• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
“தம்பிங்களா இந்த நேரத்துல கூட்டம் போடாதீங்க ப்பா. போலீஸ் ரவுண்டுஸ் வர நேரம் திட்டுவாங்க!”


ஆள் அரவமற்ற நடு ரோட்டில் ஊர் உறங்கிய நேரத்தில், தங்கள் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையின் மேலே கேக் வைத்து ஆர்ப்பாட்டமாக வெட்டிக்கொண்டு இருந்தார்கள் ஐவர்.


“யோவ் பெருசு!! கூர்க்கா வேல பார்த்தா அத மட்டும் பாரு. பொருள் எடுத்தோம் ஒரே சொருகு தான். போட்டுட்டு போயிட்டே இருப்போம். எங்கள ஒருத்தனும் கேட்க முடியாது. நாங்க யார் தம்பிங்க ன்னு தெரியும்ல!”


பொத்தான்கள் போடாத தன் கசங்கிய சட்டையின் பட்டாவை மேலே இழுத்துவிட்டு தினாவட்டாக பேசினான் ஒருவன்.


முழு போதையில் இருபது வயது கூட முழுதாக பூர்த்தியாக இளம் சிட்டுக்கள், தங்கள் தலைவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு நடுநிசியில் தெருவை அலற வைத்துகொண்டிருந்தார்கள்.


ஐந்து காளையும் ஐந்து தினுசாக, மந்தியிடம் மாட்டிய மண்டை போல சிகையை கொத்துக்கறி போட்டிருந்தார்கள். ஆட்டு தாடி, பூனை மீசை, புருவத்தில் அணிலுக்கு போட்டது போல மூன்று கோடுகள் என்று விலங்கியல் போல இருந்தார்கள். கையிலும், கழுத்திலும், காதிலும் இரும்பு கடை போல ஆபரணங்கள்.


இதில் அத்தனை பொடிசுகளின் கையிலும் ஒவ்வொரு பெண்ணின் பெயர் வேறு பச்சை குத்தியிருந்தார்கள். அவர்கள் ஹார்ட் விட்டு அம்பு விட்டிருந்ததுலையே தெரிந்தது அது அவர்களின் காதலி பெயர் என்று.


இவர்களின் தோரணையை பார்த்து அந்த பெரியவருக்கோ இதழ் தாண்டா புன்னகை.


"மாப்பிள்ள என்னடா இவன் நம்மள பார்த்து நக்கலா சிரிக்கிறான். எடு டா அந்த பென்சில லைட்டா ஒரு கோடு போட்டு விடுவோம்!"


"டேய்ய்!! நாளைக்கு சாக போற கிழவனுக்கு பொருள் வேறையா?? நாலு அப்புக்கு தாங்குவானா இவன்??"


என்றவர்கள் மீண்டும் ஒரு பீர் பாட்டிலை எடுத்து அந்த கேகின் மேல் ஊற்றியவர்கள், "ஒஒஒஒஒ!!" என்ற கூச்சலிட்டு.


“டேய்ய் என்னங்க டா இங்க சத்தம்?”


ரோந்துக்கு வந்த காவலர்களின் குரலில் அவ்வளவு நேரம் துணையாக இருந்த 'நெப்போலியன்' எங்கு சென்று ஒளிந்தானோ பதுங்கியது மொட்டுக்கள்.


எட்டி பார்த்த இன்ஸ்பெக்டர், இவர்களின் பின்னாடி வந்து நின்ற அந்த பெரியவரை பார்த்து,


“ண்ணா எதும் பிரச்சனை பண்றானுங்களா?”


“இல்ல இல்ல!! நம்ம பசங்க தான் நான் பாத்துக்குறேன்.”


என்ற அந்த பெரியவரின் சொல்லில் காவலர்களின் வாகனம் கிளம்பியது.


அடித்த மது அத்தனையும் இறங்க அந்த பெருசை பார்க்க முடியாமல் கீழே குனிந்தார்கள் பொடிசுகள்.


