- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
23
மூன்று நாட்களாக சரியாக தூக்கம் இல்லாதவர்கள் காரிலேயே தூங்கினாலும், அனைவருக்கும் உடல் அசதி குறையாமல் இருந்தது. மறுநாள் காலை பதினெட்டு வருடங்களாகியும் மண்மனம் மாறாத அவர்களின் தாய்மண் அவர்களை வரவேற்றது.
வீட்டு வாசலில் கார் நிற்க, வெற்றிவேல், சரவணன், அபிநயா மூவரும் இறங்கிய நிமிடம், வீட்டிலுள்ள பூக்களின் வாசனையைச் சுமந்து வந்த ஜில்லென்ற காற்று அவர்களை வரவேற்றது. ‘வந்துட்டீங்களா?’ என்று தனலக்ஷ்மி கேட்டது போல் தோன்றிய உணர்வு அவர்களுள் ஓட உடலில் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது.
அவர்களின் வரவிற்காக, ஆள் வைத்து வீடு முழுவதும் சுத்தம் செய்து, பெய்ண்ட் அடித்து புது வீடாக மாற்றியிருந்தார் கேசவன். மாமனாருக்கு நன்றி சொன்ன சரணிடம், ‘வேண்டாம்’ என்று சைகையில் மறுத்தார்.
உள்ளே நுழைந்த மூவரும் மற்றவர்களை மறந்து சென்று நின்ற இடம், தனலக்ஷ்மி விழுந்து இறந்த கிணறு. மண்ணால் மூடிய கிணறு இருந்த இடத்தில் தன்னால் தோன்றிய வேம்பு, விருட்சமாக, சுயம்புவாக அவர்களின் வரவை ரசிப்பது போல் நின்றிருந்தது. மூவரும் அந்த மரத்திற்கு அடியில் மூன்று விதமான மனநிலையில் அமர்ந்திருந்தார்கள்.
அபிநயாவோ, ‘அம்மா என்னாலதானம்மா உங்களுக்கு இந்த நிலைமை? இப்படி ஒரு பொண்ணு உங்களுக்குப் பிறக்காமலே இருந்திருக்கலாம்மா. வாழவேண்டிய வயசுல என்னோட விளையாட்டுத்தனத்தால உங்க உயிர் போயிருச்சேம்மா. ஐம் சாரிம்மா. ஐம் சாரி. உங்க பொண்ணு எப்பவும் உங்க பொண்ணா, உங்க அறிவுரைகளை மதிச்ச, நீங்க ஆசைப்பட்ட பெண்ணாகத்தான்மா வளர்ந்திருக்கேன்’ என்று மௌனமாக கண்ணீர் வடித்தவள் தலையைத் தடவிச்சென்ற காற்று, தன்னை ஆசீர்வதித்தது போல் தோன்ற, அத்தனை வருடமாக மனதை அழுத்திய பாரங்கள் எல்லாம் மாயமாய் மறைந்தது போல் தோன்றியது அவளுக்கு.
சரவணனோ, “நான் வந்துட்டேன்மா. பெரியவனானதும் வருவேன்னு சொன்னேன்லம்மா. வந்துட்டேன் பார்த்தீங்களா. உங்களோட தினமும் பேசினாலும், நீங்க வாழ்ந்த வீட்ல உங்களோட பேசினா, நேர்ல பேசின மாதிரி இருக்கும்மா. அதுவும் உங்கள் உயிரான தம்பி பொண்ணை கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வந்திருக்கேன்மா. இது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு தெரியும்மா. எங்க வாழ்க்கையை எங்கேயோ ஆரம்பிக்க மனசு இடம் தரலம்மா. நீங்க வாழ்ந்த, வாழ்ந்துட்டு இருக்கிற இந்த வீட்ல தான்மா என்னோட மணவாழ்க்கை ஆரம்பிக்கணும். உங்க ஆசீர்வாதத்தோட’ என்றான்.
