• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

துடிக்கும் ரோஜா - 3

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
21

அத்தியாயம் – 3


கவின் விசாரணையைத் தொடங்குவதற்காக, பத்து பேரின் முன் வந்து நின்றதும், அவன் தோற்றம் கண்டு பயத்தில் நடுக்கத்துடன் நின்றிருந்தவர்களில் ஒருவன் மயக்கமாகி கீழே விழ, தண்ணீர் தெளிப்பதற்காக மேசையில் இருந்த பாட்டிலை எடுத்த தான்யா அதில் நீர் இல்லை என்றதும் பிடித்து வர வெளியில் ஓடினாள்.

மயக்கமாகி விழுந்தவனை நீர் தெளித்து எழுப்பி உட்கார வைத்ததும், “விசாரணைக்குதானே கூப்பிட்டேன். உங்களைக் குற்றவாளின்னு சொல்லலையே. அதுக்கு ஏன் இவ்வளவு பயம்? உங்களிடம் தப்பு இருந்தால்தான் பயப்படனும். நீங்க எல்லாம் நடுங்குறதைப் பார்த்தா, எனக்குச் சந்தேகமா இருக்கு” என ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்தான் கவின்.

“சார், அப்படிப் பார்க்காதீங்க. தாரிணி கூடப் பழகினது தவிர, இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவ இத்தனை பேரிடம் பழகியிருக்கான்றதே, நீங்க எங்களைக் கூப்பிட்டப் பிறகுதான் தெரியும்.”

கவினும், தான்யாவும் அதிர, “என்ன சொல்றீங்க? ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கீங்க. தாரிணியிடம் ஒருத்தர் பழகினது இன்னொருத்தருக்குத் தெரியாதா?”

பத்து பேரும் திருதிருவென முழிக்க, “என்ன முழிக்கீங்க? சார் கேட்கிறது புரியலையா?” என தான்யா அதட்ட,

தாரிணியின் அழகிலும் அவள் பழகும் விதத்திலும் அவள்தான் தனக்கு ஏற்றவள். தனக்கு வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்ற கற்பனையில், அவளிடம் காதலைச் சொல்ல, முதலில் காதலை ஏற்காதது போல் செல்பவள், கொஞ்ச நாள்கள் அலையவிட்டுப் பின் காதலை ஏற்பது போல் ஏற்று, மெல்ல மெல்ல நெருக்கமாகப் பழகத் தொடங்குவாள்.

அவள் காதல் உண்மையென்று நம்பி அவளிடம் உள்ள மோகத்தில் அவள் சொல்வதை எல்லாம் கேட்கத் தொடங்கும் நேரத்தில், சிறிது சிறிதாகத் தனக்குத் தேவையென்று அதிகம் விலையுள்ள பொருட்களை வாங்கித் தரச் சொல்லிக் கேட்க, முதலில் சரியென்று வாங்கிக் கொடுத்தவர்கள் நாளாக நாளாக அவளின் போக்குச் சரியில்லை என்பது புரியத் தொடங்கியதும் தாரிணியிடமிருந்து தானாக விலகத் தொடங்கிவிடுவார்கள்.

ஒருத்தர் விலகிச் சென்றதும் அடுத்தவர் என்று ஒவ்வொருவரையாகத் தன் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறாள் தாரிணி. ஒருத்தன் சொல்ல மற்றவர்கள் பேய் அறைந்ததைப் போல் பார்த்திருக்க, “என்ன எல்லாம் அதிர்ச்சியில் நிற்கீங்க?” எனக் கேட்ட கவின் பக்கம் திரும்பியவர்கள் ஒவ்வொருவரும் அதே கதையைச் சொன்னார்கள்.

“அலுவலகத்தில் தாரிணி ரொம்ப நல்லவ. வெளியில் பணத்துக்காக எதையும் செய்வாள் தாரிணி. அது சரி இவங்க ஆறு பேரும் தாரிணி கூட வேலை பார்த்தாங்க பழக்கமாச்சு. உங்க நாலு பேருக்கும் எப்படிப் பழக்கம்?” கவின் கேட்க,

“முகநூல் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் இருந்தா. நாங்க ஃப்ரெண்டை டேக் பண்ணி போடுற எல்லாப் பதிவுக்கும் அவளும் பதில் கொடுப்பா. அப்படித்தான் நாங்க பழக ஆரம்பிச்சோம்” என்றனர்.

