- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
9
அன்று மாலையே டாக்டர்.வர்ஷா வர சலிப்பாக உணர்ந்தாலும் வரவேற்று அமரவைத்துத் தண்ணீர் கொடுத்தாள் அனுரதி. இது காலையில் அபிராமி அவளுக்குச் சொல்லிக்கொடுத்த பாடம்.
“அனு நான் சொல்...”
“வேண்டாம் டாக்டர் ப்ளீஸ். நடந்தது நடந்திருச்சி. அதை விவரிக்க வேண்டாம். அதையே திரும்பத்திரும்பக் கேட்கிறதால எதாவது மாறிடப்போகுதா? மாறும்னா சொல்லுங்க நான் கேட்கிறேன்” என்றவள் குரலிலும் முகத்திலும் அத்தனை அழுத்தம்.
‘ஹ்ம்...’ என பெருமூச்சி விட்டவர், “என் கடைசி காலம் நிம்மதியில்லாமல் போகணும்னு இருந்தா ஒண்ணும் செய்ய முடியாதுமா. முன்னப்பின்ன தவறு செய்திருந்தால் இப்படியெல்லாம் இருக்காதோ என்னவோ. ஆனா, இப்ப நிம்மதியா சாப்பிடக்கூட முடியுறதில்லை. தூக்கம் தூரம் போய் மாதக்கணக்காகுது. உன் மன்னிப்புதான் எனக்கான உயிர்ப்புன்னுதான் உன்கிட்ட வந்தேன். ஓகே நான் கிளம்புறேன்” என்று அவர் எழ,
“உட்காருங்க டாக்டர்” என்று மகள் அருகில் அமர்ந்தவர், “சின்னப்பொண்ணு பேசினதைப் பெருசா எடுத்துக்காதீங்க டாக்டர்” என்று அவரின் தோள்பிடித்து அமரவைத்து தானும் அமர்ந்தார் சாரதா.
“அம்மா!”
“ப்ச்... சும்மாயிரு அனுமா. அவங்க வயசுக்கு இவ்வளவு இறங்கி வர்றாங்க. தொழில்ல நேர்மையா இருக்கிறவங்களுக்கு தான் எங்கேயாவது தவறினா மனசாட்சி குத்திக் கிழிக்கும். அவங்க நினைச்சிருந்தா இப்படி ஒண்ணு நடக்கவே இல்லைன்னு முடிச்சிருக்கலாம். இல்லையா, வாடகைத் தாய்க்குக் கரு தங்கலைன்னு, அபிராமி மேடம்கிட்ட சொல்லியிருந்தா அத்தோட பிரச்சனை முடிஞ்சது. ஏன் நம்ம போய் கேள்வி கேட்டப்ப, டிஎன்சி பண்ணினது சரியா பண்ணலைன்னு பொய் சொல்லியிருந்தா, நம்ம நிலை என்ன? ஒருத்தர் இறங்கி வந்தா ஓவரா பண்ணுற. என் பொண்ணு சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் டாக்டர்” என மனதார கேட்டார் சாரதா.
“அச்சோ சாரதா! அவள் சின்னப்பொண்ணு. அதையெல்லாம் பெருசா எடுத்துக்கலை” என்றார் வேகமாக.
“ஐம் சாரி டாக்டர். என்னோட கோவம் உங்க பக்கம் யோசிக்க விடலை. சொல்லுங்க டாக்டர்?” என தாய் சொன்னதின் உண்மை நிலை உணர்ந்து கேட்டாள்.
