• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
இதயத்தில் ஏதோ ஒன்று!



ஒவ்வொரு உராய்விலும் இந்த உலகத்தின் அசைவுகள் அவனைப் பற்றிய சிந்தனைகளையும், நியாபங்களையுமே மீட்டிவிட்டுச் செல்கிறது. என் உலகின் எல்லா திசைகளிலுமே அவன் நடந்து சென்ற கால்தடங்கள் இன்னும் அப்படியே படிந்திருக்கிறது, நான் இழுக்கும் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் அவன் வாசம் மட்டும்தான் நிறைந்திருக்கிறது.

என் ஆசை கீதங்கள் எல்லாம் அவன் பெயரைத்தான் உச்சரிக்கிறது. என்னைப் பற்றி எழுதிய புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

வழக்கம் போல அன்றும் இரவு உணவு விடுதியில் கழிக்க நேரிட்டது. தட்டில் உணவேந்தியபடி அமர்ந்து ஆளுக்கு ஆள் ஏதாவதொரு கதை பேசி சிரித்துக் கொள்வோம். அதன் பட்சத்தில் அந்நாள் வேலையலுப்பு அத்துடனே உற்சாக ஒலியாய் உருமாறி காற்றில் கரைந்து மறைந்துவிடும்.

அந்த நாள் பேச்சு வழக்கு, தலைப்பை காதலின் பக்கம் இழுத்துச் சென்றது. அனைவரும் பகிர்ந்து கொண்டார்கள் என்னைத் தவிர. என்னிடம் யாரும் இதை பற்றி கேட்கவில்லை. ஒரு வேளை கேட்டிருந்தாலும் சொல்லியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.

அவர்கள் என்னுடைய காதல் கதை பற்றி கேட்காமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கும். ஒன்று என்னுடைய புறத் தோற்றம். மற்றொன்று மற்றவர்களிடம் என்னை அதிகமாக காட்டிக் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே என்னை நான் வைத்திருப்பது. இவ்விரண்டையும் தாண்டி வேறு எதாவது காரணம் இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

காதலைப் பற்றி கதைக்கத் தொடங்கினால் நேரம் காலம் போவதே தெரியாது அல்லவா?. இரவு உணவு முடித்துவிட்டு அறைக்கு படுக்கச் சென்ற போதும் கூட எங்கள் அனைவரின் போர்வையின் மீதும் காதல் படர்ந்து கொண்டது. அதே தலைப்பு இன்னும் சுவாரஸ்யமாக நீண்டது. அனைவரும் பேரார்வத்துடன் பகிர்ந்தபடியே காதலால் சற்று சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அங்கிருந்த ஒருத்தி மட்டும் “ரூபா நீ இப்ப பாக்க எப்படி இருக்க தெரியுமா?” என்று என்னை நோக்கி வினாவினாள்.

“இன்ட்ரெஸ்டா பேசிட்டு இருக்கும் போது என்னடி தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்க? கொஞ்சம் அமைதியா இரு” என்று சொல்லி கேள்வி கேட்டவளின் வாயடைக்க முயன்றாள் இன்னொருத்தி. ஆனாலும் அவள் விடுவதாக இல்லை. அவள் மனதில் தோன்றியதை சொல்லியே ஆக வேண்டும் என்ற முனைப்புடனே என்னைப் பார்த்து அவள் சொல்ல வந்ததை சொல்ல முற்பட்டாள். சரி சொல் என்ற வார்த்தை என் வாயிலிருந்து அவிழ்ந்த அடுத்த கனமே அத்தனை பேர் முன்னிலையிலும் எந்த வித சுய அறிவும் தயக்கமும் இல்லாமல் “நீ பாக்குறதுக்கு புருஷன இழந்துட்டு இருப்பாங்கல்ல அனாத மாதிரி அந்த மாதிரியே கை, கால், காதுல எல்லாம் ஒன்னும் போடாம பொட்டும் வைக்காம ஒரு மாதிரி இருக்க” என்று கூறிவிட்டாள்.

