Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
இதயத்தில் ஏதோ ஒன்று!
ஒவ்வொரு உராய்விலும் இந்த உலகத்தின் அசைவுகள் அவனைப் பற்றிய சிந்தனைகளையும், நியாபங்களையுமே மீட்டிவிட்டுச் செல்கிறது. என் உலகின் எல்லா திசைகளிலுமே அவன் நடந்து சென்ற கால்தடங்கள் இன்னும் அப்படியே படிந்திருக்கிறது, நான் இழுக்கும் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் அவன் வாசம் மட்டும்தான் நிறைந்திருக்கிறது.
என் ஆசை கீதங்கள் எல்லாம் அவன் பெயரைத்தான் உச்சரிக்கிறது. என்னைப் பற்றி எழுதிய புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
வழக்கம் போல அன்றும் இரவு உணவு விடுதியில் கழிக்க நேரிட்டது. தட்டில் உணவேந்தியபடி அமர்ந்து ஆளுக்கு ஆள் ஏதாவதொரு கதை பேசி சிரித்துக் கொள்வோம். அதன் பட்சத்தில் அந்நாள் வேலையலுப்பு அத்துடனே உற்சாக ஒலியாய் உருமாறி காற்றில் கரைந்து மறைந்துவிடும்.
அந்த நாள் பேச்சு வழக்கு, தலைப்பை காதலின் பக்கம் இழுத்துச் சென்றது. அனைவரும் பகிர்ந்து கொண்டார்கள் என்னைத் தவிர. என்னிடம் யாரும் இதை பற்றி கேட்கவில்லை. ஒரு வேளை கேட்டிருந்தாலும் சொல்லியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.
அவர்கள் என்னுடைய காதல் கதை பற்றி கேட்காமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கும். ஒன்று என்னுடைய புறத் தோற்றம். மற்றொன்று மற்றவர்களிடம் என்னை அதிகமாக காட்டிக் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே என்னை நான் வைத்திருப்பது. இவ்விரண்டையும் தாண்டி வேறு எதாவது காரணம் இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
காதலைப் பற்றி கதைக்கத் தொடங்கினால் நேரம் காலம் போவதே தெரியாது அல்லவா?. இரவு உணவு முடித்துவிட்டு அறைக்கு படுக்கச் சென்ற போதும் கூட எங்கள் அனைவரின் போர்வையின் மீதும் காதல் படர்ந்து கொண்டது. அதே தலைப்பு இன்னும் சுவாரஸ்யமாக நீண்டது. அனைவரும் பேரார்வத்துடன் பகிர்ந்தபடியே காதலால் சற்று சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அங்கிருந்த ஒருத்தி மட்டும் “ரூபா நீ இப்ப பாக்க எப்படி இருக்க தெரியுமா?” என்று என்னை நோக்கி வினாவினாள்.
“இன்ட்ரெஸ்டா பேசிட்டு இருக்கும் போது என்னடி தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்க? கொஞ்சம் அமைதியா இரு” என்று சொல்லி கேள்வி கேட்டவளின் வாயடைக்க முயன்றாள் இன்னொருத்தி. ஆனாலும் அவள் விடுவதாக இல்லை. அவள் மனதில் தோன்றியதை சொல்லியே ஆக வேண்டும் என்ற முனைப்புடனே என்னைப் பார்த்து அவள் சொல்ல வந்ததை சொல்ல முற்பட்டாள். சரி சொல் என்ற வார்த்தை என் வாயிலிருந்து அவிழ்ந்த அடுத்த கனமே அத்தனை பேர் முன்னிலையிலும் எந்த வித சுய அறிவும் தயக்கமும் இல்லாமல் “நீ பாக்குறதுக்கு புருஷன இழந்துட்டு இருப்பாங்கல்ல அனாத மாதிரி அந்த மாதிரியே கை, கால், காதுல எல்லாம் ஒன்னும் போடாம பொட்டும் வைக்காம ஒரு மாதிரி இருக்க” என்று கூறிவிட்டாள்.
அவள் பேசிய வார்த்தைகள் என் காதுகளைச் சென்றடைந்த அந்த நொடி நான் மூச்சடைத்துப் போய்விட்டேன். என் மனதிற்கும் உயிருக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டது போல நிலை புரியாமல் கண்கள் கலங்கியபடி அவளையே வெறிக்கப் பார்த்தேன்.
