New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 14
- Thread Author
- #1
பேய் நண்பன்
அன்று மாலை 6:00 மணி. சூரியன் மறைந்து நிலா வரும் நேரம். ஆனால் நிலாவைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தவரையில், ‘அன்று நிலா வராது’ என்று சொன்னார்கள். காரணம் அன்று அமாவாசையாம். அதுவும் சனி அமாவாசை என்று கூறினார்கள் அதோடு நில்லாமல் இன்னொரு விஷயமும் சொன்னார்கள்.
‘அந்தி சாயும் நேரம் அம்மாவாசை திதி ஆரம்பிக்குது. அதனால, அங்குட்டு இங்குட்டுன்னு எங்கையும் போகாதடா’ என்று.
அதைக் கேட்ட நொடியிலிருந்தே உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பய உணர்வு ஒட்டிக் கொண்டது. அந்த உணர்வை இன்னது என்று வரையறுக்க முடியவில்லை. இருதய பிரதேசம் திக் திக் என்று அடித்துக் கொள்வதைப் போல ஒரு உணர்வு. அந்த நேரம் அலைபேசி அழைப்பு மணி சத்தம் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பினேன். அங்கு எனது அலைபேசி தான் துடித்துக் கொண்டிருந்தது. அழைப்பை ஏற்றேன். அதைக் காதில் திணித்தேன்.
"ஹலோ!"
"எய்யா" மறுமுனையில் அம்மாவின் குரல்,
"என்னம்மா?"
"எங்கய்யா இருக்க?"
"வீட்ல தான்ம்மா. பிள்ளையார் கோவில்கிட்ட உட்கார்ந்து இருக்கேன்."
"அங்க என்ன செய்யுத?"
"ஒன்னும் இல்லம்மா. சும்மாதான் இருக்கேன். என்னம்மா சொல்லு?"
"நாங்க ஊருக்கு வர லேட் ஆகும் போலயா. நீ நம்ம கிணத்துக்கு போய், மாட்டுக்குத் தண்ணி வச்சி, பாலைக் கறந்துட்டு வந்துரு" என்று அம்மா சொல்ல எனக்குப் பக்கென்று இருந்தது. பேச்சு வரவில்லை நெஞ்சுக்கூடு முழுக்க பயம் சிம்மாசனம் இட்டது. பய உணர்வைக் கடந்து பேச வந்த நேரம் அழைப்பு தூண்டிக்கபட்டது.
அருகில் வந்த யாரோ எதையோ அம்மாவிடம் கேட்க, "சரிய்யா நீ போய் வேலைய பாரு" என்று சொல்லிவிட்டு, எனது மறுமொழி கேட்காமலே அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
மணி 7 நெருங்கிக் கொண்டிருந்தது. தோட்டத்திற்கு செல்லும் தெற்கு திசையை நோக்க இருட்டு கருகும்மென்று இருந்தது. இரவு 8:45 மணிக்குப் பால் வண்டி வரும். அதற்குள் மாட்டுக்குத் தண்ணீர் வைத்துப் பால் கறக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் அந்த நேரத்திருக்குள் வேலையை முடிக்க முடியாது. உடனே கிளம்பியாக வேண்டும் என்ற எண்ணத்தில் எழ, அந்தக் குரல் காதில் கேட்டது.
‘இன்னைக்கு சனி அம்மாவாசை. அங்குட்டு இங்குட்டு எங்கையும் போகாத.’
அதை நினைத்துப் பயந்தால் வேலை நடக்காது. மாடு பாவம் தண்ணீர் குடிக்காமல் கணைத்து கொண்டு கிடக்குமே என்ற எண்ணம் தோன்ற, வேகமாக வீட்டை நோக்கி நடந்தேன். சைக்கிளை எடுக்க அது பஞ்சர் ஆகி நின்றது. நேரம் கடந்து கொண்டிருந்தது. சினிமாவில் கேட்பது போலக் கடிகார முள் நகரும் சத்தம் கூட டக் டக் என்று காதில் கேட்டது.
கண்களை மூடினேன். குல தெய்வத்தை வணங்கிக் கிணத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். தெருவைக் கடந்தேன். தெருவைக் கடந்து சில அடிகள் தூரம், தனியாக இருக்கும் பெரியப்பா வீட்டை அடைந்து நின்றேன். அது தான் கடைசி வெளிச்சம் அதற்கு மேல் முற்றிலும் இருட்டு. அலைபேசியை கையில் எடுத்தேன். அதன் விளக்கை மிளிர விட, அதனால் முடிந்த அளவுக்கு இருட்டை விரட்ட முயற்சி செய்து, முடியாது தோற்று என் காலுக்குள் மட்டும் விழுந்தது.
