• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
737
பூவளூர்:

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், மேகங்கள் உரசிச் செல்லும் மலைச்சிகரங்களுக்கு இடையே ஒளிந்திருக்கும் ஒரு பச்சை சொர்க்கம் பூவளூர். எலுமிச்சை, காப்பி வாசனை வீசும் தோட்டங்களும், சந்தனக் காடுகளின் குளுமையும் நிறைந்த அந்த ஊரில் இன்று ஒரு திருவிழாக் கோலம்.

பூவளூரின் பனிமூட்டமான விடியலில், பெருமாள் - அன்னம்மாள் தம்பதியினரின் வீடு மட்டும் அன்று சுறுசுறுப்பாக இருந்தது. வாசலில் கட்டப்பட்டிருந்த மாவிலைத் தோரணங்கள் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தன.

"எய்யா சுந்தரு.. சீக்கிரம் கிளம்புப்பா! மலையம்மன் கோயிலுக்கு நேரத்தோட போகணும்," என்று பதற்றத்துடன் சொல்லிக்கொண்டே, பட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டிருந்தார் பெருமாள்.

சமையற்கட்டில், அன்னம்மாள் ஊர் பெண்களுக்குப் பலகாரங்களை எடுத்து வைத்துக் கொண்டே, "என் புள்ளைக்கு மலையாத்தா நல்லபடியா முடிச்சு போட்டுடுவா, கவலைப்படாதீங்க," என்று சிரித்தார். தனது அறையில் இருக்கும் கண்ணாடி வழியாக சுந்தர் பார்க்க, மலைப்பாதையின் மேடு பள்ளங்களில் வளர்ந்த வீரனைப் போல திருமண உடையில் கம்பீரமாகத் இருந்தான்.

மறுபுறம், அதே கிராமத்தின் நாலாவது தெரிவிலிருக்கும் சாமி - ஆச்சி தம்பதியினரின் இல்லம் மங்கல இசையோடு களைகட்டியிருந்தது.

அவர்களின் மகள், பூவளூர் மலையருவி போன்ற அழகு கொண்டவள். ஆச்சி தன் மகளுக்குப் பாரம்பரிய நகைகளை அணிவித்து, "இந்தக் பூவளூர் மண்ணுக்கும், மலையம்மனுக்கும் கட்டுப்பட்டு வாழ்ற நல்ல இடத்துல உன்னை ஒப்படைக்கிறோம்," என நெகிழ்ந்தாள். தந்தை சாமி, தன் மகளின் திருமணத்திற்கு ஊரே திரண்டு வருவதைப் பார்த்துப் பெருமிதத்துடன் வெற்றிலை பாக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்.

பூவளூர் கிராமத்தின் காவல் தெய்வமான மலையம்மன் கோயில், ஒரு குன்றின் மீது அமைந்திருந்தது. சுற்றிலும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சுத் தோட்டங்கள் சூழ, இயற்கை அன்னை அமைத்த மணமேடை போல அது காட்சியளித்தது.

நேரமும் கடந்து செல்ல, செண்டை மேளம் முழங்க, சுந்தர் ஒருபுறம் வர, தோழிகள் சூழ மீனாட்சி மறுபுறம் மலையேறி வந்தனர்.

மலையம்மன் சன்னதியில் தீபம் சுடர்விட்டு எரிய, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பூசாரி மந்திரம் ஓதியவர் தாலி இருக்கும் தட்டை எடுத்து வந்து சுந்தர் முன்பு நீட்டியவர் கட்டுயா என்கவும், மலையம்மனை மனதார வேண்டிக்கொண்டவன், மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டினான்.

தாலி கட்டிய அந்த நொடியில், மலையிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று ஆசீர்வாதம் செய்வது போல அவர்கள் மீது படர்ந்தது. பெருமாளும் சாமியும் கைகுலுக்கிக் கொள்ள, அன்னம்மாளும் ஆச்சியும் ஆனந்தக் கண்ணீருடன் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

பின்னர் கோயிலை சுற்றி வந்து மணமக்கள் அங்கே விரித்திருந்த பன ஒலை பாயில் உட்கார, மற்ற சடங்குகள் ஆரம்பமானது.

