• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 14, 2024
Messages
1
தூரத்துப் பச்சை

கும்பகோணத்தை கார் நெருங்கியதுமே, பரபரப்பாகக் காணப்பட்ட மங்களத்தைக் கண்டு, மருமகளும் பேத்தியும் நமட்டுச் சிரிப்பு சிரித்தது தெரிந்தாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.

ஆற்றுப்படுகையின் காற்றில் விரவிய காவேரியின் குளுமையையும் மண்ணின் மணத்தையும் ஆழ்ந்து சுவாசித்த மங்களம், பிறந்த நாளன்று புது உடுப்பில், இனிப்புடன் பள்ளி செல்லும் குழந்தையின் மனநிலையில் இருந்தார்.

வழியெங்கும் தனக்குப் பரிச்சயமான முகங்களைத் தேடியதில் வெட்கம் வர, சிரித்துக்கொண்டார்.

பொன்னியின் செல்வனில் கல்கி குறிப்பிடும் திருநல்லம் என்ற கோனேரிராஜபுரம் செல்லும் பாதையில் திரும்பியது கார்.

எத்தனை வருடங்களாயிற்று சொந்த மண்ணை மிதித்து?

எழுபதுகளின் துவக்கத்தில் மத்திய அரசு அதிகாரியுடன் (அந்தக் காலத்து ஐஏஎஸ்!) திருமணமாகி டெல்லி சென்ற மங்களத்துக்கு ஒரே மகன்தான். பிலானியில் கணினி பொறியியல் முடித்து மேற்படிப்புக்கென அமெரிக்கா சென்றான்.

‘தனியா, ஹோம் சிக்கா (Home sick) இருக்குமா, பொண்ணைப் பாரு” என்றவன், பெற்றோர் பார்த்த, சி ஏ படித்த பெண்ணை சமர்த்தாகத் திருமணம் செய்து கொண்டான். அவளும் வேலை பார்க்கிறாள். கடந்த இருபத்தெட்டு வருடங்களாக அமெரிக்க வாசம்தான். அவனுக்கு ஒரு மகள் மட்டுமே.

மங்களத்தின் கணவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மறுவருடமே இதயநோயால் காலமாகிவிட, தாயையும் தன்னுடன் அழைத்துக்கொண்டான்.

அமெரிக்க வாழ்வின் அனுதின அவசர அவசியங்களில், உடன் பிறந்தவர்களின் திருமணம், பெற்றோரின் மறைவு, குழந்தைகளின் மொட்டையடி, காது குத்தைத் தவிர, அவர்களுக்கு இந்தியா வருவதற்கான அவசியமோ, உந்துதலோ இருப்பதில்லை.

மங்களத்தின் இருபத்தியோரு வருட அமெரிக்க வாழ்க்கையில் மூன்றே முறைதான் இந்தியா வந்திருக்கிறார். கடைசியாக வந்தது ஒன்பது வருடங்களுக்கு முன்.

நெருங்கிய பந்துக்களில் பலரும் வந்து நின்ற வானூர்தியில் வரிசையாக ஏறியபோதும், மங்களம் அலைபேசியில் அனுதாபித்ததோடு சரி.

மங்களத்தின் சொந்த அக்கா கமலா இரண்டு வருடங்களுக்கு முன் மஞ்சள்காமாலை முற்றிக் காலமானபோதும் அதே கதைதான்.

“ஃபோன்ல விசாரிச்சா போறாதாம்மா”

“பெரியம்மாவே போய்ட்டா, பெரியப்பாவும் இல்ல. காரியம் பண்ற கிருஷ்ணனே டொரன்டோல இருந்துதான் போறான். நீ போய் யாரை துக்கம் கேக்கப்போற?”

