- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
26
தனியாக தங்கள் அறைக்குள் வந்த சந்திராவின் கண்கள் பழைய நினைவில் கலங்கியது. அங்கிருந்த பழைய மர பீரோவின் மேல்தட்டில் உள்ள சாவியை எடுத்து உள்ளே லாக்கரில் இருந்ததை எடுத்துத் தரையில் பரப்பி அதனருகில் அமர்ந்த சந்திராவின் கண்களில் ஒருவித பரபரப்பு! தேடல்! கீழே கிடந்த காகிதங்கள், புகைப்படங்களின் நடுவில் சிம்மாசனமாய் அந்த பத்திரிக்கையும், புகைப்படமும்! மனதளவில் கணவனானவனை தன் பெயரருகில் பத்திரிக்கையிலும்! உடலளவில் திருமணப் புகப்படத்திலும் இணைத்த முதல் தருணங்கள். தொட்டுத்தடவி தூசு தட்டி தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவர் மனம் ஊமையாக அழ, கண்களில் நீர் பிரவாகமெடுக்க, வாய் முணுமுணுத்தது “ஐ லவ் யூ” என்ற வார்த்தைகளை மட்டுமே!
கணவனின் இறப்புக்குப் பின் அண்ணன் குடும்பத்தோடு தொடர்பு விட்டபிறகு, ஒருமுறை சென்னை வந்து சென்ற மாமனாரிடம் கொடுத்து அனுப்பிய தனது வாழ்க்கைப் பொக்கிஷங்கள். “நாங்கள் சந்தேகப்படவில்லை எங்களுடன் வந்துவிடு” என்ற மாமனாரிடம், “நீங்க எங்களோட வந்திருங்க” என்று சந்திரா கேட்க, “சொந்த ஊரே சொர்க்கம்” என்றவரின் வார்த்தையையும் மீற வழியில்லாமல் போனது.
“உங்க பையன் ஆரம்பித்த தொழில் இங்கதான் இருக்கு மாமா. அவர் இடத்திலிருந்து உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. உங்களையும் சேர்த்து நான் பார்த்துக்கறேன்” என்றார் உறுதியாய். ஊருக்கு கிளம்பியவரிடம், “இந்த பொருள் இங்கே இருந்தா ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, உங்க பேத்தி கண்ணுலபட்டு அது கேள்விக்குறியாகும். இதை நீங்க பத்திரமா வச்சிருங்க” என்று கொடுத்தனுப்பிய புகைப்படங்கள், தான் எங்கு இருக்க வேண்டுமென்று சொல்லி அனுப்பினாரோ அந்த இடத்தில்தான் இருந்தது.
“என்னை விட்டுப்போக எப்படிங்க மனசு வந்தது? உங்க பொண்ணு மட்டும் இல்லன்னா, அப்பவே நானும் உங்களோட வந்துருப்பேன். விதி உங்களை நினைச்சே உயிர் வாழணும்னு இருந்திருக்கு.. திருமணத்திற்கு முன்னாடியும், பின்னாடியும்.”
வெகுநேரம் தங்களது திருமணப் புகைப்படத்தில் பதிந்திருந்த பார்வை மாறாதிருந்தது. கணவனின் அருகில் இருப்பதைப் போன்ற உணர்வில் மூழ்கியிருந்த சந்திராவின் தோளில் ஆதரவாய் விழுந்த கையைப் பிடித்து, “என்னங்க!” என்று சந்தோஷத்தில் ஆசையாய்த் திரும்பினார்.
அங்கே மகளைக் கண்டதும் நிதர்சனம் புரிய ஊமையாய் அழுத மனம், உண்மை வேறென்றதும் வெடித்துக் கிளம்பியது.
மகளின் தோள் சாய்ந்து சத்தமாக அழ, ஏனையவர்களும் அவ்வறைக்குள் பிரவேசிக்க, ஸ்ரீனிவாசன், பாகீரதி தவிர சிறியவர்களை பாரதி கீழே அனுப்பி, சந்திராவை நெருங்கி தன்புறம் திருப்பியவர் அவரின் கண்ணீர் துடைத்து, “சந்திரா எப்பவும் அழக்கூடாது” என்றார்.