திருமணம் முடிந்ததும், பூவளூரின் பாரம்பரிய உணவான கஞ்சி, பயறு மற்றும் மலை காய்கறிகளுடன் விருந்து அமர்க்களப்பட்டது. மதிய வெயிலிலும் குளுமை மாறாத அந்த மலைக்கிராமத்தில், இரண்டு குடும்பங்களின் உறவு மலையம்மன் சாட்சியாக வேரூன்றியது.

சுந்தரும் அவன் மனைவியும் மலையிலிருந்து கீழே பார்க்கும்போது, பச்சைப்பசேல் என விரிந்து கிடந்த பூவளூர் அவர்களின் எதிர்காலத்தைப் போலவே அழகாகத் தெரிந்தது.

பின்னர் புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பூவளூரின் குளிர் காற்று மெல்ல வீசத் தொடங்க, பெருமாள் - அன்னம்மாள் வீடே விளக்கொளியில் பிரகாசித்தது.

அன்னம்மாள் செப்புத் தட்டில் ஆலத்தி எடுத்து, சுந்தருக்கும் அவன் மனைவிக்கும் திருஷ்டி கழித்தவர் "என் குலதெய்வம் மலையம்மன் அருளால, இந்த வீட்டுக்கு மகாலட்சுமியா வர்றா என் மருமகள்," என்று சொல்லிக்கொண்டே குங்குமத்தை இருவருக்கும் வைத்து விட்டு வீட்டிற்குள் அழைத்துப் போனார்.

வலது காலை எடுத்து வைத்து மீனாட்சி வீட்டின் உள்ளே நுழையும்போது, அந்த வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஒரு புதிய மங்கலம் பரவியது. ஆச்சி தன் மகளைப் பிரிய மனமில்லாமல் கண்ணீருடன் வழியனுப்ப, சாமி அவளுக்குத் தைரியம் சொல்லி சுந்தரின் கையைப் பிடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இரவு நெருங்க நெருங்க, பூவளூரின் மலைச்சரிவுகளில் பனிப்புகை மெல்ல இறங்கியது. வீட்டின் ஒரு அறை முழுவதும் சந்தன வாசனையும், காட்டுப் பூக்களின் நறுமணமும் நிறைந்திருந்தது.

தோட்டங்களில் பறிக்கப்பட்ட புத்தம் புதிய மல்லிகைப் சரங்கள் ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டிருந்தன. அறையின் நடுவே குத்துவிளக்கு எரிய, சுற்றிலும் ஆப்பிள் மற்றும் மலைத் தேன் கிண்ணங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அன்னம்மாளும் ஊர் பெரியவளும் மீனாட்சியை அழைத்துச் சென்று, அவளுக்கு அறிவுரைகளைச் சொல்லி அறைக்குள் அமர வைத்தனர்.

கையில் பால் செம்புடனும், ஒரு தட்டு நிறைய பழங்களுடனும் சுந்தர் அறைக்குள் நுழைய, கதவு மெல்லச் சாத்தப்பட்டது.

அறைக்குள் அமைதி நிலவியது. ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்த காற்று மலையம்மன் கோயிலின் மணிகளை அசைப்பது போன்ற பிரமை சுந்தருக்கு ஏற்பட்டது. அவன் மீனாட்சியின் அருகில் அமர்ந்து, மெல்ல அவளது முக்காட்டை விலக்கினான்.

இருவரும் ஒரே ஊர் தான் ஆனால் அவ்வளவாக பேசிக் கொண்டதில்லை. முறைக்கு அத்தை மகள் உறவு என்பதால் யாராவது எக்குதப்பாக பேச போய் அது சங்கடமாக போயிடும். பொம்பள பிள்ளை வாழ்க்கையாச்சே என்று மீனாட்சியை அவன் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.

