• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
117
கனவு - 11

விவாகரத்து வழக்கு ஆறு மாதங்களாக இழுக்கப்பட்டு, கவுன்சிலிங், ஹியரிங் என்று அலைக்கழித்து, பின்பு அரவிந்த், மருத்துவரின் சாட்சியங்களை காட்டி ஒருவழியாக விவாகரத்து பெற வழி செய்தான்..

கோர்ட்டில் தன் அன்னையுடன் ஒட்டிக் கொண்டு நின்ற நதியாவை பார்த்த ருத்ரதேவ்வின் பார்வையை கண்ட சுதர்சனம் 'திருமணத்தின் போது இருந்தவன் தானா இவன்?!!..' என்று திகைத்தார்..

நடந்ததை எண்ணிப் பார்த்தவர், தனது செயலால் தான், மகளது வாழ்க்கையே வீணாய் போனது என்ற குற்ற உணர்ச்சியில் தனக்குள் ஒடுங்கிப் போனார்..

அனைத்தும் அவரது மனதில் ஓட.. தனது அவசர புத்தியால் மகளுக்கு அவர் இழைத்த தவறை, அவரே சரி செய்ய வேண்டும் என ஒரு முடிவெடுத்து அன்று மாலையே நதியாவின் அறை நோக்கிச் சென்றார்..

அவள் வாடிக்கையாக அமரும் அதே ஜன்னலில் அமர்ந்து வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நதியா, சத்தம் கேட்டு அறைக்கதவை தட்டிய தந்தையை திரும்பிப் பார்த்தாள்..

சுதர்சனம் மகளது அறைக்கு செல்வதை பார்த்த சரஸ்வதியும், அவரை பின்தொடர்ந்து வந்தவர், கதவோரம் நின்று நடப்பதை கவனிக்கலானார்..

"நதியா!!.."என்ற தந்தையின் அழைப்பில் கேள்வியாக அவள் அவரை பார்க்க, எப்படி தொடங்க என தயங்கியவர், "அது வந்து..... " என இழுக்க,

அவரது தயக்கத்தை உணர்ந்த நதியா வாய் திறந்து, "என்னப்பா?!!.." என்றிட, மகள் வெகு மாதங்களுக்கு பிறகு தன்னை 'அப்பா' என்று அழைத்ததில் கண்கள் கலங்கியது அவருக்கு..

மிலிட்டரி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தொண்டையை செருமிக் கொண்டு, "ஏன் இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்க மா?!.. வெளியே எங்கேயாவது போயிட்டு வரலாமே!.." என அன்போடு கேட்க சரஸ்வதி நடப்பதை 'ஆ'வென்று பார்த்திருந்தார்..

"எங்கேயும் போக பிடிக்கலை!.." விட்டேற்றியாக பதிலளித்த மகளிடம் எப்படி ஆரம்பிக்க எனத் தெரியாமல் விழித்தவர், ஆழ மூச்சிழுத்துவிட்டு,

"வந்து....உன்னோட லைஃப் இந்த அப்பாவோட முடிவால தானே இப்படி ஆகிடுச்சு!.. அதனால..." எப்படி சொல்வது என தயங்கியவர் நிறுத்த,

எப்போதும் எதற்காகவும் தயங்காமல், தான் நினைத்ததை பேசுவதும், செய்வதும் வழக்கமாக கொண்ட சுதர்சனம் இன்று பேச தயங்குவதை கண்டு, தாயும் மகளும் புரியாமல் பார்த்தனர்..

"அப்பாவா எடுத்த முடிவு தான் அலங்கோலம் ஆகிடுச்சு!.. அதனால.. நீ லவ் பண்ணுன அந்த பையன் யார்னு சொல்லு!.. நான் அவன் கிட்ட பேசி சம்மதிக்க வைச்சு.." என்று தயக்கத்துடன் நிறுத்தி,

பின்பு, "உன்னோட விருப்பப்படி அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!.." என ஒருவழியாக தான் சொல்ல வந்ததை முழுதாய் சுதர்சனம் சொல்லி முடிக்கவும்..

அவர் என்னவோ சொல்ல வருகிறார் என கவனமாக பார்த்துக் கொண்டு இருந்த நதியா, அவர் தயங்கி தயங்கி முழுதாக சொல்லி முடித்ததும்,

அவர் சொன்னதை கேட்டு அவளுக்கு சிரிப்பு வர, "ப்ப்ப்...ஹா..ஹா..." என சத்தமிட்டு சிரிக்க தொடங்க.. கதவருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி,

'இந்த மனுசனை வச்சுகிட்டு.... ஹையோ!..ஹையோ!.' என்று தலையிலடித்துக் கொண்டாலும்.. வெகு மாதங்களுக்கு பிறகு மகளது சிரிப்பு சத்தம் அவரை மகிழ்வித்தது..

"ஏன் மா சிரிக்கிற?!.. நான் அவன்கிட்ட பேசறேன்!.. என்னால தான் நீ இந்த கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு னு அவனுக்கு புரிய வைக்கிறேன்!.." என அவசரமாக கூறியவர்,

"அவன் உன்னை உண்மையாவே லவ் பண்ணி இருந்தா கண்டிப்பா உன்னை ஏத்துக்குவான் டா!.." என்று அவளுக்கு தனது எண்ணத்தை புரிய வைத்திடும் நோக்குடன் அவர் பேசினார்..

அவர் பேசப்பேச சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் இருந்தவள், "போதும் ப்பா!.. இதுக்கு மேல காமெடி பண்ணாதீங்க!.. என்னால முடியல!.." என அடக்க மாட்டாமல் சிரிப்புடன் சொன்னாள்..

"அப்பானால முடியாது னு நினைக்கிறியா மா?!.. அவன் யாரா இருந்தாலும் சொல்லு டா!!.." என்று அவர் வேகமாகக் கேட்க,

"அப்படி ஒருத்தன் இருந்தா தானேப்பா சொல்றதுக்கு!!!?.." என்ற மகளது கேள்வியில் சுதர்சனம் குழம்பிப் போய்,"என்ன மா சொல்ற!!?.."எனக் கேட்டார்..

"நீங்க கம்பெல் பண்ணி தான் இந்த மேரேஜ் நடந்தது னு நினைச்சுட்டு இருக்கீங்களா?!.." என்ற மகளின் கேள்வியில் ஒன்றும் புரியாமல் சுதர்சனம் விழிக்க,

சரஸ்வதியோ 'பெண் பார்க்க வருவதையே தடுத்து நிறுத்துவதாக கூறிய மகள், ஏன் திருமணத்தை நிறுத்த முயலவில்லை?!' என்று நெடுநாளாக அவரை உறுத்திய கேள்விக்கு இப்போது மகளது பேச்சு மூலமாக விடையை கேட்பதற்கு ஆர்வமானார்..

வெகு நாட்களுக்குப் பிறகு வாய் விட்டு சிரித்ததில் மனம் லேசாக, "நீங்க சொல்றீங்க ங்கறதுக்காக எல்லாம் நான் மேரேஜ் பண்ண சம்மதிப்பேனா ப்பா?!.." என அவளது இயல்பான துடுக்குத்தனம் வெளிப்பட அவள் கேட்டதும் , சிறு முறைப்புடன் அவர் பார்க்க,

சிறிதாய் நாக்கை கடித்தவள் முகம், சில நொடிகளில் வேதனையுடன், "நான் ஒன்றை எதிர்பார்த்து செய்த மிகப்பெரிய தவறு அது!.. அதுக்காக நான் நிறையவே இழந்துட்டேன்!.." என மனம் கனத்துப் போய் கூறினாள் நதியா..

"என்ன மா சொல்ற?!.. ஒன்னுமே புரியல!.." என சுதர்சனம் கேட்கவும், இப்போது சரஸ்வதியும் அறைக்குள் வந்து, "அப்படி என்ன டா பாப்பு எதிர்பார்த்த நீ?!.. அம்மா கிட்ட கூட சொல்லலையே!!?.." என தவிப்போடு கேட்டார்..

"அதெல்லாம் முடிஞ்சு போன கதைம்மா!.." என்று அந்த பேச்சிற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தவள், தந்தையின் முதல் பேச்சிற்கு தாவினாள்..

"நீங்க நினைக்கிற மாதிரி அப்படி யாரையும் நான் லவ் பண்ணல ப்பா!.. அன்னிக்கு காலேஜ்ல நீங்க பார்த்தது...." என ஆரம்பித்து அவள் அன்றைய நிகழ்விற்கான விளக்கத்தை கூற, சுதர்சனத்திற்கு, 'அடக்கடவுளே!!!' என்று இருந்தது..