அவள் பேசிய வார்த்தைகள் என் காதுகளைச் சென்றடைந்த அந்த நொடி நான் மூச்சடைத்துப் போய்விட்டேன். என் மனதிற்கும் உயிருக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டது போல நிலை புரியாமல் கண்கள் கலங்கியபடி அவளையே வெறிக்கப் பார்த்தேன்.

என் முக மாற்றத்தைக் கவனித்தவர்கள் “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல எப்போ எத பேசனும்னே உனக்குத் தெரியாது. எல்லாரும் இப்போ எதப்பத்தி பேசிட்டு இருக்கோம் நீ எதப்பத்தி பேசிட்டு இருக்க?” என்று முகம் சுழித்தபடியே கேட்க... அவளும் இதை பெரிதுபடுத்தாமல் அமைதியானாள்.

சலிக்காமல் சிரித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இப்படியொரு சலசலப்பு ஏற்பட்டவுடன் அனைவரும் ஆர்வம் இழந்து தூங்கச் சென்றுவிட்டார்கள்.

எனக்கு அங்கு நடந்த நிகழ்வுகளைத் தாண்டி வேறு சில சம்பவங்களும் என் கழுத்தை இருக்கிப் பிடித்திருப்பது போலத் தோன்றியது. அவற்றின் கைகளையும் என்னால் விலக்க முடியவில்லை கத்தி அழவும் முடியவில்லை. என் தலையின் மேல் பெரிய பாரம் ஒன்று சுழன்று கொண்டிருப்பது போல இருந்தது.

எந்தவொரு சிக்கலான மனநிலையிலும் சிறந்த தோழியாக தேநீர்தான் என்னுடன் இருந்திருக்கிறது. அன்றும் அப்படித்தான். தேநீர்க் கோப்பையை என் இடது கையில் பிடித்தபடியே இன்ஸ்டாகிராம் ரீல்ஸை என் வலது கை கட்டை விரலால் சுழற்றிக் கொண்டிருந்தேன். அவ்வளவு நெருக்கடியிலும் கூட இந்த பிரபஞ்சம் அவனைப் பற்றிய நினைவுகளை என்னிடம் குவித்தபடியேதான் இருந்தது.

நான் தேநீர் அருந்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் நான் பார்த்த ஒரு ரீல்ஸ் என் கண்ணீரை மீண்டும் ஒரு முறை கட்டவிழ்த்துவிட்டது. அது ஒரு அழகான இனிமையான காட்சியுடன் கூடிய ஒரு காதலை மையப்படுத்திய வீடியோ. எப்போதும் வீடியோ பார்ப்பதைக் காட்டிலும் அதற்கு வரும் விமர்சனங்களை வாசிப்பதில் ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி நான் பார்த்த ஒரு விமர்சனம் என்னை, என் காதலை அது உரியவரை நோக்கி பயணம் செய்ய வைக்க ஒரு உந்துதலாக இருந்தது.

“சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று நான் பம்பாயில் அவளைப் பார்த்தேன். வெறும் பத்தே பத்து நொடிகள்தான். எந்த மாற்றமும் இல்லை அப்படியேதான் இருந்தாள். அவளைப் பார்த்த அந்த பத்து நொடிக் காட்சி படச்சுருள் போல் என் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் சிகரெட்டை இழுத்தபடியேதான் இந்த வீடியோவைப் பார்த்து அவள் நினைவில் சிலாகித்து இந்த விமர்சனத்தை பதித்துக் கொண்டிருக்கிறேன். இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இப்பொழுது அவளைப் பார்த்த அதே ரோட்டில்தான் நின்று கொண்டிருக்கிறேன். மற்றொருவரால் அறியப்படாத ஒருவருடைய காதலின் தவிப்பு எத்தனை கொடுமை தெரியுமா?. காதல் இம்சிக்கிறது” என்று அந்த விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தது. அதை வாசித்துக் கொண்டிருக்கும் போதே குடித்துக் குறைத்த கோப்பைத் தேநீரின் அளவை என் கண்ணீர் நிரப்ப முற்பட்டது.