சுந்தருக்கு ஒரு அக்கா.அவள் பெயர் சகுந்தலா. அவளை மதுரையில் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் இரண்டாம் வகுப்பும் இரண்டாவது மகனுக்கு தற்போது நான்கு வயது ஆகின்றது.

கடன் கொஞ்சம் வாங்கி கையில் இருந்ததை வைத்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் அந்த கடனை அடைத்து முடித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

சுந்தருக்கும் திருமண வயது வந்துவிட, பொண்ணு பற்றிய பேச்சு வரும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் உறவினர் தான் மீனாட்சியை பார்க்கலாம் என்றார்.

அதைக் கேட்டு யோசித்தவர்கள் அட ஆமா….நம்ப சொந்தத்தில் நெய் வச்சுக்கிட்டு எதுக்கு வெண்ணெய்க்கு அலையணும் என்றவர்கள், அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகனுக்கு இரவு சோறு பரிமாறும் போது இந்த பேச்சை எடுக்க, உங்கள் விருப்பம் என்றான்.

பிறகென்ன, ஒரு நல்ல நாளில் பொண்ணு கேட்டு சாமி வீட்டிற்கு வந்தனர். சுந்தர் பற்றி நன்கு தெரியும் என்பதால் அவர்களும் சம்மதிக்க இதோ குறித்த நாளில் திருமணம் முடித்து விட்டது.

மீனு என்றான்…

அவளோ வெட்கத்தில் முகத்தில் நிமிர்தவில்லை.

"மீனாட்சி... இந்த ஊர் மலை எவ்வளவு உயரமோ, அவ்வளவு உயரத்துக்கு உன்னை என் மனசுல வச்சுக் காப்பாத்துவேன் புள்ள," என்று சுந்தர் அவளது கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான்.

வெட்கத்தில் தலை குனிந்திருந்த மீனாட்சி, "மலையம்மன் கிட்ட நான் வேண்டிக்கிட்டது இதுதானுங்க மாமா... உங்க நிழல்லயே என் காலம் முழுசும் கழியணும்," என்று மெல்லிய குரலில் சொன்னாள். இருவரும் ஒருவருக்கொருவர் பால் பருகிக் கொண்டு, புதிய வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கினர்.

வெளியே பூவளூரின் அமைதியான இரவில், சந்தன மரங்கள் காற்றில் அசைந்து அவர்களுக்குத் தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தன.

திருமணம் முடிந்த கையோடு பூவளூரின் பனிமூட்டமான காலைப் பொழுதுகளில் சோம்பிக் கிடக்க அந்த இளம் ஜோடிக்கு மனமில்லை. இரண்டே நாட்களில், சுந்தரும் மீனாட்சியும் தங்கள் அன்றாட வாழ்வாதாரமான கே.ஜி. எஸ்டேட் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குக் கிளம்பினார்கள்.

அதிகாலை ஐந்து மணிக்கே அன்னம்மாள் எழுந்து வரக்காப்பி போட்டுக்கொடுக்க, சுந்தர் தன் கையில் ஒரு அரிவாளையும், மீனாட்சி தேயிலை பறிக்கும் கூடையையும் எடுத்துக் கொண்டனர். காந்தளூர் மலைச்சரிவுகளில் கே.ஜி. எஸ்டேட் பச்சை கம்பளம் விரித்தது போலக் காட்சியளித்தது.

"என்ன மீனாட்சி... கல்யாணம் முடிஞ்சு ரெண்டே நாள்ல வேலைக்கு வந்தாச்சுன்னு கோபமா?" என்று சுந்தர் மெல்ல அவளை உரசியபடி நடக்க, மீனாட்சி வெட்கத்துடன், "உங்க கூட வர்றதுக்கு என்ன கோபம்? இது நம்ம ஊரு, நம்ம மண்ணு," எனச் சிரித்தாள்.

எஸ்டேட்டுக்குள் நுழைந்ததும் ஆளுக்கொரு திசையில் வேலை பிரிக்கப்பட்டது. சுந்தர் மரங்களைச் சீர் செய்யும் வேலையிலும், மீனாட்சி சக பெண்களுடன் சேர்ந்து தேயிலை கொழுந்து பறிக்கும் வேலையிலும் இறங்கினர்.