“சார், முகநூல் பழக்கம்னா இன்னும் எத்தனை பேர் இவங்களைப் போல் இருக்காங்களோ தெரியலை. அதில் கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிக்கனும்” என்ற தான்யாவுக்கு இந்த வழக்கை நினைத்துத் தலைச் சுற்றியது.

“தான்யா, இந்தப் பத்து பேர் தவிர அவ வேற யாரிடமும் பழகலைன்னு நினைக்கிறேன். அப்படிப் பழகியிருந்தா அவ கைப்பேசியில் அவங்க புகைப்படமும் இருந்திருக்கும்” என்றான் கவின்.

“ஆமா சார். அவளோட புகைப்படம் எங்க யாரிடமும் இருக்காது. ஏன்னா, அவ எங்களைப் புகைப்படம் எடுக்க விடவே மாட்டா. அப்படியே எடுத்தாலும் அவ கைப்பேசியில்தான் எடுப்பா. அதை எங்களுக்கு அனுப்பவும் மாட்டா” ஒருவன் சொல்ல மற்றவர்கள் தலையை மேலும் கீழும் ஆட்டினார்கள்.

“எங்ககூட வெளியில் எங்கேயும் வரமாட்டா. அப்படியே வந்தாலும் ரொம்பத் தூரம் போற இடமா இருந்தா வருவா. அதுவும் அவ செலக்ட் பண்ற இடமாத்தான் இருக்கும்” என்றான் மற்றொருவன்.

“ரொம்பத் தூரமா? அப்படின்னா எப்படியும் மூன்று நாள்களாவது ஆகும். அப்போ உங்களுக்குள்ள எல்லை மீறிய உறவும் இருந்திருக்கும் சரிதானே?” கவின் கேட்க, பத்து பேரும் தலை கவிழ்ந்து நின்றனர்.

“என்னமோ உங்க காதல் தெய்வீக காதல்ன்ற அளவுக்கு அவ மட்டும்தான் தப்பு பண்ண மாதிரி பேசினீங்க. இதான் உங்க காதலோட இலட்சணமா? அவ சாக்கடைன்னா நீங்களும் அதே சாக்கடைதான். சார், இவங்க யாரும் யோக்கியமில்லை. நல்லா முட்டிக்கு முட்டித் தட்டி விசாரிங்க. உண்மை தானா வெளிய வரும்” தான்யா லத்தியைக் கையில் எடுத்தாள்.

பத்து பேரும் அரண்டு எழுந்து நிற்க, தான்யாவின் கோபம் கண்டு, யாருக்கும் தெரியாமல் மென்னகை புரிந்த கவின், அவளிடமிருந்து லத்தியை வாங்க, “நீங்க எல்லோரும் போங்க. போறதுக்கு முன்னாடி சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாவிடம் உங்க முகவரி, கைப்பேசி எண் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. எப்ப விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வரனும். வெளியூர் போனா எங்களுக்குச் சொல்லிட்டுத்தான் போகனும்” என்று எச்சரித்து அனுப்பினான் கவின்.

பத்து பேரும் தங்கள் விபரங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லும் வரை காத்திருந்த கவின் தான்யாவின் அருகில் வந்து, “உனக்கேன் இவ்வளவு கோபம்? அவங்க கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டாங்க. நானும் வாய்ப்பு…” என்று கவின் முடிப்பதற்குள்,

“ம்க்கூம் இங்க காதலுக்கே வழியில்லை. இதில் இவர் எல்லை தாண்டிடுவார் நம்பிட்டோம். அப்படியே தாண்டி வந்தாலும் சிவப்புக் கம்பளம் விரிப்பேன்னு நினைக்காதீங்க. தான்யா லத்தி சார்ஜ் எப்படி இருக்கும்னு தெரியும்ல” கவினை முறைத்தபடி விறைப்பாக நின்றாள்.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு புன்னகை புரிய, கல்லாக நிற்கும் தான்யாவின் மீதுள்ள பார்வையை அகற்றாமல் பார்த்திருக்க, வழக்கமான அவன் பார்வையில் வித்தியாசம் தெரிய, அவன் உதிர்த்த சிரிப்பூக்கள் தான்யாவின் கண்களில் ஊடுருவி நரம்புகளை மீட்டிட சிலையாக நின்றவளின் மேனி தளர்ந்து கன்னங்கள் சிவப்பு நிறத்தைத் தத்தெடுத்ததை மறைத்திருந்தது அவளின் மாநிறம்.

