• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
32



சற்று நேரத்திற்கெல்லாம் அனைவரிடமும் பேசவேண்டுமென்று இளங்கதிர் சொல்ல, அனைவரின் கவனமும் அவனிடம். அன்புவினருகில் ஜெயராம் பெண்கள் அமர்ந்திருக்க, அவர்களிடம் சகஜமாக பேசியபடியிருந்த அன்புவை ஒரு பார்வை பார்த்துத் தமிழரசியிடம் பேச ஆரம்பித்தான் கதிர்.

“உங்களையும், செல்வரசி அத்தை குடும்பத்தையும் ஒரேயிடத்துல இருக்கணும்னு சொல்ல நினைச்சிருந்தேன். நீங்களே அதைச் செய்து என் அத்தைன்றதை நிரூபிச்சிட்டீங்க.”

“நீ ஏன் அப்படி நினைச்ச இளா?”

“அவங்களுக்கு ஆண் துணையில்ல அத்தை. அன்பு அங்கயிருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும். பிரியாக்கா பொண்ணுங்களுக்கும் பாதுகாப்பு. செல்வரசி அத்தை, புருஷனும் பிள்ளையும் யார் யார்கிட்ட என்னென்ன பகையைச் சம்பாதிச்சிருக்காங்களோ. இவங்க தனியாயிருந்தா பிரச்சனை பண்றவங்க ஈஸியா வந்து கலவரம் பண்ணுவாங்க. இதுவே நீங்க அங்கயிருந்தா வீட்டு வாசல்ல கூட எவனும் கால் வைக்கமாட்டான். அந்தளவு தைரியம் யாருக்கும் வராது.”

தானும் அதைத்தான் நினைத்ததாய் அவர் புன்னகைத்தார்.

“அப்புறம் நிஷா... சரண்யா, ரத்தினம் மாமா, பத்மினி அத்தை, காமாட்சி சித்தி எல்லாரும் இந்த வீட்டுலதான் இருக்கப்போறீங்க” என்றான்.

அனைவரும் ஒட்டுமொத்தமாய் மறுக்க, ரத்தினம் மட்டும், “மகன் மருமகள் இங்கேயே இருக்கட்டும். எங்களோடது சொந்த வீடு. உழைக்கும் தெம்பு இருக்கிறவரை அங்கே இருக்கிறோம். முடியாத பட்சத்துல என் பையனைத்தேடி வருவோம்” என்றார்.

ஒரு அளவிற்கு மேல் அவரின் தன்மானத்தை உரச மனமில்லை அவர்களுக்கு. அதையே காமாட்சியும் சொல்ல, இந்த முறை திரு குறுக்கிட்டாள்.

“அத்தை அங்க தோட்டத்தைப் பார்க்க ஒரு குடும்பத்தை நம்ம வீட்லயே குடிவச்சிருவோம். வாரத்துக்கு ஒருநாள்... ஏன் நடுவுல கூட போய் பார்த்துக்கோங்க. கணக்கு வழக்கு சரியில்ல தெரிஞ்சா உடனே ஆள் மாத்திரலாம். மீறி போரடிச்சா இங்க வீட்டுக்கு முன்னாலயும் பின்னாலயும் நிறைய இடமிருக்கு. தோட்டமா போட்டுத்தள்ளுங்க யார் தடுத்தா.”

“மதுரையில் தண்ணீர் பஞ்சம் ஜாஸ்தி மருமகளே?”

“அதை உங்க பையன் பார்த்துப்பாங்க.”

“அதுசரி. உங்களை விட்டுட்டுப் பேசுறீங்க?” என்ற நிஷாந்தின் கேள்விக்கு,

மனைவியை ஒரு பார்வை பார்த்து அவளின் புன்னகை கொடுத்த தைரியத்தில், “நாங்க எப்பவும், என் அப்பா அம்மா கூடதான். ஹைதராபாத்தான் எங்களுக்கு நிரந்தரம். நேரம் கிடைக்கிறப்ப இங்க வந்து லீவை நல்லா என்ஜாய் பண்ணிட்டுப் போவோம். வீடுன்னு பார்த்தா திருமங்கலத்துல அப்பாவோட அப்பா சொத்து தாத்தாவோட வீடுன்னு இருக்கு. இந்த வீட்டையும் எந்த காலத்திலும் விற்கமாட்டேன். எனக்கு எல்லாமா நீங்கயிருக்கீங்க. இதுக்கு மேல என்ன வேணும்!”

‘என்னை ஏன் எதிலும் சேர்க்கவில்லை’ என நினைத்த கயல், ‘இல்லை என் அண்ணன் விடமாட்டான்’ என்ற நம்பிக்கையில் அமைதிகாத்தாள்.