வேலை செய்து கொண்டிருக்கும்போதே சுந்தரின் கண்கள் மீனாட்சியையே வட்டமிட்டன. தலையில் கட்டியிருந்த கூடையுடன், பனித்துளிகள் நனைந்த தேயிலைகளுக்கு நடுவே அவள் நிற்பது, ஏதோ ஒரு ஓவியம் போல அவனுக்குத் தெரிந்தது. அவளது விரல்கள் லாவகமாகக் கொழுந்துகளைப் பறிப்பதையும், அவ்வப்போது தலையைச் சரித்துத் தன் பக்கம் பார்ப்பதையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

ஒருமுறை மீனாட்சி தன் முந்தானையால் முகத்தில் படிந்த பனியைத் துடைக்கும்போது, சுந்தர் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். இதைக் கவனித்த மீனாட்சி, "வேலையைப் பாருங்க..." என்பது போலக் கண்ணாலேயே சைகை செய்தாள்.

இவர்கள் இருவரின் இந்த "கண்ணாமூச்சி" ஆட்டத்தை எஸ்டேட்டில் இருந்த மற்றவர்கள் கவனிக்காமல் இல்லை.

கூட வேலை செய்யும் காமாட்சி அக்கா பலமாகச் சிரித்துக்கொண்டே, "ஏன் சுந்தரு... இன்னைக்கு என்ன தேயிலை செடியெல்லாம் உனக்கு ரொம்ப அழகாத் தெரியுதோ? கண்ணு அங்கேயே நிக்குது!" என்று கூவினாள்.

பக்கத்தில் இருந்த காளியப்பன், "அட விடுங்கக்கா... புது மாப்பிள்ளைக்குத் தோட்டத்துல தேயிலை வாசனையை விட, பொண்டாட்டி வாசனைதான் அதிகமாத் தெரியுது போல!" என்று கிண்டல் அடிக்க, மொத்த எஸ்டேட்டும் சிரிப்பொலியில் அதிர்ந்தது.

மீனாட்சி முகம் சிவக்க, "போங்கக்கா... நீங்க வேற," என்று சொல்லித் தேயிலைப் புதர்களுக்குள் ஒளிந்து கொள்ளப் பார்த்தாள். சுந்தரோ அசட்டுச் சிரிப்புடன், "எல்லாம் பொறாமைப்பா உங்களுக்கு," என்று சொல்லி மழுப்பினாலும், அவன் மனதுக்குள் மீனாட்சியின் மீதான காதல் அந்த மலைக் காற்றைப் போலக் குளிர்ந்திருந்தது.

மதிய உணவு இடைவேளை
மதியம் ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்து இருவரும் அன்னம்மாள் கட்டிக்கொடுத்த உணவைப் பகிர்ந்து கொண்டனர். கிண்டல்கள் ஒருபுறம் இருந்தாலும், பூவளூர் மக்களின் அன்பும், கே.ஜி. எஸ்டேட்டின் அமைதியும் அவர்களின் இல்லற வாழ்வின் முதல் உழைப்பை ஒரு கொண்டாட்டமாக மாற்றியது.

செழியன் நினைவுகள்:

கல்லூரி வாழ்வின் அந்த மூன்று ஆண்டுகள் அந்த நான்கு நண்பர்களுக்கும் ஒரு அழகிய கனவு போலக் கழிந்திருந்தது.

இவர்களை தவிர பாரதி அவர்களுடைய தோழி என்பது கல்லூரியிலும் சரி ஹாஸ்டலிலும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

இப்போது அவர்கள் மூன்றாம் ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கல்லூரியின் 'கேம்பஸ் இன்டர்வியூ' என்னும் வேலைவாய்ப்பு முகாம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

தேர்வு முடிவுகள் பலகையில் ஒட்டப்பட்டபோது, ஒரு பெரிய ஆரவாரமே எழுந்தது. பாரதி, அருண், செழியன் ஆகிய மூவரும் முன்னணி நிறுவனங்களில் தேர்வாகி இருந்தனர்.