கையில் இருக்கும் ஆறாம் விரல் கங்கு அவர்களின் விரலை பதம் பார்க்க போவதை அறிந்து அதை வாங்கி கீழே போட்டு காலால் மிதித்தார்.


“பக்கத்துல தான் என் வீடு இருக்கு.. வாங்க ஒரு டீ குடிச்சுட்டு போவோம்!”


அந்த ஐந்து சிறுவர்களும் மறுப்பு கூறாமல் அவரின் பின்னே சென்றார்கள்.


இன்ஸ்பெக்டர் வந்து கேட்ட தோரணையில் எப்படியும் ஒரு வாரம் தாங்கள் கம்பி தான் எண்ண வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு, இவரின் வாக்கும் அதற்கு காவலர்கள் குடுத்த மரியாதையும் தானாக அவரின் சொல்லுக்கு மண்டை ஆடியது.


நடுத்தரவர்க்கம் என்பது அந்த பெரியவரின் வீட்டில் தெரிந்தது.


நேர்த்தியாகவும், தூய்மையாகவும் இருந்த வீட்டில் உள்ளே நுழைந்ததும் சுவற்றில் மாட்டிருந்த புகைப்படம் கூறியது அது அந்த பெரியவரின் சிறுவயது படம் என்று. கூடவே நெருக்கமாக இவரின் கை வளைவில் ஒரு பெண் இருக்கிறாங்களே ஒரு வேளை அவரின் மனைவி போல. எங்கே ஆளை காணோம்?? உள்ளே எட்டி எட்டி பார்த்தார்கள்.


“தம்பி வந்துட்டியா?? கால் ரொம்ப வலிக்குது. எந்திரிச்சு எடுக்க முடியல. அந்த ஐயோடெஸ் எடுத்து தா ப்பா!!”


அறையிலிருந்து வந்தது வயதான பெண்மணியின் குரல்.


“வரேன் ம்மா!! நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாமா?? மறுபடி கால் வலிக்குதே??”


"அப்போ அப்போ வருது போகுது. அது கிடக்கட்டும், சாப்டியா தம்பி??"


"உங்க கூட தானே ம்மா சாப்பிட்டேன்!"


"மறந்து போய்டுச்சு ப்பா. ஆமா வெளில எதோ பேச்சு சத்தம் கேட்குது. யாரு வந்துருக்கா??"


"எல்லாம் நம்ம ஏரியா பசங்க தான். இப்போ கிளம்பிடுவாங்க!"


பின்னே உடன் இருந்த பசங்களால் எவ்வளவு பட்டிருப்பான். அவரின் பயம் அவருக்கு. அன்னையின் மனம் அறிந்து அவர் கேட்குமுன் அத்தனை கேள்விக்கும் பதில் தந்தார்.


அன்னையை கவனித்துவிட்டு வந்தவர், டீ தயாரித்து அந்த சிறுவர்களுக்கும் தனக்கும் எடுத்துக்கொண்டு, அவரின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு நின்ற பசங்களின் அருகில் வந்து நின்றார்.


“அது.. தாத்தா.. உங்கள பத்தி தெரியாம நாங்க இவ்ளோ நாளா.. உங்ககிட்ட வம்பு.. ஆனா நீங்க கோவமே பட்டதில்லையே.. ஏன்??”


மென்னகை புரிந்தார்.


“சொல்லுங்க தாத்தா.. நீங்க ரிட்டயர்ட் போலீஸா?? என்னவா இருந்தீங்க?? போலீஸ்ல ஏட்டு கூட இப்போலாம் வசதியா இருக்காங்களே?!?”


“நான் சரித்திர பதிவேடு குற்றவாளி!!”


பெரியவர் கூறிய பதிலில், வாயில் சென்ற டீ வெளியே வந்தது அந்த சிறுவர்களுக்கு.