"அன்னிக்கு நீங்க காலேஜ்ல ராகுல் ரோஸ் கொடுக்கறத பார்க்காம இருந்தாலும், இவனை தானே எனக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தீங்க!!?.." என்ற நதியாவின் கேள்விக்கு, அவர் ஆமோதிக்க,

"அப்படினா என் விதி இப்படி தான் இருக்கும் போல.. அதான் நானும் ஏமாந்துட்டேன்!.. அதனால நீங்க ஒன்னும் கில்ட்டியா ஃபீல் பண்ண வேண்டாம் ப்பா!.." மகளது பேச்சில் நெஞ்சில் அழுத்திய குற்ற உணர்வு நீங்க, சற்று முகம் தெளிந்தார் சுதர்சனம்..

ஆனாலும் இன்று இதை பேசி சரி செய்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு சரஸ்வதி," அப்றம் நீயேன் டா பாப்பு இப்படி ஃபீல் பண்ணிட்டு ரூம்லேயே அடைஞ்சு கிடக்கிற!?.." கேட்டார்..

"உன்னை இப்படி பார்க்க பார்க்க எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?!.. 'ம்மீ!.. ம்மீ!..' னு என்னைய சுத்திட்டு இருந்த நதியாவை காணாம ரொம்பவே என் மனசு தவிக்குது கண்ணம்மா!.." என

கண்ணீருடன் கூறிய தாயை ஓடிவந்து அணைத்தவள்,"ஸாரி ம்மா!.." என்று தன் செயலால் அவர் வேதனை அடைந்ததற்கு மன்னிப்பு வேண்டினாள்..

"என் மனசு இன்னும் அந்த காயங்களில் இருந்து வெளியே வர மாட்டீங்குது ம்மா!.. உங்க எல்லாருக்காக வாவது நான் இதுல இருந்து சீக்கிரமே சரியாகிடுவேன்!.. ப்ளீஸ்!.. அதுவரை எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க!.." என அவள் கெஞ்சுவது போல கேட்டாள்..

சுதர்சனம் தனது மனபாரம் நீங்கி, "உனக்கு ஒரு சேன்ஜ் க்கு வேணும்னா ஊருக்கு போய் பாட்டி வீட்ல கொஞ்சநாள் இருந்துட்டு வர்றியா மா?!.." எனக் கேட்டதும் தாயும் மகளும் ஆனந்தமாக அதிர்ந்தனர்..

"ஆனா அப்பா..." என ஏதோ சொல்ல வந்த மகளை கையமர்த்தி, "வீணாப் போன வீம்பை இன்னும் இழுத்து வச்சுட்டு என்ன பண்ண போறேன் மா!.. சொந்தங்களோட அருமை வாழ்க்கைல அடிபடும் போது தான் தெரியுது!.." என பெருமூச்சு விட்டவர்,

"அந்த குடும்பத்து மேல இருந்த கோபத்தை எல்லாம் விட்டுட்டேன்!.." என சொன்னதும், சரஸ்வதியின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது..

மகளுக்கு பிடித்த இடமான அங்கே சென்றாலாவது அவள் மகிழ்வுடன் இருப்பாள் என்ற எண்ணத்தில் தனது வீம்பை விட்டுக்கொடுத்தார்..

அவர் தன் மனதை மாற்றிக் கொண்டு யாரும் அறியாதவாறு தன் கண்களை நாசூக்காக துடைத்துக் கொண்டே வெளியேற, வழியில் நின்ற மகனை கண்டும் காணாமல் சென்றார்..

சுதர்சனம் வெளியேறியதும், தனது தாய் வீட்டை எண்ணி சரஸ்வதி இன்னும் ஆனந்த கண்ணீரோடு நிற்க, தாயின் அருகே வந்த நதியா அவரது நிலையை உணர்ந்து அணைத்துக் கொண்டாள்..

அன்று விரைவிலேயே பணி முடிந்து வந்த அரவிந்த், வழக்கம் போல ஹாலில் உட்கார்ந்திருக்கும் தாயை காணாமல் பேச்சு சத்தம் வந்த நதியாவின் அறைக்கு வந்தவன்,

தாயும் மகளும் மட்டும் கட்டிக் கொண்டு பாசத்தை பொழிந்ததில் சிறு பொறாமையுணர்வு தலை தூக்க, "க்கும்!.." என தொண்டையை செருமி தன் இருப்பை உணர்த்தினான்..

