• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
14


‘பிடிக்காதே. நான் எது சொன்னாலும் பிடிக்காதே. எனக்குள்ள அவனைத் தரமுடியுமா? முடியாதா?’

‘முடியாது போ!’ என்றாள் நிர்தாட்சண்யமாக.

‘ஹேய் ப்ளீஸ்பா. நல்ல பையன். நல்ல குடும்பம் கூட. உன்னை எல்லாரிடமும் அண்ணின்னுதான் சொல்லியிருக்கான். அடிக்கடி முறைப்பொண்ணுன்னு கூப்பிடுறான். பர்டிகுலரா பர்த்டேக்கு சுடி வாங்கித்தர்றான். அதுவும் உங்கம்மா சம்மதத்தோட. இது போதாதா இன்னுமா அந்த ஹீரோவை உனக்குப் பிடிக்கல?’

‘இங்க பார் மனசாட்சி அம்மாகிட்ட சொல்லிட்டேன். எனக்கானவனை அவங்களையே பார்க்கச் சொல்லி. நான் யாரையும் உன்னை நெருங்க விடுறதாயில்ல. நீ எப்பவும் எதுவும் எழுதப்படாத க்ளீன் பேப்பர்தான். எனக்கானவனை அம்மாவா காண்பிக்கும்போது உன்கிட்ட அனுப்புறேன். யூ என்ஜாய் பேபி’ என்று மனசாட்சியை மண்ணைக்கவ்வ வைத்தாள்.

‘ச்சீ... பே... எனக்கு இவனைத் தவிர எவனையும் பிடிக்காது. வேற யாரையாவது கொண்டு வந்தாலும் அவனை உன் கண்ணோட நிறுத்திக்க. மனசுக்குள்ள நுழைக்கணும்னு நினைச்சா, அது என்னை நானே கொன்னதுக்குச் சமானம் சொல்லிட்டேன்.’

‘ஹேய்! என்ன எமோஷனல் ப்ளாக்மெய்ல் பண்றியா? இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.’

‘அப்ப உங்க அம்மாவே இவனை மாப்பிள்ளையா கொண்டு வந்தா, என்ன பண்ணுவ. நீ என்ன பண்ணுவ!’ என மனசாட்சி ஆட்டம் போட,

‘ஆட்டமா போடுற. அம்மாவே சொன்னாலும் இவனை மட்டும் முடிக்கமாட்டேன்.’

‘ஏன் அவனைப் பிடிக்கலையா?’ மனம் சோககீதம் வாசித்தது.

‘பிடிக்கலைன்னு இல்ல. பிடிக்கும்தான். ஆனா, இவன் என்னோட மைனஸைப் பார்த்திருக்கான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குத்திக் காண்பிச்சா, இல்ல சந்தேகப்பட்டா, லைஃப் முழுக்க நரகமாகிரும்ல.’

‘அவன் செய்வான்னு நினைக்கிறியா?’

‘ஏன் நினைக்கக் கூடாதுன்றேன். இத்தனை வருஷமா உலகத்திலேயே சிறந்த ஆண் எங்க அப்பான்னு, உன்கிட்டத்தான ரொம்ப நெருக்கமா வச்சிருந்தேன். அவரே பொய்யின்னும் போது, இவன்லாம் எம்மாத்திரம். திருப்பதி விஷயம் தெரியாம இருந்தாலாவது சரி ஓகேன்னு சொல்வேன். இப்ப நோவே.’

‘பாஸ்ட் தெரிஞ்சவனை.. தெரிஞ்சே உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னா மறுக்கிறது தப்பு பாக்ஸ்.’

‘நம்ம பலம் ஒருத்தருக்கு தெரியலாம் மனமே! அவங்களோட இருந்தா நோ ப்ராப்ளம். நம்ம பலகீனம் தெரிஞ்சவங்களோட இருந்தா குற்றவுணர்ச்சி நம்மளை கொன்னுரும். உனக்கு அது தேவையா சொல்லு?’

‘அவன் உன்னைத்தேடி வருவேன்னு சொல்லியிருக்கான். கண்டிப்பா வருவான்னு தோணுது.’