“என்னோட இருபத்தெட்டு வருட மருத்துவர் வாழ்க்கையில், உன் கேஸ் மாதிரி அட்டெண்ட் பண்ணினதில்லை. பண்ணினதில்லை என்பதை விட அதற்கான சந்தர்ப்பம் அமைய விட்டதில்லை. டாக்டர் படிப்பு அம்மா ஆசைக்காக. எனக்கோ பயந்த சுபாவம். நிறைய பாவ புண்ணியம் பார்ப்பேன். சோ, ரொம்ப கிரிட்டிகல் கேஸ் எடுத்துக்க பயம். மேக்சிமம் ஒதுங்கிப் போயிருவேன். அப்படியிருந்த என்கிட்ட வலுக்கட்டாயமா வந்ததுதான் உன்னோட கேஸ். முதல்ல விலகதான் நினைத்தேன். ஏனோ தெரியலை உன்னைப் பார்த்ததும் விலகத் தோணலை.”
“உன்னை மீட்டெடுக்கணும் என்பதை விட, அந்தச் சம்பவம் நடந்ததற்கான தடயங்களே உன் உடம்பில் இல்லாத அளவு சரிபண்ணி புதுப்பொண்ணா உன்னை மாத்தணும்ன்ற ஆசை. அதனால எக்ஸ்ட்ரா கேர் எடுத்தேன். நீ கண்விழிக்காத நாள்கள்ல உன் அம்மா எந்தளவு கஷ்டப்பட்டாங்களோ, அதே அளவு எனக்கும் மனக்கஷ்டம்தான். அதேநேரம் அபிராமி மேடம் சின்னப்பையன் அவன் அண்ணனுக்கு வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்கக் கேட்டுருந்தார். வாடகைத் தாய்க்கான பொண்ணும் கிடைத்து அதற்கான சம்பிரதாயங்கள் போயிட்டிருந்தது. எல்லாம் முடிந்து கருத்தரிக்க சிகிச்சை பண்றப்பதான் எல்லாமே மாறிருச்சி.”
“அதெப்படி டாக்டர், நீங்கதான் ஒவ்வொரு நோயாளிக்கும் சார்ட் வச்சிருப்பீங்களே? அதுவுமில்லாமல் நான் ரொம்ப நாளா இருக்கிறதால நர்ஸ் சிலருக்காவது தெரிஞ்சிருக்கும். அப்படி இருக்கிறப்ப அந்தத் தப்பு எப்படி நடந்தது?” இன்று இவ்வளவு பார்ப்பவர் அதில் எவ்வாறு தவறினார் என்ற ஆதங்கம் அவளுக்கு.
“நீ நல்லா கவனித்திருந்தா, உனக்கு இரண்டு நர்ஸ்ங்க மட்டும்தான் மாற்றி மாற்றி இருந்திருப்பாங்கன்றது தெரிஞ்சிருக்கும். இதுதான் உன் கேஸ்னு அவங்களையும் வெளியில் சொல்லவிடலை. ரிப்போர்ட் மத்தவங்க பார்வைக்குப் போகாம எங்க கண்ட்ரோல்லதான் இருந்தது.”
“அதெப்படி டாக்டர் போலீஸ் வரை போன கேஸ் பற்றித் தெரியாமல் போகும்?” என்றாள் அவளும் விடாது.
“இன்ஸ்பெக்டர் உன்னைப்பற்றி சொல்லி, உன்னுடைய நேம் முதற்கொண்டு வெளியில தெரியக்கூடாதுன்னும், அதனாலதான் ஜிஹெச் போகாம ரூல்ஸ் மீறி உங்ககிட்ட வந்தேன்னும் சொன்னார். மீடியான்னு போயிட்டா யார்? என்ன நடந்தது? சூழ்நிலை பார்க்காம உயிரோட கொன்னுருவானுங்கன்ற பயம் அவருக்கும், உன் தம்பிக்கும்.”
“தம்பியா?”