“நீயே சொல்லு, இந்த வயசுல தனியா இந்தியா போய்
நெய்வேலி, திருச்சி, கும்பகோணத்துல எல்லாம் இனிமே உன்னால இருக்க முடியும்னு எனக்குத் தோணலை”

“அங்க போய் நீ கண்ட கண்ட தண்ணியைக் குடிச்சு, தலைக்கு ஸ்நானம் பண்ணி உடம்புக்கு வந்துட்டா, உடனே திரும்பியும் வர முடியாது. அங்க உனக்கென்ன மினரல் வாட்டரா வாங்கித் தருவா? இதுல மெடிகல் இன்ஷுரன்ஸ் வேற”

“எனக்கும் வேலை இருக்கு. அவளாலயும் லீவ் போட முடியாதும்மா, ஃபினான்ஷியல் இயர் க்ளோஸிங் டயம். புரிஞ்சுக்கோ”

தன் வயதை ஒத்த மூத்த அக்கா மகனின் மகளுடைய திருமணத்திற்குச் செல்ல மங்களம் வெகுவாக ஆசைப்பட்டார்.

“கமலா பெரியம்மாவோட பேத்திக்குக் கல்யாணம். போனா நன்னாத்தான் இருக்கும். ஃபிப்ரவரி கடைசீல கல்யாணம். ஒண்ணரை நாள் கூத்துக்கு நாம போய்ட்டு வரணும்னா எத்தனை செலவு, அலைச்சல், சொல்லு. அதோட, அந்தப் பொண்ணே இதோ, இங்க இருக்கற மேடிஸனுக்குதானே வரப்போறா”

விதவிதமான சமாதானங்களின் சாரம்சம் ‘நீ போக வேண்டாம்’ என்பதே. அவசியமானால், பிள்ளையோ, நாட்டுப்பெண்ணோ அல்லது இருவருமோ தனித்துப் போய் வந்துவிடுகிறார்களே தவிர, மங்களத்துக்கு விசா கிடைப்பதில்லை. ஆம், விசாவேதான், அவர்தான் இப்போது அமெரிக்கப் பிரஜையாகி விட்டாரே!

பெற்றோர்களிடம் பறக்கப் பழகி, கணவனுடன் இணைந்து பறந்தவருக்கு, மகனின் பாதுகாப்புச் சிறகுகளில், தான் ஒரு பறவை என்பதே மறந்துதான் போனது.

ஆனால் இந்தமுறை மங்களத்தின் ஒரே அண்ணா, சங்கரனுக்குக் கொள்ளுப் பேரன் பிறந்திருக்க, தொண்ணூற்றி இரண்டு வயதில் கனகாபிஷேகம் செய்கின்றனர். மன்னியும் இருக்க, செய்வதற்கென்ன?

மங்களத்துக்கும் சங்கரனுக்கும் இடையில் கமலா, காமாக்ஷி, வனஜா என மூன்று சகோதரிகள்.

ஊரில் நிலபுலன்களும் கும்பகோணம் அரசுபள்ளியில் ஆசிரியருமாக இருந்த மங்களத்தின் தந்தை, மூத்த பெண் கமலாவுக்கு அதிவிமரிசையாகத் திருமணம் செய்த கையோடு அகால மரணமடைந்தார்.

அப்போதுதான் எல்ஐசியில் வேலைக்குச் சேர்ந்திருந்த சங்கரனின் தலையில், மூன்று தங்கைகளைக் கரையேற்ற வேண்டிய பொறுப்பு விழுந்தது.

தன்னைவிடப் பதினேழு வயது சிறியவளான தங்கை மங்களத்தின் மீது சற்று அதிகப்படி வாஞ்சை சங்கரனுக்கு. எனவே, மனைவியின் எதிர்ப்பையும் மற்ற தங்கைகளின் ஆதங்கத்தையும் மீறி, அதிக நகை போட்டுத் திருமணம் செய்து கொடுத்தார்.

நினைவுகளே வாழ்க்கையானதில், சிறுவயதுக் காட்சிகள் அனைத்தும் அழியாச் சித்திரமாக மனதில் ஓட , மங்களம் “கிறிஸ்மஸ் லீவுலதானே விசேஷம் வரது. நாங்க யாரும் இனிமே இருந்த நாள் இருக்கப் போறதில்ல. எனக்கு எங்கண்ணாவைப் பார்த்தே ஆகணும்” என ஏக்கமும் ஆவலுமாக, சிறுபிள்ளையாய் பிடிவாதம் பிடித்ததில் இதோ…

இன்னோவா உமாமகேஸ்வரர் கோவிலைத் தாண்டிச் செல்ல, மங்களத்தின் மனக்கண்ணில் கோவிலின் உள்ளே நர்த்தனமாடும் பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் வந்து சென்றார்.

‘நினைத்தபோதெல்லாம் தரிசித்தவரை இன்று நினைவில் மட்டுமே காண முடிகிறது’ என்ற எண்ணம் எழ, தன்னையறியாது பெருமூச்சு எழுந்தது.

எழுபத்தி ஆறு வயதிலும் பிறந்த வீடு என்றதுமே துள்ளத்தான் செய்தது மனம். அக்கா தங்கைகளுக்கே உரித்தான செல்லச் சண்டைகள்தான் எத்தனை?

தீபாவளிப் பட்டாசுக்கு அடித்துக் கொள்வதும், வெந்நீர் அடுப்பில் வறுத்த நிலக்கடலையைப் பாகம் பிரிப்பதும், ஒரு கண்ணி பூவைக் கூட கூடக்குறைய விடாமல் அளந்து பார்ப்பதும், பார்க்கும் ஒன்றிரண்டு சினிமாவிற்கு ஒரு வாரம் முன்பிருந்தே அனுமதிக்குக் கெஞ்சுவதும், அடுத்த சினிமாவைப் பார்க்கும் வரை, அதையே பேசித் தீர்த்ததும், விவித்பாரதியின் மாலை நேரத் தேனருவியில்
பி பி ஸ்ரீநிவாஸையும், கண்டசாலாவையும் விடாது கேட்டதும், சிலோன் ரேடியோவின் ஒலிச்சித்திரங்களும், எல்லாவற்றையும் விட, மாதவிலக்கின்போது, சகோதரிகளில் இருவரோ, மூவரோ சேர்ந்து ஒதுங்கிவிட்டால், பின்கட்டையே அரட்டையில் இரண்டாக்கியதும்….

சங்கரனுக்குக் கல்யாணமாகி மன்னி வந்தபிறகு அவளுடன் சேர்ந்து வழக்கடிப்பதும், பிறகு நாத்தனார்கள் கூடி அவளைப் பற்றியே வம்பு பேசியதும் தனி சுவாரஸ்யங்கள்.
சகோதரிகளின் பேச்சுக்கு வயது வித்தியாசம் கிடையாது. போரும் சமாதானமும் நித்ய கர்மாக்கள்!

இணை கோடுகளைப் போன்று சீராக, சரளமாகப் பயணிக்கும் சகோதரிகளுடைய உறவு, சீர், நகை, அவரவர் கணவர்களின் படிப்பு, தோற்றம், உத்தியோகம், வருமானம், புகுந்த வீட்டு மனிதர்களின் தன்மை என பலவும் வேறுபடும்போது திருமணம் வரையிலும் இல்லாத ஆறு வித்தியாசங்கள் அறுபதாகி விடுகிறது.

இவ்வளவு ஏன், இன்று குழந்தைகளின் படிப்பும் மதிப்பெண்களும் கூட கௌரவப் பிரச்சனைதான்.

ஒரே கூரையின் கீழ், அந்தந்த வீட்டின் நியதிகளுக்கும் வசதிகளுக்கும் உட்பட்ட நிலையில் எதையும் பேசிப் பகிர்ந்து சந்தோஷித்தது போக, அவரவர் கௌரவம் கருதி, புகுந்த வீட்டின் பெருமையும் சிறுமையும் அளவோடே வெளிப்படுகிறது.

இப்போது எல்லோருக்கும் வயதாகி, சிலரது பேரன், பேத்திகளுக்குக் கூடத் திருமணமாகி விட்ட நிலையில் போலிக் கௌரவத்துக்கு அவசியமில்லையே?

விஸ்கன்ஸினின் பனிபொழியும் நேரத் தனிமையின் ஏக்கத்தில், வயதாகி, பொறுப்புகள் நிறைவேறிய நிலையில், சகோதர, சகோதரிகள் சேர்ந்து கடைசி காலத்தைக் கழித்தால் என்ன, என்று கூட நினைத்திருக்கிறார்.