அந்த வெளிச்சம் கொடுத்த தைரியத்தில் நடக்க, இருட்டும், அதன் நிசப்தமும் நிறைந்து இருக்க, எனது காலடி ஓசை எனக்கே எதிரொலிக்கத் திக் திக் இதயம் மீண்டும் பக் பக் என்று அடிக்க ஆரம்பித்தது.
கால்கள் அடி எடுத்து வைக்க மறுத்தது. மீண்டும் ஒரு முறை கண்களை மூடி மனதை திடப்படுத்தி கொண்டு, ஓட ஆரம்பித்தேன். எனக்குத் தெரியும் இந்த ரோடு நேரானது 400 லிருந்து 500 மீட்டர் தூரம் கடந்துதான் ஒரு திருப்பம் வரும். அதனால், கண்களை மூடி விட்டு ஓடி விட்டால் பயம் தெரியாது. தூரம் கடப்பதும் தெரியாது என்ற குருட்டு தைரியத்தில், கண்களை மூடிக்கொண்டு குருடனை போல இருளை பற்றிய கவலை இல்லாமல், பின்னங்கால் இடையில் இடிக்க ஓடினேன்.
பத்துப் பனிரெண்டு எட்டுக்கள் ஓடி விட்டு, இத்தனை தூரம் நாம் கடந்து விட்டோம் என்று மனதில் எண்ணிக்கொண்டே, இன்னும் எத்தனை எட்டுக்கள் ஓட வேண்டும் என்பதையும் கணக்கிட்டுக் கொண்டே ஓடினேன். அந்தக் கணக்கீடுக்கு இடையில் புகுந்து கொண்டு பயம் காட்டியது இருட்டு. அந்தப் பயம் எனது வேகத்தைக் கொஞ்சம் குறைக்க கால் வேகம் குறைந்த நேரத்தில், எதன் மீதோ மிதிக்க நெலுக்கென்ற உணர்வைக் கொடுத்தது. கூடவே ‘புஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சீற்ற சத்தமும் எழ, என் சப்த நாடியும் அடங்கியதை போல் உணர்ந்தேன்.
நிச்சயம் நான் மித்தது ஒரு சர்ப்பத்தை தான். அதை உணர்ந்த நேரம் சனி அம்மாவாசை, இருள், இரண்டையும் மறந்து குதித்தேன். அலறினேன். பின் ஓடினேன். கண்கள் திறந்தேன். சுற்றிலும் இருட்டு. கண்களை மூடிக் கொண்டு ஓடியதால், கண்ணும் இன்னும் இருளுக்கு பழகவில்லை. விளைவு கண் திறந்தும் குருடனாக நின்றேன்.
‘எங்கிருக்கிறேன்? எந்தப் பக்கம் ஓடினேன்?’ எதையும் நான் அறியவில்லை. கால் ஓடிய திக்கில் ஓடி வந்துவிட்டேன்.
திசை தெரியவில்லை. அருகில் என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை. சுற்றிலும் காடு காடு மட்டுமே. முழுக்க அம்மாவாசை இருட்டு. அதை நினைக்க மீண்டும் அந்தக் குரல் காதில். ‘அங்குட்டு இங்குட்டுன்னு எங்கையும் போகாத.’
மீண்டும் ஒரு பயப் பேய் எனக்குள் வந்து திம்மென்று அமர்ந்து கொண்டது. சுற்றிலும் இருள். இருளைத் தவிர வேறு ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை. கண்கள் நீரை சுரக்க ஆரம்பித்தது, நாக்கு வறண்டு போனதால் கத்த வாயைத் திறந்த போதும் வாய் வரவில்லை. நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது. பயம் இன்னும் அதிகமாக என்ன செய்வது என்று தெரியாமல் அழுதேன். அலைபேசியை எடுத்து வெளிச்சத்தை வர வைக்க நினைத்துத் தேடியபோது, அது காணாமல் போயிருந்தது. நான் ஓடிய வேகத்தில் அது எங்கேயோ விழுந்துவிட்டது.
கண்கள் கண்ணீரைத் தாரைத் தாரையாய்ச் சிதற இயற்கை மேலும் கோரம் காட்டியது. மனம் அம்மாவை நினைத்தது. இல்லை இல்லை திட்டியது. ‘இப்படி ஒரு சூழலில் சிக்க வைத்துவிட்டாளே என் தாய்’ என்று மனம் குமுறியது. அம்மாவாசை ஆபத்து என்று அவளும் அறிவாள் தானே. அறிந்தும் நம்மை எச்சரிக்கை செய்யாமல் விட்டு விட்டாளே மனம் குமிறியது.