ஆனால், அவர்களின் ஆருயிர் நண்பன் பாபு மட்டும் அந்தப் பட்டியலில் இல்லை.
அவன் திறமை இல்லாதவன் என்பதால் அல்ல; அவனது பாதை வேறானது. "எங்க அப்பா காலத்துல இருந்து வர்ற பரம்பரை சொத்துகளையும், விவசாயத்தையும் நான்தானே கவனிச்சுக்கணும்? எனக்கு இந்த ஏசி ரூம் வேலை எல்லாம் செட் ஆகாது மச்சான்," என்று சிரித்துக்கொண்டே சொன்ன பாபு, நண்பர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாடினான்.

நிர்வாகம் அவர்களுக்கு வழங்கிய ஆணைப்படி, அருண் மற்றும் பாரதி இருவருக்கும் மகாராஷ்டிராவின் பூனாவிலும், செழியனுக்கு கர்நாடகாவின் பெங்களூரிலும் கிடைத்திருந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
737
செழியன் மனதுக்குள் ஒரு பெரிய போராட்டம் நடந்தது.தன் தாய் தந்தை, தங்கையை விட்டுவிட்டு, அவ்வளவு தூரம் போய் வேலை செய்வதை அவனது மனம் ஏற்கவில்லை.

"இல்லைங்கடா...நம்ப வீட்டினரை விட்டுட்டு அங்க போய் என்னால நிம்மதியா இருக்க முடியாது. ஊருக்குள்ளயே சின்னதா ஏதாவது வேலை பார்த்துக்கலாம். அவங்கதான் எனக்கு முக்கியம்," என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.

கல்லூரியின் அந்த ஆறாவது செமஸ்டர் ப்ராஜெக்ட் கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டபோது, வெறும் தாள்கள் மட்டும் ஒப்படைக்கப்படவில்லை; மூன்று ஆண்டுகால நட்பின் சுவடுகளும் அங்கே உறைந்து போயின.

வகுப்பறைகள் காலியாகலாம், ஆனால் அந்த வராண்டாக்களில் எதிரொலித்த சிரிப்பொலிகள் என்றும் அழியாதவை.
கல்லூரி வாசலில் பிரியும் நேரம் வந்தபோது, அந்த நான்கு நண்பர்களின் முகத்திலும் ஒருவிதமான கனத்த மௌனம் படர்ந்திருந்தது.

"மச்சான்... அடிக்கடி போன் பண்ணுங்கடா, முடிஞ்சா மாசம் ஒருமுறை எங்கயாவது மீட் பண்ணுவோம்," என்று செழியன் குரல் தழுதழுக்கச் சொன்னான். வெளியே தைரியமாகப் பேசிக்கொண்டாலும், அந்த விடுதி அறையின் மூலைகளுக்கு மட்டுமே தெரியும் அவர்களின் உண்மையான வலி.

யாரும் பார்க்காத நேரத்தில், பாரதியும் அருணும் அந்த அறையின் ஒரு மூலையில் ஒருவரை ஒருவர் இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதனர்."உன்னை விட்டுட்டு எப்படிடா போவேன்?" என்ற பாரதியின் விம்மல் அந்தச் சுவர்களில் மோதித் திரும்பியது.

அரசியல் செல்வாக்கும், பெரும் பணபலமும் கொண்ட காரைக்குடி தயாளனின் மகள். அவளுக்குக் காத்திருப்பது அதிகாரமும் அந்தஸ்தும் நிறைந்த வாழ்க்கை. ஆனால், அவள் தேடுவதோ எளிய மனிதர்களின் அன்பு.

அருண்: அப்பா, அம்மா இல்லாத அனாதை. அவனுக்கு இந்த உலகத்தில் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இந்த நண்பர்கள் மட்டுமே இருந்தனர். வேலை கிடைத்தும், தற்போது பாபுவுடன் தங்கியிருக்க முடிவெடுத்திருந்தான்.

