• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
91
பகுதி - 14

யுவனியின் பேச்சைக் கேட்டு ஆதிகேசவன் மனதில் பெரிதாக அடிவாங்கினார். மகளைப் பற்றி எத்தனை நம்பிக்கையாகக் கூறினார் அத்தனையும் தரைமட்டம் செய்து விட்டாளேயென்று.

அவளுக்கு அனுப்பிய மெய்லை பார்த்துவிட்டு அந்தப் பையனை வேண்டாம் என்று அவள் மறுத்தது கூட இந்த காரணத்தால் தானோ என்ற சம்சயம் எழ மகளைக் கூர்ந்து கவனித்தார்.

ரகுவம்சியை பற்றி சொல்லவே தேவையில்லை. அவன் ஒரு பதிலை எதிர்பார்த்து தொடங்கியிருக்க, அதற்கு முற்றிலும் வேறாக யுவனி அவனை காதலிப்பதாகச் சொல்லி முடித்துவிட்டதில் வாயடைத்துப் போனான்.

அவனை மட்டும் சொல்லவில்லையே, அவர்கள் காதலிப்பதாக அல்லவா கூறுகிறாள்! 'அதெப்படி திமிங்கலம்!?' மொமண்ட்டில் ஆடிப் போய் நின்றிருந்தான் ஆடிட்டர்.

யுவனி வீசிய புது வெடிக்குண்டினால் சிறிது நேரம் அங்கே சூழ்ந்திருந்த மௌனமெனும் புகையை, இப்படிச் சொல்லிக் கலைத்தார் ஆதிகேசவன்.

"நான் சொன்ன வார்த்தை தவற மாட்டேன் மிஸ்டர் ரகு. நீங்க கேட்ட மாதிரி என் பொண்ணை கொடுக்க நான் சம்மதிக்கிறேன். சீக்கிரமே நல்லநாள் பார்த்து சொல்றோம்."

என்றவர் 'இத்துடன் செய்திகள் முடிவடைந்தது' என்ற ரீதியில் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்து விறுவிறுவென வெளியேறி விட்டார்.

கணவனை பின்தொடர்ந்து செல்ல விழைந்த ராஜலட்சுமி, மகள்மீது வருத்தமான பார்வையை வீசியபடி
அவளை அழைத்துக் கொண்டு அனைவரையும் விடைபெறும் ரீதியாக பார்வையிட்டுச் சென்றார்.

"உண்மையிலேயே யுவனியும் நீங்களும் லவ் பண்றீங்களா அண்ணா?" ஆர்வமாகக் கேட்ட தங்கையின் கேள்வியில் அதுவரை பேச்சற்று நின்ற ரகு, விழிகளைத் தட்டி அவளிடம் திரும்பினான்.

"அ..அதாவது அவங்களும் நீங்களும் லவ் பண்றீங்களா? ஏன் இத்தனை நாளா சொல்லவே இல்ல?" முதலில் யுவனியை தெரிந்தது போலக் கேட்டவள்,

ரகு கவனிக்காததை உணர்ந்து சட்டென கேள்வியை மாற்றி விட்டாள் மதுரா. தேவநாதனும் ஜெயந்தியும் கூட அவனது பதிலுக்காக பார்த்திருந்தனர்.

"அட ஏம்மா நீ வேற!? அந்தப் பொண்ணையே நான் இப்ப தான் நேர்ல பார்க்கறேன். நான் ஒன்னு நினைச்சா, நடந்தது ஒன்னா போயிடுச்சு." சலித்துக் கொண்டு பதிலளித்தவன்,

ஆதிகேசவனிடம் ஏன் அப்படி சொன்னான் என்பதை விளக்க, மதுராவிற்கு சப்பென்றாக, ஜெயந்தி குழப்பத்தில் இருந்தார்.

தேவநாதன் மட்டும் தற்போது குப்தாவை விடப் பெரிய பணக்கார சம்பந்தம் கிடைத்த குஷியில், யுவனி செய்ததாக ரகு சொன்ன விசயம் கூட பொருட்டாகக் கொள்ளாமல் மனதினுள் குதூகலமாக இருந்தார்.

"சரி விடு ரகு. அதுலேயும் ஒரு நல்லது தானே நடந்திருக்கு. அவ்ளோ பெரிய மனுசன் உங்க ரெண்டு பேரையும் தன்னோட மருமக பிள்ளைகளா ஏத்துக்கிட்டாருல." அவனை சமாதானம் செய்ய முயன்றார்.

அவரை தீவிரமாக முறைத்த ரகு, "வெளாடுறீங்களா பெரியப்பா. இந்த பணக்காரங்கள மட்டும் எப்பவுமே நம்பவே கூடாது. அந்தப் பொண்ணை பார்த்தீங்கள்ல, "

"எவ்வளவு தைரியமா அசால்டா பொய் சொல்லிட்டு போகுதுனு, அடேங்கப்பா! அவங்க சங்காத்தமே நமக்கு வேணாஞ்சாமி." கும்பிடு போட்டு ரகு சொல்ல, மதுரா சோர்ந்து போனாள்.