யாரோ தொடுவது போல் தோன்ற, “அம்மா” என்றவன் முன் மனைவி நிற்க, “வாங்கங்க. அத்தைகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்” என்றாள்.
இரண்டு தம்பதிகளும் வேம்பின் அடியில் விழுந்து ஆசிகள் வாங்கி, வெற்றிவேலைத் தனியே விட்டு வீட்டிற்குள் சென்றார்கள்.
“நான் வந்துட்டேன் தனம். நான் வந்துட்டேன். என்னோட பொறுப்பையெல்லாம் நீ ஆசைப்பட்ட மாதிரி சரியா செஞ்சி முடிச்சிட்டேன். இனி என் வாழ்வு இங்கதான். உன்னைத் தேடி வருவேன்னு சொன்னதுபோல் வந்துட்டேன் பாரு. எப்பவும் உன்னைவிட்டுப் போகமாட்டேன். மனம் முழுக்க திருப்தியா இருக்கு தனம். என்னோட இந்த தைரியம் உன்னால, உன் காதலால வந்தது தனம். ஆம். நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றும் என்றென்னும்!”
அவர்களை சிறிது நேரம் தனிமையில் விட்ட மற்றவர்கள், பின் அவர்களைத் தங்களின் பேச்சில் இழுத்தார்கள்.
“அப்பா! இந்த கீத்துக்கு செந்தில்ன்ற பேர்ல மாப்பிள்ளை வேண்டாமாம்பா” என்று ஆராதனா சொல்ல, வெற்றிவேல் முதற்கொண்டு அனைவரும் விழித்தார்கள்.
“என்னமா கீர்த்தி, என் அக்கா இப்படிச் சொல்றா? அந்தப் பையனைப் பிடிக்கலையா?” என்ற கேசவன், “சரிம்மா உனக்குப் பிடிக்கலைன்னா என்ன பண்றது. விருப்பமில்லாத கல்யாணம் செய்து வைக்கக் கூடாதே. வேற பையன் பார்க்கலாம்மா?” என்றார்.
“அச்சோ! அப்பா நான் எப்ப சொன்னேன். எனக்கு பிடிச்சிருக்குப்பா. ஆனாலும், பெயர் கொஞ்சம் இடிக்குது” என்று உளற,
“அப்ப இப்படிப் பண்ணலாமா பாரு கீர்த்தி. உன்னோட பெயரை கவுண்டமணின்னு மாத்திக்கோ. ப்ராப்ளம் சால்வ்ட்” என்றாள் அபிநயா.
“ஐயோடா! அதுக்கு செந்திலே பரவாயில்லை. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்ற அவளது பாவனையில் அனைவரும் சிரித்தார்கள்.
வெற்றிவேல், கணேஷிடம் திரும்பி, “என்னோட பிசினஸை நீ பார்த்துக்க மாப்ள. இனி இந்த ஊரைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்” என்றார்.
“என்ன மச்சான் இப்படி திடுதிப்புன்னு சொல்றீங்க? நீங்க இல்லாம நான் எந்த விஷயத்துல மச்சான் இறங்கியிருக்கேன்?”
“அதான் மாப்ள என்னைச் சார்ந்து இருக்காம, என்னோட பிசினஸை நீயே தனியா பார்த்துக்கோ. ரொம்ப அவசியம் ஏற்பட்டா மட்டும் நான் அங்க வருவேன். இல்லன்னா, நீங்க இங்க வாங்க. எதாவது பிரச்சனைனா தம்பிகிட்டச் சொல்லு. தம்பி பார்த்துப்பான்.”
மறுக்க வந்த கணேஷைத் தடுத்து, “நீங்க இந்த முடிவுதான் எடுப்பீங்கன்னு தெரியும்ப்பா. நான் உங்களைக் கட்டாயப்படுத்தமாட்டேன். எனக்காகத்தான் இந்த ஊரை இத்தனை வருஷமா பிரிஞ்சிருந்தீங்க. இனி உங்க விருப்பப்படி இங்க இருங்கப்பா” என்ற மகனை சந்தோஷத்தில் கட்டிக்கொண்டார் வெற்றிவேல்.