கவினிடத்தில் என்றைக்கும் இல்லாத மாற்றத்தைக் கண்டதும் தான்யாவின் கால்கள் பழமிழக்கத் தொடங்கியது. அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து நகரத் தொடங்கினாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
21
“ஒரு நிமிஷம் தான்யா” என்ற கவின் அவள் பின்னாடி நின்று காதருகில் குனிந்து, “நான் பார்த்த ஒவ்வொரு பார்வைக்கும் சிரிப்புக்கும், நீ நீயா இல்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி எல்லைத் தாண்டினா நீ…” என்றவனை, ‘பளார்’ என்று அறைந்து ஒற்றை விரலைக் காட்டி, கண்களில் நீர் தழும்ப வெளியில் சென்றாள் தான்யா.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த தான்யா, “என்மேல் என்ன நடவடிக்கை எடுக்கனுமோ எடுத்துக்கோங்க. நான் கவலைப்படலை. காதல்னா என்னன்னு நினைச்சீங்க! கட்டிலுக்கு மட்டும்னா! அதான் மூனு வருஷமா என்னோட மனசு உங்களுக்குத் தெரியலை. அதான், சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தூண்டில் போட நினைச்சிட்டீங்க” கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி விருட்டென்று போனாள்.

தான்யாவைச் சீண்டிப் பார்க்க நினைத்தானே தவிர, அவளைக் காயப்படுத்தவோ, அவள் காதலைக் கொச்சைப்படுத்தும் எண்ணமோ சிறிதும் கவினிடம் இல்லை. அவள் அடித்த அடியைவிட, வார்த்தைகளால் அடித்த வலி அதிகமாக இருந்தது.

நாற்காலியில் அமர்ந்து சுழன்றபடி இருந்தவனிடம், “கவின், தான்யாவிடம் ஏன் அப்படி நடந்துகிட்ட? நிஜமாவே அவ காதல் உனக்குப் புரியலையா? அவ அழறதைப் பார்க்க முடியலை” என்று அவன் முன் நின்றாள் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா.

“எதுவும் எனக்குப் புரியாம இல்லை சந்தியா. அவ என்னைப் பற்றிக் கனவு காணுறதை விட்டுட்டு, அவள் ஐபிஎஸ் கனவில் வெற்றி அடையனும். தான்யா பற்றி என்னைவிட உனக்குதான் நல்லா தெரியும். கொஞ்ச நாள் என் மீதுள்ள கோபத்தைத் தலையில் தூக்கி வச்சிருப்பா. அப்புறம் என்னைத் தூக்கிப் போட்டுட்டு, அவ இலக்கை நோக்கிப் போயிட்டே இருப்பா. அதான், சந்தர்ப்பம் கிடைத்ததும் இப்படி நடந்துகிட்டேன்.”

“அவ குணம் நல்லா தெரியும். அதான், உன்னிடம் பேச வந்தேன். அவ உன்னை ஒரேடியா வேண்டாம்னு ஒதுக்கிட்டா, அதைத் தாங்கிக்க உன்னால் முடியுமா?”

சந்தியாவின் கேள்விக்கு வலியோடு சிரித்த கவின், “முடியும். அவளைக் காதலித்தால்தானே வலிக்கும். நான்தான் காதலிக்கலையே” தன்னிடமும் நாடகம் ஆடுறானே என்று கவினைத் தன்னால் முடிந்த மட்டும் முறைத்துவிட்டுப் போனாள் சந்தியா.

கோபத்தில் செல்லும் சந்தியாவை அழைத்த கவின், “சந்தியா, ஒரு மணி நேரம் கழித்துத் தான்யாவைக் கூட்டிட்டு வா. ரெண்டு பேரிடமும் இந்த வழக்குபற்றிப் பேசனும். சரண் வந்துட்டான்னா அவனையும் வரச் சொல்” என்று சத்தமாகத் தனக்குள் வந்த சிரிப்பை மறைத்தபடிச் சொன்னான்.

மூவரும் வருவதற்காகக் காத்திருந்தவன், அகிலன் கொலையிலிருந்து தாரிணி கொலைவரை இருக்கும் சந்தேகங்களைக் குறிப்பேட்டில் ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தான்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து மூவரும் அவன் முன் நின்று சல்யூட் அடிக்க, மூவரையும் அமரச் சொன்னவன், தான் குறித்த குறிப்பேட்டை அவர்கள் முன் வைத்துவிட்டு, அவரவர் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கச் சொன்னான் கவின்.