“கம்பெனி பற்றி அத்தையும், நானும் ஹாஸ்பிடல்ல வச்சே பேசி முடிச்சிட்டோம். அப்பாவோடதும் மாமாவோடதும் ஓகேன்ற அளவுக்குதான் போயிட்டிருக்கு. அதுல வர்ற லாபத்தைதான் ஜெயராம் அரசியலுக்கு செலவழிச்சிருக்கான். சில இடங்களும் வாங்கிருக்கான். அதே டைம் இதை வச்சிதான் லாபம்ன்ற பட்சத்துல அப்பா காலத்திலிருந்த சிலர் மூலமா ஓரளவு நல்லாவே ரன் பண்ணியிருக்கான். அன்பு, நிஷாந்த், பிரகாஷ் மூணுபேரையும் அதுல பார்ட்னராக்கி...”

“சாரி இளா” என இடையிட்ட பிரகாஷ், “உங்க சொத்து பணம் தொழில் சம்பந்தப்பட்ட எதிலும் என்னைச் சேர்க்காத” என்றான் அழுத்தமாய்.

சில நொடி தயங்கி, “சரி பிரகாஷ். அப்ப மூணாவதா, பிரியா அக்காவை பார்ட்னரா போட்டு ஒரு மாசம் ட்ரெய்னிங் கொடுக்கிறோம். நிஷா, சரண்யாவுக்கு அனுபவமிருக்கு. அன்பு, பிரியாக்கா ரெண்டு பேருக்கும் ட்ரெய்னிங் கொடுக்க ஒன் மன்த் ஓகேதான பிரகாஷ்? இதுல உன் சுயம் அடிபடல. உன்கிட்ட நான்தான் ஹெல்ப் கேட்கிறேன்.”

“இளா இப்படிப் பேசாத. என் குடும்பத்துக்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.

“ம்... குட். அப்பா வேற வழியில்ல நீங்க ஒன் மன்த் தனியாதான் கம்பெனியை பார்த்துக்கணும். எப்படியும் நான் அங்கயில்லன்னா அம்மா வரமாட்டாங்க. என்ன தாயே! நான் உங்களைக் கேட்காம சொல்றேன். நீங்க அப்பா கூட இருக்கீங்களா? சாப்பிட கஷ்டப்படுவாங்க” என்றான் யோசனையாக.

“ராஜா ஏன்டா நான் உன்னோடதான் இருப்பேன். வேணும்னா வாரத்துல இரண்டு நாள் ஹைதராபாத் போயிட்டு வர்றேன்.”

“சிவா” என்று குரு பாவமாக முகம் வைக்க...

“உன் அப்பாவைப் பார்த்தாலும் பாவமாயிருக்குடா மகனே. ப்ச்... இருந்தாலும் ஒரு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கட்டும்” என்றார் அசராமல்.

“ஹா..ஹா இதுதான் என் அம்மான்றது. நீ என்னோடவே இரும்மா. அப்பா நீ தனியா என்ஜாய் பண்ணுப்பா. நாங்க வந்த பிறகு...”

“நானும் என் மருமகளும் சேர்ந்து உங்களை ஓடஓட விரட்டுவோம்” என்று மருமகளிடம் ஹைபை போட்டார்.

கதிர் மனைவியைப் பார்த்த பார்வையில், “இல்ல மாமா. நான் அத்தானுக்குத்தான் சப்போர்ட்” என்றாள் வேகமாக.

“இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். நீ காதல் மயக்கத்துல உளர்ற மருமகளே” என்றார் குற்றம்சாட்டும் குரலோடு.

“அப்பா.. உங்க பொண்ணு நான் இருக்கும்போது எதுக்குக் கவலை? நம்ம கூட்டணி போதும்ப்பா” என்றாள் கயல்விழி.

“சிவா கேட்டுக்கோ. பொண்ணுங்க எப்பவும் அப்பா செல்லம்தான்” என்றார் கயலைப் பார்த்து சிரித்தபடி.

“பிரகாஷ் நீ ஏதோ சொல்ல வந்தியே என்ன? நான் அங்க உள்ள கம்பெனியை இங்க நம்மளோட ஜாய்ண்ட் பண்ணிட்டு, இங்க வந்து செட்டிலாகச் சொல்லலாம்னு நினைச்சேன்.”

“சாரி இளா. நான் தப்பா ஒரு ப்ளான் போட்டுட்டேன்” என்று கயலைப் பார்க்க, அவளோ வேறு புறம் பார்த்தாள்.

