Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
நாட்குறிப்பில் ஒரு நாள்
“ம்மா என்னம்மா இது உங்கள் அலமாரியை இப்படி வச்சிருக்கீங்க? இன்னைக்கு எல்லாமே நான் தான் அடுக்கி வைக்க போறேன்” மொழிந்தவள் ஷாலினி.
“முதல்லே இந்த ஒட்டடையை அடிச்சு முடிங்கடா. இன்னும் டெக்ரேஷன் எல்லாம் பாக்கியிருக்கு என் துணியை அப்புறமா அடுக்கிக்கிறேன்” அன்னை அமுதினியின் கூற்றுக்கு
“ம்மா கிறிஸ்துமஸ்க்கு இன்னும் பத்து நாள் இருக்கு மெதுவா டெக்ரேஷன் பண்ணலாம்” மகன் ஷைமன் சொல்லியவாறு உள்ளிருந்து துணியை எடுத்து மெத்தையில் போட துணிகளுக்கு நடுவிலிருந்து ஒரு புகைப்படம் விழுந்தது.
ஷாலினி, ஷைமன் இருவரும் பத்து வருடத்திற்கு முந்தைய இளவயதில் ஒரு வீட்டின் முன்னிருந்த பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தக் காட்சி நிழற்படமாக அதில் பதிவாகியிருந்தது.
“மாம் இது யார் வீடு? எனக்கு ஞாபகமே இல்லையே” ஷாலினி
“ஏன்டி காலேஜ் பஸ்ட் இயர் தானே படிக்கிற அதுக்குள்ள கிழவி ஆன மாதிரி ஞாபகம் இல்லைனு சொல்ற” ஷைமன்
“டேய் அண்ணா ஓட்டாதடா நிஜமா மறந்துட்டேன்”
“அதலாம் மெமரிஸ்காக வச்சிருக்கேன் அப்படியே வைங்கடா பத்திரமா” என்ற அமுதினி அலைபேசி அழைப்பில் அறையை விட்டு வெளியேச் சென்றிருந்தாள்.
இங்கோ இருவரும் அன்னையின் நாட்குறிப்பில் அந்த நாளில் என்ன எழுதி இருக்கிறார் என்று ஆர்வ மிகுதியில் எடுத்து வாசிக்கலானார்கள்.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் சுவாரஸ்யமான நினைவுகளை எப்படி இசைத்து தருமென உணர்ந்து வியந்த நாள் இன்று!
காலாண்டுத் தேர்வு விடுமுறையைக் கொண்டாடித் தீர்க்கவே என் அன்னையின் வீட்டிற்கு குதூகலத்தோடு பிள்ளைகளை அழைத்துச் சென்றிருந்தேன்.
அதுவரை அலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு நட்பினை வளர்த்த முகமறியாத எழுத்தாளர் நதிகாவை அங்கு சந்தித்து அவரது அபிமான கையெழுத்தைப் பெற்று சுயமி எடுத்து கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் அதை சொன்னால் வீட்டில் அனுமதி கிடைக்காதே. எனவே தோழியை சந்திக்க வேண்டும் என்று பொய்யுரைத்து இரு நாட்கள் கழித்துத் தனியாக இரு குழந்தைகளோடு நதிகா சொன்ன தெரியாத அந்த இடத்திற்கு செல்வதற்கு தங்கையிடம் சொல்லி மூவுருளி முன்பதிவு செய்யக் கேட்டிருந்தேன்.
“ஏண்டி இந்த இடம் ரொம்ப லாங்க் மாதிரி இருக்கே. நீ மட்டும் போயிடுவியா? நான் வேணா வரவாடி?”
“ஹேய் நான் என்ன சின்ன குழந்தையாடி? அதலாம் ஒன்னும் வேணாம். என் ப்ரெண்ட் நதியை உனக்கு தெரியாதுடி”
“நதியா? ம்ம்ம் ஆமா நதி மலை மேகம் வானம் நிலவுனு பேர் வச்சிருக்க உன் ப்ரெண்ட்ஸ் யாரையும் எனக்கு தெரியாது தான். உனக்கு மட்டும் எப்படி தான் இப்படி ப்ரெண்ட்ஸ் கிடைக்கிறாங்களோ?” கேலி பேசியவளை செல்லம் கொஞ்சி சரிகட்டி மூவுருளியில் ஏறி உட்கார்ந்தப் பின்பே பரம திருப்தி. கதிரவன் கடையை சாத்தி துயில் கொல்ல மெல்ல செல்லும் மயங்கும் மாலை நேரமது.
