- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
16
அன்று மாலையே ஆனந்தன் தன் மகள் ஷண்மதியை வீட்டுக்கு அழைத்து வர, அபிராமி இல்லாததால், அனுரதி கர்ப்பிணி என்பதாலும், சாந்தி ஆரத்தி எடுத்தார்.
வீட்டினுள் வந்த ஷண்மதி அங்கு அமர்ந்திருந்தவளைக் கண்டு, “அனு” என்றாள்.
“நீங்க?” என பதிலுக்குக் கேட்டவளுக்கு அங்கிருந்த புகைப்படத்தில் ஷண்மதி இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்குமான வித்தியாசம் நிறைய இருந்தது. அதனாலே யோசிக்காமல் கேட்டுவிட்டாள்.
“நான் ஷண்மதி. மதியழகன் ஒய்ஃப். அறிவழகன் அண்ணி. இந்த வீட்டு மூத்த மருமகள். என்னைத் தெரியலையா? உன்னை நான் சரியா சொல்லிட்டேன்.” என்று சொல்லி பின்னால் திரும்பி, “அப்பா அனுகிட்ட என்னைப்பற்றிச் சொல்லலையா?” என கேட்டாள்.
“அ...அது இல்லம்மா. நீ வந்ததும் சொல்லிக்கலாம்னு...” என்று ஆனந்தன் இழுக்க, “அப்ப நான் வரவே மாட்டேன்னு நினைச்சிட்டீங்கதான?” என்றவள் குரல் அழுகைக்கு மாறியது.
“அச்சோ! அப்படில்லாம் இல்லைங்க. என்கிட்ட அடிக்கடி எதோ சொல்ல வருவாங்க. நான்தான் என்ன சொல்ல வர்றாங்கன்னு கவனிக்காமல் போயிருவேன்.”
“பொய்தான?”
“ம்கூம். நிஜம். நிஜம்தான்.” ஒருசில முறை ஆனந்தன் எதோ சொல்ல வந்து, பின் எதையோ யோசித்து சென்று விடுவதைப் பார்த்திருக்கிறாள். ஏனென்று கேட்கத் தோன்றியதில்லை. ‘கேட்டிருக்க வேண்டுமோ?’ மனம் கேள்வி கேட்டது.
“என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? உட்காருங்க” என்றவள் ஆரத்தி கொட்டி உள்ளே வந்த சாந்தியிடம், “சாந்திக்கா ஒரு ஆப்பிள் ஜுஸ்” என்றுவிட்டு, “ஆப்பிள் ஜுஸ் ஓகேதானே?” என்று ஷண்மதியிடம் கேட்டு ஆனந்தனைப் பார்க்க, அவர் வேண்டாமென்று உள்ளே சென்றுவிட்டார்.
“நீ கொடுத்தால் நான் குடிக்குறேன்” என்றாள் ஷண்மதி.
“ஏன் அப்படி?” என கேட்க,
“இதோ!” என்று அனுரதியின் வயிற்றைக் காண்பித்தவள் முகத்தில் அத்தனை பிரகாசம்.
உண்மை முகத்தில் அடிக்கவும், அதுவரை இருந்த மனநிலை அப்படியே மாறிவிட்டது அனுரதிக்கு. கணவனின் அண்ணன் குழந்தை தன் வயிற்றில். இதுவரையிலும் இல்லாத ஏதோ ஒன்று அவளை அழுத்த, ஷண்மதிக்குத் தன் முகமாறுதலைக் காண்பிக்காதிருக்க மிகுந்த பிரயத்தனப்பட்டாள்.
குழந்தையின் அசைவில், ‘என் குழந்தை’ என்று எண்ணியிருந்தவள் யாரோ ஒருவனின் கரு தன் வயிற்றில் என்பதை ஏற்க மனம் மறுத்தது. என்னதான் தெரியாது நடந்த தவறென்றாலும் கணவன் இல்லாத இன்னொருவனின் குழந்தை, குமட்டிக்கொண்டு வந்தது. வேகமாக அறைக்குள் சென்று வாந்தியெடுக்க, என்னவோவென்று அவள் பின்னால் வந்த ஷண்மதி, தண்ணீர் கொடுத்து அவளைத் தாங்கி கட்டிலில் அமர வைக்க, சாந்தி கொண்டு வந்த பழச்சாறை அனுரதி கையில் கொடுத்தாள்.