என் மேல் எனக்கிருந்த அதே பரிதவிப்பு அந்த விமர்சகருக்கும் பகிரப்பட்டது. என்னைப் போலவே மற்றொருவர் இதே பூமியில் இன்னும் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று பெருமூச்சு விட்டேன். அதே சமயம் அந்த விமர்சனமிட்ட நேரத்தையும் கவனித்தேன். அந்த விமர்சனம் சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத்தான் போடப்பட்டு இருந்தது. அவர் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்த அதே பம்பாயில்தான் நானும் இருக்கிறேன் என்பது என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.

என்ன மாற்றமோ தெரியவில்லை தேநீரின் சுவை என் நாக்கில் கூரவே இல்லை இந்த நிகழ்விற்குப் பின்னால். தேநீரில் கலந்து இருந்த என் கண்ணீரின் உவர்ப்பாலா? இல்லை மனக்கசப்பாலா? என்பது பற்றி எல்லாம் எனக்குத் தெளிவு இல்லை. அதனால், குவளையை அப்படியே குறை தேநீரோடு வைத்து விட்டு படியேறி என் அறைக்குள் சென்றேன். அங்கு எனக்கு முன்பாகவே ஒருத்தி உள்ளே நுழைந்திருந்தாள்.

“ரூபா... சாரி என்னைய மன்னிச்சிரு”

“ஏன்? “

“நான் உன்ன ஒரு மாதிரி தப்பா பேசிட்டேன்ல”

“என்னோட அனுமதி இல்லாம ஏன் என் ரூம்க்கு உள்ள வந்த நீ?”

“நான் அப்படி பேசுனது தப்புதான? என்ன மன்னிச்சிட்டேனு ஒரு வார்த்த சொல்லு. உன் முகம் மாறுனத பாத்து எல்லாருமே பயந்துட்டாங்க. நீ எப்பவும் இந்த மாதிரி ஆனதே இல்லனு பேசிகிட்டாங்க. அதுனால உன்னைய தனியா விட எனக்கு பயமா இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் உன் கூட தூங்குறேன் வேணானு மட்டும் சொல்லிறாத “

“நான் ஒன்னும் செத்து போயிற மாட்டேன். இந்த மூனு வருஷமா தனியாவே இருந்த எனக்கு இந்த முழு நைட் தனியா இருக்கத் தெரியாதா? “

“அது இல்ல”

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் முகத்தில் அறைந்தது போல சட்டென்று அவளை வெளியே தள்ளி அறையின் கதவை அடைத்துக் கொண்டேன். நான் அன்று அப்படி நடந்து கொண்டேன் என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை. ஆனால் அன்றைத் தவிர எப்போதும் நான் அப்படி நடந்து கொண்டதேயில்லை என்று மட்டும் தெரியும். அன்று அப்படி ஒரு தாளாத கோபம் அனைவரின் மேலும். என்மேலும்தான்.

இருட்டில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்த நான். மீண்டும் ஒரு இருட்டுக் குழிக்குள் நானே வேண்டுமென்றே விழுந்தேன். விடுதியில் அனைவரிடம் இருந்தும் என்னை விலக்கிக் கொண்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்த போது என் தலையின் மேல் கருப்பு நிழல் பட்டது போன்று இருந்தது. தொட்டுப் பார்த்தேன் கையில் உறுத்தியது. முழுவதுமாக வழித்தெடுத்த என் தலையில் முடிகள் வளரத் தொடங்கியதால் பார்லர் சென்று முடியை மீண்டும் வழித்தெடுக்கச் சென்றேன். கடந்த மூன்று வருடங்களாக ஒரே பார்லரில்தான் இந்த காரியத்தை நான் செய்து வருகிறேன். வேறெங்கும் செல்ல எனக்குப் பிரியம் இருக்காது. காரணம், இங்கு மட்டும்தான் நான் ஏன் இப்படி செய்கிறேன்? என்ற கேள்வியே கேட்டது இல்லை.