“ஆனா, ஒண்ணு மாப்ள என்னோட தனத்தோட பேரை மட்டும் எப்பவும் மாத்திராத” என்றார்.
“என்ன மச்சான் நீங்க? அது எங்க அக்கா பேர் மச்சான். நான் எப்படி மாத்துவேன். என் பையன் தனியா ஹாஸ்பிடலே ஆரம்பிச்சாலும் அதற்கும் அக்கா பேர்தான் மச்சான் வைப்பேன்.”
“ரொம்ப சந்தோஷம் மாப்ள” என்றார் வெற்றிவேல்.
முதலிரவு அறையில், “இப்பத்தான் அபி மனசு பாரம் குறைஞ்சி நிம்மதியா இருக்கு. என்னால அம்மா இறந்துட்டாங்கன்ற அதிர்ச்சியில இருந்தேன். இங்க வந்து அங்க உட்கார்ந்திருக்கும் போது, எங்கம்மாவே வந்து என்னை ஆசீர்வதிச்ச மாதிரி ஒரு ஃபீலிங். வாய் பேச முடியாம கல்யாணம் பண்ணினா, எங்க என்னோட இயலாமை கோவமா வந்து மத்தவங்களைப் பாதிச்சிருமோன்னு தான், மேரேஜ் வேண்டாம்னு சொன்னேன். ஆனா, என்ன மாயமோ செஞ்சி என்னை மயக்கிட்டீங்க. தேங்க்ஸ் அபி” என்றாள்.
“எதுக்கு தேங்க்ஸ்?”
“அத்தை சொன்னாங்க. நீங்க எனக்காக, என்னைக் குணப்படுத்தினால் தான் குற்றவுணர்ச்சியில்லாம நிம்மதியா இருப்பா. அதனால, இன்னும் ஒரு வருஷம் கழிச்சித்தான் கல்யாணம்னு சொல்லிருந்தீங்களாம். நான் ரொம்ப லக்கி அபி நீங்க கிடைக்க. அத்தை இன்னொன்னும் சொன்னாங்க. அதென்ன அபிஷேக், அசோக்னு ரெண்டு பெயர் உங்களுக்கு?”
“அதுவாடா அபி! என் பேரை வச்சி எல்லாரும் என்னை பொண்ணு பேரு வச்சிருக்கடான்னு கிண்டல் பண்ணுவாங்க. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சதும், அபின்னு கூப்பிட்டு பசங்க கிண்டல் அதிகமாகிருச்சி… அதனால அம்மாகிட்டச் சொல்லி பெயரை மாத்திக்கிட்டேன். யாரையும் அபிஷேக்னு கூப்பிட விடலை, உன்னைத் தவிர” என்றான்.
“அப்ப நாங்க இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே மாத்திட்டீங்களா?”
“ஆமா. எட்டு வயசுலயே மாத்திக்கிட்டேன்.”
“அப்ப நான் வந்தப்ப ஏன் உங்க பேரை, ஐ மீன் அசோக் பேரைச் சொல்லாம அபிஷேக்னு சொன்னீங்க?”
“எனக்கு சொல்லத் தெரியலை அபி. அம்மாவைக் கூட அபின்னு கூப்பிட நான் அலோ பண்ணலை. ஆனா, உன்கிட்ட எப்படி அந்தப் பெயரைச் சொல்லச் சொன்னேன்னு அப்பத் தெரியலடா. ஆனா, இப்பத் தெரியுது. அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடுற உரிமை உனக்கு மட்டும்தான் இருக்குன்னு.”
அவனைக் கட்டிக்கொண்டு “ஐ லவ் யூ அபி” என்றாள் அபிநயா.
“லவ் யூ டூ அபி” என்றவன் அவர்களின் வாழ்வைத் துவங்கும் வேலையில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றான்.