து வைக்கிறேன். உன்னை இதுக்கு அப்பறமா எப்ப பார்ப்பேன்னு தெரியலை. ஆனால் கண்டிப்பா மறக்க எல்லாம் மாட்டேன். அடுத்த முறை உன்னை பார்க்கும் போது நான் இழந்தது எல்லாம் என் கிட்ட இருக்கணும்” என்று மனம் உருகி வேண்டிக்கொண்டு இருந்தாள்.
வருணிகா பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இருபத்தி எட்டு வயதாகும் இளம் மங்கை. தாய் காமாட்சி, தந்தை சுந்தரம் மற்றும் தங்கை வானதி என்ற வளமான குடும்பம் தான், சந்தோஷமான வாழ்க்கை தான். ஆனால் எல்லாமே எட்டு வருடம் முன்பு வரை. இப்பொழுது ஏன் வாழ்கிறோம் என்ற நிலையில் தான் இருக்கிறாள்.
வீட்டுக்கு வந்தவளை வரவேற்ற அவளின் தாய் “வேலைக்குக் கிளம்பர நேரத்தில் எங்க போயிட்டு வர?” என்று கடுமையாகக் கேட்க,
“கோவிலுக்கு தான்மா” என்று மெலிதான குரலில் சொல்ல, “என்னத்த கோவிலோ! கிளம்பு. உன்னால எங்களுக்கு நடக்கிற ஒரே நல்லது நீ வாங்கற சம்பளம் மட்டும் தான்” என்று சலிப்பாகச் சொல்லி விட்டுச் செல்ல,
செல்லும் அவரையே ஏக்கமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். ஒருகாலத்தில் அளவில்லா அன்பை வாரி வழங்கியவள், இப்போது கோபத்திலும், வெறுப்பிலும் மட்டும் பேசியிருப்பதை நினைத்து வருணிகா ஏக்கத்துடன் நின்றாள். தந்தையோ பேசுவது கூட இல்லை. அன்பைப் பொழிந்த தங்கை, இப்பொழுது எல்லாம் நக்கலாகப் பார்ப்பது போல் தோன்றுகிறது.
இரவு ஊரே அமைதியில் மூழ்கியபோது, வருணிகா மெதுவாக தன் அறையை விட்டு வெளியே வந்தாள். அவளது கையில் ஒரே ஒரு ட்ராவல் பை! பிறந்து வளர்ந்து, உயிரோடு கலந்த வீட்டை விட்டுப் போகத் தயாரானாள். எல்லா பெண்களுமே ஒரு கட்டத்தில் தங்கள் வீட்டு உறவுகளைத் தியாகம் செய்ய வேண்டிய தருணம் வரும். ஆனால், இவள் செய்யப்போகும் தியாகம் வேறு விதமானது.
வெளியே வந்தவள் அவளுக்காகக் காத்திருந்த இருசக்கர வாகனத்தில் கிளம்பிவிட்டாள். எண்ணங்களோ எங்கையோ செல்ல, முன்னே இருந்த நபர் பேசுவது கூட காதில் விழவில்லை.
“ஹே நான் பேசறது கேக்குதா” என்ற பின் தான் அவள் “ஹான்… என்ன கேட்ட” என்று திரும்பக் கேட்க,
“சரியா போச்சு. நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்கோ. உன்னைப் பற்றி என் தோழியிடம் சொல்லிருக்கேன். அவளுக்கே இன்னும் பத்து நாளில் கல்யாணம் இருக்கு. அதுக்கு கண்டிப்பா நான் வருவேன். அப்ப மற்றதை எல்லாம் பார்த்துக்கலாம். நான் வர வரைக்கும் அவ உனக்கு சப்போர்ட் பண்ணுவா” என
“ரொம்ப தேங்க்ஸ் ரோகினி நீ இல்லாம இருந்தா, நான் இந்த முடிவைத் தைரியமா எடுத்து இருக்க முடியுமோ தெரியல” என்று கண் கலங்கச் சொல்ல,
“இதில் என்ன இருக்கு, உனக்காக இது கூட பண்ண மாட்டேனா?” என்று அவளைச் சென்னை செல்லும் பேருந்தில் அமர்த்தி விட்டுப் பல அறிவுரைகள் கூறிய பின்னரே சென்றாள். இதோ வருணிகா வாழ்வின் புதிய தொடக்கம் தொடங்கி விட்டது. இந்த இரவோடு கருமை நிறைந்த அவளின் வாழ்வில் ஒளி தோன்றப் போகிறது.
ஒரு வாரம் கழித்து,
திவ்யா “வரு உனக்கு ஜாப் எல்லாம் ஓகே தானே? செட் ஆகிடுச்சா?” என்று கேட்டாள், ரோகிணியின் தோழி. முதலில் வருணிகாவை தன்னுடன் வைத்துக்கொள்ளத் தான் நினைத்தாள், ஆனால் கல்யாண வீட்டில் நிலைமை அமளி துமிலியாக இருக்க, நல்ல பாதுகாப்பான இடத்தில் தான் வீட்டை வாடகை எடுத்துக்கொடுத்திருக்கிறாள்.
வருணிகா “ரொம்ப நல்லா இருக்கு, நான் கூட முதலில் ரொம்ப பயந்தேன் இப்ப பயமே இல்லை. என்ன இன்னும் என் டீம் ஹெட்டை தான் சந்திக்கலை. இந்த வாரம் முழுக்க பெங்களூரு பிரென்சில் வேலை போல. நாளைக்கு வருவதாக சொல்லியிருக்காங்க. பார்க்கலாம்” என
"ஓகே ஓகே! நீ இன்னும் என்னோட வருங்காலத்தைப் பார்க்கவே இல்லையே! நாளைக்குக் கண்டிப்பா உனக்கு அறிமுகம் பண்ணிடறேன்” எனக் கூறியதோடு, முகத்தில் ஒரு அழகான சிரிப்பு பரவியது திவ்யாவிற்கு.
“லவ் மேரேஜ் தானே. ரோகினி சொன்னாள், அவ இன்னும் இரண்டு நாளில் கிளம்பி வருகிறாளாம்” என்று இருவரும் பேசிக்கொண்டே அந்த நாளை கழித்தனர்.
Last edited: