- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
10
சட்டென்று மாலினியின் கையைப் பிடித்துக்கொள்ள, “என்னடா?” என்றவள் தோழியின் பார்வை போகும் வழி பார்த்து, ‘யார் இவங்க? இவங்களைப் பார்த்து இவள் ஏன் ‘பே’ன்னு நிற்கிறா?’ என நினைத்து, “யார் அனு இவங்க?” என்று கேட்டாள்.
“அ...அவங்கதான் அபிராமி” என்றதும் முதலில் புரியாது விழித்தவள், சற்று முன்புதான் அந்தப் பெயரைச் சொன்னதால், “ம்...” என தலையசைத்து மாலினி கேட்க, “ஹ்ம்...” என சம்மதமாய் பதிலளித்தாள் அனுரதி.
“ஆத்தீ பார்க்கவே டெரரா தெரியுறாங்களே” என்றாள் மெல்லிய அலறலில்.
“ப்ச்... அவங்க எங்க டெரரா தெரியுறாங்க? இந்த வயதிலும் இளமையாதான் இருக்காங்க” என்றாள் இன்னதென அறிய முடியா உணர்வில்.
“ஏய் லூசு! முகத்துல ஒரு அழுத்தம். பார்வையில் ஒரு தீவிரம் இருக்கே, அதைக் குறித்துச் சொன்னேன்” என்றாள் மாலினி.
“ஓ... அப்படிச் சொல்றியா? அப்ப சரிதான். அழுத்தமும் பிடிவாதமும் ஜாஸ்தி. ஆனா, இங்க ஏன் வந்தாங்கன்னு தெரியலையே” என கிசுகிசுப்பாகப் பேசியபடி அவர் முன் சென்று, “வா...வாங்க. இங்க ஏன்?” என்று நிறுத்தினாள்.
“இன்னைக்குக் கல்யாணப் புடவை எடுக்கணும்னு சொல்லியிருந்தேன். ஞாபகம் இருக்கா?” என்றவர் குரல் சற்று அதட்டலாகவே வந்தது.
“அ...அதான் நான் கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொன்னேன்ல. அப்புறம் எப்படி கல்யாணப் புடவை?” என்றவள் குரல் சற்று தணிந்தே வந்தது.
“ஓ... மேடம் அன்பா சொன்னா வரமாட்டீங்களோ” என்று குரலை உயர்த்தினார் அபிராமி.
‘யாத்தே! இதுதான் அன்பா? அவங்க குரலை உயர்த்தினா, நம்மாள் பம்முறா. ஹ்ம்... பரவாயில்லையே! இன்னும் கொஞ்ச நாள்ல அபிராமி... அபிராமின்னு அவங்க பின்னாடி இவளை சுத்த விட்டுருவாங்க போலிருக்கு. நமக்கெதுக்கு வம்பு. அமைதியா நின்னு வேடிக்கை பார்ப்போம். இவ்வளவு கண்டிப்பு இல்லைன்னா இவளும் கல்யாணம் பண்ணிக்கமாட்டா’ என தனக்குள்ளே பேசி அமைதியாக நின்றாள் மாலினி.
“நீங்க குரலை உயர்த்தினாலும் என்னால முடியாது” என்றாள் பதிலுக்கு.
“ஓ... அப்ப மேடம் குழந்தையோட வேற என்ன செய்யப்போறீங்களாம்?” என்றதும் அனுரதி சுற்றிலும் பார்க்க, “எங்க சுத்தினாலும் ஒரு ஈ காக்கா கூட தேறாது. இங்கிருந்தபடியே போயிட்டு வரலாம்” என அவரும் அடமாக நிற்க,
“மிரட்டி காரியத்தை சாதிக்கப் பார்க்கறீங்க” என்று அவர் மேலேயே பழியைப் போட்டாள்.
வந்த கோவத்தை அடக்கியவர், “இங்க பாரு அனு. என் பையன்தான் பொறுமைசாலி. நான் அப்படியில்லை. அப்படி என்ன மிரட்டிட்டாங்க உன்னை? நீ பேசுறதைப் பார்த்தா மிரட்டினதும் பயப்படுற மாதிரியா இருக்கு. சைலண்டா பேசுற நீ பயந்தாங்கொள்ளி, சத்தமா பேசுற நான் வில்லியா? சும்மா நேரத்தைக் கடத்தாம கிளம்பு” என்றவாறு மாலினியிடம் திரும்பியவர், “நீ இவளோட பெஸ்ட் ஃப்ரண்ட்தான? கல்யாணப் புடவை எடுக்க வர்றியாமா?” குரலை இறக்கி அன்பாகக் கூப்பிட்டார்.
‘ஹப்பா! அவளுக்குதான் டெரர் இவங்க. நமக்கில்லை’ என்ற ஆசுவாசத்தில், “அ...அது மேடம்” என்றவள் அவரின் புருவ சுருக்கலில், “இதோ கிளம்பிட்டேன் மேடம். அனுமா வா போகலாம்” என்று தோழியையும் இழுத்தாள்.
“நீங்க ரொம்ப அநியாயம் பண்றீங்க. நான் நினைச்சா மட்டும்தான் கல்யாண மேடையில் ஏற முடியும். கட்டிப்போட்டா என்னை உட்கார வைப்பீங்க?” என்றோ டிவியில் பார்த்த வசனத்தை அவரிடம் ஒப்பித்து தெனாவெட்டாக ஒரு பார்வை பார்த்தாள் அனுரதி.
‘ஆஹா! ஏன் நட்பே இப்படி? அந்தம்மாவே டெரரா இருக்காங்க. இவள் என்னடான்னா சொறிஞ்சிவிட்டு ஐடியாவும் கொடுக்குறா’ என்று நினைத்து முடிக்கும் முன், “பார்றா! இந்த ஐடியா நல்லாயிருக்கே. அப்ப கட்டிப்போட்டே கல்யாணம் செய்துக்கலாம்” என்றதும் அனுரதி விக்கித்து நிற்க, அபிராமியோ மாலினியிடம் கண்காண்பித்து முன்னே நடக்க, தோழியை இழுத்துப்பிடித்து கார் அருகில் கூட்டி வந்தவள் உள்ளே அமர்ந்திருந்த சாரதாவிடம், “அம்மா எப்படியிருக்கீங்க?” என்று நலம் விசாரித்தாள் மாலினி.
அப்பொழுதுதான் தாயைப் பார்த்த அனுரதி, “அம்மா நீங்க எப்படி இவங்களோட?” என்று கேட்டாள்.
“என் பொண்ணுக்குக் கல்யாணப் புடவை எடுக்க நான் இல்லாமலா. இன்னைக்கு இருன்னு அவ்வளவு சொன்னேன் கேட்டியா? அடம்பிடித்து ஆஃபீஸ் வந்துட்ட. அதான் காலையில் போகாம இப்ப வர்றோம். சரி வந்து உள்ள உட்காருங்க” என்றதும், கடுகடுவென்றிருந்த தோழியை உள்ளே தள்ளி தானும் அமர்ந்தாள் மாலினி.
அவர்கள் அமர்ந்ததும் சிறு சிரிப்புடன் முன்னால் அமர்ந்த அபிராமி, “காரை எடுண்ணே” என்றார்.
தங்கையின் புன்னகையில் தானும் சிரித்து வண்டியை எடுக்க, பிரபல துணிக்கடையில் போய் நின்றது.
கல்யாணப் புடவை தொடங்கி இன்னும் சில புடவைகளும், சுடிதார்களும் எடுத்து, சாரதாவிற்கும், மாலினிக்கும் அவர்களின் மறுப்பை பொருட்படுத்தாது பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்தார் அபிராமி.
அடுத்து தாலி, மெட்டி எடுத்து, இரவு உணவையும் உணவகத்திலேயே முடித்து சாரதா, அனுரதி, மாலினியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, வீடு வந்ததும் சோர்வாய் சொகுசு நாற்காலியில் அமர்ந்தார் அபிராமி.
தங்கையின் அருகில் வந்தமர்ந்த ஆனந்தன், “என்ன பேசினமா? அந்தப் பொண்ணு வாயே திறக்கலை?” என கேட்டார்.
“வாயே திறக்கலையா? நீ வேறண்ணே! அத்தனையையும் காருக்கு வர்றதுக்கு முன்னாடியே பேசி முடிச்சிட்டா. சரியான முரட்டுக் குதிரை” என்றார் சடவாக.
“அம்மா! என் பொண்டாட்டியை குதிரை சொல்லுறதே தப்பு. இதுல முரட்டுக்குதிரை ரொம்பவே தப்பு” என்று கண்டிப்புடன் தன் முன்னே அமர்ந்திருந்த கொயட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முதலாளியும், தன் மகனுமான அறிவழகனை முறைத்தபடி இருந்தார் அபிராமி.
“என்ன முறைப்பு? அவளை எப்படி அப்படிச் சொல்லலாம்” என்று மகன் கோவத்தில் கொதிக்க,
மகனின் பொய்க்கோவத்தில், “தப்பா சொல்லிட்டேன்டா” என்றதும் அவன் புன்னகைக்க, “முரட்டுக் குதிரைன்னு சொல்லியிருக்கக் கூடாது. முரண்டு பிடித்த குதிரைன்னு சொல்லியிருக்கணும்” என்றார் கடுப்பாக.
“மீ... ஒய் திஸ் கொலைவெறி? அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத பிள்ளையை, ஆஃபீஸ்ல வச்சி எப்படியெல்லாம் மிரட்டுறீங்க? பார்த்த எனக்கே பக்குன்னு ஆகிருச்சி” என்றான் நெஞ்சைப் பிடித்தபடி.
“ஆமா. அந்தம்மா அப்படியே பயந்துட்டாலும். அதிர்ந்து பேசத் தெரியாதா? சரியான சைலண்ட் கில்லர். பொறுமையில் உன்னை மிஞ்சிருவா போல. எப்படிதான் சமாளிக்கப் போறியோ போ” என்றார் கிண்டலாகவே.
“அட நீங்க வேறம்மா. உங்களுக்கு முன்னாடி என்னை வாட்டு வாட்டுன்னு வாட்டிதான் அனுப்பினா. அந்த மாலினி பொண்ணு இருந்ததால தப்பிச்சேன். இல்லைன்னா இன்னைக்கு ஃப்ரைதான்” என்றான் இளநகையுடன்.
“அதனாலதான அறிவா, அந்தப் பொண்ணையும் வேலைக்கு எடுத்த. ஆனாலும், அவங்களுக்காக இன்டர்வியூ வச்சி செலக்ட் பண்ணி, சீக்ரெட் க்ரூப்னு ஒண்ணு போட்ட பாரு. சான்ஸேயில்லைடா. அங்க நிற்கிற நீ. நம்ம கம்பெனியில மட்டும்தான் விதவிதமான போஸ்டுங்க இருக்கு. இவங்களை தனியா எடுத்தா சந்தேகம் வரும்னு, எக்ஸ்ட்ரா மூணுபேர் சேர்த்த பாரு. ஆத்தாடி! அதுங்க பண்ணுற அலப்பறை இருக்கே, அதிலும் அந்த லாவண்யா பொண்ணு விட்டா கேன்டீன்லயே கேபின் வைக்கச் சொல்லுவா போலிருக்கு” என்றார் புன்னகையுடன்.
“ம்மா... அவங்க நம்பிக்கையானவங்க. சீக்ரெட் மிஷன் இருக்கிறது ஒருவகையில் நல்லதுதான். இந்த மூணு மாசத்துல அவங்களால நமக்கு லாபம்தானே தவிர நஷ்டம் கிடையாது. வசதி இருந்திருந்தா, தனியா கம்பெனி வச்சி நடத்துற அளவு மூணுபேருமே ரொம்பத் திறமையானவங்க. அதான் மிஸ் பண்ண விரும்பாம நல்ல சம்பளத்தோட, பொறுப்பான இடத்தில் உட்கார வச்சிருக்கேன். இதுக்குப் பிள்ளையார் சுழி போட்டதே நீங்கள்தானே தாயே” என்றான் கையெடுத்துக் கும்பிட்டபடி.