Active member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 20
- Thread Author
- #1
நீ யார்?
...............
...............
தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து
"நீ... நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?" என்றவர் கேள்விக்கு.
அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம்.
"ஏய்.. வெளிய போ"என்று பெரியவர் ஸ்ரீகாந்தன் கத்த,
"ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா."என்ற பாடலின் வரியை கரகரத்த குரலில் அந்த பெண் பாட தொடங்கியவள் இறுதியாக, "காலை எழுந்தவுடன் படிப்பு..
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா" என்ற பாரதியாரின் பாடலை அந்த பெண் தலையை இருபக்கமும் அசைத்து பாடி முடித்தாள்.

"எ..எதுக்கு இப்போ இந்த பாட்டை என்கிட்ட நீ பாடுற? நீ யாருன்னு சொல்ல போறியா இல்லையா?" என்ற பெரியவரை பார்த்து
"என்னை யாருன்னு உங்களுக்கு தெரியலையா சார்?"என்று பெண்ணவள் கேட்க..
"எனக்கு தெரியல ?" என்ற பெரியவர் எதிரே எகிறி குதித்து அந்த பெண் அவர் கட்டிலில் அமர்ந்தாள்.
"சார்..எனக்கு ரொம்ப பசிக்குது, ரொம்ப வருஷம் கழிச்சு நிறைய சாப்பிட போறேன். எனக்கு சுட சுட உன் ரத்தத்தை கொடு" என்று தன் கரங்களை நீட்டி ஸ்ரீகாந்தை தொட சென்ற பெண்ணை பார்த்து அவர் பயந்து..
"யாரு நீ? இங்க இருந்து வெளிய போ." என்ற பெரியவர் இருக்கையில் இருந்து எழுந்து வாசலை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே இரண்டு கதவுகளும் 'படார்' என்று தானாக மூடியது.
"என்ன சார்?அவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை விட்டுப் போயிட முடியுமா..?"என்ற பெண் பெரியவர் கண் இமைக்கும் நொடியில் அவர் முன்னே வேகமாக ஓடிச் சென்று அவர் கையை பற்றியவளின் செயலில் பெரியவருக்கு மேலும் பயம் கூடியது.
"ஏய்.. என் கைய விடு" என்ற ஸ்ரீகாந்தின் முன் அந்த உருவம் தன் விரலால் சொடுக்கு போட்டதும் அவர் தலையில் எங்கிருந்தோ பறந்து வந்த புத்தகம் விழுந்ததும்,
"ஐயோ.."என்று வலியால் அலறினார்.
"சார்.. இங்க இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது." என்ற பெண் இருக்கையில் அமர்ந்து மேசை மேல் இருந்த ரத்தம் நிறைந்த கோப்பையை எடுத்து தாகம் அடங்கும் வரை பருகினாள்.
"நீ...நீ யாரு?" என்று மீண்டும் பெரியவர் கேட்க
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியலையா?" என்ற உருவம் தன் விரித்து போட்ட கூந்தலில் இருந்த புழுவை எடுத்து அவள் வாயில் போட்டு மென்று தின்பதை பார்த்த ஸ்ரீகாந்த்துக்கு மயக்கம் வராத குறை தான்.
"நான் யாருனு தெரியாம என்கிட்ட நீ விளையாடுற. கதவை திறந்து விடு" என்ற பெரியவர் மூடி இருந்த கதவை தொட்டதும் மின்சாரம் பாய்ந்ததை போல தூக்கி வீசப்பட்டவரை நோக்கி.. அடி மேல் அடி வைத்து அந்த பெண் நெருங்கி வந்தவள் அவர் அருகே சம்மணம் போட்டு அமர்ந்தாள்.
அந்த பெண்ணின் கை விரல் நகங்கள் எல்லாம் கூர்மையாக இருக்க, ஆள்காட்டி விரலை கொண்டு பெரியவர் கன்னத்தை அந்த உருவம் தொட போக,
"ஏய்..என்னை தொடாதே..யாராவது என்னை காப்பாத்துங்க?.என்று பெரியவர் கத்தியதும்,
"சார்..ஏன் கத்துறீங்க என்னை உங்களுக்கு தெரியல? நான் தான் பொம்மி"என்று அந்த உருவம் சொன்னதும்.
"பொ...பொம்மியா..?" என்ற பெரியவரின் கழுத்தை சட்டென்று அந்த பெண் தன் கரங்களால் பிடித்ததும்,
"விடு.. விடு என்னை"என பெரியவர் அலறினார்.