வேலையை முடித்துவிட்டு பார்லரில் கண்ணாடிக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போது சிகரெட்டின் புகை என் மூக்கைத் துளைத்ததும் யார் என்று எரிச்சலில் என் இடப்புறம் திரும்பிப் பார்த்தேன். அவரைப் பார்த்ததும் ஒரு வேளை இந்த நாள் நம் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

யாரைப் பார்க்க கூடாது என்று பல மயில் தூரம் கடந்து வந்து ஊர் பேர் தெரியாத இடத்தில் வந்து வாழ்ந்தேனோ... வாழ்க்கை என்னை மீண்டும் அவர் முன்னே கொண்டு நிறுத்தியது.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
அவர் என்னைப் போலவே ஏக்கமுற்றவர், காதலால் சபிக்கப்பட்டவர் அவ்வளவு ஏன்? அவரும் என்னைப் போலவே மொட்டைத் தலையுடன் இருந்தார். அவர் அமர்ந்திருந்த மேஜையின் மேல் மடித்த காகிதம் ஒன்றினை வைத்துவிட்டுச் சென்றார்.

அந்தக் கடிதத்தில் ஒரு வீட்டின் விலாசமும் கூடவே... “உன்னைப் பார்த்த அடுத்த நொடியிலேயே என் உயிர் உடலை விட்டுப் பிரிய வேண்டும் என்று தினம் தினம் கடவுளை வேண்டிக்கொண்டிருத்தேன்” என்று எழுதி இருந்தது. உடனே என் இருக்கம் உடைந்து கதறி அழுதேன். அப்படியே வெளியே வந்து ஒரு டாக்ஸியில் ஏறி அந்த விலாசத்தைத் தேடிச் சென்றேன்.

பம்பாயின் பரபரப்பான சாலையில் கூட்ட நெரிசலின் கூச்சத்தில் வண்டி மெல்ல நகர்ந்தது. அத்தனை பேரொளியையும் சிக்கலையும் மீறி என் கடந்த காலம் கண்முன்னே ஒளிபரப்பானது.

அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் தீராக் காதலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தோம். எப்போது படிப்பு முடியும்? எப்போது திருமணம் செய்து கொள்வது ? என்கிற ஆர்வம் என்னைக் காட்டிலும் அவருக்கு சற்று அதிகமாகவே இருந்தது. இருவரும் ஈர்ப்புடன் இருந்த அவ்வேளையில் அவருக்கு உடல் நலக்குறைவால் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவம் பார்த்தும் நாளுக்கு நாள் உடலில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. அவருக்கு கேன்சர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் அதனை உறுதிப்படுத்த சோதனைகள் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் என்னிடம் கூறினார். அப்போது எனக்கு பெரியதாக பயம் எதுவும் இல்லை. அப்படியெல்லாம் எதுவும் இருக்காது என்று நானும் நம்பி அவரையும் நம்பிக்கையுடன் இருக்கச் செய்தேன்.

நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதனைப் போல நாங்கள் எதிர்பாராத விதமாக... கேன்சர் நோய் இரண்டாவது நிலையில் அவருக்கு இருப்பதாகத் தெரிய வந்தது. அதன் காரணமாக அவர் என்னை விட்டு விலக ஆரம்பித்தார். என் மீது இருந்த அத்தனை காதலையும் வெறுப்பாக மாற்றி என்னை அவரை விட்டுத் துரத்தியடிக்கப் பார்த்தார். நான் ஒன்றும் அவர் காதலுக்குச் சலித்தவள் அல்ல என் உயிரே போனாலும் சரி அவரை விட்டுப் பிரிய மாட்டேன் என்கிற உறுதியோடு இருந்தேன்.

நாளுக்கு நாள் நோய் தீவிரமடைய அவர் உடல் அளவிலும் மன அளவிலும் மிகவும் பலவீனமானார். உடல் மெலிந்து முடி உதிர்ந்து பார்பதற்கு யாரோ ஒருவர் போல மாறிவிட்டார். ஒன்றும் சொல்வதற்கில்லை... உயிர் இருக்கின்ற வரைக்கும் சந்தோஷமாக பார்த்துக் கொள்ளுங்கள் எதுவும் நம் கையில் இல்லை எல்லாம் எல்லை மீறிவிட்டது என்று டாக்டரும் கைவிட்டுவிட்டார் கடவுளும் கைவிட்டுவிட்டார். இருவரும் நொந்து உடைந்து சுக்கு நூறாய்ப் போனோம்.

