- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
25
“இதே அலறல்தான் சுற்றிலும். அதுவரை பயமில்லாத பொண்ணு வீட்டுக்காரங்க என்னை பயத்தோட பார்த்ததும் எனக்கு இன்னும் குஷியாகிருச்சி. அப்படியே மிரண்டு நின்ன பொண்ணுகிட்டப் போயி, நாளைக்கு நாங்க வர்றப்ப நீ எங்களோட வர்ற. நீ என் பொண்டாட்டின்றதை மறந்து உன் அப்பா பின்னாடி போன, ஒரே வெட்டுதான்னு அருவாளை அவள் அப்பாவை நோக்கி ஓங்கினேன்.”
“இல்ல வேண்டாம். அப்பாவை எதுவும் பண்ணாதீங்கன்னு கத்தினா. இது.. இந்த பயம் எப்பவும் இருக்கணும். உன் அப்பா, அம்மா எல்லாரும் உயிர் வாழணும்னா நீ என்னோட வரணும். சரியா? சரின்னு சொல்லுன்னு அதட்டல் போடவும், சம்மதமா தலையாட்டிட்டு அழ ஆரம்பிச்சிட்டா. நாளைக்கு நான் வரும்போது தயாரா இருக்கணும். இல்லன்னு வையி... நீ எந்த ஊர், எந்த மாநிலம் போனாலும், ஏன் வெளிநாடே போனாலும் தேடிக் கண்டுபிடிச்சி இழுத்துட்டு வந்திருவேன்னு மிரட்டினதுல ரொம்பவே மிரண்டுட்டா.”
“அவள் அப்பாகிட்ட திரும்பி, மாமா திரும்பவும் சொல்றேன். எங்க போனாலும் விடமாட்டேன். என்னை அடிச்சி அவமானப்படுத்தாம இருந்திருந்தா விட்டுருப்பேனோ என்னவோ! ஆனா இப்ப.. உங்க பொண்ணு மேல உள்ள ஆசையையும் தாண்டி, என் கௌரவம் பெருசா தெரியுது. நான் பட்ட அவமானத்துக்கு உங்க பொண்ணு மட்டும்தான் பதில். ஏய் பொண்டாட்டி! நாளைக்கு வர்றேன்னு சொல்லி அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.”
“அவங்க போனதும் ஒரு நிம்மதி எழுந்தாலும் அந்த அடியாளுங்க அங்கிருந்து நகரல. எல்லாருக்குள்ளயும் பயம் பயம் மட்டும்தான். என் பொண்ணை எப்படிப் பாதுகாக்கப் போறேன்னு தெரியலையேன்னு அப்பா அம்மாவுக்கு வேதனை.”
“அப்புறம் அப்பா சித்தப்பாகிட்டப் பேசி ஸ்கூலையும், நிலத்தையும் ஆள் வச்சி பார்த்துக்கச் சொன்னாங்க. பொறுப்பைச் சித்தப்பா பார்த்தா ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இருக்குன்ற கணக்குல, அவங்க குடும்பத்துக்கு பிரச்சனை வரக்கூடாதுன்ற எண்ணம்தான். அப்படியே ஸ்கூல் பிரின்ஸிபால்கிட்டயும் பேசி.. தேவைக்கு பணம் எடுத்துட்டு எங்க போறோம்னு கூட சொல்லாம நைட்டோட நைட்டா ஊரைக் காலி பண்ணிட்டு நார்த் சைடு அப்பா ஃப்ரண்ட் வீட்டுக்குப் போயிட்டோம்.”
“சித்தப்பா இறந்தது தெரியாது. ஒருவேளை அப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம். சித்தார்த்னால பிரச்சனை வரும்னு போகாம இருந்திருக்கலாம். இல்ல யாருக்கும் தெரியாம பார்த்துட்டு வந்திருக்கலாம். நான் எம்.சி.ஏ படிக்கிற டைம்லதான் சென்னை வந்தது.”