" அப்ப நீ மட்டும் என்ன செய்த ரகு? உனக்கு சம்பந்தமே இல்லைனு நீ சொல்ற பொண்ணும் நீயும் லவ் பண்றதா தானே சொன்ன? அது பொய் இல்லையா? அப்படினா உண்மையா?" ஜெயந்தியின் கேள்வியில் மாட்டிக் கொண்டு விழித்தான் அவன்.

இதுதான் சமயம் என்று தேவநாதன், "ஆமா, இனிமே நீ பாட்டுக்கு போய் உண்மைய சொல்றேன்னு அவர்ட்ட சொன்னாலும், உன்னைப் பற்றி அவர் என்ன நினைப்பாரு. நம்ம மரியாதையை நாமே கெடுத்துக்க கூடாது. "

"இதை இத்தோட விட்டுடு. அவர்கிட்ட போய் பேசறேன்னு புதுசா எதுவும் குழப்பி வைக்காதே ரகு. ஒருவேளை அந்தப் பொண்ணு உன்னை விரும்புதோ என்னவோ. அதனால நடக்கறது நல்லபடியா நடக்கட்டும்." அவனை அடக்கினார்.

அதன்பிறகு 'உன் தங்கையைத் தேடி வந்த சம்பந்தம் இது, நீதான் தேவையில்லாம பேசி குழப்பத்தை உண்டு பண்ணி இருக்க. அதனால நடப்பதை ஏற்றுக்கொள்' என்று பெரியவர்களின் மிரட்டலான தொடர் புத்திமதியில் ரகுவின் மறுப்புகள் அனைத்தும் மழுங்கிப் போனது.

அங்கே யுவனியுடன் காரில் பயணித்த பெற்றோர் எதுவும் பேசாமல் அமைதியாக வர, அவளுக்குத்தான் ஒருமாதிரியாக இருந்தது.

ட்ரைவர் முன்னிலையில் எதுவும் பேச வேண்டாம் என்று யுவனியும் அமைதி காக்க, வீட்டிற்கு வந்ததும் அவளிடம் பேச விருப்பமில்லாமல் நேராக தங்களது அறைக்குள் சென்று அடைந்து கொண்டார் ஆதிகேசவன்.

ராஜலட்சுமியும் அவ்வாறே சென்றுவிட, தனது அறைக்கு வந்தவள் தலையை கைகளில் தாங்கியபடி கட்டிலின் மேல் அமர்ந்து விட்டாள்.

சிறிது நேரத்தில் கேசவன் வெளியே செல்லும் சத்தம் கேட்டது. அவரிடம் என்னவென்று சொல்வது என யுவனிக்கு பெரும்குழப்பம்.

குப்தாவிடம் பேசியதை ரகு எப்படியோ கண்டு கொண்டான் என்பதையறிந்து அதிர்ந்த யுவனி சட்டென அவன் சொன்னதை ஆமோதித்து விட்டாள்.

ஒருவேளை ரகு சொன்னதை யுவனி இல்லையென மறுத்துக் கூறினால், குப்தாவிடம் பேசிய விசயம் வெளிவரும், யுவாவிற்காகத் தான் அவள் அப்படி செய்தாள் என்று தந்தை கண்டுபிடித்து விடுவார்.

யுவாவின் காதலுக்காக சம்பந்தமே இல்லாத அவர்களது திருமணத்தை இவள் நிறுத்திய விசயம் தங்களது தந்தைக்கு தெரிந்தால், நிலைமை இன்னமும் மோசமாகும் என்பதால் தான் அவ்வாறு கூறிவிட்டாள்.

இப்போது பெற்றவர்களிடம் எப்படி சமாதானம் செய்வது என யோசித்துக் கொண்டே இருந்த யுவனி அப்படியே உறங்கி விட்டாள்.

மாலை வந்த யுவாவிடம் மதுராவை பெண் கேட்டு சென்ற இடத்தில் நடந்த விசயத்தை தாய் முழுதாக கூறிவிட, சகோதரியை தேடியோடி வந்து விட்டான் யுவா.

மாலை எழுந்தவள் ஒரு முடிவிற்கு வந்திருக்க, " ஏன் யுவனி அப்படி சொன்ன? உண்மைய சொல்லி இருக்கலாம்ல, அப்பா ரொம்ப அப்ஸெட் ஆகிட்டாங்களாம். அம்மா சொன்னாங்க." சற்று வருத்தமாகக் கூறினான் யுவா.