வேண்டாமென்று மறுத்து, “தப்பா நினைச்சுக்காதீங்க. டயர்டாயிருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்றதும், அவளின் சோர்வு கண்டு வெளியே சென்றாள் ஷண்மதி.
வயிற்றை இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு, “இன்னைக்குதான் உன்னையும்... தாய்மைன்னா என்ன என்பதையும் உணர ஆரம்பிச்சேன். ஆனா, இப்ப? நீ... நீ எனக்கு இல்லையா குட்டி? உனக்கு நான் வெறும் வாடகைத்தாய் மட்டும்தானா? வாடகைத் தாய்னா அக்ரீமெண்ட் போட்டுருப்பாங்களே. இங்க அதைச் செய்யலைதான? அப்ப நீ எனக்குத்தான சொந்தம். உன்னை எப்படி அவங்க உரிமை கொண்டாடலாம்? தப்புதான குட்டி? நீ பிறந்ததும் அவங்க உன்னைக் கொண்டு போயிருவாங்கன்னா, உனக்காகத்தானே இந்தக் கல்யாணம். நீயே இல்லைன்னா?” மனமென்னும் பூதம் அவளைப் பயமுறுத்தி அவளை பயப்பட வைத்தது.
அனுரதிக்கு ஏழாம் மாதம் நடக்க, அதுவரை மனைவியிடம் வருவதும் பின் எதுவும் பேசாமல் செல்வதுமாய் அவனிருக்க, அவள் கவனித்தாலும் அலட்சியமாய் இருந்து கொண்டாள்.
அன்று மருத்துவமனை செல்ல தாயிடம் பேசி தானே அவளுடன் செல்வதாய் ஏற்பாடு செய்திருந்தான் அறிவழகன். ஷண்மதியும் அவர்களுடன் வருவேனென்று அடம் பிடிக்க, வேறு வழியின்றி அவளையும் தங்களுடன் அழைத்துச் சென்றான்.
“ஸ்கேன்கு கொஞ்சம் பேண்ட் லுஸ் பண்ணி விடு அனு. நான் வர்றேன்” என்ற மருத்துவர் வர்ஷா, அங்கிருந்த ஷண்மதியை வெளியே இருக்கச் சொல்ல, “மாட்டேன் நானும் என் குழந்தையைப் பார்க்கணும்” என்று அவள் அடம் பிடித்ததில் அதிர்ந்த மருத்துவர், அறிவழகனைக் காண, அவனின் அமைதியே அவரைக் கலவரப்படுத்தியது.
“பார்க்கலாம் ஷண்மதி. நான் இப்ப இவர் ஒய்ஃப் ஹெல்த் பற்றிச் சொல்லணும். ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப் பெர்சனலுக்குள்ள நீங்க எதுக்கு? நான் இவர்கிட்டயே சொல்லிருறேன்” என்றார்.
“அதை நீங்க அத்தையிடமும் என்னிடமும் தான சொல்லணும்? அத்தை கூடதான் அனு ஸ்டே பண்ணுறா. அவளைப் பற்றி அறிவுக்கு என்ன தெரியும்னு சொல்றீங்க? அவங்களுக்குள்ள பேசி கூட நான் பார்த்ததில்லை” என்றாள் பட்டென்று.
‘இதுதான் அனுவைப் பார்த்திருக்கும் லட்சணமா?’ மருத்துவர் அறிவழகனைப் பார்வையால் எரித்து, “ஷண்மதி! அவர் மனைவி கம்பர்டபுளா இருக்கணும்னு ஒதுங்கியிருப்பார். அதுக்காக விட்டுட்டு இருப்பார்னு நீங்க எப்படி நினைக்குறீங்க? அவர் அம்மா மூலமா எல்லாம் செய்திருக்கலாமே? ஏன் இன்னைக்கு அப்பாய்ட்மெண்ட்னு இவர் சொல்லிதான அவர் மனைவிக்கே தெரிஞ்சிருக்கும். ஒரே ரூம்ல இருந்தால்தான் அன்புன்னு இல்லையே ஷண்மதி. அனு எங்க இருந்தாலும் இவர் கண் அங்கதான் இருக்கும்” என்றவருக்குத் தெரியுமே அவனின் குணநலன்கள். அதுவும் மனைவியை அலட்சியப்படுத்துபவன் இல்லையென்பதை முழுதும் அறிவாரே! இருப்பினும் அவன்மேல் இந்நிமிடம் கோவம்தான்.