அவர் வீட்டில் எங்கள் காதல் பற்றித் தெரியும். அதனால் தினமும் தவறாமல் கல்லூரி விட்டு வரும்போது அவரைப் பார்த்து நாலு வார்த்தை பேசிவிட்டுச் சென்றால்தான் நிம்மதியாக இருக்கும். அவர் உயிரின் மீது அனைவருக்கும் பயம் இருந்த அதே வேளையில் அவர் என் காதலுடன்தான் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் உயிர் மேல் அக்கறையோ பயமோ கிடையாது. என்னை வேறொரு புது வாழ்க்கையில் நுழைப்பதையே வேலையாக வைத்திருந்தார். இதனாலே அவருக்கும் எனக்கும் அந்த நாட்களில் காதல் பரிமாற்றத்தைக் காட்டிலும் சண்டையே அதிகமாக நீட்டித்தது.

என் மனதை மாற்றும் முயற்சியின் கடைசி கட்டமாக என் காதல் பற்றி தெரியாத என் வீட்டிற்கே வந்து நடந்த அத்தனையையும் கூறி எனக்கு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். நல்ல மனம் படைத்தவர்கள் எப்பொழுதும் காயமடைந்து கொண்டேதான் இருப்பார்கள். அவரும் அப்படித்தான் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்லது சொல்லப் போய் அனைவர் முன்னிலையிலும் அவமானப்பட்டு வீடு திரும்பினார்.

அவர் இருந்த மனநிலையில் அந்த அவமானம் எல்லாம் பெரிதாய் தெரியவில்லை. எது எப்படியோ இனி எல்லாம் மாறிவிடும் என்கிற நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் இருந்தார். நானோ யார் சொல்லியும் கேட்காத பிடிவாதக்காரி. அத்தனை நடந்த பின்னரும் அவரைப் பார்க்காமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை.

அவரைச் சந்திக்க ஆசையாய் செல்லும் வேளையில் எல்லாம் வீட்டில் மறைந்து கொண்டு அவர் இல்லை என்று சொல்லச் சொல்லி சிறுபிள்ளையைப் போல நடந்து கொள்வார்.

அவர் என்னைக் காதலித்த காலத்தை விட என் வாழ்க்கை நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு என்னை அவர் பொய்யாக வெறுத்த காலத்தில் அவர் மீது இருந்த அதீத காதல் மேலும் தீவிரம் அடைந்தது.

“நாளைக்கு உன்னைய பாக்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்க... கண்டத பேசி எங்க மானத்த வாங்காம ஒழுக்கமா நடந்துக்கோ. இதுவரைக்கும் நடந்தத மறந்துட்டு சொல்றபடி கேளு. உன் அப்பா சொல்லச் சொன்னாரு” என்று அறையில் படுத்திருந்த என்னிடம் அம்மா வந்து கூறினாள்.

அதுவரைக்கும் இருந்த நம்பிக்கை எனக்கு பயமாக உருமாறியது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என்கிற எண்ணம் என்னை படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.

மறுநாள் கல்லூரியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்த போது, மிடுக்காய் உடுப்பு அணிந்திருந்த ஒருவர் ஆங்கிலத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தார். அவர்தான் மாப்பிள்ளை போல என்று நான் புரிந்துகொண்டேன்.

என்னைப் பார்த்த மாப்பிள்ளை, அவர்களது குடும்பம், அவ்வளவு ஏன்? என்னைப் பெற்றவர்களும் என் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் முகம் சுழித்தபடியே “என்ன கோலம் இது...? ச்சே... எங்க மானமே போச்சு” என்று திட்டிக் கடிந்தார்கள்.