தன்னால்தான் அவளுக்கு இந்த நிலை என்ற குற்ற உணர்வு வேறு அவனை குத்த, அதனால் வாடிய யுவாவின் முகத்தைக் கண்டு,

"விட்றா. நம்ம அப்பா தானே. கொஞ்சம் ஆறப்போட்டு நான் பேசி சமாதானம் செய்றேன். எப்படினாலும் எவனையாவது எனக்கு கட்டி வைக்கற ப்ளான்ல தானே அவங்க இருந்தாங்க."

"அது இவனா இருந்துட்டு போகுது. அதுக்கு நீ ஏன்டா இவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருக்க?" அவனது முக வாட்டத்தை பொறுக்காமல் அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள் யுவனி.

அவளது மனம் அவ்வளவு எளிதாக அவனை ஏற்றுக் கொண்டு வார்த்தைகள் இயல்பாக வந்து கொட்டியதில் அவளுக்கே சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இரவு தந்தை வந்ததும் அவரிடம் சென்று சமாதானம் பேச, 'அன்று கேட்டப்பவே சொல்லி இருக்கலாம்ல' என்று குறைபட்டவரிடம், ரகுவின் பணக்காரர்கள் மீதான வெறுப்பை காரணமாகக் காட்டி சமாளித்தாள்.

அவள் பேசிய பேச்சில் மகள் உண்மையாகவே ரகுவை விரும்புகிறாள் போல என உறுதியாக நம்பிய ஆதிகேசவனுக்கு மகள்மீது சற்று மனத்தாங்கல் இருந்தாலும் அவரது செல்ல மகளுக்காக இறங்கி வந்தார்.

யுவனி சொல்லாவிட்டால் என்ன, அடுத்த இருநாட்களில் அவரை சந்தித்த ரகு அன்று அவன் அவ்வாறு சொன்னதற்கான காரணத்தை விளக்கி நடக்கவிருக்கும் திருமணங்களை நிறுத்த முனைந்தான்.

அந்தோ பரிதாபம்! அங்கேயும் அவனது யுக்தி அவனுக்கு எதிராகப் போனது.

ஆதிகேசவனிடம் யுவனி அவனை காதலிப்பதாகச் சொல்லி அவனது திருமணத்தை அவள் நிறுத்தி விட்டாள் என்றானே ஒழிய அன்று மதுராவிற்கும் திருமணம் நடக்கவிருந்த விசயத்தை சொல்லத் தவறி விட்டான்.

அதனால், யுவனி அவனை எந்தளவு காதலித்து இருந்தால், அவனது திருமணத்தை நிறுத்த இந்தளவுக்கு இறங்கி இருப்பாள் என்று மகளது இல்லாத காதலை எண்ணி வருந்தச் செய்தார் கேசவன்.

அதன் விளைவாக அவரும் முடிவாக 'பேசியது பேசியதுதான். எங்க வீட்டு பொண்ணைக் கொடுத்தா உங்க வீட்டு பொண்ணு மதுராவை தர்றதா நீங்க சொல்லிட்டீங்க' என்று கூறி மகளது மனம் விரும்பிய மணம் நடப்பதற்காக அவனிடம் கறாராக பேசினார் கேசவன்.

அதற்கு அவன் மறுக்கவே, ஏனென்று காரணம் கேட்ட யுவனியின் தந்தையிடம், ' நேரடியாக எப்படி அவர்களைப் பற்றியே குறை சொல்ல முடியும்?' எனத் தயங்கிய ரகுவைக் கண்டு,

அவனும் யுவனியை விரும்புகிறான் ஆனால் இந்த அந்தஸ்து பேதத்தால் தான் பின்வாங்குகிறான் என மிகச்சரியாக தவறான முடிவிற்கு வந்தவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார்.

ஆதிகேசவனிடம் ரகு பேசிய விசயம் அறிந்து தேவநாதன் குதிகுதியென குதித்தார். 'இனிமேற்கொண்டு இந்த காரியம் செய்யாதே'என்று அவனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

ஆனால் ஜெயந்தி மட்டும் " அந்தப் பொண்ணை நினைச்சு உனக்கு வெறுப்பா இருக்கா ரகு?" எனக் கேட்க, "வெறுப்புனு இல்ல பெரிம்மா. ஆனா என்னனு சொல்லத் தெரியல." என்ற அவனது பதிலில் அவரும் அமைதியாகி விட்டார்.

அடுத்து வந்த ஒரு மாதத்தில் ஓர் சுபயோக சுபதினத்தில் தன் காதலியின் கழுத்தில் மனம் நிறைந்த காதலுடன் முகம் முழுவதும் மகிழ்வுடன் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கினான் யுவ்ராஜ்.

ரகுவால் காதலியாக சித்தரிக்கப்பட்ட யுவர்ணிதாவின் கழுத்தில், அவன் என்ன நினைக்கிறான் என அவனுக்கே விளங்காத ஒரு மனநிலையில் மங்கல நாணைப் பூட்டி மனைவியாக்கினான் ரகுவம்சி.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top