‘வந்தா அப்ப பார்க்கலாம். இப்ப அடங்கிக்கிட லூசு.’

‘என்னை லூசுன்ற. கண்டிப்பா இவனுக்காக லூசுப்பிடிச்சி அலையப்போற பாரு.’

‘நீ அடங்கமாட்டியே! இரு குதிக்கிறதை அடக்கறேன்’ என்று அங்கிருந்த தண்ணீரை எடுத்து வாயினுள் ஊற்றி, ‘இப்ப அமைதியாயிரு’ எனறு அடக்கி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

ஏனோ மனசாட்சி சொன்னதை ஆராயவில்லை. ஆராய்ந்தால் அது மனதிற்குள் பதிந்துவிடுமோ என்ற பயமே அவளுக்கு!

சற்று நேரத்திற்கெல்லாம் சந்திராவிடம் வந்த ஸ்ரீனிவாசன், “அத்தை உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். என் கூட வாங்க” என்றான்.

“சர்ப்ரைஸா? எனக்கா? கல்யாணப் பொண்ணுக்கு சொல்ல வேண்டியதை மாத்தி என்கிட்ட சொல்றியா?” என கேலியாய் கேட்டார்.

“அதெல்லாம் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் கொடுத்தாச்சி. இது உங்களுக்கானது. மாமா நீங்களும் வாங்க” என ஒரு அறைக்குச் செல்லப்போகும் வழயில், கணவனைத் தேடியலைந்தபடி நின்றிருந்த தாரிணியையும் அழைத்துச் சென்றார்கள்.

“வாங்க அத்தை. மாமா உள்ள வாங்க. இதான் எங்க அம்மா மேனகா. இது தாத்தா காசி. இவங்க உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம்” என்று அக்கா, அத்தானைக் காண்பிக்க, நால்வர் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி என்றால், சுகந்தி, சங்கர் முகத்தில் பதற்றம் எழுந்தது.

அதைப்பார்த்த ஸ்ரீனிவாசன் தாரிணிக்கு குழப்பம் மட்டுமே! அவனுக்கு அனைவரின் அமைதியும் ஏதோ செய்ய, “என்னாச்சிம்மா?” என தாயை உலுக்கினான்.

“கலா” என்ற அழைப்பிற்கு, “மயினி” என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள, மற்றவர்கள் அதிர்ச்சியிலிருந்து வெளி வர, ஸ்ரீனிவாசனும் தாரிணியும் அந்த அதிர்ச்சியை உள்வாங்கினார்கள்.

“அக்கா எப்படிக்கா இருக்க? ஏன்கா பேசமாட்டேங்குற? இன்னுமா அதை நம்புற? நான் உன் தம்பிக்கா. நான் தப்பு பண்ணுவேனா?”

“ராமு நீ என் தம்பிலே. நீ எந்த தப்பும் பண்ணிருக்கமாட்டேன்னு எப்பவும் நம்புவேன். நம்ப வேண்டியவங்க நம்பாம ஒங்களை விட்டுட்டாவளே!”

“நானும் ஒன்னைய நம்புறேன்ல” என்ற காசியைப் பார்த்தவர், “மாமா” என்று ஆச்சர்யப்பட்டுப் பார்த்தார்.

“ம்...மாமந்தேன். வயசுக்கேத்த பக்குவமில்லாத மாமா. பெத்த பொண்ணையே நம்பாத மாமா” என்றார் தன்மேலேயே கோவப்பட்டு.

“கலா” என்று காசி அழைத்தும் அவர்புறம் திரும்பவில்லை, அவர் பெத்த ஒரே மகள் சந்திரகலா.

“என்கிட்ட பேசவேண்டாம்னு சொல்லுங்க மயினி. அவருக்கு பையன்தான் முக்கியம். பொண்ணு வாழ்க்கையோ, பேத்தியோட எதிர்காலமோ இல்ல” என்றார் ஆத்திரமாக.