“நானும் உங்கள போல தான் ஒரு காலத்துல, பொறுப்பில்லாத அப்பனுக்கும், ஏமாளி அம்மாவுக்கும் பிறந்தவன். அந்த ரூம்ல இருக்கிறது எங்க அம்மா தான். நான் சின்ன புள்ளையா இருக்கும்போதே எங்க அப்பா இறந்துட்டாரு. எங்க அம்மா தான் நாலு வீட்டு வேலை செஞ்சு என்னைய வளத்தாங்க. படிக்கவும் வச்சாங்க.

படிப்பு வரல எனக்கு. பசங்க கூட சேர்ந்துட்டு ஏரியால சுத்துவேன். கண்டிக்க யாருமில்ல. கண்டிக்க வந்தவங்களையும் தூரத்துல நிறுத்திட்டேன். அடம் பிடிச்சு வசதிக்கு மீறி போன், பைக் எல்லாமே கேட்டேன். எல்லா அம்மாவை போலும் அவங்களும் செஞ்சாங்க அத்தனையும் அவங்க சக்திக்கு மீறி.


எங்க பிரச்சனை ன்னு பசங்க கூப்டாலும் யோசிக்காம போய் அடிதடி ன்னு இருப்பேன். நீங்க இப்போ உங்க தலைவன் ன்னு தூக்கிவைச்சு ஆடுறிங்களே 'வர்மன்' அவன் தான் ஒரு காலத்துல எனக்கும் தலைவனா, அண்ணனா இருந்தான். நாங்கலாம் அண்ணனின் விழுதுகள். எங்களுக்கு தீபாவளி, பொங்களே அந்த வர்மன் பிறந்தநாள் தான். அவ்ளோ பக்தி.


நான் பாக்கவே பொறுக்கி மாதிரி தான் இருப்பேன், போட்டோ பார்த்ததும் புரிஞ்சுருக்குமே. ஹ்ம்ம்!! இந்த பொறுக்கியையும் ஒருத்தி நேசிச்சா. என் ஜெயஸ்ரீ. இந்த படத்துல இருக்காளே அவ தான். இப்போ வரைக்கும் அவ நினைவுகள் தான் என் சுவாசமும்.


ஜெயஸ்ரீ பணக்கார அப்பனுக்கு பிறந்த ஒரே பொண்ணு. அம்மா இல்லாத பொண்ணு. ஒரே ஏரியா தான் நாங்க. ஸ்கூல் படிக்கும்போதே என்னோட அடாவடி, அடிதடிய பார்த்தே பின்னாடியே சுத்துவா. ஒரு கட்டத்துல நானும் காதலிக்க ஆரம்பிச்சேன்.


இந்த ஊர்ல நாங்க சுத்தாத இடம் இல்ல. எனக்கு வேலைக்கு போகணும்னு எண்ணமே வந்தது இல்ல. காரணம் என் அம்மாவும், இவளும் தான். கேட்டதெல்லாம் செய்வாங்க ரெண்டு பேரும். அதனால எனக்கு பண கஷ்டமே இருந்தது இல்ல.


ஒரு நாள் நடு ராத்திரி என் ஆளு கூட போன் பேசிட்டு இருந்தேன் வீட்டு திண்ணைல உக்காந்து என் பிரண்ட் ஒருத்தன் ஓடி வந்தான். அவனுக்கு எதோ பிரச்சனைன்னு கூப்டான். 'வந்தறேன்னு போன் கட் பண்ணிட்டு போனேன்'. அவ்ளோதான் என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சு அந்த ராத்திரி.


என் ஆளு எவ்வளவோ சொன்னா போகாதன்னு. நான் கேட்கல. அம்மா கேள்வி கேட்டதுக்கு, "உன் வேலைய பாரு" ன்னு கத்துனேன். கடைசியா தான் புரிஞ்சுது அவங்க வேலையே இது தானேனு. அவசரமா பைக் எடுத்துட்டு கிளம்புனேன்.