என் முக மாற்றத்தைக் கவனித்தவர்கள் “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல எப்போ எத பேசனும்னே உனக்குத் தெரியாது. எல்லாரும் இப்போ எதப்பத்தி பேசிட்டு இருக்கோம் நீ எதப்பத்தி பேசிட்டு இருக்க?” என்று முகம் சுழித்தபடியே கேட்க... அவளும் இதை பெரிதுபடுத்தாமல் அமைதியானாள்.
சலிக்காமல் சிரித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இப்படியொரு சலசலப்பு ஏற்பட்டவுடன் அனைவரும் ஆர்வம் இழந்து தூங்கச் சென்றுவிட்டார்கள்.
எனக்கு அங்கு நடந்த நிகழ்வுகளைத் தாண்டி வேறு சில சம்பவங்களும் என் கழுத்தை இருக்கிப் பிடித்திருப்பது போலத் தோன்றியது. அவற்றின் கைகளையும் என்னால் விலக்க முடியவில்லை கத்தி அழவும் முடியவில்லை. என் தலையின் மேல் பெரிய பாரம் ஒன்று சுழன்று கொண்டிருப்பது போல இருந்தது.
எந்தவொரு சிக்கலான மனநிலையிலும் சிறந்த தோழியாக தேநீர்தான் என்னுடன் இருந்திருக்கிறது. அன்றும் அப்படித்தான். தேநீர்க் கோப்பையை என் இடது கையில் பிடித்தபடியே இன்ஸ்டாகிராம் ரீல்ஸை என் வலது கை கட்டை விரலால் சுழற்றிக் கொண்டிருந்தேன். அவ்வளவு நெருக்கடியிலும் கூட இந்த பிரபஞ்சம் அவனைப் பற்றிய நினைவுகளை என்னிடம் குவித்தபடியேதான் இருந்தது.
நான் தேநீர் அருந்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் நான் பார்த்த ஒரு ரீல்ஸ் என் கண்ணீரை மீண்டும் ஒரு முறை கட்டவிழ்த்துவிட்டது. அது ஒரு அழகான இனிமையான காட்சியுடன் கூடிய ஒரு காதலை மையப்படுத்திய வீடியோ. எப்போதும் வீடியோ பார்ப்பதைக் காட்டிலும் அதற்கு வரும் விமர்சனங்களை வாசிப்பதில் ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி நான் பார்த்த ஒரு விமர்சனம் என்னை, என் காதலை அது உரியவரை நோக்கி பயணம் செய்ய வைக்க ஒரு உந்துதலாக இருந்தது.
“சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று நான் பம்பாயில் அவளைப் பார்த்தேன். வெறும் பத்தே பத்து நொடிகள்தான். எந்த மாற்றமும் இல்லை அப்படியேதான் இருந்தாள். அவளைப் பார்த்த அந்த பத்து நொடிக் காட்சி படச்சுருள் போல் என் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் சிகரெட்டை இழுத்தபடியேதான் இந்த வீடியோவைப் பார்த்து அவள் நினைவில் சிலாகித்து இந்த விமர்சனத்தை பதித்துக் கொண்டிருக்கிறேன். இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இப்பொழுது அவளைப் பார்த்த அதே ரோட்டில்தான் நின்று கொண்டிருக்கிறேன். மற்றொருவரால் அறியப்படாத ஒருவருடைய காதலின் தவிப்பு எத்தனை கொடுமை தெரியுமா?. காதல் இம்சிக்கிறது” என்று அந்த விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தது. அதை வாசித்துக் கொண்டிருக்கும் போதே குடித்துக் குறைத்த கோப்பைத் தேநீரின் அளவை என் கண்ணீர் நிரப்ப முற்பட்டது.
என் மேல் எனக்கிருந்த அதே பரிதவிப்பு அந்த விமர்சகருக்கும் பகிரப்பட்டது. என்னைப் போலவே மற்றொருவர் இதே பூமியில் இன்னும் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று பெருமூச்சு விட்டேன். அதே சமயம் அந்த விமர்சனமிட்ட நேரத்தையும் கவனித்தேன். அந்த விமர்சனம் சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத்தான் போடப்பட்டு இருந்தது. அவர் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்த அதே பம்பாயில்தான் நானும் இருக்கிறேன் என்பது என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.