“கலா” என்று மேனகா எதோ சொல்ல வர, “வேணாம் தாயி அவள விடு. உருப்படாத அப்பனுக்கும், வீம்புக்கார அண்ணனுக்கும் ஒறவாகிப் போயிட்டாளே. என்ன... பெத்தத் தாய் செத்ததக் கூட பொண்ணுகிட்ட சொல்ல முடியாம போச்சின்ற கவலைதேன் எனக்கு” என்றார் வருத்தத்துடன்.

“எனக்குத் தெரியும். நான் வந்து எங்கம்மாவைப் பார்த்தேன்” என்று சாதாரணமாக சந்திரகலா சொல்ல, மற்றவர்கள் ‘எப்ப?’ என்பதுபோல் பார்த்தனர்.

“வீட்டுக்குள்ளதான வரக்கூடாது. வீட்டுக்கு வெளியில கொண்டு வந்த பிறகு யார் தடுக்குறது. அதுக்கு நான் சுகந்திக்குத்தான் நன்றி சொல்லணும். எங்கம்மா இறப்பை எனக்கு தெரியப்படுத்தினதுக்கு” என்றார்.

“எதுக்கு அத்தை நன்றிலாம். அவிய ஒங்களுக்குந்தேன் அம்மா. எனக்கு ஒங்களைப் பாத்ததிலிருந்து குழப்பம் இருந்தாலும் ஒண்ணுந் தோணல. ஆனா, பங்க்ஷன்ல உங்க நடவடிக்கை, சீனுவோட உருவ ஒற்றுமை வச்சி இவிய கண்டுபிடிச்சிட்டாவ. அதான் ஒங்களுக்கு போன போட்டேன். இதுல சீனுகிட்ட சொல்ல வேணாம்னு சத்தியம் வேற வாங்கிட்டிய. இப்பதான் உண்மை தெரிஞ்சிருச்சே அதான் சொல்லிட்டேன்” என்றாள்.

அதே நேரம் முகத்தில் சற்று பதற்றத்துடன் ப்ரவீண் உள்ளே வர, மற்றவர்கள் தங்கள் பிரச்சனையில் இருந்ததால் அதைக் கவனிக்கவில்லை.

மகனைப் பார்த்ததும், “மாமா இவன் என்னோட மூத்த மகன் ப்ரவீண்” என்று அறிமுகப்படுத்தினார் கணபதி. தான் பத்து வயதில் பார்த்த முகங்கள் சரிவர நியாபகமில்லை ப்ரவீணுக்கு. நடந்தவற்றைச் சொன்னதும், மனைவியை அறிமுகப்படுத்தி ஆசிவாங்க, ஆணியடித்தாற்போல் அசையாமல் நின்றிருந்தான் ஸ்ரீனிவாசன்.

“என்ன சீனு அப்படியே நின்னுட்ட?” என்றதும் தலையைப் பிடித்தபடி அமர, அதில் அனைவரும் பதறியபடி, “என்னாச்சியா?” என்றார்கள்.

“நான் இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கல. ஏன் அத்தான் உங்க பொண்ணை மேரேஜ் பண்ணிக்காம, எங்க அத்தை பொண்ணு பின்னாடி போயிருவானோன்னுதான, எங்க அத்தையை முன்னாடியே அறிமுகப்படுத்தாம விட்டீங்க?” என்று நகைச்சுவை போல் சொன்னாலும் அதில் முன்னாடியே சொல்லவில்லையென்ற வருத்தத்துடன், அப்படியே பெண்ணும் கேட்டிருந்தான்.

அவனின் உள்குத்தை அறியாதவர்களோ, அதில் மனம்விட்டுச் சிரிக்க, ‘அடப்பாவிகளா! நான் சொன்னதை யாரும் முழுசா புரிஞ்சிக்கலை போல. கொஞ்சம் கஷ்டம்தான்டா ஸ்ரீ’ என மனதிற்குள் புலம்பினான்.

அது தெரிந்தோ என்னவோ, “ஸ்ரீ உனக்கு இன்னும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதுக்கு கொஞ்சம் வெய்ட் பண்ணனும்” என்ற ப்ரவீணுக்குத் தெரியாது, அந்த சர்ப்ரைஸ் மறுநாளே அவிழப்போகிறதென்று.