“தான்யா, இப்ப வந்த பத்து பேரை விசாரிச்சவரை அவங்க கொலை செய்திருக்க வாய்ப்பில்லைன்னு நினைச்சு சுலபமா விட முடியாது. அதனால், அந்தப் பத்து பேரையும் கண்காணிக்க ஒரு குழுவை நியமிச்சிரு. அப்புறம் அகிலனும், தாரிணியும் ஒரே மாதிரிக் கொலை செய்யப்பட்டிருப்பதால், அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கான்னு விசாரிங்க.”

சரி என்று மூவரும் தலையை அசைக்க, “சார், தாரிணியோட அம்மா, அப்பா நாளைக்கு வராங்க. அவங்க ஊரில்தான் தாரிணியை அடக்கம் பண்ணப் போறாங்களாம். மதியம் இரண்டு மணிக்குள் எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிஞ்சிருமான்னு கேட்காங்க” என்று தான்யா மேசையைப் பார்த்தபடிச் சொன்னாள்.

“பிரேத பரிசோதனை முடிந்ததும் பாடியைக் கொடுக்கப் போறோம். இன்னைக்கே பிரேத பரிசோதனை முடிஞ்சிரும்னு நினைக்கிறேன். அப்படி முடிஞ்சிட்டா நாளைக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது” என்றான் கவின்.

“கவின், குழுவில் யார்யாரென்று நீ சொல்றியா? இல்லை, நாங்களே தேர்ந்தெடுக்கட்டுமா?” என சந்தியா கேட்க,

“நானே செலெக்ட் பண்ணிட்டேன். அவங்க பட்டியலை. உங்க மூனு பேரின் கைப்பேசிக்கும் அனுப்பறேன். யாரும் லீவில் இருந்தா உடனே வரச் சொல்லிடுங்க. இந்த வழக்கு முடியுற வரைக்கும் யாரையும் லீவ் போட கூடாதுன்னு சொல்லிடுங்க. உங்களையும் சேர்த்துதான் சொல்றேன்.”

“அகிலன் பாடியை யாருமே வாங்க வரலை. பெற்றவங்க, கூடப்பிறந்தவங்கன்னு யாருமே வரலை. நாளிதழில் செய்தி கொடுக்கலாமா?” எனச் சரண் கேட்க,

“அவனோட கைப்பேசியிலும் விபரங்கள் கிடைக்கலையா? அவன் கூடத் தங்கியிருந்தவங்க சுற்றுலா போயிருந்ததா சொன்னீயே வந்துட்டாங்களா?”

“கூட இருந்தவங்க நாலு பேர். அவங்களும் நாளைக்குத்தான் வராங்க. அகிலன் கைப்பேசியில் இருந்தது பத்து பேரோட எண்கள்தான். அவங்களையும் விசாரிச்சிட்டேன். அவங்க அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறவங்க. அவனைப் பற்றிய எந்த விபரமும் அவங்களுக்குத் தெரியலை.”

கவின் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன், “சந்தியா, நாளைக்கு அகிலன் நண்பர்களிடம் விசாரி. அவங்களுக்கும் அகிலன் பற்றி எந்த விபரமும் தெரியலைன்னா. நாளிதழில் அவன் புகைப்படத்தோடு செய்தி போட சொல்லிரு. தான்யா, தாரிணி பெற்றோரிடம் அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரி. நாளைக்குச் சாயங்காலம் ரெண்டு பேரும் நீங்க விசாரிச்ச விபரங்களோடு இங்க வந்திருங்க.” என்றவனுக்கு மூவரும் சல்யூட் அடித்துச் சென்றனர்.

திடீரென்று ஞாபகம் வரச் சரணைக் கூப்பிட மூவரும் திரும்ப, “அகிலன் பாடி பக்கத்தில் நித்திரைக் கொள் இதயமேன்னு எழுதின பேப்பர் கிடந்தது. அந்த மாதிரி வாசகம் எழுதின பேப்பர் எதுவும் தாரிணிப் பக்கத்தில் இருந்துச்சான்னு தடவியல் நிபுணர்களிடம் கேளுங்க. இல்லைன்னா, தாரிணி வீட்டுக்குப் போய் அப்படி வாசகம் எழுதி வைத்திருக்கானான்னு பார்த்திருங்க” என்றதும் மூவரும் வெளியேறினர்.

தான்யாவையே பார்த்திருந்த கவின் தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டான். தான்யா வந்ததிலிருந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பல முறை தான்யா என்ற பெயரை உச்சரித்தும் தன்னைப் பார்க்காததை நினைத்துச் சிரித்தாலும், மற்றொரு பக்கம் இதயம் வலிப்பதை உணர்ந்தபடி அலுவலகம் விட்டு வெளியேறினான்.
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top