“தமிழ்நாடு வந்து வருஷம் ஆகியும் அம்மாவுக்கு பயம். அதனால காலேஜ்ல தொடங்கி எங்க போனாலும் முக்காடு மாதிரி துப்பட்டாவை சுத்தி போட்டுட்டுப் போகணும். கோவிலுக்குக் கூட நிம்மதியா போகமுடியாத நிலை. அப்படி இருந்தும் என்னைக் கண்டுபிடிச்சிட்டான்.”
“மறுநாள் காலையில அத்தை வீட்டுக்கு மேளதாளத்தோட போனா அங்க யாருமே இல்லை சிஸ்டர். அத்தை மாமாவோ நாங்க தூங்கிட்டோம். நைட்டோட நைட்டா எங்க போறோம்னு சொல்லிட்டுப் போகல. ஏன் போனைக்கூட வச்சிட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்களை ஓரளவுக்கு மேல மிரட்டவும் மனசு வரல.”
“சுத்திலும் விசாரிச்சியும் பிரயோஜனம் இல்லாமல் போக, எப்படியும் சொந்த ஊருக்கு வந்துதான ஆகணும்னு நட்சத்திரா ஊருக்குப் போய் அவங்க ஸ்கூல் முதற்கொண்டு விசாரிச்சும் எதுவும் தெரியல. ஒரு குடும்பத்தை அதுக்காகவே அந்த ஊர்ல குடிவச்சோம். அவங்க எங்களை ஏமாத்தின கோவம் ஆத்திரமா மாறி, அவளைத் தேடிப்பிடிச்சி கூட்டிட்டு வந்து போன கௌரவத்தை மீட்டெடுக்க முயற்சித்தேன்.”
“அன்னைக்கு மகாபலிபுரத்துல எதேச்சையாதான் பார்த்தேன். அந்தப் பொண்ணு என்னைப் பார்த்துட்டுத் திரும்பவும், நமக்கு தெரிஞ்ச பொண்ணோன்னு விசாரிக்க அவள் பக்கத்துல போனா என்னைப் பார்த்ததும் ஓடினா. அப்பதான் மனசுல ஒரு சந்தேகம் இது அவளோன்னு. அதை அவள் ஊர்ஜிதப்படுத்தினா. உண்மையிலேயே அவள் என்னைப் பார்த்து ஓடலைன்னா அவளைக் கண்டுபிடிச்சிருக்கிறது ரொம்பக் கஷ்டம். அப்ப சின்னப்பொண்ணு. இப்ப அப்படியிருக்க சான்ஸ் இல்லைன்னு நமக்குத் தெரியாதா என்ன?”
மின்னல் பெண்ணோ பல்லைக்கடித்து, “இந்த நதியே போய் வான்டடா நான்தான்னு மாட்டிட்டு, என்கிட்ட நிறைய சொல்லி... ஹ்ம்ம் வரட்டும் பார்க்கிறேன்” என்றவள், “இருந்தாலும் உங்க கதை ஓகேதான்” என்றாள் விஷமத்தனமாக.
“என்ன செய்து என்ன புண்ணியம். ஒரு ராட்சஷிகிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே” என்று வெண்மதியைப் பார்த்தபடி சொல்லி, “அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் எந்தப் பொண்ணையும் சைட்டடிச்சதில்லமா. என் சார்ந்த பெண்கள்கிட்ட கேட்டுப் பாருங்க. அவங்க வீட்ல என்னோட தனியா அனுப்புற அளவுக்கு நம்பிக்கை என்மேல.”
“அதுக்குக் காரணம் சின்ன வயசுல நான் பண்ணின கல்யாணம். சாரி கல்யாணம்னு சொல்லக்கூடாது. நான் செஞ்ச அந்த கூத்துதான். சரியோ தப்போ அந்தச் சம்பவம் என்னைத் தப்பான வழியில போகவிடல. நமக்கு கல்யாணமாகிருச்சின்னு ஒரு எண்ணம் மனசுல இருந்ததால, நான் பொறுப்பா இருந்தேன்னும் சொல்லலாம். அதுக்குப் பின்னாடிதான் நண்பர்கள் பேச்சைக் கேட்கிறதை விட்டுட்டு, எதையும் யோசிச்சி செய்ய ஆரம்பிச்சேன்.”