அப்பொழுது வந்த கைபேசி அழைப்பை ஏற்ற கணபதி அவசர வேலையென்று வெளியெ சென்றார்.

“சரி இப்ப சொல்லுங்க? அத்தை ஏன் வெளியில போனாங்க? என்ன காரணம்?’ என்றான் தாயிடம்.

அவனின் அப்பாவில் ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடிக்க, மற்றவர்களுக்கு கண்கலங்கியதென்றால், ஸ்ரீனிவாசனுக்கும், கலாவிற்கும் கோவமே நின்றது. தன் தாத்தாவிடம் திரும்பியவன் வார்த்தைகளால் அவரைக் கடித்து, “அப்பா பண்ணின தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் அத்தை” என்றான் சந்திராவிடம்.

“எதுக்கு சீனு மன்னிப்பெல்லாம். சிந்து மேரேஜ் பேச்சி நின்னப்ப, நீ சொன்னது உனக்கு நியாபகமிருக்கான்னு தெரியல. இதான் நடக்கணும்னு இருக்குன்னு கடவுளைக் காரணம் காட்டின. அந்த விஷயத்துல ஒத்துக்க முடிஞ்ச என்னால, இதுல முடியாது சீனு. என்னதான் கடவுள் மேல பழியைப் போட்டாலும், அவங்களை என்னால மன்னிக்க முடியாது. அவங்க சார்புல மன்னிப்பு கேட்டுக்கறேன்னு இன்னொரு டைம் சொல்லாத” என்று நிறுத்தியவர் அவர்களைப் பார்த்து,

“என் பொண்ணு எனக்கு மட்டும் ஏன்மா சொந்தங்களே இல்லைன்னு கேட்டப்ப, இருந்தும் இல்லைன்னு சொல்ல முடிஞ்ச என்னால, இல்லவே இல்லைன்னு சொல்ல முடியல. அதை சொல்லும்போது எனக்குள்ள எவ்வளவு அழுதேன்னு எனக்குத்தான் தெரியும்.”

“எம் மருமவ நல்லாருக்காளா? எனக்கு அவளப் பாக்கணும் கலா.” ஆசையாகக் கேட்டார் மேனகா.

“பார்க்கலாம் மயினி. இங்கதான் இருக்கா. அப்படியே உங்க தம்பியை மாதிரி. குணமும் அவங்களோடதுதான்” என்றவரின் குரலிலுள்ள பெருமையுடன் சேர்ந்த கண்கலங்கல் மேனகாவிற்கு புரிய, சந்திராவை அணைத்துக்கொண்டார்.

‘ஏதோ ஒரு நினைவுல முறைப் பொண்ணுன்னு கூப்பிட்டேன். நிஜமாவே என் முறைப் பொண்ணாகிட்டியே ரதிமா’ என்றவன் மனதிற்குள் சந்தோஷ சாரலடித்தது.

பாகீரதி, தாரிணியைத் தேடி அலைய, மண்டபத்திலிருந்து வேகமாக வெளியே சென்றவரை பார்த்து, ‘அப்பா ஏன் இவ்வளவு அவசரமா போறாங்க?’ அவரைப் பின்தொடர, வாகனம் நிறுத்துமிடத்தில் கவலை முகத்துடன் நின்றிருந்தவனைப் பார்த்து, “இவனெப்படி இங்கே? இந்த குடும்பம் இங்கதான் இருக்குதா? வெளியூர்னு போனதெல்லாம் இங்கேதானா?” என அதிர்ந்தாள்.

“நவீன் இங்க ஏன் வந்த? எதுவாயிருந்தாலும் போன்ல சொல்லியிருக்கலாம்ல? அம்மு பார்த்தா என்னாகிறது?” கேள்விகளோடு மகனை நெருங்கினார்.

“அம்மு... அம்மு... அவளைத்தவிர வேற நினைப்பில்லையாப்பா உங்களுக்கு?”

“நவீ என்ன பழக்கம் இது? அம்மு உன்னைவிடப் பெரியவ. மரியாதையா பேசு” என்றார் கண்டிப்புடன்.