“நான் நினைச்ச எதுவும் நடக்கல இளா. சின்ன வயசுல அம்மா கூடவே இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அம்மா இது உனக்கு ஏத்த இடமில்ல. நீ நல்லா வளரணும்னா நான் வளர்ந்த இடத்துக்குப் போன்னு அனுப்பிட்டாங்க” என்றதும் செல்வரசி கண்கலங்க, அவரின் கண்ணீர் துடைத்து, “என் நல்லதுக்குத்தானம்மா விடுங்க” என்றான் அனுசரணையாக.

“அப்புறம் படிச்சி முடிச்சி இங்க வரலாம்னு பார்த்தா, வீட்ல நடக்கிற அநியாயத்தைப் பார்த்து கேள்வி கேட்பேன்... அதைவிட பெரியப்பா, மாமா குடும்பம்லாம் எங்கேன்னு கேட்டு, உண்மை தெரிஞ்சிட்டா பிரச்சனையாகிடக் கூடாதுன்னு பயந்து அங்கயே வேலை பார்க்க சொல்லிட்டாங்க. போன வருஷம் வரைக்கும் உங்களுக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. தெரிய விடல அம்மா. நானும் சில வருட வேலைக்குப் பின்னே, அங்கேயே ப்ரண்ட் துணையோட சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சி கொஞ்சம் தடுமாறினாலும் இப்ப சக்சஸ்புல்லா போயிட்டிருக்கு.”

“அம்மா மூணு வருஷமா கல்யாணம் பண்ணிக்கக் கேட்டும் தள்ளிப்போட்டுட்டு வந்த என்னால, ஒரு பொண்ணோட போட்டோவைப் பார்த்ததும் இவளைக் கல்யாணம் பண்ணிக்கோடா, நம்மளால அவள் நிறைய இழந்துட்டா. அவள்மேல தூசுபடாம பாதுகாப்பா பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்புன்னு சொல்லி சத்தியம் வாங்கிக்கிட்டாங்க” எனும்போது அவன் குரல் கரகரத்தது.

கயலின் கண்களிலோ கண்ணீர்.

“இது நடந்தது போன வருஷம். அன்னையிலிருந்து அந்தப் பொண்ணு என் பாதுகாப்புலதான் இருக்கிறா. அம்மாவுக்காகச் சம்மதிச்சதால முதல்ல பெருசா ஆர்வம்லாம் கிடையாது. ஆனா, சமீபமா அவள்தான்... அவள் மட்டும்தான் எனக்கு எல்லாம்னு தோண ஆரம்பிச்சது. அவளை சந்தோஷமா வச்சிக்கணும். எதுக்காகவும் கண்கலங்க விடக்கூடாதுன்றதுல தெளிவாயிருந்தேன். அம்மாவுக்கும் அவளுக்குமான பாஸ்போர்ட் கூட ரெடி பண்ணிட்டேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்குவாளா தெரியாது. ஏதோ ஒரு நம்பிக்கையில் எடுத்துட்டேன். இப்ப அதுக்கு அவசியமில்லைன்னு தெரிஞ்சிருச்சி.”

“எப்படி வந்தேனோ அப்படியே...” சட்டென்று குரல் அடைபட தொண்டையைச் சரிசெய்து, “அம்மாவைக் கூட்டிட்டுப் போயிரலாம்தான். அண்ணி குழந்தைங்க இங்க தனியா இருக்கிறப்ப, அம்மாவைக் கூட்டிட்டுப் போக முடியாது. அது தப்பும் கூட. நீங்கள்லாம் அவங்களை நல்லா பார்த்துப்பீங்க தெரியும். அந்த தைரியத்துலதான் போறேன். திரும்பி இந்தியா வரமாட்டேன்” என்று அழுத்தமாய் சொல்லி எழுந்தவன், வேகமாக ஒரு அறைக்குள் நுழைந்து அதுவரை அடக்கியிருந்த துக்கத்தை கண்ணீராய் வெளியிட்டான்.

அதைக் கேட்டிருந்த அனைவருக்கும் மனம் கலங்கியது. சம்பந்தப்பட்டவளோ விக்கித்து அமர்ந்திருந்தாள். அவனின் கலங்கிய கண்கள் அவளை ஏதோ செய்ததுதான்.’ அதற்கு தான் என்ன செய்வது? தான் எதுவும் செய்யவில்லை’ என்ற எண்ணமே அவளுக்கு.

“ஐயோ! நானே என் பையன் வாழ்க்கையைக் கெடுத்துட்டேனே. நடக்காதுன்னு தெரிஞ்சும் என் பிள்ளைகிட்ட... இனிமேலாவது என்னோட வச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்ப என் ஆசையும் நிறைவேறல. அவனோட ஆசையும் இல்லாமலே போச்சிது. அவன் நிம்மதியைக் கெடுத்த பாவி நான்” என கதறி அழுதவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை யாராலும்.