“நினைக்கிறதெல்லாம் நடந்திருமா என்ன? நினைக்காதது நடந்திருக்கு. அதை தவறவிடாம பிடிச்சிக்கணும்னு மனம் முழுக்க ஆசையும் இருக்கு” என்றான் மனைவியவளைக் கண்களால் களவாடியபடி.
“வெண்தியை சித்தார்த் மேரேஜ் பண்ணினதைப் பற்றி என்ன நினைக்கிற நதி?”
“அது தப்புதானங்க. அதென்ன எப்பப்பாரு பொண்ணு சம்மதம் இல்லாமல் தாலி கட்டுறது. தாலின்னா விளையாட்டுப் பொருளா. நல்லா நாலு வைக்கிறதை விட்டுட்டு பேசிட்டிருக்கீங்க?”
“அப்புறமா வைக்கலாம். நான் அவங்களுக்கு டைவர்ஸ் வாங்கித் தர்றேன்னு கேஸை எடுக்கிறதா சொன்னதும் எல்லாரும் விஷ் பண்ணாங்க. உன் முகம் மட்டும் ஏன் ஒரு மாதிரியாகிருச்சி? அப்ப இந்தக் கல்யாணத்துல இஷ்டம்னுதான அர்த்தம்.”
“அ...அதுங்க முதல்முறையா தனி கேஸ் எடுத்து வாதாடப் போறீங்க. அப்படி இருக்கிறப்ப முதல் கேஸே விவாகரத்துன்னதும் மனசுக்கு கஷ்டமா இருந்திச்சி.”
அவளை மெல்ல தோளோடு அணைத்து, “அப்படின்னா அவங்களைச் சேர்த்து வச்சிருவோமா?” கண்சிமிட்டிக் கேட்டான்.
“அச்சோ! அதெப்படிங்க முடியும்? அவன் நல்லவன் இல்லையே. அன்னைக்கு அப்பா கழுத்துல அருவாளை வச்சது இன்னமும் நினைவில் இருக்குது.”
“அது எமோஷனல்ல பண்ணினதுமா. இப்ப வயசுக்கேத்த பக்குவம் வந்திருக்கலாம். எப்பவும் ஒருத்தன் தப்பானவனா இருக்கணும்னு அவசியமில்லையே?”
“அப்ப இன்றைக்கு நடந்ததுல எந்த வகையில் அவன் நல்லவனாகிட்டான்? இந்நேரம் வெண்மதி இடத்துல நான் இருக்க வேண்டியது. கடவுளே! நினைச்சாலே மனசெல்லாம் பகீர்னுது. அப்படி நடந்திருந்தா செத்தே போயிருப்பேன்ங்க” என்றவள் உடல் நடுங்கினாலும் குரல் உறுதியுடன் ஒலித்தது.
“நதி! அப்படி நடக்க நான் விட்டுருவேனா” என்றவனுக்குள் ‘அப்ப சஞ்சித்தை திருமணம் செய்திருந்தாலும் இதே எண்ணம்தானே இருந்திருக்கும். சஞ்சித் இப்ப உயிரோடு இருந்திருந்தா என் நதி நிலைமை? அவள் உலகில் இல்லை’ என்ற உண்மை உரைக்க, மனம் துடிக்க அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
கணவனின் திடீர் அணைப்பில் புரியாது பார்க்க. “நீ எனக்குன்னு இருக்கிறப்ப, உன்னை எதுவும் அண்ட விடமாட்டேன்” என்று உச்சியில் இதழ் பதித்தான்.
கணவனின் முதல் முத்தம் கண்மூடி அதை மனதில் பூட்டி வைத்து தலை நிமிர்ந்து அவன் கண்கள் காண, “என்னடா?” என்றான்.
“தேங்க்ஸ். அப்ப சஞ்சித்தை எப்படி கல்யாணம் பண்ணியிருப்பன்னு கேட்காம இருந்ததுக்கு. இன்னொரு தேங்க்ஸ்.”