"உனக்கு முன்னால பொறந்தவன்.. என் பின்னால நிக்கிறான் போல.." என மகளிடம் மெல்லிய சிரிப்புடன் கிண்டலாகக் கூறிவிட்டு, எதுவும் கேட்காதது போல நின்றார் சரஸ்வதி..

தாய் திரும்பாததை கண்டு சற்று எரிச்சலுடன், "உங்க கொஞ்சலை முடிச்சிட்டா, எனக்கு போய் டீ போடுறீங்களா?!.." என சற்று சத்தமாக கேட்டான் மகன்..

"அடடே!!!.. அரவிந்தா!!.. நீ எப்போ பா வந்த!?.. எனக்கு தெரியவே இல்ல பாரேன்!.." என ஆச்சர்யத்துடன் கேட்ட தாயை முறைத்தவன், "நம்பிட்டேன்!!.. போய் டீ போடுங்க!.." என வெளியே கையை காட்டி அவரை விரட்டினான்..

'ம்ஹ்ம்' என தாடையை தோளில் இடித்து பழிப்பு காட்டியவர் வெளியேறி விட, செல்லும் அவரை பார்த்தவன் இதழ்கள் மி.மீ அளவு விரிந்தது..

சரஸ்வதி வெளியே சென்றதும் தன் தங்கை அருகே வந்தவன், அவளது தலையை பாசமாக தடவிக் கொண்டு புன்சிரிப்புடன்,

"நடந்து முடிஞ்சதை பாஸிங் க்லௌட்ஆ மறந்துட்டு.. அடுத்து என்ன னு யோசி பப்பிமா!.. யாரோ ஒருத்தனுக்காக உன்னோட இயல்பை தொலைக்காதே டா!.. " என அறிவுரைத்த சகோதரனை ஆச்சர்யமாக பார்த்த தங்கை..

பின்பு,"நீ ரொம்ப மாறிட்ட ண்ணா!.. ஒன் வேர்ட் ஆன்ஸர்ல இருந்து டூ லைன் ஆன்ஸர் க்கு வந்துட்ட போல!.." என சில மாதங்களாய் குட்டி தங்கையிடம் காணாமல் போயிருந்த குறும்பு வெளிப்பட,

அவளை செல்லமாக கொட்டியவன், "மாற்றம் ஒன்னு தான் மாறாதது!.." என்றவன், "என்னை கலாய்க்க இந்த வாயாடி துணைக்கு இல்லையே னு உன் சச்சும்மா க்கு தான் ரொம்ப வருத்தமாம்!.." என சிறு சிரிப்புடன் கூறிவிட்டு வெளியேறினான்..

தனது சோகத்திலேயே மூழ்கி இருந்ததால் வீட்டிலிருந்தவர்களை பற்றி யோசிக்காமல் போனோமே என எண்ணிய நதியா, தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தாள்.

பிறந்தது முதல் நதியா தன் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை, மூவரும் சரஸ்வதியின் தாய் வீட்டில் தான் இருந்தனர். சுதர்சனம் ராணுவத்தில் இருந்த காலம் அது!

அனைத்து சொந்தங்களின் வீடுகளும் சூழ இருக்க, அவள் பிறந்தது முதல் அனைவரின் செல்லமும் அவள்தான். அவளது சேட்டைகளை அறியாதவரே இல்லை.

தந்தை ராணுவத்திலிருந்து வந்த சில தினங்களில் திடீரென ஒருநாள் அங்கிருந்து சென்னை கிளம்ப வேண்டும் என கண்ணீருடன் தாய் சொன்னதும் நதியா அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் அவளது நினைவில் வந்து போனது.

இப்போது.. ஒரு மாற்றத்திற்காக பாட்டி வீட்டில் இருக்க சொல்லி தந்தையே சொன்னதும் மீண்டும் அந்த சூழலில் இருக்கப் போவதை எண்ணி அவளது மனம் பழைய நினைவுகளில் சுகமாய் வலம் வந்து கொண்டிருக்க,

தந்தை மனம் மாறிய விசயம் தெரியாமலே அங்கே ஒருவன் ஏக்கத்துடன் அதே நினைவுகளில் மூழ்கி இருந்தான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top