“ஆமா அஞ்சாறு மாதம் மூத்தவள்லாம் ரொம்பப் பெரியவதான்” என எகத்தாளம் பேச, “ப்ச்... நவீன் இப்ப எதுக்கு வந்த? தொழில் விஷயம்னா காலையில பேசிக்கலாம்” என்றதும், பக்கத்திலிருந்த பெரிய மருத்துவமனையைக் காண்பித்து, “அம்மாப்பா” என்றான் கண்ணீர் வழிய.

அதில் பதறியவர், “அம்மா ஹாஸ்பிடல்லயா? அம்மாவுக்கு என்னடா?”

“எப்பவும் சொல்ற மாதிரி இன்னைக்கு நடந்ததைச் சொன்னேன். பிபி லோவாகி மயக்கமாகிட்டாங்கப்பா. அதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு, உடனே உங்களைப் பார்க்க வந்தேன். நீங்க ஏன் வந்த கேட்குறீங்க?” என்றான் கோவத்தில்.

“அம்மாவுக்கு ஒண்ணுமாகாது. ஒரு நிமிடம்” என்றவர் சந்திராவை அழைத்து வேலையிருப்பதாகவும், காலை முகூர்த்தத்துக்கு வருவதாகவும் சொல்லி மருத்துவமனை நோக்கி விரைந்தார் காரைக் கூட எடுக்காமல்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
இதையெல்லாம் பார்த்திருந்த பாகீரதிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை என்றாலும், ஏதோ பிரச்சனை என்பதுவரை புரிந்தது. நகர்ந்து வந்து அவன் கைகாண்பித்த இடத்தில் மருத்துவமனையைப் பார்த்து, ‘ஏனிந்த ஓட்டம்ப்பா. அந்த லேடி மேல அந்தளவு அட்ராக்சனா. அவங்களுக்கு ஒண்ணுன்னா இப்படித் துடிக்கிறீங்க? அப்ப நாங்கள்லாம் யாருப்பா?” கொஞ்ச நஞ்சம் அவர் மேலிருந்த நம்பிக்கையும் சரிந்து விழ, நின்ற இடத்திலேயே ‘ஓ’வென்று கதறி அழுதாள். பேச்சுக்குரல்கள் கேட்டு வாய்பொத்தி கண் துடைத்து, மண்டபத்துக்கு வெளியே தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஒதுக்குப்புறமான சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

தாய்க்காக கேட்க வேண்டாமென்று நினைத்தாலும், எங்கே தங்களுக்கே இல்லாமல் போய்விடுவாரோ என்ற பயம் வர, ‘கேட்கணும் கண்டிப்பா கேட்கணும். கேட்கலன்னா தப்புக்கள் தொடரும். அதுக்கு முதல்ல சிந்து அண்ணி கல்யாணம் முடியணும். ஏற்கனவே என்னாலதான் கல்யாணம் நின்னுச்சி. அதனால, இப்பக் கேட்க வேண்டாம்’ என்று மறுநாள் செயல்படுத்த வேண்டியதை வரிசைப்படுத்தி, அதன்பின் சிந்தனைகள் அனைத்தையும் ஓரம்கட்டி அமைதியாக அமர்ந்திருந்தவளின் அழுகை கூட நின்றிருந்தது. பல நிமிடங்கள் அதிலேயே உழல,

“என்ன ரதி தனியா உட்கார்ந்திருக்க? எதாவது பிரச்சனையா? என்கிட்ட சொல்லமாட்டியா?” அந்த குரல் யாருடையதென்று தெரிய, குரலின் தன்மை தன்னை ஈர்த்தபோதும், இருந்த நிலையைவிட்டு அசைவதாயில்லை அவள். “ரதி உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” என்றான் பதற்றமான குரலில்.

‘ஆமா வந்திடகிந்திடப் போகுது.’ மனதினுள் நினைத்ததை வெளியே காட்டிக்கொள்ளாமல், “எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன சார். கிளம்புறீங்களா? அப்புறம் ரதின்னு கூப்பிடுறது எனக்கு பிடிக்கல. சோ, அதையும் விட்டுருங்க?” என யார் மேலிருந்த கோவத்தையோ அவன்மேல் காட்டினாள்.