“என்னால முடியலக்கா. இந்த அறைக்குள்ள வரும்போதே என்னை எதுவும் பாதிக்கக்கூடாதுன்னு ரொம்ப கண்ட்ரோலா தான் வந்தேன். ஆனா, ஒவ்வொரு இடத்திலும் நின்னு அவங்க என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்குக்கா. என்னை என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல. நான் என்ன தப்பு பண்ணினேன்னு என்னைவிட்டுப் போயிட்டாங்க. எத்தனை வருஷ காத்திருப்பு. எல்லாம் யாருக்காக? அவங்க ஒருத்தருக்காக மட்டும்தானே. ஆனா, என்னை என் பொண்ணை நினைச்சிப் பார்க்கலையே. விட்டுட்டுப் போயிட்டாங்களே” என்று அழுது அரற்ற, சுற்றி நின்றிருந்தவர்களின் கண்களுமே கலங்கியது.
“இத்தனை வருஷமா இங்க வரவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்தது இதுக்காகத்தான். என்னோட பலம், பலவீனம் எல்லாமே அவங்கதானக்கா. அவங்களை வரச்சொல்லுங்க ப்ளீஸ். ராம் அவங்க உங்க தம்பிதான? நீங்க சொன்னா கேட்பாங்க. ப்ளீஸ் வரச்சொல்லுங்க. வரச்சொல்லுங்க!” என்று பித்துபிடித்தாற்போல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவருக்கு, வலுக்கட்டாயமாக பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து, கட்டிலில் படுக்க வைத்ததும், சற்று நேர புலம்பலுக்குப் பின் மெல்ல கண்மூடினார்.
அதற்குள் இன்னுமொரு அழுகைக்குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். பாகீரதி முட்டியைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். பதற்றத்துடன் பெரியவர்கள் அவளை நெருங்கி விசாரிக்கப்போக, “நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல, அங்கேயே நின்றிருந்த ராம கிருஷ்ணனிடம், “என்ன மாமா? அத்தையைக் கூப்பிட்டுக் கிளம்புங்க” என்றான்.
“சீனு... ரதி?” என்றவரின் பார்வை அவளையே வேதனையாய் பார்த்திருந்தது.
அவரின் பாசம் தெரியாதவனா அவன். “உங்க ரதிதான் மாமா. அவ அழுதா உங்க கண் கலங்குது பாருங்க. அவ என் மனைவி மாமா. போங்க நான் இருக்கேன்ல. என்மேல் நம்பிக்கையில்லையா?” என்றதும் இருவரும் வெளியேற, அங்கே நின்றிருந்த ராமகிருஷ்ணனின் அப்பாவையும், மேனகாவின் அப்பா அம்மாவையும் பார்த்து, “உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா. ம்.. கிளம்புங்க” என வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க அவர்களும் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் மனைவியின் முன் முட்டிப் போட்டு அவளின் முகம்தொட்டு உயர்த்தி, “ரதி” என்றழைத்ததுதான் தாமதம், கண்மூடித்திறக்கும் நேரத்தில் கணவனை ஆவேசமாக கட்டியணைத்து முகமெல்லாம் முத்தமிட்டபடி, “ஐ லவ் யூ சீனு! ஐ லவ் யூ. நீங்க எனக்கு எப்பவும் வேணும்!” என்றவள் கைகள் கணவனின் உடலை அழுத்தமாய் பிடித்தபடி இருக்க, கண்களில் நீர் கட்டியிருக்க, இதழ்கள் தன் முத்த யுத்தத்தை நடத்தியபடி இருக்க, சில நிமிடங்கள் அந்த ஆவேசத்தில் திணறித்தான் போனான்.
“ஹேய்! ரதிமா என்னாச்சிடா? இங்க பாரு. என் முகத்தைப் பாருமா?” என்று அவளைத் தடுக்க போட்ட அணைகள் யாவும் தூள்தூளாக, அவனைத் தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டாள்.
சற்றுநேரம் அவளைத் தன்போக்கில் விட்டவன் அவளின் முதுகை வருடிக் கொடுத்தபடி, “ரதிமா உனக்கு நான் இருக்கேன்ல. ஏன் அழற? எந்த சூழ்நிலையிலயும் உன்னைவிட்டுப் போகமாட்டேன். ப்ராமிஸ்!” என்றான் அவளின் அழுகைக்கான காரணத்தை ஓரளவு உணர்ந்தவனாய்.
அந்தக் குரலின் மென்மையில் இறுகிய அணைப்பை லேசாக்கி கணவனைப் பார்த்து, “இந்தக் குரல்தான் எப்பவும் என்னை தவறா எதையும் செய்யவிடாமல் தடுக்கிறது. எப்பவும் என்னோடவே இருக்கிற ஒரு உணர்வு. எந்த சூழ்நிலையிலும் என்னைத் தடம் மாறாம பாதுகாக்கிற குரல்! என்னை உங்களை நோக்கி இழுத்துட்டு வர்றதும் இந்தக் குரல்தான்!” என்று மென்மையான குரலில் கணவன் கண்பார்த்து பேசியவள், “நீங்க என்னைவிட்டுப் போயிரமாட்டீங்க தானே? எங்கம்மா மாதிரி நான் ஸ்ட்ராங்க்லாம் கிடையாது. பொண்ணு, பையன்னு எதையும் பார்க்கமாட்டேன். இது சுயநலம்தான். ஆனா, எங்கம்மா அவஸ்தை படுற அளவுக்கு என் மனம் பலம் கிடையாது. உங்களுக்கு ஒண்ணுன்னா அந்த செகண்ட் நானும் இல்ல! இட்ஸ் ப்ராமிஸ்!” என்றவளின் வாய்மூடினான் ஸ்ரீனிவாசன்.
“வாழ்வோ! சாவோ! அது உன்னோடதான் ரதி. உன்னை விட்டு எப்பவும் பிரியமாட்டேன். அப்படி ஒரு சூழ்நிலை வந்தா உன்னோட நிலையிலதான் நான். நீ என் தேவதைடா! உனக்கு நியாபகமிருக்கா? காலேஜ் பர்ஸ்ட் இயர்ல ஒரு கவிதை சொன்னியே? அன்னைக்குத்தான் நான் உன்னை பெரிய பொண்ணா பார்த்தது. நீ எனக்குத்தான்னு தோன்றிய நிமிடங்கள்.”
உன் நினைவுகள் என்னுள்,
நெருங்கிக் கரைகிறதடி!
உண்ணாமல் உறங்காமல்,
உனக்காக உருகிக் காத்திருந்தேன்!
உனக்காக ஏங்கி வாசலில்,
வாசமிருந்தே வசமிழந்தேன்!
உன்னுறவு என்னுறவாக,
மாறியது மாயம்தானோ!
மறந்தாலும் மறக்காது,
உனைச் சந்தித்த நிமிடங்கள்!
தோழமைச் சீண்டலில் மனம் மகிழ,
உனக்காகக் கடன்காரனாய்க்
காத்திருக்கவும் சித்தமாயிருக்கிறேனடி!
உன் வரவு இல்லையெனில்,
அந்த மனவலி
மரணத்தைவிடக் கொடுமை
என்பதையறிவாயா!
உனை வர்ணிக்கையில்,
அதை ரசிக்கும் உன்னழகு கோடியடி!
கண்ணில்லா குருடனாய் திண்டாடினேன்
உன் காதலுக்காக!
தோல்வியில்லா வாழ்வுக்கு சாட்சியாய்
நம் காதல்!
வருடங்கடந்து
காத்திருந்து கரம்பிடித்தேனடி உனை!
எனக்கானாய் எந்தன் தேவதையே!
அவளின் கவிதைக்கு பதில் கவிதை கொடுத்து, “உன் படிப்பு முடியுறதுக்காகத்தான் காத்திருந்தேன் ரதி” என்றான் நிதானமாக.
ஒருவித லயிப்பிலேயே கணவனின் கண்களையே பார்த்திருந்தவள், “நான் எதிர்பார்க்கலங்க இந்த சர்ப்ரைஸ. காலேஜ் பங்க்ஷன் வந்திருந்தப்ப பார்த்ததுன்னா, அப்ப சின்ன வயசுல என்னைப் பார்த்தது நினைவில் இருக்கா?” என்றாள் ஆர்வமாய்.
“இல்லமா. உன் பதிமூன்றாவது பிறந்தநாளுக்கு திருப்பூர் வந்திருந்தியே அதுதான் முதல்ல பார்த்தது.”
“அப்பவேவா!” என ஆச்சர்யமாய் கேட்டவளுக்கு, ‘அதெப்படி அந்த வயசுல தோணும்?’ என்ற எண்ணம் வந்தது.
“சே...சே... அப்ப நீயும் சின்னப்பொண்ணு. நானும் படிச்சிட்டிருந்த பையன். அதுமாதிரி எண்ணம்லாம் தோணல. உன்னோட பெயரும், இன்னொன்னும் நமக்குள்ள ஒற்றுமையா இருந்ததால கவனிச்சேன்” என்றவன் இருவரின் பிறந்தநாளை அவளிடம் குறிப்பிடவில்லை. அவளின் அடுத்த ஆச்சர்யத்துக்காக. “மத்தபடி சின்னப்பொண்ணை லவ் பண்றேன்னு சொல்றளவுக்கு கேடுகெட்டவனா எங்க வீட்டுல வளர்க்கல. செகண்ட் டைம் காலேஜ்ல பார்த்தப்பத்தான் நமக்குள்ள எதோ ஒரு பந்தம் இருக்குதுன்னு தெரிஞ்சது.”