அந்த ஏரியால சிசிடிவி இருந்தத கவனிக்காம, என்ன பிரச்சனை ன்னு முழுசா கேட்டுக்காம நண்பன் காட்டுனவனை அடிச்சோம். போலீஸ் வண்டி சத்தம் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுனோம். என்ன தவிர அத்தனை பேரும் தண்ணில இருந்தானுங்க. நான் குடிக்க மாட்டேன். என் ஆளுக்கு பிடிக்காது.


அங்க வந்த போலீஸ் நாங்க அடிச்சு போட்டவன குத்துயிரா கொண்டு போனாங்க ஆம்புலன்ஸ்ல. அவனும் ஒன்னும் யோகியின் இல்ல. அடுத்தவன் பொண்டாட்டிய கைய பிடிச்சு இழுத்து தான் அங்க வம்பே வந்துச்சு. ஆனா அந்த பஞ்சாயத்து எனக்கு தேவையேயில்ல.


ஒரே வாரத்துல போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டோம். ‘அட்டெம்ப்ட் டூ மர்டர்’ பிரிவுல உள்ள போனோம். நானும் என்னோட நாலு பிரண்ட்ஸும்.


சிசிடிவி கேமரால என் முகம் தெளிவா இருந்துருக்கு. என் மேல கேஸ் ஸ்ட்ரோங் ஆச்சு. எந்த நண்பனுக்காக போனோமோ அவன் மாட்டிக்கவே இல்ல. 'பிரச்சனைன்னு வந்தா நான் பாத்துக்குறே'ன்னு எங்க தப்பை தட்டிக்கொடுத்த என் தலைவனும் எங்களுக்காக வரல.


எங்க காதல் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியும். என் கேஸ் விஷயம் தெரிஞ்சு ஜெயஸ்ரீ க்கு அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. என்ன பண்ணுறதுன்னு புரியாம மகராசி மாடில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா.


இவ ஓங்கி நின்னாளே இவ அப்பன் அடங்கி போயிடுவான். அப்புடி இருந்தும் வீட்ல நடந்த சாதாரண கல்யாண பேச்சு வார்த்தைக்கு எதுக்கு என்னைய விட்டுட்டு செத்து போனான்னு இப்போ வர புரியலை.

எப்போதும் போகுற ஜெயில் தானே ன்னு எதுவும் எனக்கு பெருசா தோணல. ஆனா இந்த முறை சிறை வாழ்க்கை அவ்வளவு நல்லா இல்ல. கொடுமை கொடுமை அத்தனையும் கொடுமை.


இதுக்கு முன்ன எத்தனையோ முறை ஜெயில் போயிருக்கேன். கைதி போல இருந்தது இல்ல. 'வர்மன் தம்பிங்க'ன்னு அத்தனை வசதி ஜெயில்ல. ஏன்னா அவனுக்கு பதிலா தான் நாங்க உள்ள போனோம். அதுனால வீடு போலவே தான் சுத்துனோம்.


ஆனா இந்த முறை நான் பாத்தது இதுவரை பார்க்காத சிறைக்கூடம். அச்சு சோறு, பூட்ஸ் மிதி ன்னு நொந்து போயிட்டேன். வார்த்தை கூட ஊசியா குத்தி கொன்னுட்டானுங்க. அத்தனையும் ஆபாசம் தான். அழுதேன் ஆம்பள, ரவுடின்னு திமிர் போக கத்தி அழுதேன். என்னைய பார்க்க வந்த எங்க அம்மாகிட்ட வயச மறந்து, "என்ன கூட்டிட்டு போய்டு ம்மா.. அடிக்குறது வலிக்குது" ன்னு அழுதேன்.


ஜாமீன்ல வெளிய வந்தேன். கையெழுத்து போட மட்டும் போனா போதும். எனக்காகன்னு எங்க அம்மா மட்டும் தான் ஊரோட ஏச்சு, பேச்சு எல்லாம் வாங்கிட்டு இருந்துச்சு. என்ன கூட்டிட்டு போன நட்போ, என் தலைவனோ எவனும் எனக்காக இல்ல.