“ஹ்ம்... ஓகே ரதின்னு கூப்பிடலை” என தோள்குலுக்க,

“ரொம்ப நல்லது கிளம்புங்க” என்றவள் அவன் அடுத்து சொன்ன “முறைப்பொண்ணுன்னே கூப்பிடுறேன்” என்ற வார்த்தையில் கொதிநிலைக்கேச் சென்றாள்.

“இங்க பாருங்க இந்த மாதிரி பேசுறதா இருந்தா என்கிட்ட வராதீங்க. எனக்கு பிடிக்கலை.” பட்டென சொல்ல,

“ஏன் ரதி நிஜமாவே என்னைப் பிடிக்கலையா?”

அந்தக்குரலின் வருத்தம் தன்னைத் தாக்கியபோதும், “ஆமா பிடிக்கலை” என்றாள் பிடிவாதமாக. ‘இல்ல எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற மனசாட்சியை மண்டையில் தட்டியபடி.

“சரிவிடு நாளைக்கு பிடிக்க வைக்கிறேன்” என்றான் சிரிப்புடன்.

“உன்னை! என்ன நக்கலா என்னைக்கும் பிடிக்காது டைம் வேஸ்ட் பண்ணாதீங்க” என்றாள் அழுத்தமாக.

“பரவாயில்லை வேஸ்ட் பண்ணாமலேயே பிடிக்க வைக்கிறேன். இப்ப நீ உள்ள வா. இந்த டைம் தனியா இங்க இருக்கிறது ஷேஃப் இல்லை” எனவும், அவள் முடியாதென்று முறுக்கிக் கொண்டதும், ‘இவ சரிவரமாட்டா’ என சுற்றிலும் பார்த்தவன் கண்களில், மதன் க்ரூப்ஸ் விழ அவர்களை அழைத்து, “உங்க அண்ணியை உள்ள கூட்டிட்டு வாங்க” என்று நடக்க ஆரம்பித்தான்.

‘ஆமா, இப்பத்தான் ஒரு செமினார் எடுத்திருக்காங்க. அடுத்தது இவனுங்க வேறயா. தாங்காது பாகீ கிளம்பு’ என மூளை சொல்ல ஸ்ரீனிவாசனுக்கு முன்பாகவே ஓடிவிட்டாள்.

அவளின் செய்கையில் சிரித்தாலும், அவளுக்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதை உணரத்தான் செய்தான். அதை அவளே சொல்லாமல் எவ்வாறு தீர்ப்பதென்றும் தெரியவில்லை.

‘இத்தனை நாள் நீ கேட்ட உன் உறவுகள் இவர்கள்தான்.’ மகளிடம் சொல்லி தன் அண்ணன் குடும்பத்திற்கும் அறிமுகப்படுத்த பாகீரதியை சந்திரா தேடினார். தாரிணியும் தனியாகத் தேட, யார் கண்ணிலும் படாமல் மண்டபத்திலேயே கண்ணாமூச்சியாடி பின், அனைவரும் தூங்கயிருப்பார்கள் என்றெண்ணி நிறைய நேரம் கழித்து வந்தாள்.

அவளுக்காக விழித்திருந்த சிந்துவும், தாரிணியும், “இவ்வளவு நேரம் எங்க போயிருந்த?” என்று விசாரணையில் இறங்கினர்.

“ஒண்ணுமில்ல. வெயில் அதிகம். அதான் காத்தாட வெளில போயிட்டு வர்றேன்” என்றாள் இருவருக்கும் பதிலாக.

பதிலுக்கு முறைத்தபடி, “இது ஏசி மஹால்” என்றதும் முதலில் திணறியவள், பின் அசடுவழிய சிரித்து, “சாரி மறந்துட்டேன்” என்றாள்.

“ஹேய்! உன்னை எல்லாரும் தேடிட்டிருக்காங்க. உனக்கு ஒரு பரிசு கொடுக்கப்போறாங்க.. இப்ப டைமாகிருச்சி சர்ப்ரைஸ காலையில சாவதானமா காண்பிக்கிறோம்” என்றார்கள் கோரஸாக.