“சாரி இந்த ஒருமுறை மட்டும்” என்றவன், “மறுமுறை பார்க்கும் பொழுது திருப்பதியில நீ நின்ன கோலம், என்னால நம்பவே முடியலை.” அவள் தலைகவிழ, “சாரிமா” என்றான்.
“ம் பரவாயில்லை சொல்லுங்க” என்றவள் குரலில் சுரத்தேயில்லை.
“நீ மட்டும் அந்த முடிவு எடுக்கலைன்னா அன்னைக்கே நீ என் மனைவியாகிருப்ப” என்றான்.
“ம்... ஏற்கனவே சொல்லியிருக்கீங்க” என்றவள் குரலில் ஒருவித பெருமிதமும் வெட்கமும்.
“ரதி ப்ளீஸ் கொஞ்சம்” என்ற கணவனின் கெஞ்சலான பார்வையில் என்னவென்பது போல் பார்த்தவளுக்கு, ‘முத்தம் கேட்கிறானோ’ என்றெண்ணி, “எ...என்ன கொஞ்சம்?” என்று திணற,
“இல்ல என் முட்டி வலிக்குது.” அவளோ புரியாமல் பார்க்க, “கொஞ்சம் உட்கார்ந்துக்கலாமா? நீயும்தான் முட்டி போட்டுருக்க அப்ப உனக்கும் வலிக்கும்தான?”
“ஐயே இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா. உங்களை...” என்று சகட்டுமேனிக்கு அடிக்க, அதில் நிதானம் தவறியவன் கீழேவிழ அவள் மேலே விழுந்தாள். அவனோ எதுவும் நடக்காதது போல் கால்மேல் கால்போட்டு, இருகைகளையும் தலைக்கு தலையணையாக்கி உல்லாசமாக விசிலடித்தான்.
மார்பில் கைவைத்து அதில் முகம் புதைத்து கணவன் முகம் பார்த்து, “என்னைப் பிடிக்கும்னு என்கிட்ட சொல்லாம ஊருக்கே தம்பட்டம் அடிச்சிருக்கீங்க!” என்றதும் அசட்டுத்தனமாய் சிரித்த கணவனின் கண் நோக்கி, “கஷ்டம்னா என்னன்னு தெரியாம சந்தோஷமான பகுதியையே பார்த்து வளர்ந்த எனக்கு, எங்கம்மாவோட இன்னொரு பக்கம் எவ்வளவு வேதனையானது கொடுமையானதுன்னு நினைக்கிறப்ப, எனக்கு அந்த மாதிரி ஒரு வாழ்க்கை இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்கு நீங்க என்னோடவே இருந்தா போதும்ங்க. வேற எதுவும் வேண்டாம். என் லைஃப்ல நடந்த நல்லது நம்ம கல்யாணம்!”
“அதுவும் வலுக்கட்டாயமா சம்மதிக்க வச்சிருக்கோம். நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்” என்று தோள் குலுக்கியபடி சிரித்தான்.
“ஏய் முறைப்பையா! அடிக்கடி இந்த தோள் குலுக்குறது, ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறது இதெல்லாம் வச்சிக்கக்கூடாது. ஓகேவா?”
“ஏன்?” என்றவன் குரலில் அதே மென்மையிருந்தது.
“ஏன்னா அது என்னை ரொம்ப இம்சிக்குது.” அவளின் குரல் ஒருவித மயக்கத்திலிருக்க,
“ஹேய் முறைப்பொண்ணு! நிஜமாவா?” மனம் சந்தோஷத்தில் துள்ளியது.
“அஹான்பா!” என்றாள் அதே குரலில். “அட்ரா அட்ரா!” என்று அட்டகாசமாக சிரித்து தன்னோடு சேர்த்தணைத்து, “ஐம் சோ ஹேப்பி ரதி. நீ கிடைப்பியா என்பதே ஒரு கேள்விக்குறியா இருந்தது. இப்ப...
காற்றை தரும் காடுகள் வேண்டாம்
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
வேறு எதுவும் தேவையில்லை
தேவை எந்தன் தேவதையே!”
மெல்லிய குரலில் பாட.. சட்டென்று கன்னத்தில் முத்தமிட்டு. “தேங்க்ஸ்” என்றாள் மனம் நிறைந்து.