- Joined
- Aug 31, 2024
- Messages
- 13
- Thread Author
- #1
அத்தியாயம் – 5
மெல்ல பெடல் பண்ணிக் கொண்டே ஏரியின் அழகை ரசித்தபடி உதயனும் பிரதியூஷாவும் இருவர் செல்லும் படகில் சென்று கொண்டிருந்தனர். படகை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஓட்டிக் கொண்டிருந்தான் உதயன்.“என்ன உதயா ஆள் இல்லாத இடமா பார்த்துப் போற? நானே கூப்பிட்டாலும் ஆள் இல்லா இடத்துக்கு வரமாட்ட. நீ ரொம்ப நல்லவன் ஆச்சேப்பா அதுக்குத்தானே நான் உன்னைக் காதலிச்சேன்” என்ற பிரதியூஷாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“என்ன சிரிக்கிற? நீ சிரிக்கிறதைப் பார்த்தா ஏதோ திட்டம் போட்டுக் கூட்டிட்டு வந்திருக்கப் போல. கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் வேண்டாம் உதயா. நீ படகைக் கரைக்குத் திருப்பு. எனக்கும் பெடல் போட்டுக் கால் வலிக்குது” உள்ளுக்குள் உள்ள பதற்றத்தை மறைத்துப் பேசினாலும், உதயன் இரண்டு நாட்களுக்கு முன்னாடி கேட்டது உதறல் எடுக்க வைத்தது.
உதயன் சிரித்த சிரிப்பில் படகு பரதநாட்டியத்திலிருந்து கும்மாங்குத்துக்கு மாறி ஆடத் தொடங்கியது. படகு ஆடிய வேகத்தைக் கண்டு பயந்து படகைக் கெட்டியாகப் பிடித்தாள் பிரதியூஷா.
“உதயா, எனக்குப் பயமா இருக்கு படகு ரொம்ப ஆடுது பாரு கவிழ்ந்திடப் போகுது” அவள் நினைத்தது நடந்துவிடுமோ என்ற பயம் ஆட்டிப் படைத்தது.
“இந்த ஆட்டத்துக்கே பயந்தா எப்படி? ஆட்டமே இனிமேதான் இருக்கு பிரதி” என வில்லங்கமாகச் சிரித்தான் உதயன்.
“சும்மா பயமுறுத்தாத உதயா. படகைத் திருப்பு. நாம கரைக்குப் போலாம்” வழக்கம்போல் உதயன் இல்லையென்று பிரதியூஷாவுக்கு நன்றாகப் புரிந்தது.
குறிப்பிட்ட எல்லை தாண்டிப் போகக் கூடாதென்று படகுத் துறை பொறுப்பாளர்கள் சொல்லியிருந்தும் அதைக் கடந்து வந்திருந்தான் உதயன். எல்லை தாண்டிச் செல்பவர்களை எச்சரிக்கை செய்யச் சில நேரம் வருவார்கள். அவர்கள் வருவதற்குள் வேலையை முடித்துவிட வேண்டுமென்று காரியத்தில் இறங்கினான்.
“இப்ப எதுக்குக் கிளவுஸ் மாட்டுற உதயா? எத்தனையோ பேருக்கு மத்தியில் நீ நல்லவன்னு தெரிஞ்சதால்தான் காதலித்தேன். வேண்டாம் உதயா அந்த நம்பிக்கையைக் கெடுத்திராத” பயத்தில் கெஞ்சத் தொடங்கினாள் பிரதியூஷா.
“ஹா! ஹா! எத்தனையோ பேருக்கு மத்தியில்…” என்று மீண்டும் சிரித்தவன், “டயலாக் எல்லாம் நல்லா பேசுற பிரதி. நீ சொன்ன பார்த்தியா நல்லவன்னு… அப்படி நல்லவனா இருக்கிறதுனாலதான் உனக்குத் தண்டனை கொடுக்க முடிவு பண்ணிட்டேன்” பிரதியூஷா என்னவென்று யோசிப்பதற்குள் அவள் இதயத்தில் நடுவில் கத்தியைச் சொருகினான். வேகமாகத் துடித்தவள் மெல்ல அடங்கிப் போனாள்.