“நானும் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் அண்ணி. அதுவும் காலையிலதான் வெடிக்கும்.”

“வாட் வெடிக்குமா?”

“ஸ்ஸ்... சாரி தெரியும்னு சொல்ல வந்தேன்” என்றாள்.

சந்திரா உள்ளே வந்து மகள் பத்திரமாக இருப்பதை உறுதிசெய்து கிளம்பினார்.

காலையில் பணக்காரர்களுக்கே உரிய முறையில், திருமணம் வெகு சிறப்புடனும், கலாட்டாவுடனும் முடிந்தது.

கணபதி சரியாக தாலிகட்டும் நேரத்திற்கு வந்து சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி மண்டப வாயில் வர, அவரை மறித்தபடி நின்றிருந்தாள் பாகீரதி.

அவள் முகத்தில் அப்பட்டமான கோவமும், வெறுப்பும் மட்டுமே இருந்தது. முதலில் அதிர்ந்தவர் முகத்திலுள்ள உணர்ச்சிகளை மறைத்து, “என்ன அம்மு பொண்ணு பக்கத்துல நிற்காம இங்க நிற்கிற. போ உள்ள போ” என்றவரின் முகத்தில் ஒருவித பதட்டம் இருந்தது.

“நான் உள்ள போறது இருக்கட்டும். நீங்க எங்கப்பா இவ்வளவு வேகமா போய்ட்டிருக்கீங்க?”

“கார்மெண்ட்ஸ்ல கொஞ்சம் பிரச்சனைமா. என்ன பிரச்சனை, எவ்வளவு நஷ்டம்னுலாம் தெரியல. போய்த்தான் பார்க்கணும். அதான் ப்ரவீணை கல்யாணத்தை கூட அட்டெண்ட் பண்ணவிடாம காலையில சீக்கிரமே அனுப்பிட்டேன்” என்றார் உண்மையாகவே. அந்த உண்மையை நம்பும் நிலையில் மகள் இல்லை என்பதை உணராமலே.

முந்தின தினம் வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டிய ஆடைகள் அனைத்தையும் தயார் செய்து முடித்து லாரியில் ஏற்றும் நேரத்தில், நவீன் ஒரு அட்டையைப் பிரித்து ஆய்வு செய்ய திறந்து பார்க்க, சிறுவருக்கான ஆடையில் வித்தியாசம் தெரிந்தது.

மற்ற துணிகளையும் பார்வையிட்டு, மற்றவற்றையும் திறந்து பார்க்க, அனைத்திலும் ஒரே மாதிரியான தவறு. அதில் போட்டிருந்த எம்ப்ராய்டரி பூக்களில் நடுவில் இருந்த மாடல் இல்லாமல் இருந்தது. வேகமாக அதற்கான மாடலைப் பார்க்க அங்கிருந்த மாடலில் இதே இருந்தது.

ஆனால், நவீனின் சந்தேகம் தீரவில்லை. ‘இல்ல இது கிடையாது’ என உள்மனம் எச்சரிக்கை விடுத்தது. இரண்டு நாட்களில் அனுப்ப வேண்டிய பொருள்கள் அது. இதற்கான முன்பணமே கோடி வாங்கியிருக்கிறார்கள். சொன்ன நாளுக்குள் பொருள்கள் சேரவில்லையென்றால் அதற்கான இழப்பீடு இருமடங்கு அதிகரிக்கவும் செய்யும். அந்த பாரீன்காரன் கேஸ் அது இதென்று போனால் பணத்தோடு சேர்ந்து, இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்த கௌரவமும் காற்றில் பறக்கும்.

