• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
அவனும் மழையும்


அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை கொட்டி தீர்க்கும் என்பது போல வானத்தில் ஒரு பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது .

அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.

“ இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப ..சீக்கிரம் ரெடி ஆகு .

இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை பெண் பார்க்க வர போறாங்க .”தாயார் சொல்லிவிட்டு நகர, இப்போதும் மனதிற்குள் ஒரு பதட்டம் .. தன்னை பார்க்க வரப்போவது யார் என்று இந்த நிமிடம் வரயிலுமே தெரியவில்லை.

மனமோ உள்ளுக்குள் பெரும் குரல் எடுத்து அழுது கொண்டிருந்தது .

வானில் இருந்து விழும் மழை எல்லாமே இவள் கண்களில் இருந்து பொழிவது போல ஒரு தோற்றம்..

‘கடைசியில நீயும் என்னை ஏமாத்திட்டல்ல சரண்..’மனம் பெரும் குரலெடுத்து கத்தியது.

படிப்பு முடிந்து மூன்று வருடம் தாண்டி விட்டது .வீட்டை விட்டு வெளியே எங்கேயும் சென்றது இல்லை.

ஏதோ ஒரு நம்பிக்கை மனதிற்குள் நிச்சயமாக அவன் தன்னை தேடி வருவான் என்று.. ஆனால் இனி வரப்போவதில்லை என்று மனம் பயப்பட ஆரம்பித்தது .அதற்கு காரணமும் இருந்தது ..

சிறு வயதிலிருந்து இந்த ஊரில் வசதியாக வாழ்ந்தவர்களில் இவர்களும் ஒருவர்..

அதனாலேயே நிறைய கர்வம் உண்டு.. இவளது குடும்பத்தாருக்கு.. சற்று ஏழ்மையோடு இருக்கும் யாரிடமும் இவளை பழக விட்டதில்லை ..

அதையும் தாண்டி ஒருவன் இவளின் அருகே நெருங்கி இருந்தான். பள்ளி தோழனாக கல்லூரியின் நண்பனாக என்று ஒரு கட்டத்தில் நட்பு காதலாக கூட மாறி இருந்தது.

சிறுவயதில் உரிமையோடு விளையாடியவன் தான். ஆனால் கல்லூரியில் அவன் வேறு ஒரு முகம் காட்டினான்.

கல்லூரிக்கு செல்கையில் அவன் இவளிடம் பேசியது கிடையாது .இன்னமும் சொல்லப்போனால் இவளை பார்த்த போதெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

முதல்முறையாக அவனை கல்லூரியில் பார்த்த நாளும் கூட ஞாபகத்தில் இருந்தது .இன்றைய நாளை போலவே அன்றைக்கும் கூட மழை பொழிந்து கொண்டிருந்தது விடாமல் ..

தொப்பலாக நனைந்தபடி தான் இவள் கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. முதலில் எதிர்கொண்டவனும் அவன் தான் .”என்ன பெரிய மௌனராகம் ரேவதின்னு நினைப்போ ..மழையில் அப்படி நனைஞ்சுட்டு வர்ற..

கொஞ்சம் உன்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியுதா.. கொஞ்சம் சுத்தி பாரு. எல்லாரும் உன்னை எப்படி பார்க்கிறாங்கன்னு பாரு.. அறிவில்ல இப்படித்தான் வருவியா” கோபமாக திட்ட அப்போதுதான் தன்னை சுற்றி நடப்பதையே கவனித்தாள் .

அத்தனை பேரின் கண்களும் இவளை தான் வட்டமிட்டு கொண்டிருந்தது.

சட்டென வேகமாக கையில் இருந்த புத்தகத்தை மார்புக்கு நேராக மறைத்தபடி இவனை பார்க்க ,”சின்ன வயசுல உனக்கு மழை பிடிக்கும் தான்..இல்லன்னு நான் சொல்ல மாட்டேன்.

நிறைய தடவை நீ நனைந்ததை நானும் பார்த்திருக்கிறேன். அதுக்காக ஓரளவுக்கு வளரும் போது எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா? இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்து பழகு.

இது ஒன்னும் உன்னோட ஊர் இல்ல. அங்க நீ எப்படி வேணும்னாலும் இருக்கலாம் . அங்கே யாரும் எதையும் கண்டுக்க மாட்டாங்க. ஏன்னா நீ அங்கே அவங்கள்ல ஒருத்தி, ஆனா இங்க அப்படி இல்ல .

இது சிட்டி இங்கே இருக்கிற மாதிரி தான் இருக்கணும் . இன்னொரு முறை இது போல ஒரு பைத்தியக்காரத்தனத்தை செய்யாத.. முதல்ல நேரா ஹாஸ்டல்ல போயி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா..