அதுவரைக்கும் கணமாக இருந்து பயம் காட்டி கொண்டிருந்த இருளுக்கு, மேலும் ஒரு துணையாகக் காற்றை அனுப்பி வைத்தது போலும். மெதுவாக என்னைத் தழுவிய காற்று இப்போது, மேலும் வேகம் கொண்டு சுழல ஆரம்பித்தது.
சுழல் காற்று சூறாவளியாய் மாறிச் சூழ, அந்தச் சுழலில் சிக்கி கொண்டேன். சுழலுக்கு நடுவில் நின்று கண்களை மூடத் தலை சுற்ற ஆரம்பித்து, மூச்சும் முட்ட ஆரம்பித்தது. சூறைக் காற்று தரையிலிருந்து வான் நோக்கி உயரத் தொடங்கியது. கண்கள் மூடிய எனக்கு இப்போது, அந்தச் சூறை காற்றில் இருந்த ஒரு உருவம் நன்றாக கண்ணுக்குத் தெரிந்தது.
வான் அளவுக்கு உயர்ந்த கருப்பு உருவம். அதன் சடை முடி தலையிலிருந்து கால்வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது.
கோரப் பல், மிரட்டும் இரண்டு பெரிய விழிகள், அடர்ந்த புருவம், கிடா மீசை, கொண்ட அந்த உருவம், தனது வாயை அகல விரித்து என்னை விழுங்க வந்தது. அதன் வாயில் இருந்து உஷ்ண காற்று வர, அந்த வெப்பம் என் உடலை உருக வைப்பதை போல் உணர்ந்த நேரம், வெப்பம் என்னை எரிக்கும் நேரம், தன்னிலை மறந்து அப்படியே மயங்கிச் சரிந்தேன்.
சரியும் அந்நேரம், எனது மூச்சு காற்று மெதுவாக அடங்குவது போல உணர்ந்த நிமிடம் எங்கிருந்தோ வந்தது என் உயரத்தை ஒத்த இன்னொரு உருவம். சட்டெனப் பாய்ந்து என்னை அள்ளிக் கொண்டு, அந்தச் சுழலை விட்டு வெளிய வந்து விழுந்தது.
அந்த உருவத்தின் கைப்பிடி, தற்போது வரை இருந்த வெப்பத்தை நீக்கி, எனது உடலில் ஒரு குளிர்ச்சியை பரவச் செய்தது. அடுத்த சில நொடிகளில் எனது மூச்சு காற்று சீரானது. அதுவரைக்கும் இருந்த பய உணர்வு மெதுவாகக் கரைய ஆரம்பித்தது. குரல் கேட்டது.
"ஏலே... ஏலேய்!" என்ற குரல் இரண்டு மூன்று முறை ஒலித்தது. ஆனால், அது தூரத்தில் ஒலித்தது போல் கேட்க, மெதுவாக மூடிய கண்களைத் திறந்தேன்.
"இங்க எதுக்குல வந்த?” அந்தக் குரல் அவசரமாய் கேட்டது.
நான் ஏதோ பதில் சொல்ல வர, "சரி சரி. அதெல்லாம் பொறவு பேசுவோம். இப்போ எந்திரில. இங்க இருந்து கிளம்பு." அவசரபடுத்தி என்னை அழைத்து வந்தது.
அந்த அவசரத்தில் அதன் குரலில் ஒரு பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. அதே நேரம் எப்படியாவது இந்த இடத்திலிருந்து என்னைக் கடத்தி வெளியே அனுப்பி விடும் அவசரமும் தெரிந்தது. அதிகம் பேச விடாமல், அந்த உருவமும் பேசாமல், என்னை வெளிய இழுத்து வந்தது. இழுத்து வந்த சில நிமிடத்தில் என் வீடு இருக்கும் தெரு முனை அருகில் வந்து நிறுத்தியது.
அப்போது “ம்ம்ம்ம்ம்ம்...” என்ற பயங்கர சத்ததோடு ஒரு உருமு உருமி தனது கோர உருவத்தை முழுமையாகக் காட்டி, அந்தக் கரிய உருவம்மேல் எழும்பியது.
“சீக்கிரம் போல” என்று என்னை அவசரப்படுத்தித் தள்ளிய அந்த உருவம், இப்போது எனக்குக் காட்சிக்குக் கிடைத்தது. இப்போது என் கண்கள் விரிந்தது. அது பயத்திலா, இல்லை ஆச்சர்யத்திலா என்பது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
காரணம், என்னைக் காத்து அழைத்து வந்த அந்த உருவம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முனி அடித்து இறந்து போயிருந்த எனது நண்பனின் உருவம். அதை உணர்ந்து அவனைப் பற்றிக்கொள்ள என் கைகளை நீட்டியபோது, அவனது உருவம் காற்றில் கரைந்தது.