“ஹலோ நதிகா நான் கிளம்பிட்டேன். ஆன் தி வே” மகிழ்ச்சியோடு அலைபேசி அழைப்பு விடுத்துச் சொல்லி வைத்தபின் இனம் புரியாத உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆட்கொண்டது.
பதற்றமா?
மகிழ்ச்சியா?
பயமா?
மூன்றும் கலந்த முக்கலவையா?
என்னவென்று பிரித்தறிய தெரியவில்லை. வெகு சீக்கிரமே நதிகா சொன்ன இடத்திற்கு வந்து விட்டேன். அது ஒரு பன்மாடி குடியிருப்பு. அண்ணாந்து அந்த குடியிருப்பைப் பார்த்து விட்டு காவலாளியிடம் சென்று
“மிஸ் நதிகா வீடு எந்த ப்ளோர்?”
“அப்பா பேரு என்னமா?”
“அவங்க ரைட்டர்”
“பேர் தெரியாதாமா?”
‘ஐயோ எப்படி சமாளிக்கனு தெரிலயே’ மனதோடு உரையாடிவிட்டு திரும்பினால் கையசைத்தப்படி எனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார் எழுத்தாளர் நதிகா.
நானோ வானத்தில் பறப்பது போல உணர்ந்தேன். ஓடிச்சென்று கட்டியணைக்க முற்ப்பட்ட மனதை கட்டுப்படுத்தி கைகுலுக்கலில் நாகரீகமாக சினேகப்புன்னகை வீசி நலம் விசாரித்தேன்.
“ஹாய் நதிகா! எப்படி இருக்கீங்க? பைனலி உங்களை மீட் செய்திட்டேன். ரொம்ப ரொம்ப ஹாப்பியா பீல் பண்ரேன்” துள்ளி குதிக்காதக் குறையாக பேசியிருந்தேன்.
“சூப்பர் அம்மு. எனக்கும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி”
“ரொம்ப அழகா தமிழ் பேசுரீங்க”
“நன்றிமா”
“எந்த ப்ளோர் நதிமா”
“செகண்ட் ப்ளோர் தான் அம்மு வாங்க லிப்ட்ல போகலாம்… ஹாய் குட்டி பையா குட்டி பாப்பா”
“நான் பெரிய பையன் டென் யேர்ஸ் ஓல்ட். இவதான் குட்டி பொண்ணு”
“ஓ அப்படியா சரி சரி வாங்க பெரிய பைய்யா” என்றவர் கலகலவென சிரிந்திருந்தார்.
மின்தூக்கியில் இரண்டாவது தளத்திற்கான எண் பட்டனை அழுத்தியவர் சுட்டி பெண் ஷாலினியை வாங்கிக் கொண்டார். மின்தூக்கி திறக்க அதிலிருந்து மூன்றாவது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு மலர்ந்த முகத்துடன் வரவேற்றவர் நதிகாவின் அன்னை அன்னபூரணி.
“வாங்கமா வாங்க வாங்க ஜூனியர்ஸ். நதி ரொம்ப எக்ஸைட்டடா இருந்தாமா. எப்படி இருக்கீங்க?”
“வணக்கம் அம்மா. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லாருக்கேன்மா. உட்காருங்க. நதி காபி எடுத்துட்டு வாமா”
“நீங்க வருவீங்கனு சொன்னதும் அம்மா காலையிலேயே போய் பால் பிஸ்கட் எல்லாம் வாங்கி வச்சிட்டாங்க. இருங்க இப்ப வரேன்” என்றவர் உள்ளே செல்ல ஜூனியர்களோடு அன்னபூரணி கதைத்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் நாசியை காபியின் நறுமணம் நிறைக்க முகிழ்நகையுடன் முன் நின்றிருந்தார் நதிகா காபியுடன்.
