- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
32
சற்று நேரத்திற்கெல்லாம் அனைவரிடமும் பேசவேண்டுமென்று இளங்கதிர் சொல்ல, அனைவரின் கவனமும் அவனிடம். அன்புவினருகில் ஜெயராம் பெண்கள் அமர்ந்திருக்க, அவர்களிடம் சகஜமாக பேசியபடியிருந்த அன்புவை ஒரு பார்வை பார்த்துத் தமிழரசியிடம் பேச ஆரம்பித்தான் கதிர்.
“உங்களையும், செல்வரசி அத்தை குடும்பத்தையும் ஒரேயிடத்துல இருக்கணும்னு சொல்ல நினைச்சிருந்தேன். நீங்களே அதைச் செய்து என் அத்தைன்றதை நிரூபிச்சிட்டீங்க.”
“நீ ஏன் அப்படி நினைச்ச இளா?”
“அவங்களுக்கு ஆண் துணையில்ல அத்தை. அன்பு அங்கயிருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும். பிரியாக்கா பொண்ணுங்களுக்கும் பாதுகாப்பு. செல்வரசி அத்தை, புருஷனும் பிள்ளையும் யார் யார்கிட்ட என்னென்ன பகையைச் சம்பாதிச்சிருக்காங்களோ. இவங்க தனியாயிருந்தா பிரச்சனை பண்றவங்க ஈஸியா வந்து கலவரம் பண்ணுவாங்க. இதுவே நீங்க அங்கயிருந்தா வீட்டு வாசல்ல கூட எவனும் கால் வைக்கமாட்டான். அந்தளவு தைரியம் யாருக்கும் வராது.”
தானும் அதைத்தான் நினைத்ததாய் அவர் புன்னகைத்தார்.
“அப்புறம் நிஷா... சரண்யா, ரத்தினம் மாமா, பத்மினி அத்தை, காமாட்சி சித்தி எல்லாரும் இந்த வீட்டுலதான் இருக்கப்போறீங்க” என்றான்.
அனைவரும் ஒட்டுமொத்தமாய் மறுக்க, ரத்தினம் மட்டும், “மகன் மருமகள் இங்கேயே இருக்கட்டும். எங்களோடது சொந்த வீடு. உழைக்கும் தெம்பு இருக்கிறவரை அங்கே இருக்கிறோம். முடியாத பட்சத்துல என் பையனைத்தேடி வருவோம்” என்றார்.
ஒரு அளவிற்கு மேல் அவரின் தன்மானத்தை உரச மனமில்லை அவர்களுக்கு. அதையே காமாட்சியும் சொல்ல, இந்த முறை திரு குறுக்கிட்டாள்.
“அத்தை அங்க தோட்டத்தைப் பார்க்க ஒரு குடும்பத்தை நம்ம வீட்லயே குடிவச்சிருவோம். வாரத்துக்கு ஒருநாள்... ஏன் நடுவுல கூட போய் பார்த்துக்கோங்க. கணக்கு வழக்கு சரியில்ல தெரிஞ்சா உடனே ஆள் மாத்திரலாம். மீறி போரடிச்சா இங்க வீட்டுக்கு முன்னாலயும் பின்னாலயும் நிறைய இடமிருக்கு. தோட்டமா போட்டுத்தள்ளுங்க யார் தடுத்தா.”
“மதுரையில் தண்ணீர் பஞ்சம் ஜாஸ்தி மருமகளே?”
“அதை உங்க பையன் பார்த்துப்பாங்க.”
“அதுசரி. உங்களை விட்டுட்டுப் பேசுறீங்க?” என்ற நிஷாந்தின் கேள்விக்கு,
மனைவியை ஒரு பார்வை பார்த்து அவளின் புன்னகை கொடுத்த தைரியத்தில், “நாங்க எப்பவும், என் அப்பா அம்மா கூடதான். ஹைதராபாத்தான் எங்களுக்கு நிரந்தரம். நேரம் கிடைக்கிறப்ப இங்க வந்து லீவை நல்லா என்ஜாய் பண்ணிட்டுப் போவோம். வீடுன்னு பார்த்தா திருமங்கலத்துல அப்பாவோட அப்பா சொத்து தாத்தாவோட வீடுன்னு இருக்கு. இந்த வீட்டையும் எந்த காலத்திலும் விற்கமாட்டேன். எனக்கு எல்லாமா நீங்கயிருக்கீங்க. இதுக்கு மேல என்ன வேணும்!”
‘என்னை ஏன் எதிலும் சேர்க்கவில்லை’ என நினைத்த கயல், ‘இல்லை என் அண்ணன் விடமாட்டான்’ என்ற நம்பிக்கையில் அமைதிகாத்தாள்.