இதே மாதிரி செமஸ்டர் ஹாலுக்குள்ள வந்துடாத” கோபமாக சொல்லிவிட்டு நகர அவனை முறைக்க தான் தோன்றியது இவளுக்கு ..

அன்றைக்கு காலேஜிற்கு விடுமுறை எடுத்துக் கொண்டாள்.

நேராக ஹாஸ்டலில் சென்று உடை மாற்றியவள் திரும்பத் திரும்ப அவன் திட்டியதுதான் ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.

“முன்னாடி எல்லாம் நல்லா தானே பேசுவான் பிளஸ் டூ படிக்கும் போது வரைக்கும் கூட அப்படித்தானே.. இப்ப மட்டும் என்னவாம் ..ரொம்பத்தான் திமிரு பண்ணிக்கிறான்.” என மனதிற்குள் திட்டிக் கொண்டாள்..

அது அத்தோடு முடிந்திருக்கவில்லை, அடுத்த சில நாட்கள் தாண்டி இருந்தது.

அன்றைக்கு அருகில் இருந்த லைப்ரரிக்கு சென்றவள் சற்று உயரமாக இருந்த புத்தகத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

முயற்சி தான் செய்ய முடிந்ததே தவிர எடுக்க முடியவில்லை. .

அப்போது ஒரு வலியக்கரம் அந்த புத்தகத்தை எடுக்க இவளுக்கு உதவியது. எடுத்து இவள் புறமாக நீட்டியவன் இப்போதுமே முறைத்து தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவளுக்கு சுத்தமாகவே புரியவில்லை .சுற்றிலும் பார்த்தபடி இவனை பார்க்க, “புஸ்தகத்தை எடுத்துட்டேன்னா என்ட்ரி போட்டு வெளியே எடுத்துட்டு வா . உன்கிட்ட கொஞ்சம் பேசணும் “என்று சொல்லிவிட்டு வெளியேறி இருக்க ,இவளுக்கு ஒன்றும் புரியவில்லை .

சுற்றிலும் பார்த்தால் பெரியதாக கூட்டமெல்லாம் இல்லை .அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் அமர்ந்திருந்தது .

அந்த இடமே மிகவும் அமைதியாக இருந்தது.” என்ன பேச போறான் . மனதில் ஒரு ஆர்வம் தோன்றினாலுமே அவன் முறைத்து பார்த்துவிட்டு நகர்ந்ததை யோசிக்கையில், “ஏதாவது தப்பு பண்ணிட்டோமா.. இல்லையே அப்படி எதுவும் செய்தது போல தெரியல .அப்புறம் எதுக்காக முறைச்சிகிட்டு போறான் .”யோசித்த படியே தான் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தது.

அவன் எங்கே நிற்கிறான் என்று தேட ஆரம்பித்தாள்.

என்னவோ ..இவனை பார்க்கையில் எல்லாம் மழை லேசாக தூரத்தான் ஆரம்பித்தது.

அன்றைக்கும் லேசாக தூறல் போட ஆரம்பிக்க, சற்று நகர்ந்து அங்கிருந்த ஒரு மர நிழலில் நின்றிருந்தான்.

வேகமாக அவனுக்கு அருகே சென்றவள்” சொல்லுங்க என்ன பேசணும் “என்று கேட்க ,”உனக்கு அறிவே இல்லையா.. மேல் மாடி எப்பவுமே காலியா தான் வச்சிருப்பியா.. உருப்படியா ஒண்ணுமே செய்ய மாட்டேல்ல ‌எல்லாம் பணம் இருக்கிற திமிரு “என்று திட்ட ஆரம்பிக்க ,

“இப்ப பணத்தமிரு எங்க வந்துச்சாம்.. நான் லைப்ரரில புத்தகம் எடுக்க வந்தேன் .இதோ எடுத்துட்டேன் .தேவையில்லாம எதுக்காக சத்தம் போடறீங்க. “

“ஆமா நீ எந்த மாதிரி டிரஸ் போட்டிருக்கற கொஞ்சம் பாரு “என்று நக்கலாக கேட்க ,அப்போதுதான் கவனித்தாள் ஜீன்ஸ் பேண்ட், இடுப்பு வரை கவர் ஆகின்ற ஒரு டீசர்ட் இதைத்தான் அணிந்து இருந்தது.

இவளுக்கு பெரியதாக வித்தியாசமாக தெரியவில்லை.

“ இந்த டிரஸ் போட்டுட்டு அவ்வளவு உயரமா இருக்கிற இடத்தில கையை தூக்கி புத்தகத்தை எடுக்கற, என்ன எல்லாருக்கும் காட்சி பொருளா இருக்கணுமா ..

இடுப்பு அப்படியே தெரியுது. எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ளணும்னு கூட தெரியாதா .இதுக்கு பேரு பணத்திமிர் தானே.. யார் என்ன கேட்டுட முடியுங்கறது “கோபமாக கேட்க ,

“நான் போடற உடை என்னோட சுதந்திரம்.. சும்மா அதுல வந்து தலையிட வேண்டாம். சரி நீங்க சொன்னது கரெக்ட் தான். எனக்கு அது தோணல. எனக்கு அந்த புத்தகம் வேண்டியதா இருந்தது. அதனால எடுக்க ட்ரை பண்ணினேன். என்னோட தப்பு தான் .இனி இதுபோல நடக்காது .அதுக்காக தேவை இல்லாம எதையும் வந்து பேச வேண்டாம். புரிஞ்சுதா ..

ஒரு ஊர்காரங்கன்னு பார்த்தா ரொம்ப தான்.. எப்ப பார்த்தாலுமே என்னை திட்டிட்டு தான் இருப்பீங்களா..”

“ ஏன் நீ அதுபோல தானே நடந்துக்கற” என்று கேட்க கோபத்தோடு தான் அங்கிருந்து நகர்ந்தது. ஏதோ ஒரு உரிமையாக பேசியதாக தோன்றியது இவளுக்கு..

தன்பிறகுமே அடிக்கடி காலேஜில் சந்தித்துக் கொண்டனர். எப்போதுமே ஏதோ ஒரு விஷயத்திற்காக அவனிடம் சண்டை இடத்தான் செய்தாள்..

ஆனால் அந்த சண்டையுமே இவளது மனதை பாதிக்கத்தான் செய்தது. என்ன காரணம் என்று தான் இவளுக்கு புரியவில்லை.

பள்ளிப் பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என்று கூட நிறைய முறை நினைத்தாள்..

ஆனால் இந்த சண்டையை தாண்டியும் ஏதோ ஒரு அக்கறை அவனிடத்தில் இவளை தொடரத்தான் செய்தது.

கல்லூரியில் ப்ராஜெக்ட் ஆகட்டும் அல்லது வேறு எந்த ஒரு விஷயமாகட்டும் எளிதாக இவளையும் தன்னுடைய டீம்மோடு சேர்த்துக் கொண்டான்.

இப்போதெல்லாம் அவனிடம் பேசவே சற்று பயம் தான் இவளுக்கு ..எப்போது என்ன சண்டையிடுவானோ என்று..

அந்த வாரம் தன்னுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு இருந்தால் சந்தியா .

திரும்ப வரும்போது பாதி வழியில் வந்து கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதத்தில் ஒரு பெரிய விபத்து அங்கே நடந்திருந்தது.

இவள் வந்து கொண்டிருந்த பஸ் எதிரில் வந்து கொண்டிருந்த இன்னொரு பஸ்ஸோடு நேருக்கு நேராக மோதி இருக்க, நிறைய பேருக்கு அடி பலமாகப்பட்டிருந்தது.

நல்வாய்ப்பாக இவளுக்கு பெரியதாக அடியில்லை.. காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்க ,அந்த நேரத்தில் பயத்தோடும் முதல் முதலாக அழைத்தது இவனுக்குத்தான்..

“சரண் வர்ற வழியில ஒரு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு .நான் இங்க இந்த இடத்தில் இருக்கிறேன் .எனக்கு ரொம்ப பயமா இருக்குது .எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா‌. உன்னால இங்க வர முடியுமா” என்று கேட்க.. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே பதறி அடித்து ஓடி வந்திருந்தான் .

நண்பன் ஒருவனிடம் வண்டியை வாங்கிக்கொண்டு இவளுக்கு எதிரே வந்து நின்றிருந்தான். இடையே இரண்டு முறை கூட ஃபோனில் அழைத்து “நான் வந்துகிட்டே இருக்கேன் .பயப்படாதே .அந்த இடத்திலேயே இரு.. இன்னும் கொஞ்ச நேரம் தான் .உனக்கு எதுவும் அடி படலையே.. இப்பதான் நியூஸ்ல பார்த்தேன். பதறாதே .”என்று சொன்னபடியே வந்து இவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

இடையே ஒரு தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி இவளுக்கு தேநீர் வாங்கி கொடுத்து இவளை ஆசுவாசப்படுத்தி தான் அழைத்துச் சென்றது .”இப்ப நான் என்ன பண்ணனும். உன்னோட வீட்டுக்கு கொண்டு போய் விடணுமா இல்ல நேரா ஹாஸ்டலுக்கு வர்றியா”.

“நாளைக்கு காலேஜ் இருக்கு எனக்கு பெருசா அடி எல்லாம் இல்ல. கையில தான் லேசா சீராய்புக்காயம். பயப்பட எதுவுமில்லை என்னை ஹாஸ்டல்ல விட்டுருங்க” என்று கூறினாள் ..