ஒரு மிடறு அருந்தி மிழிகளை மூடி ஆழமாக சுவாசித்து ரசித்து குடித்திருந்தேன்.
“நதிமா காபி ரொம்ப அருமை. தேங்க்யூ சோ மச்”
“நிஜமாவா சொல்றீங்க? தேங்க்யூ அம்மு”
சுவாரஸ்ய பேச்சுகளுனூடே அன்னபூரணி கவலையோடு உரைத்தது நதிகாவின் மணநாள் யோகம் தாமதமாவது தான்.
அதுமட்டுமின்றி குடும்பம், சொந்த ஊர், கதைகள் வாசிப்பு, ஆன்மீகம் பற்றிய நிறைய உரையாடல்களைக் கேட்ட எனக்கு ஒன்று மட்டும் விளங்கியது.
அன்னபூரணியின் கணீர் என்ற குரலுடன் கம்பீரமாக குழைந்து வந்த தமிழ் பேச்சும், அவரது சிந்தனைகளும், ஆன்மீகம் பற்றிய அறிவும் நதிகாவை சிறந்த ஒரு எழுத்தாளர் ஆவதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது என்று தோன்றியது.
“ஆங் அம்மா எனக்கு ஒரு டவுட் நீங்க இத்தனை புத்தகங்கள் படித்ததாக சொல்றீங்களே இந்த கதைப்பற்றி தெரியுமா என்று சொல்லுங்களேன்”
“கேளுங்கமா தெரிந்தால் கண்டிப்பாக சொல்றேன்”
“நிழலரசன் பற்றி உங்களுக்கு தெரியுமா?”
“இப்படி தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்டால் எப்படிம்மா?” சிரித்திருந்தார்.
“அது வந்து நான் ஒரு கார்ட்டூன் பார்த்தேனா அதுல வந்தது ஆனால் அதைப்பற்றி விவரங்கள் தெரிலயே”
“என்ன பார்த்தீங்கனு சொல்லுங்க”
“அதாவது ஜெகன்னாத்னு ஒரு கேரக்டர் பல்ராம்னு ஒரு கேரக்டர். இவங்களை நிழலரசன் பிடிச்சிப்பார். அவரோட ஆத்ம பாகங்கள் ஐந்தை அழித்தால் தான் அவங்க அதிலிருந்து விடுபட முடியும். இந்த மாதிரி வரும்”
“ஓ நீங்க கேட்பது பூரியின் ஜெகன்னாத். விஷ்ணுவின் இன்னொரு அவதாரம்”
“அப்படியா? அதைப்பற்றி வேறு என்ன கதைகள் தெரியும் உங்களுக்கு?”
“முன்னாடி படித்ததுமா. மீண்டும் ஒருமுறை அந்த புத்தகத்தை வாசித்து உங்களுக்கு சொல்கிறேன்”
“சரிங்க அம்மா”
இதற்கிடையில் குட்டீஸ் இருவரும் ‘வீட்டிற்கு செல்லலாம்’ என்று குறும்புகள் செய்ய ஆரம்பிக்க நதிகாவோ அவர்களை தன் பொறுப்பில் கொண்டு வந்து பிஸ்கட் மற்றும் சிற்றுண்டிக் கொடுத்து சமாளித்துக் கொண்டிருந்தார்.
நான் பார்க்க வந்தது என்னவோ நதிகாவை தான். ஆனால் பல வருட பழக்கம் போல பேசியது நதிகாவின் தாயார் அன்னபூரணியிடம். அவரிடம் அப்படியொரு பிணைப்பு ஏற்ப்பட்டதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கிளம்பும் நேரம் வந்தது.
“அம்மு நீங்க எப்படி ரெண்டு பேரையும் சமாளிக்கிறீங்க? ரொம்ப கஷ்டம் தான்”
“ஹாஹாஹா அதலாம் உங்களுக்கு மேரேஜ் ஆகி பசங்க வரும் போது ஈஸியா ஹாண்டில் பண்ணிடுவீங்க”
சொல்லி முடித்த பின்பே ‘அச்சோ இப்படி பேசி விட்டோமோ? ஏற்கனவே திருமணம் தாமதமாகுது என்று தானே கவலையாக இருந்தார்’ என்று மனதோடு நான் சஞ்சலமாக
“ஆமா அதுவும் சரிதான் அவங்க அவங்க பசங்கள சமாளிக்கிறது ஈஸிதான்” என்று புன்னகைத்திருந்தார்.