பாபு:பரம்பரைச் சொத்துக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவன்.
அருணின் நிலையை நினைத்துத்தான் மற்ற மூவருக்கும் கவலை அதிகமாக இருந்தது. "அருண்... நீ இப்போதைக்கு பாபு கூட இரு. நமக்குத்தான் கேம்பஸ்ல வேலை கிடைச்சிருக்கே. இப்போதைக்கு அந்த ஆஃபரை ஹோல்ட் பண்ணி வைப்போம்.அப்புறம் நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம். நம்ம கையில வேலை இருக்குங்கிற தைரியம் போதும்," என்று பாரதி அவனுக்குத் தைரியம் சொன்னாள்.

பேருந்து நிலையத்திற்கு ஒவ்வொருவராகப் புறப்பட்டனர்.
பேருந்து நகரத் தொடங்கியபோது, ஜன்னல் ஓரம் அமர்ந்து கையாட்டிய பாரதியின் கண்களில் நீர் முட்டியது.

பணக்கார வீட்டுப் பிள்ளை, அரசியல் வாரிசு என்பதையெல்லாம் தாண்டி, நல்ல நண்பர்களையும், தனது காதலனைப் பிரிந்த துயரம் அவளை வாட்டியது. "மீண்டும் சந்திப்போம்" என்ற ஒற்றை நம்பிக்கையோடு அவரவர் ஊர்களுக்குத் தங்கள் பாதைகளை மாற்றிக்கொண்டனர்.

வீட்டிற்குச் செல்லும் வழியில் பாரதியின் மனது கனமாக இருந்தது. கேம்பஸில் செலக்ட் ஆனது மட்டுமே அவர்கள் இணைய ஒரு பாலம் அதனால் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தாள்.

காரைக்குடியின் அந்தப் பிரம்மாண்டமான மாளிகையில், பாரதியின் வருகை ஒரு திருவிழா போலக் கொண்டாடப்பட்டது. அரசியல் செல்வாக்கு மிக்க தயாளன், தன் மகள் படித்து முடித்து கௌரவமாக வீடு திரும்பியதைக் கண்டு மிகுந்த பெருமிதம் கொண்டார்.

வீட்டிற்குள் நுழைந்த மகளை பார்த்தவர் "பாரதி... நான் சொன்னபடியே நல்லபடியா படிச்சு முடிச்சுட்டு வந்துட்ட. எங்க பரம்பரை கௌரவத்தையும் நீ காப்பாத்திட்ட என்று தொடர்ந்து அவர் சொன்ன அந்த வார்த்தைதான் பாரதியின் தலையில் இடியாக இறங்கியது.

"இப்போ உனக்கு படிப்பு முடிஞ்சாச்சு. அடுத்து உனக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல இடத்துல, பெரிய அந்தஸ்து இருக்கிற மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன். சீக்கிரமே அந்த நல்ல செய்தியைச் சொல்றேன்," என்று சொல்லிவிட்டு சிரித்தபடி நகர்ந்தார்.

தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட அந்த நொடி, பாரதியின் உலகம் அப்படியே நிலைகுலைந்து போனது. உள்ளுக்குள் அதிர்ந்து போனாள். காரைக்குடியின் அந்தப் பெரிய மாளிகைச் சுவர்கள் அவளை நசுக்குவது போல இருந்தது.

தன் அறைக்குள் போய் கதவைத் தாழிட்டுக் கொண்டு, கட்டிலில் முகம் புதைத்துக் கதறி அழுதாள்.

'எப்படி இந்த விஷயத்தை அவனிடம் சொல்வது?'

'தந்தையின் கௌரவத்திற்கும், தன் காதலுக்கும் இடையில் எப்படிப் போராடுவது?' என்று தெரியாமல் தவிக்க,கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது.

அவளுக்குத் தெரியும்—அவள் ஒரு அரசியல்வாதியின் மகள். தன் பலவீனத்தை வெளியே காட்டினால் அது பெரும் புயலை உருவாக்கும்.