படகிலிருந்து நீருக்குள் இறங்கி நீச்சலடித்து மறுகரைக்குச் சென்று மரங்களுக்குள் மறைந்து போனான். சிறிது தூரம் தள்ளிச் சென்றவன் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த உடைகளை எடுத்து வந்து தன் ஈர உடைகளை மாற்றிய பிறகு குப்பியிலிருந்த பெட்ரோலை நனைந்த உடைகள் மீது ஊற்றிப் பற்ற வைத்துவிட்டுச் சென்றான்.
குறிப்பிட்ட எல்லை தாண்டிப் போக அனுமதி இல்லை. மீறிப் போறவர்களை எச்சரிக்கை செய்வார்கள். சில நேரம் கண்டும் காணாமல் போய்விடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் வரவில்லை என்றால் மட்டுமே தேடி வருவார்கள்.
பிரதியூஷாவின் உயிர் பிரிந்து பல மணித்துளிகள் கடந்தும் யாரும் வரவில்லை. இன்னொரு படகில் நான்கு நண்பர்கள் கேளிக்கை கொண்டாட்டங்களுடன் வர, தனியாக ஒரு பெண் படகில் இருப்பதைக் கண்டதும் ஏதோ பிரச்சனையென நினைத்து அருகில் வந்தவர்கள், நெஞ்சில் கத்தி குத்தப்பட்டு இருப்பளைக் கண்டதும் அலறியடித்து உடனே நூறுக்கு தகவல் கொடுத்துவிட்டு கரை வந்து சேர்ந்து படகுத் துறை பொறுப்பாளர்களிடம் விபரத்தைக் கூறினர்.
அரைமணி நேரத்தில் கவின், தான்யா, சந்தியா, சரவணன் நால்வரும் வர, அடுத்தச் சில நிமிடங்களில் மாதேஷும் வந்தான். தனி மோட்டார் படகில் வந்தவர்கள் பிரதியூஷா இருந்த படகைச் சுற்றி வந்து, மறுகரைக்குச் சென்று இறங்கி மரங்களுக்கு இடையில் சென்றனர். அங்குப் புகை வருதைக் கண்டு அருகில் சென்று பார்க்கப் பாதி எரிந்த நிலையில் உடைகள் இருந்தது.
எரிந்த உடைகளைக் கண்டதும் இந்த வழியாகத் தப்பித்துப் போயிருக்கலாம் என்று சிறிது தூரம் சென்றவர்களின் கண்களில் மரங்கள், செடிகள் தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை. அதனால், போன வழி திரும்பி வந்தனர்.
மோப்ப நாய்கள் வந்ததும் சரவணனும் உடன் செல்ல, நான்கு மரங்களுக்கு நடுவே சுற்றி சுற்றி வந்து நின்றுவிட்டது. எரிந்த உடைகளில் எதுவும் தடயம் கிடைக்குமா என்று மாதேஷ் புகைப்படக் கருவியில் படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
“மாதேஷ், எதுவும் தடயம் இருக்கா?” எனக் கவின் கேட்க,
“இதைப் பார்” என்று புகைப்படக் கருவியை அவன் முன் காண்பிக்க, “இதை வைத்து அவனைப் பிடிக்க முடியுமா பார்க்கலாம்” மாதேஷ் சொல்ல,
“ஒரு முனை கிடைத்தாலும் போதும் அதை வைத்து அவனைப் பிடிச்சிரலாம். எதுவும் கிடைக்காம கேஸ் நின்ன இடத்திலே நிற்குது” எனச் சலித்துக் கொண்டான் கவின்.
“சார், அந்தப் பொண்ணோட மொபைலில் கடைசியா உதயன்னு ஒருத்தன் பேசியிருக்கான். அந்த நம்பருக்கு கால் பண்ணினா ரிங் போகுது எடுக்கமாட்டேங்கிறான்” தன் கைப்பேசியைப் பார்த்தபடியே சொல்லிக் கொண்டிருந்தாள் சந்தியா.
“நான் இங்க இருக்கேன். நீ யாரிடம் சொல்லிட்டு இருக்கச் சந்தியா?” கவின் கேட்கச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் தன் முன் மாதேஷ் நிற்பதைக் கண்டு இங்க கவின்தானே இருந்தான். இவர் எப்ப இங்க வந்து நின்றார். கைப்பேசியை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு வந்ததில் இருவரும் மாறி நின்றதைக் கவனிக்காமல் மாதேஷிடம் சொல்லியிருந்தாள்.