என்ன மாற்றமோ தெரியவில்லை தேநீரின் சுவை என் நாக்கில் கூரவே இல்லை இந்த நிகழ்விற்குப் பின்னால். தேநீரில் கலந்து இருந்த என் கண்ணீரின் உவர்ப்பாலா? இல்லை மனக்கசப்பாலா? என்பது பற்றி எல்லாம் எனக்குத் தெளிவு இல்லை. அதனால், குவளையை அப்படியே குறை தேநீரோடு வைத்து விட்டு படியேறி என் அறைக்குள் சென்றேன். அங்கு எனக்கு முன்பாகவே ஒருத்தி உள்ளே நுழைந்திருந்தாள்.
“ரூபா... சாரி என்னைய மன்னிச்சிரு”
“ஏன்? “
“நான் உன்ன ஒரு மாதிரி தப்பா பேசிட்டேன்ல”
“என்னோட அனுமதி இல்லாம ஏன் என் ரூம்க்கு உள்ள வந்த நீ?”
“நான் அப்படி பேசுனது தப்புதான? என்ன மன்னிச்சிட்டேனு ஒரு வார்த்த சொல்லு. உன் முகம் மாறுனத பாத்து எல்லாருமே பயந்துட்டாங்க. நீ எப்பவும் இந்த மாதிரி ஆனதே இல்லனு பேசிகிட்டாங்க. அதுனால உன்னைய தனியா விட எனக்கு பயமா இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் உன் கூட தூங்குறேன் வேணானு மட்டும் சொல்லிறாத “
“நான் ஒன்னும் செத்து போயிற மாட்டேன். இந்த மூனு வருஷமா தனியாவே இருந்த எனக்கு இந்த முழு நைட் தனியா இருக்கத் தெரியாதா? “
“அது இல்ல”
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் முகத்தில் அறைந்தது போல சட்டென்று அவளை வெளியே தள்ளி அறையின் கதவை அடைத்துக் கொண்டேன். நான் அன்று அப்படி நடந்து கொண்டேன் என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை. ஆனால் அன்றைத் தவிர எப்போதும் நான் அப்படி நடந்து கொண்டதேயில்லை என்று மட்டும் தெரியும். அன்று அப்படி ஒரு தாளாத கோபம் அனைவரின் மேலும். என்மேலும்தான்.
இருட்டில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்த நான். மீண்டும் ஒரு இருட்டுக் குழிக்குள் நானே வேண்டுமென்றே விழுந்தேன். விடுதியில் அனைவரிடம் இருந்தும் என்னை விலக்கிக் கொண்டேன்.
ஒரு வாரம் கழித்து ஒரு நாள் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்த போது என் தலையின் மேல் கருப்பு நிழல் பட்டது போன்று இருந்தது. தொட்டுப் பார்த்தேன் கையில் உறுத்தியது. முழுவதுமாக வழித்தெடுத்த என் தலையில் முடிகள் வளரத் தொடங்கியதால் பார்லர் சென்று முடியை மீண்டும் வழித்தெடுக்கச் சென்றேன். கடந்த மூன்று வருடங்களாக ஒரே பார்லரில்தான் இந்த காரியத்தை நான் செய்து வருகிறேன். வேறெங்கும் செல்ல எனக்குப் பிரியம் இருக்காது. காரணம், இங்கு மட்டும்தான் நான் ஏன் இப்படி செய்கிறேன்? என்ற கேள்வியே கேட்டது இல்லை.
வேலையை முடித்துவிட்டு பார்லரில் கண்ணாடிக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போது சிகரெட்டின் புகை என் மூக்கைத் துளைத்ததும் யார் என்று எரிச்சலில் என் இடப்புறம் திரும்பிப் பார்த்தேன். அவரைப் பார்த்ததும் ஒரு வேளை இந்த நாள் நம் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
யாரைப் பார்க்க கூடாது என்று பல மயில் தூரம் கடந்து வந்து ஊர் பேர் தெரியாத இடத்தில் வந்து வாழ்ந்தேனோ... வாழ்க்கை என்னை மீண்டும் அவர் முன்னே கொண்டு நிறுத்தியது.