‘அப்படியா?’ என்பதாய் ஷண்மதி கொழுந்தனைப் பார்க்க, அவனின் விழிகள் சென்ற வழியே, ‘ஆம்’ என்றது.
அறைக்குள் படுத்திருந்த அனுரதிக்குமே கேட்கத்தான் செய்தது. தான் வேறு அறையில் தங்குவதால் கணவனுக்கான மரியாதை அங்கு குறைவதை உணர்ந்தாலும், என்ன செய்துவிட முடியும் தன்னால்? ஒரு ஆணின் அறையில் தனியே தங்கும் தைரியம் தனக்கு வருமென்றே தெரியவில்லை. இதில் ஷண்மதி வேறு குழந்தை பற்றிப் பேசிப்பேசியே அவளை ஒருவழி செய்திருக்க, மனம் உழன்று போயிருந்தாள்.
“சரிங்க ஷண்மதி. ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளில நில்லுங்க கூப்பிடறேன்” என்றனுப்பி, “என்ன அறிவழகன் இதெல்லாம்? உங்க அண்ணி இப்படிப் பேசுறாங்க. அமைதியா இருக்கீங்க? அனுவுக்காகத்தான் நீங்க தனியா இருக்கீங்கன்னு தெரியும். இல்லைன்னு சொல்லலை. அதை சுற்றி இருக்கிறவங்களுக்குப் புரிய வைக்குறது உங்க கடமையில்லையா? அட உங்க இரண்டு பேரோட உறவைக்கூட விடுங்க, என் குழந்தைன்னு இவ்வளவு உரிமையா சொல்றாங்க. குழந்தை சுமக்குறது யாருன்னு ஏன் அவங்ககிட்டச் சொன்னீங்க? அது எவ்வளவு பெரிய குற்றம்” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.
“நாங்க சொல்லலை டாக்டர். மகள் சீக்கிரம் குணமாகி வரணும்னு அவங்களைப் பார்க்கப் போகும் போதெல்லாம் மாமா சொல்லியிருப்பார் போல. நா...”
அவன் பேசுவதை கைநீட்டித் தடுத்தவர், “அப்புறமா பேசலாம். உள்ள அனு இருக்குறதை மறந்துட்டேன்” என்றார் மெதுவாக.
மனைவி எல்லாவற்றையும் கேட்டிருப்பாளே என்ற கலக்கம் அவனுள்.
ஊடுகதிர்(ஸ்கேன்) செய்யும் அறையில் அனுரதி அனுமதிக்கப்பட்டிருக்க, யாருக்கும் தெரியாது மறைவாக அறிவழகன் நின்றிருந்தான்.
குழந்தையின் அசைவைக் காண்பித்து விவரித்தவர், எல்லா சோதனையும் முடிந்ததும், “டிஷ்யூ பேப்பர் வச்சி துடைச்சி, ட்ரஸ் சேஞ்ச் பண்ணினதும் ரிசப்ஷன்ல வெய்ட் பண்ணுங்க. ரிப்போர்ட் வந்ததும் நர்ஸ் கூப்பிட வருவாங்க” என்று அனுரதி, ஷண்மதியை வெளியே அனுப்பி, அறிவழகன் இருக்குமிடம் திரும்பி இருக்கையில் அமரச்சொல்லி, “இப்பச் சொல்லுங்க அறிவழகன்?” என்றார்.
“மாமா சொன்னதிலிருந்து அனுரதி வயித்துல வளர்ற குழந்தையைத் தன் குழந்தையாகவே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல. அவள் பக்கத்துல அண்ணி இருந்தா தள்ளி வந்திருவேன். இப்ப அவங்க பேசுறதை வச்சிதான் மாமா என்ன சொல்லி சரிபண்ணியிருப்பார் தோணுது” என்றான்.
“நீங்க தப்புப் பண்ணிட்டீங்க அறிவழகன்” என்று குற்றம் சாட்ட,
“டாக்டர்!” என அதிர்ந்தான்.
“ஆமாம். அதிலும் பெரிய தப்பு. உங்க அண்ணன் மனைவி மனநிலையை நினைத்து, உங்க மனைவியை விட்டுட்டீங்க?” என்று குற்றக்கணக்கை ஏற்ற,
“பு...புரியலை டாக்டர்?” என்றவனுக்கு மனதைப் பிசைய, ஏதோ பெரிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.