சிறிது நேரத்தில், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, முகத்தைக் கழுவியவள் கண்ணாடி முன் நின்று தன் முகத்தில் எந்தச் சோகமும் தெரியாதபடி மாற்றிக் கொண்டாள்.

தந்தை கூப்பிடும்போது புன்னகையோடு பதில் சொல்வது.
சமையலறையில் தாய்க்கு உதவியாக இருப்பது. வழக்கம் போல இயல்பாக வீட்டில் நடமாடுவது என்று ஒரு நிழல் யுத்தத்தைத் தொடங்கினாள்.

வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் அந்த ரகசியம் அவளை அரித்துக் கொண்டிருந்தது. 'அருண்' என்ற பெயர் அவளது ஒவ்வொரு சுவாசத்திலும் நிறைந்திருக்க, அதை யாரிடமும் சொல்ல முடியாமல் ஒரு மௌனப் போராட்டத்தைச் சுமந்தபடி அந்தப் பெரிய வீட்டில் வலம் வந்தாள்.

ஒரு மாதம் ஓடிவிட்டது. காரைக்குடி மாளிகையில் அந்தச் சந்தர்ப்பம் பாரதிக்குக் கிடைத்தது. ஒரு நெருங்கிய உறவினரின் மரணத்திற்காகத் தந்தை தயாளன், அவளது அம்மா மல்லிகா, தாத்தா, பாட்டி என ஒட்டுமொத்தக் குடும்பமும் வெளியூர் கிளம்பிச் சென்றனர். வீட்டில் பாரதி மட்டுமே வேலையாட்களோடு தனித்து விடப்பட்டாள்.

இதைச் சரியான தருணமாகக் கருதிய பாரதி, நடுக்கத்துடன் பாபுவின் வீட்டிலிருந்த அருணுக்கு போன் பண்ணினாள்…

"அருண்... அப்பா கல்யாணப் பேச்சை எடுத்துட்டார்டா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு," என்று அழுதுகொண்டே விஷயத்தைச் சொன்னாள்.

அருண் அவளுக்குத் தைரியம் சொன்னான். "பாரதி, நீ எதற்கும் கவலைப்படாதே. நான் இருக்கிறேன். நம் நண்பர்களோடு பேசி, ஒரு நல்ல முடிவை எடுத்துவிட்டு உனக்குச் சொல்கிறேன்," என்று ஆறுதல் கூறி போனை வைத்தான்.

ஆனால், விதி விளையாடியது. அந்த அழைப்பிற்குப் பிறகு அருணுக்குக் கடுமையான டைபாய்டு காய்ச்சல் தாக்கியது. படுக்கையிலேயே முடங்கிப்போன அருண், சுயநினைவற்று இருந்தான். அவனது உடல்நிலை தேறி வர மூன்று வாரங்களுக்கு மேலானது.

பாரதியோ, தான் சொன்ன விஷயத்தைக் கேட்டு அருண் ஏன் இன்னும் கூப்பிடவில்லை, ஒருவேளை அவன் பயந்துவிட்டானா அல்லது தன்னைத் தவிர்க்கிறானா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

மறுபுறம்,தயாளன் சும்மா இருக்கவில்லை. அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு குடும்பத்தில், தன் அந்தஸ்திற்கு இணையான ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசி முடித்துவிட்டார்.

நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியவர், தன் மாமனார் வீட்டிற்குச் சென்று மகளின் திருமண விசேஷத்திற்கு அழைப்பு விடுக்கக் கிளம்பிச் சென்றார். வீடு மீண்டும் ஒருமுறை ஆளில்லாமல் அமைதியானது.

தாள முடியாத துயரத்தில் இருந்த பாரதி, மீண்டும் ஒருமுறை அருணுக்குப் போன் செய்தாள். இந்த முறை போனை எடுத்தது பாபு.

"பாபு... அருண் எங்கே? ஏன் இத்தனை நாளா என்கிட்ட பேசல?" என்று கதறினாள்.