“கம்பெனி பற்றி அத்தையும், நானும் ஹாஸ்பிடல்ல வச்சே பேசி முடிச்சிட்டோம். அப்பாவோடதும் மாமாவோடதும் ஓகேன்ற அளவுக்குதான் போயிட்டிருக்கு. அதுல வர்ற லாபத்தைதான் ஜெயராம் அரசியலுக்கு செலவழிச்சிருக்கான். சில இடங்களும் வாங்கிருக்கான். அதே டைம் இதை வச்சிதான் லாபம்ன்ற பட்சத்துல அப்பா காலத்திலிருந்த சிலர் மூலமா ஓரளவு நல்லாவே ரன் பண்ணியிருக்கான். அன்பு, நிஷாந்த், பிரகாஷ் மூணுபேரையும் அதுல பார்ட்னராக்கி...”
“சாரி இளா” என இடையிட்ட பிரகாஷ், “உங்க சொத்து பணம் தொழில் சம்பந்தப்பட்ட எதிலும் என்னைச் சேர்க்காத” என்றான் அழுத்தமாய்.
சில நொடி தயங்கி, “சரி பிரகாஷ். அப்ப மூணாவதா, பிரியா அக்காவை பார்ட்னரா போட்டு ஒரு மாசம் ட்ரெய்னிங் கொடுக்கிறோம். நிஷா, சரண்யாவுக்கு அனுபவமிருக்கு. அன்பு, பிரியாக்கா ரெண்டு பேருக்கும் ட்ரெய்னிங் கொடுக்க ஒன் மன்த் ஓகேதான பிரகாஷ்? இதுல உன் சுயம் அடிபடல. உன்கிட்ட நான்தான் ஹெல்ப் கேட்கிறேன்.”
“இளா இப்படிப் பேசாத. என் குடும்பத்துக்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.
“ம்... குட். அப்பா வேற வழியில்ல நீங்க ஒன் மன்த் தனியாதான் கம்பெனியை பார்த்துக்கணும். எப்படியும் நான் அங்கயில்லன்னா அம்மா வரமாட்டாங்க. என்ன தாயே! நான் உங்களைக் கேட்காம சொல்றேன். நீங்க அப்பா கூட இருக்கீங்களா? சாப்பிட கஷ்டப்படுவாங்க” என்றான் யோசனையாக.
“ராஜா ஏன்டா நான் உன்னோடதான் இருப்பேன். வேணும்னா வாரத்துல இரண்டு நாள் ஹைதராபாத் போயிட்டு வர்றேன்.”
“சிவா” என்று குரு பாவமாக முகம் வைக்க...
“உன் அப்பாவைப் பார்த்தாலும் பாவமாயிருக்குடா மகனே. ப்ச்... இருந்தாலும் ஒரு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கட்டும்” என்றார் அசராமல்.
“ஹா..ஹா இதுதான் என் அம்மான்றது. நீ என்னோடவே இரும்மா. அப்பா நீ தனியா என்ஜாய் பண்ணுப்பா. நாங்க வந்த பிறகு...”
“நானும் என் மருமகளும் சேர்ந்து உங்களை ஓடஓட விரட்டுவோம்” என்று மருமகளிடம் ஹைபை போட்டார்.
கதிர் மனைவியைப் பார்த்த பார்வையில், “இல்ல மாமா. நான் அத்தானுக்குத்தான் சப்போர்ட்” என்றாள் வேகமாக.
“இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். நீ காதல் மயக்கத்துல உளர்ற மருமகளே” என்றார் குற்றம்சாட்டும் குரலோடு.
“அப்பா.. உங்க பொண்ணு நான் இருக்கும்போது எதுக்குக் கவலை? நம்ம கூட்டணி போதும்ப்பா” என்றாள் கயல்விழி.
“சிவா கேட்டுக்கோ. பொண்ணுங்க எப்பவும் அப்பா செல்லம்தான்” என்றார் கயலைப் பார்த்து சிரித்தபடி.
“பிரகாஷ் நீ ஏதோ சொல்ல வந்தியே என்ன? நான் அங்க உள்ள கம்பெனியை இங்க நம்மளோட ஜாய்ண்ட் பண்ணிட்டு, இங்க வந்து செட்டிலாகச் சொல்லலாம்னு நினைச்சேன்.”
“சாரி இளா. நான் தப்பா ஒரு ப்ளான் போட்டுட்டேன்” என்று கயலைப் பார்க்க, அவளோ வேறு புறம் பார்த்தாள்.
“நான் நினைச்ச எதுவும் நடக்கல இளா. சின்ன வயசுல அம்மா கூடவே இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அம்மா இது உனக்கு ஏத்த இடமில்ல. நீ நல்லா வளரணும்னா நான் வளர்ந்த இடத்துக்குப் போன்னு அனுப்பிட்டாங்க” என்றதும் செல்வரசி கண்கலங்க, அவரின் கண்ணீர் துடைத்து, “என் நல்லதுக்குத்தானம்மா விடுங்க” என்றான் அனுசரணையாக.