"சார்..இந்த பிடிக்கே உங்களுக்கு வலிச்சா சின்ன பொண்ணு என்னை நீங்க என்னவெல்லாம் பண்ணீங்க, எனக்கு எப்படி வலிச்சு இருக்கும்" என்றவளை பார்த்து...
"யாராவது என்னை காப்பாத்துங்க?"என்று கத்திய ஸ்ரீகாந்த் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டு எழுந்து ஓட முயன்றவரின் காலில், இரும்பு பொருள் ஒன்று பறந்து வந்து விழுந்ததும்..
"அம்மா...." என்று அலறியவரின் கண்களில் வலியால் கண்ணீர் பெருகியது.
"அழு..இன்னும் சத்தமா அழணும் நீ.." என்ற பெண், தன் கோர பற்களால் பெரியவரின் கழுத்தை கடிக்க முற்பட்டவளை அவர் எட்டி உதைத்ததும், அந்த பெண் இரண்டடி தள்ளி விழுந்தவள் மீண்டும் தன் விரலை சுண்டியதும், ஸ்ரீகாந்த்தின் பின் தலையில் கனமான பொருள் பறந்து வந்து விழுந்த வேகத்தில் ஸ்ரீகாந்த் அரை மயக்கத்தில் அதே இடத்தில் விழுந்தவர் அருகே....
"ஓடி விளையாடு பாப்பா..." என்ற பாடலை பாடிக்கொண்டே வெள்ளை நிற ஆடையில் கண்கள் எல்லாம் விரிந்த நிலையில் "சார்..என்னை ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுங்க சார்... ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுடா ஏன் அப்படி பண்ண?"என்ற பெண் மேலும் தன் விரலை சுண்டிய நொடியில்,
பெரியவர் தலைக்கு மேல் தொங்கிய அழகிய மின் விளக்கு அவர் தலையை நோக்கி கீழே விழும் சமயம் "என்னை ஒண்ணும் பண்ணிடாத.."என்று ஸ்ரீகாந்த் கத்தியதும்..
"ஏங்க... ஏங்க கதவை திறங்க" என்ற குரல் வாசலில் இருந்து கேட்டது.
"காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க" என்று கதறிய பெரியவர் கழுத்தில் அந்த பெண் தன் காலை வைத்தவள்,
"வலிக்குதா சார்.. எனக்கும் இப்படி தான் வலிச்சுது."என்ற பெண்ணை பார்த்து...
"நீ யாரு?.பொம்மிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?" என்ற பெரியவரின் கண் எதிரே
"நான் தான் பொம்மி..நீ கொலை பண்ண பொம்மி நான் தான்.... பதினைந்து வருஷமா உன்னோட வீட்ல உனக்காகவே காத்துகிட்டு இருக்கேன் " என்று ஆக்ரோஷமாக கத்திய பெண் ஸ்ரீகாந்த்தின் கழுத்தை நெரிக்க,
"என்னை விட்டுடு.. என்னை காப்பாத்துங்க" என்று மீண்டும் பெரியவர் கதறும் சத்தம் கேட்டு,
"ஏங்க கதவை திறங்க" என்று அவரின் மனைவி தேவகியின் குரலை கேட்டு அந்த வீட்டின் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் "அம்மா என்னாச்சு?" என்ற தேவகியின் மகன் மாறன் அங்கே வந்து சேர்ந்தான்.
"மாறா..உங்க அப்பா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்குது மாறா" என்ற தன் அன்னையின் பதற்றத்தை பார்த்து மாறன் அந்த அறையின் கதவை எட்டி உதைத்த வேகத்தில் ஸ்ரீகாந்த் கண் எதிரே இருந்த பெண்ணின் உருவம் அங்கிருந்து மறைந்ததை பார்த்தப்படி பெரியவர் முழு மயக்கத்திற்கு சென்றார்.
"ஐயோ..!! என்ன...ங்க" என்று ஸ்ரீகாந்தின் நிலைமையை பார்த்து அவர் மனைவி பதற "அப்பா அப்பா" என்ற மாறன் தரையில் சுயநினைவின்றி கிடந்தவரை தூக்கி கட்டிலில் கிடத்தி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.
"மாறா..அப்பாவை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போலாம்" என்று தேவகி சொன்னதும், மாறன் அவனின் காரில் ஸ்ரீகாந்தை தூக்கிக்கொண்டு தேவகியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
ஸ்ரீகாந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருக்க, "மாறா அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே "என்ற தன் அன்னையின் கண்ணீரை துடைத்தவன் "அழாதீங்க அம்மா" என்று ஆறுதல் சொன்னான்.