கயலுக்குள் முதல்முறையாக குற்றவுணர்வு எழ, அழுபவரை வெறித்தபடி பார்த்திருக்க கண்களில் அவளறியாமல் கண்ணீர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
தங்கையின் அழுகையைத் தடுக்க வழியில்லாது மருமகளிடம் வந்த தமிழரசி, “ஏன் கயல் அழுற?” என்றார்.

“நான் எதுவும் செய்யல அத்தை. எனக்கு அப்ப யார்னே தெரியாது. தெரியாதப்பவே அக்செப்ட் பண்ணிக்கல. தெரிஞ்சி எப்படி அத்தை. நிஜமா இதுக்கு நான் பொறுப்பில்ல அத்தை. என்னால ஒருத்தர் வாழ்ந்ததா இருக்கணுமே தவிர வாழ்க்கையே இல்லாமல் போனதா இருக்கக்கூடாது. அவங்ககிட்டப் பேசி நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருங்க. ப்ளீஸ் அத்தை” என்றாள் கதறலாக.

“ஏன் நீ நல்ல பெண்ணில்லையா? தனக்கு எல்லாமே நீதான்னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டுப் போறான். இதைவிட நல்ல பையன் தேடினாலும் கிடைக்காது கயல். இன்னுமா அவனை எதிரியா பார்க்கிற? அவனோட அன்பு புரியலையா?”

“அச்சோ புரியுது அத்தை. ஆனா, ஏத்துக்கதான் முடியல. சப்போஸ் கல்யாணம் முடிஞ்சி, ஏதோ ஒரு சூழ்நிலையில நானே வார்த்தையால நோகடிச்சிட்டா ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகமாகிராதா? அதுக்கு இது பரவாயில்லைதான?”

“அப்படி நடக்க வாய்ப்பேயில்ல கயல். எங்க நோகடிச்சிருவோமோன்னு நீயே உன்னை கட்டுப்படுத்திக்குவ.”

“அதுவும் ஒருவகையில் நடிப்பு மாதிரிதான அத்தை. ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சி யோசிச்சி பேசினா, கணவன் மனைவிக்குள்ள உள்ள இயல்பு பாதிக்கப்படாதா? நார்மல் லைப் இல்லன்னாலே உறவுல ஒரு கசப்பு வந்திருமே!”

“ரொம்ப யோசிக்கிற கயல். சரி உனக்காகவோ, அவனுக்காகவோ வேண்டாம். எனக்காக என் பையனை கல்யாணம் பண்ணிக்கோ கயல்.” தங்கை மகன் தான் வளர்த்த பெண்ணை நிம்மதியாக வாழவைப்பான் என்ற நம்பிக்கை அவருக்கு.

“அத்தை!” அதிர்வுடன் அவரைக் காண...

“என் தங்கச்சி பையன்.. என் பையன் இல்லையா? அறிவு உயிரோடயிருந்து உன்னைத்தான் கட்டிப்பேன்னு சொன்னா மறுப்பியா?” இல்லையென்ற மருமகளின் தலையசைவில், “இப்ப பிரகாஷ்தான் என் மூத்த பையன். இப்ப சொல்லு என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”

தன்னை நேருக்கு நேர் கேட்டு பதிலுக்காக நின்றிருந்த தமிழரசியைப் பார்த்திருந்தவளுக்கு, தன்னை வளர்த்த நன்றிக்காக செய்தால் தப்பில்லையென்று தோன்றியது. தன் இத்தனை வருடத்து வாழ்க்கை அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அவளுள் வந்துபோனது.

காட்டிலிருந்து தப்பித்து தன்னைக் கூட்டி வந்தவர், கழுத்திலிருந்த நகையை விற்று வாடிப்பட்டியில் வீடு பிடித்து, இருவரின் படிப்பு சான்றிதழையும் டூப்ளிகேட் வாங்கி வந்து, அங்கிருந்த பள்ளியில் டீச்சர் வேலைக்குச் சேர்ந்து, அதே பள்ளியில் தன்னையும் படிக்க வைத்து ஆளாக்கியதென்பது என்றும் அழியாதது. தன் பையனின் உயிரைக் கூட பொருட்படுத்தாது தன்னைக் காத்த தெய்வத்திற்கான சமர்ப்பணமாய் செய்யத் தோன்றியது. செய் நன்றி கொன்ற பாவம் தனக்கு வேண்டாமென்று முடிவெடுத்தவளாய் “ம்... சரிங்கத்தை சம்மதிக்கிறேன்” என்றாள்.

இளையவர்களின் ஹோவென்ற கூக்குரல்கள் அவ்விடத்தை சந்தோஷமாய் ஆட்கொள்ள, கயலிடம் வந்த செல்வரசி “ரொம்ப நன்றிமா” என்று கையெடுத்துக் கும்பிட்டார்..