“சரி அப்ப நான் கிளம்பட்டுமா?”
“இருங்க அம்மு ஆட்டோ புக் பண்ரேன். இவ்வளவு தூரம் பசங்களை வைத்துக் கொண்டு என்னை பார்க்க வந்தது ரொம்ப மகிழ்ச்சி” என்றவர் ‘நேசமே சுவாசம்’ என்ற தான் எழுதிய புத்தகத்தில் அன்றைய திகதியுடன் தன் முத்துக் கையெழுத்தினை பதித்துப் பரிசாகக் கொடுத்தார்.
மகிழ்வுடன் அதை வாங்கி பையில் வைத்துக் கொண்டு தற்படமும் எடுத்துக் கொண்டு விடைபெற்று மின்தூக்கி வாயிலாக கீழிறங்கி வந்தால் இரவு முழுவதுமாக கவிழ்ந்து இருந்தது.
முன்பதிவு செய்திருந்த மூவுருளி வரும் வரையில் அங்கிருந்த பூங்காவில் அமர்ந்து நதிகாவுடன் நான் பேச பட்டூஸ் இருவரும் ஊஞ்சலிலும் சருக்குமரத்திலும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பதிவு செய்த புகைப்படம் தான் இந்த நிழற்படம்.
மூவுருளி வரவும் சுட்டிஸ் இருவரும் சுற்றிப் பார்க்கும் ஆவலில் ஏறி அமர்ந்து கொள்ள நானோ நதியை பிரிய போகும் தருணத்தையும், மூவுருளியில் தனியாக செல்ல இருக்கும் தருணத்தையும் நினைத்து ‘தனியே விட்டுச் செல்லும் தாயை மழலை ஏக்கத்தோடு பார்ப்பது போல’தான ஒரு பார்வை வீச்சை நதிகாவிடம் செலுத்தி விடைபெற்றேன்.
அடுத்த திருப்பத்தில் நுழையும் முன் அழைத்திருந்தார் நதிகா.
“என்னாச்சு அம்மு? எல்லாம் ஓகேதானே? நீங்க இறங்கும் வரை காலிங்லயே இருக்கீங்களா?”
‘ஐயோ அவ்வளவு வெளிப்படையாகவா பயந்த பார்வை பார்த்து வச்சோம் ச்ச சரி சமாளிப்போம்’
“அதலாம் ஓகே தான் நதிமா. நான் வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ரேன். பை” அழைப்பைத் துண்டித்து நிமிர்ந்தால் மூவுருளி ஓட்டுநரோ அலைபேசியில் தீவிரமாக ஹஸ்கியாக பேசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து தொலைக்காட்சி செய்திகள் ஒவ்வொன்றாக மனதில் வலம் வர பிள்ளைகள் இருவரையும் கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.
போதாதற்கு வரும் போது வந்த வழியில் அல்லாமல் வேறு பாதை வழியாக மூவுருளிச் செல்ல மனதை கிலி ஆட்கொண்டது.
மேலும் அவர் பார்க்க நான்கு நாட்கள் சவரம் செய்யாத தாடியுடனும், களைந்த தலையுடனும், சிவந்த விழிகளும், பருத்த உடலமைப்புமாக இருக்க இயல்பாகவே பயமும் பயணம் செய்ய ஆரம்பித்தது.
இருள் பாதையில் வளைந்துச் செல்லும் சந்துகளினூடே வளைத்துச் செல்ல எதிரே ஒரு மதுவெறியன் சட்டை பட்டன்களுக்கு விடுதலைக் கொடுத்து வெற்று மார்புடன் ஒரு கையில் தடியும் மறு கையில் வெட்டருவாவுமாக மூவுருளி அருகே வர “ஐயோ” என்று கத்தியிருந்தேன்.