“ஆமா. அவன் கெஞ்சலில்தான் எல்லாமே மாறிச்சி. தனியா நின்னு எல்லாத்தையும் சமாளிச்சவனுக்கு, அக்கா பெயர் வெளியில் தெரியுறதில் கொஞ்சமும் சம்மதமில்லை. அதுக்காக கேஸ் ஃபைல் பண்ணுறதுக்கு முன்னமே இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கெஞ்சி, அவரை மனமிறங்க வச்சிட்டான். அவர் மூலமா எங்க எம்டியை சந்தித்து, அவர்கிட்டயும் பேசி நம்பிக்கையான டாக்டர் வேணும்னு கேட்க, என்னை பார்க்கச் சொல்லிட்டாங்க. இதுல இன்னொரு ப்ளஸ் அந்த அயோக்கியனுக்குக் கல்யாணமானது பக்கத்துல உள்ளவங்களுக்குக் கூடத் தெரியலை. அதனால உன் பெயர் மாற்றி சொல்லிதான் அவனை உள்ளே தள்ளினாங்க. அதுக்கும் எங்க எம்டியே ஹெல்ப் பண்ணினார். இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியாது.”
“இந்த ஹாஸ்பிட்டல் ட்ரஸ்ட் மூலமாகவும் நடக்கிறதால ஐசியூ இங்க தனித்தனியா இருக்காது. பக்கத்துல யாராவது என்ன கேஸ்னு விசாரிக்க வந்தா வெறி பிடித்த நாய் கடிச்சிருச்சின்னு சொல்லி வச்சிருந்தோம். அதனாலேயே உன் அம்மா தவிர உன் பக்கத்துல யாரும் வரலை. ஐசியூல இருந்து நார்மல் வார்ட் போறதுக்கு முன்ன லாஸ்டா ஒரு செக்கப் பண்ணிட்டா நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணுச்சி. அதனாலதான் அதுக்கான நாளும் நேரமும் முடிவு செய்திருந்தோம். அதேநாள், அதேநேரம் அந்தப் பொண்ணுக்கும் ட்ரீட்மெண்ட் பண்றதா முடிவுவெடுத்து டாக்டரும் ஃபிக்ஸ் பண்ணியாச்சி.”
“கிளம்புற நேரத்துல எனக்கு நெஞ்சுவலி” என்றதும் தாயும் மகளும் பதற, அதில் சின்னதாகப் புன்னகைத்தவர், “ஏதோ தப்பா பட்டதால சக டாக்டர் ஒருத்தர்கிட்ட உன் பெட் நம்பர் சொல்லி டிஎன்சி பண்ணியாச்சி. இன்னொரு முறை க்ளீன் பண்ணி ஸ்கேன் பண்ணிருங்க.. வேறெதுவும் யார்கிட்டயும் அந்த பேஷண்ட் பற்றி கேட்டுக்க வேண்டாம்னு சொல்லி, உன்னோட இருக்கிற நர்ஸ் மோனிஷாவையும் துணைக்கு வச்சிக்கச் சொன்னேன். அடுத்துதான் பக்கத்துல உள்ளவங்க துணையோட ஹாஸ்பிடல் போனேன்” என்றார்.
“நெஞ்சுவலின்னா எதாவது பிரச்சனையா டாக்டர்?”
“இல்லமா. மைல்ட் அட்டாக்தான்” என்றார் புன்னகையுடன்.
“என்ன டாக்டர் இவ்வளவு ஈஸியா சொல்றீங்க?” வருத்தத்துடன் கேட்டார் சாரதா.
“வேற என்ன செய்யுறது சாரதா? இப்பல்லாம் சின்ன வயசுப் பசங்களுக்கே அட்டாக் வருது. நான்தான் ஒரே நேரத்துல பேரன் பேத்தின்னு இரட்டையரைப் பார்த்துட்டேனே. இது போதாதா இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு. நல்ல குடும்பம். நிம்மதியான வாழ்க்கைன்னு போயிட்டிருந்தது, உன் கேஸால மாறிருச்சி. என்னடா இப்படியொரு சோதனைன்னு நொந்துக்காத நாளேயில்லை. அன்னைக்கு என் நேரமோ என்னவோ மோனிஷா தாத்தா இறந்துட்டதா போன் வரவும், அவசரத்துல பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட, கைனகாலஜி டாக்டர் இவங்களை அழைப்பாங்க, அனுப்பி வைன்னு கிளம்பிட்டா. உங்க இரண்டு பேருக்குமே கைனகாலஜி ட்ரீட்மெண்ட்ன்றதால வந்த சிக்கல்தான் எல்லாம்.”