பாபு நிதானமாக, "பாரதி, அருணை தப்பு தப்பா நினைக்காதே. அவனுக்குக் கடுமையான டைபாய்டு. மூணு வாரமா எழுந்திருக்கக் கூட முடியாம படுத்திருந்தான். இப்பதான் கொஞ்சம் தேறியிருக்கான்," என்று உண்மையைச் சொன்னான்.

விஷயம் தெரிந்ததும் பாரதிக்கு ஒருபுறம் நிம்மதி, மறுபுறம் அருணின் நிலையை நினைத்து அழுகை முட்டியது. போனை வாங்கிய அருண், பலவீனமான குரலில் அவளிடம் பேசினான். "மன்னிச்சுடு பாரதி... உன்னைத் தவிக்க விட்டுட்டேன். ஆனா இனி ஒரு நிமிஷம் கூட தாமதிக்கக் கூடாது. இன்னைக்கு நைட்டே நாங்க கிளம்பி அங்கே வரோம். நீ தயாராக இரு. நாளைக்கு நமக்கு சிதம்பரத்தில் ரிஜிஸ்டர் மேரேஜ் இருக்கு எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டேன் ஆனால் இதை உன்னிடம் சொல்ல முடியாத சூழல் டி. உன்னைத் தனியா விடமாட்டோம்," என்று உறுதி அளித்தான்.

அருணின் வார்த்தைகள் பாரதிக்கு ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தது. காரைக்குடி மாளிகையின் ஜன்னல் வழியாக இருள் படருவதைப் பார்த்தபடி, தன் வாழ்வின் மிகப்பெரிய முடிவை எடுக்க அவள் தயாரானாள்.

பாபுவும் அருணும் காரைக்குடியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர்.அந்த நள்ளிரவுப் பொழுது காரைக்குடியின் அமைதியை மெல்லக் கலைத்துக் கொண்டிருந்தது.

தயாளனின் மாளிகை விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, வீட்டின் பின் பக்கக் கதவோரம் பாரதி ஒரு சிறிய பையுடனும், படபடக்கும் இதயத்துடனும் காத்துக்கொண்டிருந்தாள்.

சுமார் இரண்டு மணி இருக்கும். தூரத்தில் ஒரு காரின் முகப்பு விளக்குகள் அணைக்கப்பட்டு, வெறும் ஒலியை மட்டும் குறைத்துக்கொண்டு ஒரு வாகனம் மாளிகையின் சுற்றுச்சுவர் ஓரமாக வந்து நின்றது. அது பாபுவின் கார்.

டைபாய்டு காய்ச்சலின் தழும்புகள் இன்னும் முகத்தில் தெரிந்தாலும், தன் காதலியைக் காக்க வேண்டும் என்ற வேகத்தில் அருண் காரிலிருந்து இறங்கினான். அவனது உடல் தள்ளாடினாலும், பாரதியைப் பார்த்ததும் ஒரு மின்னல் போன்ற வேகம் அவனுள் பிறந்தது.

"பாரதி!" என்று மெல்லிய குரலில் அருண் அழைக்க, இருட்டில் பதுங்கி வந்த பாரதி ஓடிப்போய் அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள்.

"அருண்...பயமா இருக்குடா," என்று விம்மினாள்.

பக்கத்தில் இருந்த பாபு, "இப்போ அழுகைக்கு நேரமில்லை பாரதி. சீக்கிரம் ஏறுங்க என்க,
யாரும் பார்க்காத வண்ணம், அந்தப் பெரிய மாளிகையின் நிழலில் மறைந்து காரில் ஏறினர். பாபு சத்தமில்லாமல் காரைக் கிளப்பினான். காரைக்குடியின் குறுகிய தெருக்களைக் கடந்து நெடுஞ்சாலைக்கு வரும் வரை மூவருமே மூச்சு விடக் கூடப் பயந்தனர்.

பின் சீட்டில் அமர்ந்திருந்த அருண், பாரதியின் நடுக்கத்தைப் போக்க அவளது கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டவன் "இனி நான் இருக்கேன் பாரதி... யாராவது உன்னைத் தொடணும்னா முதல்ல என்னைத்தான் தாண்டி வரணுமென்றான்.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top