இந்த பிரச்சனையின் ஆணிவேர் தேட, டெய்லரிங், செக்கிங், அயனிங் பேகிங் என ஒருவர் மற்றவரைச் சொல்லி தப்பிக்க நினைத்தனர். ஒருவர் மற்றொருவர் என அந்த இடமே கலவரமாகியது. இது முழுக்க முழுக்க டெய்லரிங் மிஸ்டேக் என்பது தெரிந்தது. இருப்பினும் அவர்கள் தங்களிடம் கொடுத்தது இதுதான் என அடித்து சாதித்து தங்கள் தவறே செய்யவில்லை என்றார்கள். அவர்களுக்கென்ன இந்த கார்மெண்ட்ஸ் இல்லையென்றால் இன்னொன்று. எவன் எப்படிப் போனால் தனக்கென்ன என்பதே அப்படி பேச வைத்தது. எப்படி நடந்ததென்பதை விட, மாடல் காண்பித்து அப்ரூவ் வாங்கியதை மாற்ற என்ன வழி என விழிபிதுங்க நின்றிருந்த நவீனால் சமாளிக்க முடியாமல் போய் ப்ரவீணை அழைத்தான்.

மண்டபத்திலிருந்து யாரிடமும் சொல்லாமலேயே வந்தவன் பிரச்சனையை ஒருவாறு யூகித்து அவர்களிடம் கேட்க, அவர்களோ தங்களுக்கு கொடுத்த மாடல் இதுதான். இதைப்பார்த்துதான் செய்தோம் எனும்போது, “நவீ மேனேஜர் எங்க?” என்றான் தம்பியிடம்.

“அவரை செகண்ட் யூனிட்கு அனுப்பிருக்கேன்ணா.”

“முதல்ல அவருக்கு போன் பண்ணி இன்னும் டென் மினிட்ஸ்ல வரச்சொல்லு.” உடனே போன் செய்து, “இதோ வர்றாராம்ணா.” மேனேஜர் வந்ததும் அவனிடம் விசாரிக்க., அவனோ, “இதுதான் சார் நீங்க குடுத்தது” என்றான் ஒரேயடியாக.

“இல்ல. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு” என்றவன் “ஒரு நிமிஷம்” என்று வெளிநாடு கம்பெனிக்கு அனுப்பிய மின்னஞ்சலைப் பார்க்க, அதுவோ அழிக்கப்பட்டிருந்தது. “எப்படி இது சாத்தியம்? யாரோட வேலையிது? பாஸ்வேர்ட் போட்டும் எப்படி? யாரெல்லாம் தங்களறைக்கு வந்தார்கள்?” என்ற சிசிடிவி ஃபுட்டேஜ் பார்க்க அதுவும் அழிக்கப்பட்டிருந்தது. ஷிட் என கோபத்தில் கத்தி, மேனேஜரை அனுப்பிவிட்டு, “.நவீ நீ வீட்டுக்குப் போ. நான் அப்பாகிட்ட பேசிட்டு வர்றேன்” என்று மண்டபம் வர, ஸ்ரீயின் குடும்ப அறிமுகத்தில் தான் பேசவந்ததை சற்று நேரம் தள்ளிவைத்தான்.

நவீன் வீட்டிற்கு சென்றவன் அவசரப்பட்டு தன் தாயிடம் விஷயத்தை போட்டுடைக்க, ஏற்கனவே சந்திராவின் திருப்பூர் வருகையில் மனவுளைச்சலில் இருந்தவருக்கு, இதுவும் சேர்ந்து ப்ரெஷர் குறைந்து மயக்கத்தில் விட்டது. உடனே மருத்துவமனையில் சேர்த்து தந்தையைக் காணவந்தான். அவனுடன் மருத்துவமனை சென்றவர், பாரதிக்கு பெரிதாக எதுவுமில்லை என்றதும் அதிகாலையிலேயே கார்மெண்ட்ஸ் சென்று பார்வையிட்டு திருமணத்திற்கு வந்தார்.

மருத்துவமனை சென்றதை மறைத்து, கார்மெண்ட்ஸில் நடந்ததைச் சொல்லி அங்கு செல்வதாக சொன்னார்.

“ஐம் நாட் எ சைல்ட்ப்பா. இதையெல்லாம் நம்புறதுக்கு” என்றாள் கோவமாக.

“அம்மூ” என அவர் அதிர்ந்து நின்றார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
Ammu ma, some times you have to believe what he says. He’s more stressed than what is your priority.
அம்முவுக்கு பொறுமை இல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top