வெளிய வந்த எனக்கு என் ஆளோட இழப்பு ரொம்பவே குற்றவுணர்ச்சி ஆகிடுச்சு. என் பேரும், போட்டோவும் பேப்பர் முழுசும் வந்து எங்கையும் வேலையும் கிடைக்கல. இதோ இந்த கூர்க்கா வேல கூட நான் உள்ள போனப்போ என்ன விசாரிச்ச போலீஸ் தான் வாங்கி குடுத்தாரு!!


அவர் ஒரு வார்த்தை சொல்லிட்டு என்ன சேர்த்துவிட்டாரு, 'இனி தான் நீ வாழ போறது வாழ்க்கை' ன்னு. அப்போ புரியல இப்போ புரியுது!!


அங்கே பலத்த அமைதி.. அந்த பெரியவரிடம் கூறிவிட்டு அந்த புகைப்படத்தை மீண்டும் ஒருமுறை கண்ணில் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றார்கள்.


வீடு செல்லும்வரை ஐவரும் பேசிக்கொள்ளவில்லை அந்த பெரியவரின் வார்த்தைகளே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.


“வயசுல நான் தான் எல்லாம் ன்னு இருந்தேன்,


அம்மா அப்பா, உடன் பிறந்தவங்கன்னு யாருமே கண்ணுக்கு தெரியல,


நட்பு ன்னு உயிரா இருந்தேன்,


காதல் தான் எல்லாம் ன்னு இருந்தேன்,


எல்லாரும் நம்மள பார்த்து பயப்புடாறாங்க, நம்ம தான் கெத்து ன்னு இருந்தேன்,


நமக்கு ஒன்னுனா ஓடி வரதுக்கு நம்ம உடன் பிறவா சகோதரன் என் தலைவன் இருக்கான்னு திடமா இருந்தேன்!!


இப்போ தனியா இருக்கேன்!!

இத்தனைக்கும் துணையா எங்க அம்மா மட்டும் இன்னும் உசுர பிடிச்சுகிட்டு எனக்காக என்னோட இருக்கு!!


இருபது வாழ்க்கை இல்ல தம்பிங்களா. அறுபது வரை இருக்கு. யாரோ தலைவனா இருக்க நீங்க ஏன் அடிமையா இருக்கனும்??


இப்போ இனிக்குற எதுவும் கடைசிவரை நிலைக்காது. நீங்க கைல குத்திருக்க பச்சையில இருக்க பொண்ணுங்களுக்காச்சும் உங்க பாதைய மாத்திக்கோங்க. இதோ என்ன போல நினைவோடவே வாழுறது கொடுமை!!"


அடுத்த நாள் இரவும் வந்தது அந்த பெரியவர் அந்த ஐவர் கூட்டணியை தெருக்களில் தேடினார். தெருவே அமைதியாக இருந்தது.


காலை வீட்டிற்கு செல்லும் வழியில் ஆற்றை ஒட்டியுள்ள பிள்ளையார் கோயிலில் ஒரு வயதான பெண் குரல் கேட்டது.


“பிள்ளையாரப்பா, நீ தான் என் பிள்ளைக்கு நல்ல புத்தி குடுத்திருக்க. பசங்க கூட சேர்ந்து ஊர் சுத்துனவன் இன்னிக்கு தனியா வேலைகாக வெளியூர் கிளம்பிருக்கான் நன்றி ப்பா!!”


என்று அரசமரத்தடியில் கல்லாக இருக்கும் பிள்ளையாரின் வாசலில் தேங்காய் உடைக்கப்பட்டது!!!.


முற்றும்.
கிர்த்திகா விக்னேஷ்வரன்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சிறைக்கூடம்! தப்பு செய்தா தண்டனை உறுதின்னு தெரிந்தால் மட்டுமே இங்கு தப்புகள் குறைகிறது. அந்த தண்டனை இல்லாததால தான் நிறைய குற்றங்கள் சாதாரணமா நடக்குது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் கிர்த்திகா. 💐 💐 💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top