“பாட்டி, கெட் டவுன்” என்று கை பிடித்து இறக்கிவிட்டாள் பேத்தி.

“வா மங்கா, அப்பா உன்னை அத்தனை எதிர்பார்த்துண்டு இருக்கா” என்று வரவேற்றான், சங்கரனின் மகன் ரகுராமன்.

“எப்படிடா இருக்க ரகு?” என்ற மருமானின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அண்ணாவைப் போலவே ரகுவுக்கும் அவள் மங்காதான். அவளது பதினோராவது வயதில் கைகொள்ளா முடியோடு பிறந்த ரகுராமனின் தலை இப்போது முழுவதும் பிரகாசித்தது.

உடன்பிறந்தவர்களில் வனஜாவைத் தவிர ஜீவிக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்திருந்தனர்.

“காமாட்சி, வனஜா, எல்லாரும் சௌக்யமா, நிதானமா பேசலாம், இருங்கோ வரேன்”

உரிய விளிப்பும் விசாரிப்புமாய் உள்ளே நடந்தனர்.

அண்ணா சங்கரன் “வந்துட்டியா மங்கா?” என்று உணர்ச்சி வசப்பட்டார். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு என எதுவும் இல்லைதான், ஆனாலும் வயோதிகம் என்ற ஒன்று இருக்கிறதே?

முன்பெல்லாம் பெரியவர்கள் “காடு வா வாங்கறது, வீடு போ போங்கறது” என்று அடிக்கடிச் சொல்லித் தன்னையும் சார்ந்தவர்களையும் மனதளவில் தயார் படுத்துவார்கள்.

இப்போது நீட்டிக்கப்பட்ட வாழ்நாளில், மற்றவரை இம்சிக்காது இருக்கவும் வலியில்லாது நடமாடவும் மருந்துகளின் துணை அவசியமாகிறது.

மருந்தால் ஆயுளோ, ஆயுளுக்காக மருந்தோ, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதோ, மேம்பட்ட வசதிகளோ, காரணம் எதுவானாலும் ‘தீர்க்காயுசா இரு’ என்ற ஆசிர்வாதம் பெரும்பாலும் பலித்துவிட்டதாகவே மங்களத்துக்குத் தோன்றியது

“மன்னி எங்க?”

“போய்ப் பாரு, அழைச்சுண்டு போடா ரகு” என்ற அண்ணா, மீண்டும் கண்களை மூடி சாய்ந்து கொண்டார்.

மன்னி சாரதாவைப் பார்த்த மங்களம் அதிர்ந்துதான் போனாள். எத்தனை ஒடுக்கம்?

பளீர், பளீரென மின்னல் வெட்டும் சிரிப்பும், சந்தன நிறமும், களையான முகமும், வெட்டறுப்பான பேச்சும், அற்புதமான சமைக்கும் திறனும்…

வாயும் கையுமாக இருந்த சாரதா மன்னியா இது?

எலும்பையும் நரம்பையும் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட்டால் மூடியது போல் ஒடுங்கி இருந்தது தேகம். கண்ணோரம் நீர் கசிய, மெதுவே பேசினாள்.

“வெச்சு ஆட்றதுடீ மங்கா”

“So many oldies” என்றாள் பேத்தி.

கனகாபிஷேகம் விமரிசையாக நடந்தது. மூத்த தம்பதியை வாழ்த்த வயதின்றி, ஊரே வணங்கியது.

விஸ்கன்ஸினை அடைந்த பின், மகன் “அம்மா, இப்ப சந்தோஷமா?”

உடன் பிறந்தவர்களுடன் ஒரு வாரத்தைக் கழித்ததில் வயதும் வசதியும் ஏற, ஏற வித்தியாசங்களும் விலகல்களும் கூடவே ஏறும் என்று புரிந்ததில், மங்களம் மெலிதாகச் சிரித்தார்.

ஆம், தூரத்துப் பச்சைதான் கண்ணுக்குக் குளிர்ச்சி!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
தூரத்துப் பச்சை என்றும் கண்ணுக்கு குளிர்ச்சிதான்.
நன்றி சிஸ்டர்.💐💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top