“அப்புறம் படிச்சி முடிச்சி இங்க வரலாம்னு பார்த்தா, வீட்ல நடக்கிற அநியாயத்தைப் பார்த்து கேள்வி கேட்பேன்... அதைவிட பெரியப்பா, மாமா குடும்பம்லாம் எங்கேன்னு கேட்டு, உண்மை தெரிஞ்சிட்டா பிரச்சனையாகிடக் கூடாதுன்னு பயந்து அங்கயே வேலை பார்க்க சொல்லிட்டாங்க. போன வருஷம் வரைக்கும் உங்களுக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. தெரிய விடல அம்மா. நானும் சில வருட வேலைக்குப் பின்னே, அங்கேயே ப்ரண்ட் துணையோட சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சி கொஞ்சம் தடுமாறினாலும் இப்ப சக்சஸ்புல்லா போயிட்டிருக்கு.”
“அம்மா மூணு வருஷமா கல்யாணம் பண்ணிக்கக் கேட்டும் தள்ளிப்போட்டுட்டு வந்த என்னால, ஒரு பொண்ணோட போட்டோவைப் பார்த்ததும் இவளைக் கல்யாணம் பண்ணிக்கோடா, நம்மளால அவள் நிறைய இழந்துட்டா. அவள்மேல தூசுபடாம பாதுகாப்பா பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்புன்னு சொல்லி சத்தியம் வாங்கிக்கிட்டாங்க” எனும்போது அவன் குரல் கரகரத்தது.
கயலின் கண்களிலோ கண்ணீர்.
“இது நடந்தது போன வருஷம். அன்னையிலிருந்து அந்தப் பொண்ணு என் பாதுகாப்புலதான் இருக்கிறா. அம்மாவுக்காகச் சம்மதிச்சதால முதல்ல பெருசா ஆர்வம்லாம் கிடையாது. ஆனா, சமீபமா அவள்தான்... அவள் மட்டும்தான் எனக்கு எல்லாம்னு தோண ஆரம்பிச்சது. அவளை சந்தோஷமா வச்சிக்கணும். எதுக்காகவும் கண்கலங்க விடக்கூடாதுன்றதுல தெளிவாயிருந்தேன். அம்மாவுக்கும் அவளுக்குமான பாஸ்போர்ட் கூட ரெடி பண்ணிட்டேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்குவாளா தெரியாது. ஏதோ ஒரு நம்பிக்கையில் எடுத்துட்டேன். இப்ப அதுக்கு அவசியமில்லைன்னு தெரிஞ்சிருச்சி.”
“எப்படி வந்தேனோ அப்படியே...” சட்டென்று குரல் அடைபட தொண்டையைச் சரிசெய்து, “அம்மாவைக் கூட்டிட்டுப் போயிரலாம்தான். அண்ணி குழந்தைங்க இங்க தனியா இருக்கிறப்ப, அம்மாவைக் கூட்டிட்டுப் போக முடியாது. அது தப்பும் கூட. நீங்கள்லாம் அவங்களை நல்லா பார்த்துப்பீங்க தெரியும். அந்த தைரியத்துலதான் போறேன். திரும்பி இந்தியா வரமாட்டேன்” என்று அழுத்தமாய் சொல்லி எழுந்தவன், வேகமாக ஒரு அறைக்குள் நுழைந்து அதுவரை அடக்கியிருந்த துக்கத்தை கண்ணீராய் வெளியிட்டான்.
அதைக் கேட்டிருந்த அனைவருக்கும் மனம் கலங்கியது. சம்பந்தப்பட்டவளோ விக்கித்து அமர்ந்திருந்தாள். அவனின் கலங்கிய கண்கள் அவளை ஏதோ செய்ததுதான்.’ அதற்கு தான் என்ன செய்வது? தான் எதுவும் செய்யவில்லை’ என்ற எண்ணமே அவளுக்கு.
“ஐயோ! நானே என் பையன் வாழ்க்கையைக் கெடுத்துட்டேனே. நடக்காதுன்னு தெரிஞ்சும் என் பிள்ளைகிட்ட... இனிமேலாவது என்னோட வச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்ப என் ஆசையும் நிறைவேறல. அவனோட ஆசையும் இல்லாமலே போச்சிது. அவன் நிம்மதியைக் கெடுத்த பாவி நான்” என கதறி அழுதவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை யாராலும்.
கயலுக்குள் முதல்முறையாக குற்றவுணர்வு எழ, அழுபவரை வெறித்தபடி பார்த்திருக்க கண்களில் அவளறியாமல் கண்ணீர்.