“ட்ரீட்மெண்ட் ஒரே இடத்துலன்றதால, அந்தப் பொண்ணையும் அங்கிருந்த பெட்ல ஒரு மணிநேரம் முன்ன சேர்த்திருக்காங்க. இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் பெயர் சொல்லி அவங்க அழைத்ததும், மோனிஷா சொல்லிட்டுப் போன பொண்ணு டாக்டரை மாத்திக் கூட்டிட்டுப் போயிட்டா. அப்பக் கூட ஊசி எதுக்குன்னு கேட்டியாம். முறை இதுதான்னு சொல்லி உன்னை அமைதிப்படுத்திட்டதா சொன்னாங்க. நான் ஒரு பத்துநாள் கழித்துதான் வந்தேன். உன்னோட உடல் காயம் ஆறினதும் தளும்பை மறைய வைக்குறதுலதான் என் முழு கவனம் இருந்தது.”
“அடுத்த நான்கு நாளைக்கெல்லாம் பீரியட்ஸ்னு அந்தப்பொண்ணு வந்தா. அவளோட கேஸ் ஃபைல் பார்த்தப்ப ஏதோ தவறா பட்டுச்சி. அதை எடுத்துப் பார்த்தப்ப ட்ரீட்மெண்ட்ல தப்பு நடந்தது தெரிய வர, சம்பந்தப்பட்ட டாக்டர்கிட்ட கேட்டப்ப, அவங்க முறையா கருவை வச்சிட்டதா சொல்றாங்க. யாருக்கு என்ன எப்படின்னு தேடிப் பார்த்தப்பதான், உனக்கு தவறான ட்ரீட்மெண்ட் பண்ணிட்டது தெரிஞ்சது. உடனே அவங்க சின்னப்பையன்கிட்ட சொன்னேன். அப்பதான் அவன் அண்ணன் சூஸைட்னு என்னவோ சொல்லி, கருத்தரிக்க வாய்ப்பிருக்கா? கேட்டான். மேக்சிமம் இல்லை. அப்பதான் டிஎன்சி பண்ணினதால வாய்ப்பு இருக்குன்னும் சொன்னேன். இப்போதைக்குக் கருத்தரிக்கலைன்னு அம்மாகிட்ட சொல்லிருங்க சொல்லிட்டான்.”
“அடுத்து நீ டிஸ்சார்ஜாகிப் போயி பத்துப் பதினைந்து நாள்ல உன்கிட்ட இருந்து நியூஸ் வரும்னு எதிர்பார்த்தேன். நீ வரலைன்னதும், சரி அப்ப குழந்தை உருவாகலைன்னு நிம்மதியா இருந்தேன். எப்படி நிம்மதியா இருக்கலாம்னு நீ வந்து நிற்கிற, பீரியட்ஸ் வரலைன்னு. அப்பதான் அபிராமி மேடம்கிட்ட சொன்னேன். கரு தங்கினதுக்கு அப்புறம் கலைக்க வேண்டாம். அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்க்கணும்னு இருக்கு. அதை நாம தடுக்க வேண்டாம். எதாவது சொல்லி உங்களை அனுப்பச் சொல்லிட்டாங்க. அடுத்து கேட்டா என்ன செய்யுறதுன்னு கேட்டப்ப, அவங்களுக்கா தெரிந்து வந்து கேட்கிறப்ப என்கிட்ட கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க. எங்க தவறுன்றதால ஹெட்கிட்ட அவங்க என்ன பேசினாங்களோ, அவங்க சொன்னதை கேட்கச்சொல்லி எனக்கு ஆர்டர் வந்தது. எனக்குதான் பார்த்துப் பார்த்து உன்னை மீட்டெடுத்த நானே பாதாளத்துல தள்ளுன குற்றவுணர்ச்சி” என்றார்.