“இன்னொன்னு எதுக்குமா?”
“கடைசி நிமிஷம் வரை மனம் மாறாம இருந்திருந்தா, என்னோட முடிவு மாறியிருக்...” சட்டென்று அவள் வாய்மூட, தான் நினைத்தது சரிதான் என்றதும் சொல்ல முடியா வேதனை மனதிற்குள்.
அவன் கையை விலக்கி, “ஏனோ தெரியலங்க. உங்களைத் தவிர என்னோட யாரையும் சேர்க்கத் தோணலை. நம்ம கல்யாணம்! உங்களோட இந்த அணைப்பு, எல்லாம், எல்லாமே கனவோன்னு இருக்கு. கனவுன்னா கலைஞ்சிரும்ல? கலையக்கூடாதுன்னு மனசெல்லாம் அடிச்சிக்குதுங்க” என்றாள்.
“இது நிஜம் நதி. உன் சந்துருதான் உனக்கு கணவன். கனவு இல்லைன்னு நிரூபிக்கவா?
“எப்படி?” என்றாள் பார்வை மாறாது.
“ம்... எப்படி?” யோசிப்பதுபோல் செய்து, தன் வலது கையால் அவளின் கண்மூடி, “இந்த லிப்ஸ்டிக் ஒட்டுமா?” என கேட்டான்.
“ஒட்டாது. ஏன் கேட்குறீங்க?”
“இல்ல நதி. சில நிஜங்களை உணர வைக்க அடையாளம் வேணுமேன்னு பார்த்தேன். ஹ்ம் அடையாளம் தெரியாது போலயே!” என்றான் சலிப்பாக.
“எ... என்ன நிஜம்?” அவளோ ஹஸ்கியாகக் கேட்க,
மெல்லக் குனிந்து அவள் இதழில் இதழ் பதித்து மூடிய கண்களிலிருந்து கையை எடுக்க, நம்பமுடியா பார்வையை கணவனிடம் செலுத்துகையில் உடலில் தோன்றிய உணர்வுகள் அதை உண்மையென்று பரைசாற்ற, கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளுக்குள் தொலைந்து கரைந்து காணாமல் போனாளோ!
அவ்விடத்தில் நாமும் கண்மூடிக் கொள்வோம்!
கனவென்னும் மாய வலைக்குள் அவள் முழுவதுமாக சிக்கியதைக் கண்டு புன்னகைத்தான் அரிச்சந்திரன்.
அடுத்து நடந்த அனைத்திலும் திருமண வரவேற்பு உட்பட அவள் அவளாக இல்லாமல் போக, கேலி செய்தே அவளை ஒரு வழியாக்கினார்கள் இளையவர்கள்.
வரவேற்பு முடிந்து மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் அந்த மண்டபத்திலேயே செய்திருந்ததால், நெருங்கிய உறவுகளைத் தவிர அனைவரும் சென்றிருந்தனர்.
நட்சத்திராவிடம் வந்த பாக்கியவதி அவள் முகம் வருடி திருஷ்டி கழித்து, “ரொம்ப சிரமத்துக்குப் பிறகு உங்க கல்யாணம் நடந்திருக்குமா. நீங்க காலத்துக்கும் நல்லாயிருக்கணும்” என்றார்.
நட்சத்திரா அவரைக் குழப்பமாக நோக்கினாலும், திருமணத்தில் நதீராவால் நடந்த பிரச்சனைகளைச் சொல்கிறார் போலும் என நினைத்தாள். நினைத்ததை வெளியே கேட்டிருக்கலாம். கேட்டிருந்தால் அவள் கணவனுடன் சேர்த்து, இரு குடும்பங்களும் செய்த தகிடுதத்தங்கள் தெரிந்திருக்கும். நட்சத்திரப் பெண்ணவள் எரிநட்சத்திரமாக மாறும் விந்தையும் நடந்திருக்குமோ! எதிர்பார்ப்போம் அதையும்!