அவர்கள் இந்த அளவிற்கு வெறுப்பைக் கொட்ட நான் ஒன்றும் செய்யக் கூடாத தவறை செய்யவில்லை. சிகையை வழித்தெடுத்துவிட்டு வந்து நின்றேன். அதனால் கல்யாணமும் நின்றது. இப்படியே இவர் என்னைத் திருமண செய்து கொள்ளத் தயார் என்று சொன்னால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனக்கும் சம்மதம் என்று சொன்னேன். அதெப்படி ஒப்புக் கொள்வார்கள்? உன் வாழ்க்கைய அழிக்க வேறு யாரும் தேவையில்லை நீயே போதும் என்று சொல்லி இனி எங்கள் முகத்திலே முழிக்க வேண்டாம் என்று அப்பா அம்மா இருவரும் என்னை ஒதுக்கிவிட்டார்கள்.

அதே கோலத்தில் அவர் முன்னால் போய் நின்றபோது... மண்டியிட்டுக் கண்ணீர் விட்டு கதறி கதவை அடைத்துக் கொண்டார். நடந்த எல்லாம் அவருக்கும் தெரியவந்ததால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் திணறினர். ஆனால் நான் என் முடிவில் தெளிவாக இருந்தேன். காதலைப் பகிர்ந்துகொண்டதைப் போல வலியையும், வேதனையையும், வாழ்வையும், சாவையும் பகிர்ந்துகொள்ளத் துணிந்திருந்தேன்.

இரண்டு நாட்களாக வீட்டு வாசலிலே இருந்தேன். அவர் கதவைத் திறக்கவேயில்லை. வாய் திறந்து பேசவும் இல்லை. என்னால் அவர் சிரமப்படுகிறார் என்றுதான் அங்கிருந்து கிளம்பி பம்பாய்க்கு வந்தேன். பல வேலைகள் செய்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தேன். மூன்று வருடங்கள் கழித்து இன்று ஏனோ அவர் என்னைத் தேடி வந்துவிட்டார் என்று அவரைச் சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறேன்.

காதலிக்கத் தொடங்கிய நாட்களில் இருந்தே என் பிடிவாதத்தில் அவர் எப்போதும் தோற்றுதான் போவார். அவர் நினைத்தது நடக்காததால் நான் நினைத்ததாவது நடக்கட்டும் என்று நினைத்து வந்தாரோ என்னவோ?.

அந்த விலாசத்தில் இருந்த வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பூங்கா இருந்தது. அதன் வழியாக இருவரும் நடை பயணம் கொண்டோம். பேச வார்த்தைகள் இன்றி ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொண்டு தலை குனிந்தோம். ஏதோ ஒரு புரியாத உணர்வு சிக்கலான மனவோட்டம் ஒரு பதற்றம் படபடப்பைத் தாங்கிக் கொண்டிருந்தேன். தேநீர் வாங்கி கையில் வைத்துக் கொண்டே ஓரிரு வார்த்தைகள் பேசினோம்.

“எப்போதுமே நீதான் வின் பண்ற... “

“உங்களோட காதலாலதான் இது சாத்தியமாகுது”

“உன்னையத் தேடிதான் இங்க வந்தேன்... எத்தன நாள் இருக்கப் போறேனு எனக்குத் தெரியல. நான் உன் கூடதான் இல்லையே தவிர உன்ன பத்தி எல்லாமே தெரிஞ்சு வச்சிருந்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நான் உன்ன பாத்தேன் தூரத்துல இருந்து”

அப்போது புரிந்துகொண்டேன் அந்த விமர்சனத்திற்கு சொந்தக் காரர் அவர்தான் என்று. ம்ம்... என்னைப் போலவே ஒருவரால் காதலிக்க முடிகிறது என்றால் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கமுடியும்.

எங்கள் முதல் சந்திப்பில் இருந்த அதே தித்திப்பு அன்று நாங்கள் குடித்த தேநீரில் இருந்தது. அந்த விலாசத்தின் பெயரில் இருந்த வீடு எங்கள் இருவருக்குமான உலகமாய் மாறியது. எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அப்படியெல்லாம் வாழ்ந்து பார்த்து பூரித்துப் பூத்தோம்.

இருவரில் யார் தோற்றாலும் காதல் எப்போதும் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறது!!!. அது ஒவ்வொரு அசைவிலும் நம்மை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறது!!!.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
கதை நல்லாயிருக்கு ஹேமமாலினி. எழுத்து நடையும் வரிகளும் அழகா கொடுத்திருக்கீங்க.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top