“அச்சோ! ஏன் அத்தை என்கிட்ட? நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். சாரி” என்றதும் மருமகளின் உச்சியில் முத்தமிட்டு “நல்லாயிருமா” என்றார் மனதார.

அதிரடி நடவடிக்கையாக உடனே ஜோதிடருக்கு போன் செய்து, இருவரின் பெயர் சொல்லி பொருத்தம் பார்த்து, திருமணத்திற்கு நாள் குறிக்க. இருபது நாட்களில் இருந்த முகூர்த்தம் முடிவு செய்யப்பட்டது.

கயலுக்குள் சில உறுத்தல்கள் இருந்தபோதும் மற்றவர்களின் வாழ்த்தை இயல்பாக ஏற்றுக்கொண்டாள்.

வெகுநேரமாகியும் யார் கூப்பிட்டும் பிரகாஷ் வெளியே வரவில்லை. என்னை தொந்தரவு பண்ணாதீங்க என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட, வேறு வழியில்லாமல் கயலிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியாமல் சம்மதித்து, பழையவற்றை எல்லாம் குப்பையாக ஒதுக்கி விட்டெறிந்து தன்னை ஆசுவாசப்படுத்தி, தெளிவோடு அவனைக் காணச் சென்றாள்.

இங்கோ “ஸ்வீட் செய்யுங்க. இந்த லைட் செட்டிங் எல்லாம் கல்யாணம் வரை அப்படியே இருக்கட்டும். சமைக்கிறவங்களையும் அனுப்ப வேண்டாம்” என்று சந்தோஷத்தில் அவரவர்கென்று தனியாக வேலைகளைப் பகிர ஆரம்பித்தார்கள். அத்துடன் அன்பு பிரியாவிற்கான ட்ரெயினிங்கையும்.

அறைக்கதவைத் தட்டும் சத்தத்தில் எரிச்சல் தாளாது, “ப்ளீஸ் என்னைத் தனியா விடுங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் போறது உறுதிதான்” என்றான் கத்தலாக.

“அப்ப நான் வேண்டாமா? நானில்லாம தனியாவே இருந்துப்பீங்களா? அப்ப சரி இப்பவே செல்வரசி அத்தைகிட்டச் சொல்லிரு...” முடிக்கும் முன் பட்டென்று கதவு திறக்க... “உள்ள வரலாமா?” என்றாள் சிரித்தபடி.

“க..ய..ல் நீ இங்க... என்னைப் பார்த்து நீ சிரிச்சியா?” என்றான் நம்பயியலாது.

“ஏன் உள்ள வேற யாராவது இருக்காங்களா?” புன்னகை மாறாமல் கேட்க,

“ஹேய் உள்ள வா” என்றான் புன்னகை முகமாக.

அவனின் அழுதுத் துடைத்த கண்களைக் கண்டவள், “அழுதீங்களா?” என்றாள்.

“ம்... கொஞ்ச நாளா அடக்கி வச்ச பாரம் தாங்க முடியல. அதான்..”

“சோ என்னையும் அந்த கண்ணீரோட இறக்கிட்டீங்க?”

“அது மட்டும் எப்பவும் முடியாது கயல். என் ஆயுளுக்கும் நீ இங்கதான் இருப்ப” என்று நெஞ்சைத் தொட்டு காண்பித்தான்.

சில நொடி மௌனம் அவளிடம்.

“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கலன்னாலும் சாதாரணமா பேசு கயல். சின்ன வயசுல நான் இங்க இருக்கிற கொஞ்ச நாள்ல, உங்களோடதான் நாள் முழுக்க இருப்பேன். அந்த சந்தோஷம் திரும்ப வரணும் கயல்.”

“வரும்னு நம்புறீங்களா?”

“அதுக்குதான் முயற்சி செய்தேன். ஆனா, இப்ப முடியாம நிற்கிறேன்.”

“என்னை உங்களுக்கு ஏன் பிடிச்சது? உங்கம்மா தாண்டி உங்களுக்குன்னு மட்டும்?”

“மங்கை கல்யாணத்தப்ப கோவில்ல உன் அண்ணனையும் குரு மாமாவையும் நேருக்கு நேரா கொஞ்சம் கிண்டலோட கலந்து நீ பேசுன பேச்சில் அசந்தவன்தான். எப்பவும் உன்கிட்டயிருந்த சோகம் அப்ப கிடையாது. மே பீ உன் அண்ணன் கிடைச்சிட்டான்ற தெளிவா இருக்கலாம். உன்னோட சின்ன வயசு கேரக்டர் திரும்பினதைப் பார்த்தேன். அப்பதான் உன்னைப் பெண்ணாகப் பார்த்து, அதே பெண்ணால நான் ஈர்க்கப்பட்டது.”

அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் கயல். அவன் முகத்திலுள்ள பரவசம், ரசனை அவன்மேல் அவ்வப்பொழுது ஏற்பட்ட தானறியாத அன்பை உரசிப்பார்த்ததோ! ஏனோ புதிதாக ஒரு பார்வை. ஒரு ஆர்வம் அவன்மேல்.

அதை உணர்ந்தானோ பிரகாஷ். “நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கயல். பிடிச்சதுன்னா சேர்ந்து வாழலாம்” என்றான் ஒரு எதிர்பார்ப்புடன்.

“பிடிக்கலன்னா?” அவள் கேள்வியில் ஒரு கிண்டல் தொணி.

“பிடிக்கலன்னா பிடிக்கிறதுக்காக சேர்ந்து வாழலாம் கயல்.”

சட்டென்ற சிரிப்பு அவளிடம். “ம்... நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“கயல் நிஜமாவா?” நம்பமுடியவில்லை பிரகாஷால். திரும்பத் திரும்பக் கேட்டான்.

“வெளிய தேதி குறிச்சி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சாச்சி.”

ஒரு பரவசம் மனசுக்குள் எழுந்தாலும் அதை அடக்கி “நீ சம்மதிச்சிட்டியா?” என்றான்.

அவனை முறைத்து “நான் சம்மதிச்சதாலதான் நடக்குது” என்றாள் அழுத்தமாக.

“ஹேய் தேங்க்ஸ் கயல்!” ஆர்வத்தில் அவளை கட்டியணைக்க வந்தவன், அவளின் விலகல் உணர்ந்து, “சாரி சந்தோஷத்துல...”

அவனின் வழிசலில், “ஓவர் சந்தோஷம் வேண்டாம். எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு?” என்றாள்.

‘கண்டிஷனா? மெய்ன் ஸ்விட்ஜில் கை வச்சிருவாளோ? கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே கைப்புள்ள...’ உள்ளேயிருந்த வடிவேலு உருண்டு புரண்டு அழ... வெளியே, “சொல்லு கயல்? நீ எனக்குக் கிடைச்சதே பெருசு. என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன்” என்றான் நல்லவனாய்.

அவனின் முகபாவனையைப் பார்த்திருந்தவளுக்கு சிரிப்பு வர, அதை அடக்கி, “நாம சேர்ந்து வாழ எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். கொஞ்ச நாள் கழிச்சி ஏன் இன்னும் குழந்தை இல்லன்னு யாராவது கேட்டாங்கன்னா, பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல.”

“அப்ப நான் மட்டும் கேட்கிறேன் கயல்.” அவளின் முறைப்பில் அமைதியாகி, “கட்டாயத்துக்காகச் சம்மதிச்சியா கயல்? உன்னைக் கஷ்டப்படுத்தி எதுவும் செய்யவேண்டாம் கயல்.”

‘பார்றா புள்ள ஆயிரத்தெட்டு கயல் போடுது’ என மனதில் நினைத்து, “கட்டாயப்படுத்தினாங்கதான். இருந்தாலும் எனக்கு கொஞ்சமா உங்களைப் பிடிச்சிருந்ததால எஸ் சொல்லிட்டேன். முடிஞ்சளவு உங்களோட இயல்பா வாழ முயற்சி செய்றேன். ரசாயன மாற்றம் சில நாட்கள்ல கூட நடக்கலாம்” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“தேங்க்ஸ் கயல்” என்று தன் கழுத்திலிருந்த செயினை அவளுக்குப் போட்டு, “இது என் சொந்த சம்பாத்தியம் கயல். இப்பன்னு இல்ல எப்பவுமே என் சுய சம்பாத்தியம் மட்டும்தான் நம்ம குடும்பத்துக்கு. உங்க அப்பாவோடதோ, மாமாவோடதோ நமக்குத் தேவையில்ல. எப்படியும் நமக்குள்ள உறவு வரும்னுதான் இளா கம்பெனி பார்ட்னர்ஷிப்ல என்னைச் சேர்த்தது. அதான் வேண்டாம் சொன்னேன்.”

பிரகாஷை சற்று மரியாதையோடு பார்த்து, “குட் பாலிஸி. ஐ லைக் இட்” என்றாள்.

“பட் நான்.. ஐ லவ் யூ கயல்” என்றதும் புது வெட்கம் கயல்விழியவளினுள் எழ, “நான் வெளில போறேன்” என்று வேகமாக வெளியேறவும், உள்ளே இவனோ உற்சாகமாகக் குதித்தான்.