ஸ்ரீகாந்த்தின் வயது அறுபது, ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியார். கடந்த சில வருடங்களாக தேவகியுடன் கோவையில் தங்கி இருந்தவர் வருடத்திற்கு ஒரு முறையேனும் தேவகியுடன் சென்னைக்கு தன் பூர்வீக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பதினைந்து வருடங்களாக சென்னைக்கு வராத ஸ்ரீகாந்த் நேற்றைய தினம் தான் தங்களின் பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளார்.
தேவகி ஸ்ரீகாந்தின் ஒரே மகன் மாறன். மாறன் அவனின் பதினைந்து வயதில் இருந்தே சென்னையில் தனியார் விடுதியில் தங்கி படித்தவன் அவனின் இருபதாவது வயதில் இருந்து தன் பூர்வீக வீட்டில் தனியாக தான் வசித்து வருகின்றான்.காவல்துறை அதிகாரியாக இருக்கும் மாறனுக்கு அவனுடன் படித்த சிறு வயது தோழி மருத்துவர் சைத்ரா மீது காதல் ஏற்பட்டதால் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை பேசி முடிப்பதற்காக தான் மாறனின் பெற்றோர்கள் தனது பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
"இத்தனை வருடம் கடந்தும் உன் அப்பாவுக்கு இங்க வர இஷ்டமே இல்ல மாறா. நான் தான் உன் கல்யாணத்த பற்றி பேச அவரை வற்புறுத்தி அழைத்து வந்தேன்" என்று தேவகி கண்கள் கலங்க..
"ஆன்ட்டி."என்று தேவகியை அழைத்தபடி இவர்களை நோக்கி நடந்து வந்தாள் மருத்துவர் சைத்ரா.
"சைத்ரா..அப்பாவுக்கு என்னாச்சு?"என்று மாறன் கேட்க..
"அங்கிள் மயக்கமா இருக்காரு. உடம்பெல்லாம் அடிபட்டு இருக்கு...ஒரு வேள கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டாரா? " என்று சைத்ரா கேட்டாள்.
"நானும் அதான் நினைக்கிறேன், நாங்க பார்க்கும் போது அவரு கீழே விழுந்து கிடந்தாரு"என்று கண்ணீருடன் தேவகி சொன்னதும்.
"நான் ட்ரீட்மென்ட் தந்து இருக்கேன்.நீங்க அழாதீங்க ஆன்ட்டி." என்ற Dr. சைத்ராவை நோக்கி அவளின் உடன் பிறந்த அண்ணன் திரைப்பட துறையில் பணியாற்றும் சத்ரியன் விரைந்து வந்தான்.
"மச்சான் அங்கிளுக்கு என்னடா ஆச்சு..?" என்று சத்ரியன் கேட்க..
"தெரியல மச்சான்..அவரோட ரூம்ல இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சத்தம் வந்துச்சு... நான் ரூம் கதவை எட்டி உதைச்சு உள்ள போய் பார்த்த போது அப்பா மயக்கத்துல இருந்தாரு."என்ற மாறனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அவனின் அன்னை கண்கள் கலங்கினார்.
"அம்மா அழாதீங்க, அப்பாவை சைத்ரா பார்த்துப்பாள்."என்று மாறன் சொல்லும் தருணம்....
"டாக்டர், Mr.ஸ்ரீகாந்த் கண் முழிச்சிட்டாரு" என்று செவிலியர் சொல்ல, சைத்ரா வேகமாக சிகிச்சை அறைக்குள் நுழைந்தவளை பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள்.
சில நொடிகள் ஸ்ரீகாந்தை பரிசோதித்த சைத்ரா "BP அதிகமா இருக்கு, என்ன அங்கிள் கெட்ட கனவு எதாவது வந்துச்சா? " என்று கேட்க.
"க.. கனவா.."என்று குழம்பி போனார் ஸ்ரீகாந்த்.
"என்னங்க... என்னாச்சு உங்களுக்கு?" என்று தேவகி கண்கள் கலங்க..
"சைத்ரா, அப்பாவை வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு போகலாம்" என்று கேட்டான் மாறன்.
"இப்ப கூட அழைச்சிட்டு போகலாம் மாறா.... காயத்துக்கு மருந்து எழுதி தரேன். எனக்கும் டியூட்டி முடிஞ்சிடுச்சு. அண்ணன் கூட நானும் உங்க வீட்டுக்கு வரேன்." என்று சைத்ரா சொல்ல இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி ஸ்ரீகாந்தின் பூர்வீக வீட்டுக்கு சென்றார்கள்.