அடுத்த இருபது நாட்களில் பிரகாஷ்-கயல்விழி திருமணம் ஜாம்ஜாமென்று நடந்து முடிந்திருந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அதற்குள் அன்புவும், பிரியாவும் கம்பெனி பற்றி ஓரளவு கற்றுத் தெளிந்திருக்க, பொறுப்புகள் அவர்கள் வசம் போனாலும் முழுப்பொறுப்பையும், சில வருடங்கள் கழித்து கொடுக்கும் எண்ணம் இளங்கதிருக்கு.

இடைப்பட்ட ஒரு நாளில் தங்களை ஒருங்கிணைத்த காமாட்சியம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் குடும்பத்துடன் பொங்கல் வைத்தார்கள் இளமங்கை குடும்பத்தினர்.

திருமணம் முடிந்த அடுத்த பத்து நாட்களில் சின்னச்சின்ன புரிதலோடு போனாலும், தங்களின் வாழ்க்கையை தாங்கள் இருக்குமிடம் சென்று ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லி கேலி செய்த இளையவர்களின் உற்சாகத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள் பிரகாஷ், கயல்!

மதுரை ஏர்போர்ட்!

இளநாதன்-மங்கையர்கரசி, பிரகாஷ்-கயல்விழி, குருமூர்த்தி-சிவகாமி அனைவரும் ஹைதராபாத் செல்ல வந்திருந்தார்கள். பிரகாஷ் தன் மனைவியுடன் அவளின் அம்மா வீடான சிவகாமி வீட்டில் இரண்டு நாட்கள் இருந்து, அதன் பின்பு யு.எஸ் செல்வதாக ப்ளான்.

மகன் தனியே செல்லாமல் குடும்பமாக செல்வது செல்வரசிக்கு நிம்மதியைத் தந்தது. அங்கேயே இருந்தாலும் யு.எஸ்ஸிற்கும் இந்தியாவிற்கும் உறவுப்பாலம் தாண்டி, தொழிற்பாலமும் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள் இளையவர்கள்.

லக்கேஜ் அனைத்தையும் காரில் ஏற்றி முன்னரே அனுப்பி, அங்கிருக்கும் இன்னொரு காரை மதுரைக்கு கொண்டு வரச்செய்து, நிஷாந்திடம் கம்பெனியின் தேவைக்காக உபயோகப்படுத்தச் சொல்லி, பிரியாவிற்காக ஒரு ஸ்கூட்டியும் புக் செய்திருந்தான்.

அவளுக்கு உறவுகளுடன் இருந்தாலும் தனிமைப்படுத்தப் பட்டாற்போல் தோன்றக்கூடாது என்ற எண்ணம் கதிருக்கும் திருவிற்கும்.

“டேய் மகனே! இந்த ஏர்போர்ட்தான அது?”

“அதேதான் அன்னையாரே. லைப்ல எத்தனை நாடு அலைந்தாலும் மதுரை ஏர்போர்ட் என்றும் ஸ்பெஷல்தான்” என்று மனைவியைப் பார்த்து கண்ணடித்தான்.

“இது ஏர்போர்ட். இங்கயாவது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்களா?” என்று மாமியாரையும், கணவனையும் கண்டிக்க, செக்கிங் எல்லாம் முடியுமுன் வந்தவர்கள் அனைவரும், அவர்களிடம் பேசி விடைபெற, அங்கு வந்தாள் கோகிலா.

“ஏய் திரு இங்க என்னடி பண்ற? மறுநாள் பார்க்க வர்றேன்னு சொன்ன நல்லவ நீதான? இன்னும்தான்டி வந்திட்டிருக்க. கல்யாணம் முடிஞ்சா கல்லா மண்ணா விளையாண்ட நட்பு கூட மறந்து போயிருதுல்ல” என்றாள் சடைப்பாக.

“சாரி கோகி. ஒரு சின்ன பிரச்சனையினால வரமுடியாமல் போயிருச்சி. எனக்கு தோழின்னு சொன்னா உன்னைத் தவிர யாரிருக்கா சொல்லு? சரி நீ இங்க என்ன பண்ற? அண்ணா இல்லாம தனியாவா வந்த?”

“அதையேன் கேட்கிற” என்றவள் திடீரென்று “ஹேய்! சரி கேட்கல போன்னு சொல்லிறாத” என கலாய்த்து, அதற்காகத் தோழியிடம் இரண்டு அடிகள் வாங்கி, “என் சின்ன மாமியார் ஏதோ ஒரு பிரதேசத்திலிருந்து வர்றாங்களாம். வழி தெரியாது நீங்க போய் கூட்டிட்டு வந்திருங்கன்னு மாமியார் அனுப்பி வச்சாங்க. உன் அண்ணாதான் பெரிய படிப்பாளின்னு சீன் போட்டு கூட்டிட்டு வரப்போயிருக்காங்க”

“அது என்னடி பிரதேசம்? உத்திர பிரதேசமா இல்ல மத்திய பிரதேசமா அதுவும் இல்லன்னா ஆந்திரப் பிரதேசமா?” என்றாள் கிண்டலாக.

“யாருக்குத் தெரியும். நீ எங்க கிளம்பிட்ட?”

“என் இளா அத்தானோட, என் மாமியார் வீட்டுக்கு, நீ சொன்ன பிரதேசம்ல ஒண்ணான ஆந்திரப் பிரதேசத்துக்குப் போறேன்” என்று புன்னகையுடன் கணவனின் கைகோர்த்தான்.

“இளா அத்தானா? அன்னைக்குக் கேட்டதுக்கு இல்ல சொன்ன? என்னை ஏன்டி இப்படிக் குழப்பிக் கடுப்படிக்கிற? ஊருல ஆறேழு ஃப்ரண்ட் வச்சிருக்கிறவன்லாம் நிம்மதியாயிருக்கான். நான் உன்னை மட்டும் வச்சிட்டு படுறேன் பாரு” என சலிப்பாக சொல்ல...

அதில் மற்றவர்களும் சிரிக்க, அவர்களை தோழிக்கு அறிமுகப்படுத்தி, கோகிலாவை அவர்களிடம் சற்று பெருமையாகவே அறிமுகப்படுத்தி கணவனைப் பற்றி சின்னதாக சிறப்பாக சொல்லி முடித்தாள்.

“நீ நினைச்சதை சாதிச்சிட்ட திரு. உன் காத்திருப்பும் வீண் போகல. தன் உயிர்ப்பூ நீதான்னு தேடி வந்துட்டாங்க பாரு உன் இளா அத்தான். அங்க நிற்கிறாங்க என்னோட அண்ணா” என்றவள் கண்களில் கிண்டலையும் தாண்டி திருவின் மீதான அன்பு வெளிப்பட்டது.

“சரி. அன்னைக்குக் கேட்டதுக்கு இன்னைக்காவது பதில் கிடைக்குமா?”

“ச்சீ... லூசு கேட்கிற இடம்னு இல்ல. அதோ அண்ணா வந்துட்டாங்க கிளம்பு. நெக்ஸ்ட் வந்தா உன்னைத்தேடி உன் வீட்டுக்கு வர்றேன்” எனும்போது கோகிலாவின் கணவன் வர அவனிடமும் சில நிமிடங்கள் பேசி அனுப்பினார்கள்.

பிரகாஷ்-கயல் பேசிக்கொண்டே சற்று முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து குரு-சிவா.

“ஆர் யூ ரெடி பேபி” என மனைவியைக் கிண்டலடிக்கவும், அவளோ அவனை விரட்ட ஆரம்பித்தாள்.

“புடவை கட்டியிருக்கும்போது விரட்டாத ஏர்போர்ட். அப்புறம் நான்தான் வந்து தாங்கிப்பிடிக்கணும்.”

“அது புதுசா புடவை கட்டுறவங்களுக்கு. நான் வருஷக்கணக்கா கட்டுறேன். எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி” என்று அடுத்த அடி எடுத்து வைக்க, ஏனோ சேலை அவளுக்கு பல்ப் கொடுக்க எண்ணி சதியாக லேசாக இடறிவிட்டது.

சூழ்நிலை உணர்ந்து வந்து பிடித்து நிறுத்தியவன் நக்கலாய் சிரித்து, “எக்ஸ்பீரியன்ஸ் பத்தலையே மொழி. இனிமேல் நான் கட்டிவிடுறேன்” என்று சிரித்தான்.

அச்சிரிப்பின் லயிப்பில் சில நொடிகளை விட்ட திருமொழி, “எது தினமும் தலை துவட்டி விடுற மாதிரியா?” என நக்கலாகக் கேட்டதும், அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தின்றதாலதான் இளங்கதிர் அத்தான், நீங்களா வலிய வந்து என்கிட்ட மாட்டிக்கிட்டீங்க” என்று நகரப் போக, அவன் விடாது பிடிக்க, அதிக உரசலில்லாத வாக்குவாதமென்பதால், மற்றவர்கள் பார்வை இவர்கள் மீது படவில்லை.

“ஆர் யூ...”

“அச்சோ! போங்க” என்று சிணுங்க, கணவனின் சிரிப்பில் செல்ல அடிகளிடவும், அவன் சிரிப்பு இன்னும் சத்தமாக வர, கணவனின் சிரிப்பினில் தானும் கலந்தாள் இளமங்கையானவள்!



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top