அப்போதுதான் சரணின் முகத்தைப் பார்த்தது .அவனது முகத்தில் அத்தனை பதட்டம் ,பயம் இன்னமும் என்னென்னவோ உணர்வுகள் இவளுக்கு அந்த நிமிடம் புரியவே இல்லை…

“வீட்டுக்கு சொன்னியா” என்று கேட்க,

“இல்ல பதட்டத்துல எதுவும் சொல்லல” என்றவள் வீட்டிற்கு அழைத்து சொல்லி இருந்தாள்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
அடுத்த இரண்டு நாட்கள் இவளோடு தான் அவன் சுற்றிக் கொண்டிருந்தது இவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. இவனுடைய வினோத மனப்போக்கை நினைத்து ..”என்ன ஆச்சுது முன்னாடியெல்லாம் சண்டை போடுவான்.அப்புறம் கொஞ்ச நாள் பேசாம இருந்தான்.இப்ப என்னடான்னா நம்மள விட்டு நகரக்கூட மாட்டேங்குறான். என்ன ஆச்சுன்னு தெரியலையே” என்று யோசித்தபடியே இருக்க..

“ நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் “என்று அவன் தான் ஆரம்பித்து இருந்தான் ”என்ன பேசணும் சொல்லுங்க” என்று கேட்க ,

நிறைய நேரங்களில் யோசிக்காமல் சண்டையிட்டவன் இன்று பேசுவதற்கே கூலி கேட்பான் போல ,இங்கும் அங்குமாக கண்கள் அலைமோத, தலையை கோதினான். முகத்தை தேய்த்துக் கொண்டான் இன்னும் என்னென்னவோ செய்கைகள் இவளுக்கே வித்தியாசமாக இருந்தது .அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிறுவயதிலிருந்தே கவனிக்கிறாள் அல்லவா அவனுடைய செயல்கள் ஒவ்வொன்றுமே இவளுக்கு பிடித்திருந்தது .கூடவே மனதிற்குள் ஒரு சின்ன சிரிப்பும் கூட வந்தது.. அவனையே பார்த்துக் கொண்டிருக்க ,முதல் முதலாக கன்னத்தில் மழைத்துளி ஒன்று வந்து பட்டு தெறிக்க,” மழை வரும் போல இருக்கே.. சரி போகலாமா” என்று கேட்கும் போதே மழை சற்று வேகம் எடுக்க ஏற்கனவே மழையில் நனைந்ததற்காகத்தான் பல திட்டு வாங்கி இருக்கிறாளே.. சட்டென மழையில் நனையாமல் இருப்பதற்கு எங்கே நகரலாம் என பார்த்துப்படியே நகர போக சட்டென கையைப் பிடித்து நிறுத்தி இருந்தான்.

சற்று ஆச்சரியமாக திரும்பி பார்க்க, இந்த மழைக்கும் நமக்கும் நிறைய தொடர்பு இருக்குதுல்ல” கேட்டுப்படியே, “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு லைஃப்லாங் உன்கூட வரணும்னு ஆசைப்படறேன் .இதுபோல கையை பிடிச்சுக்கிட்டு.. உனக்கு சம்மதமா ,என்று கேட்க, இவளுக்கு பதிலே தெரியவில்லை .அப்படியே அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறுவயதில் இருந்து தெரியும் என்பதினாலோ ஏன்னவோ எளிதாகவே அந்த காதலை ஏற்றுக் கொண்டாள்.இவனை நிராகரிக்க எந்த காரணமும் இல்லையே..

எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது .யாரிடமும் சண்டை சச்சரவுக்கு செல்லாதவன்.

ஊரைப் பொறுத்த வரைக்கும் சற்று வசதி குறைந்தவன் ஆனால் அது எல்லாம் காதலுக்கு பொருட்டே அல்ல. அதன் பிறகு கல்லூரி படிப்பு முடியும் வரையிலுமே இருவரும் காதல் பறவைகளாக தான் பறந்தனர்.

எதைப் பற்றியும் நினைக்கவில்லை .கல்வியோடு சேர்ந்து காதலும் அழகாக வளர்ந்தது.

கேம்பஸ் இன்டர்வியூ என்று ஆரம்பிக்கும் போது இவளை எப்படியும் இவளது வீட்டில் வேலைக்கு விடப்போவதில்லை. அதனால் இவள் கலந்து கொள்ள வில்லை .ஆனால் சரண் ஆர்வமாக கலந்து கொண்டான்.

“ என்னடா கேம்பஸ் இன்டர்வியூக்கு இவ்வளவு ஆர்வமா இருக்குற.. ஊரைவிட்டு போறதுனா அவ்வளவு சந்தோஷமா “என்று கிண்டலாக கேட்க,

“ பின்ன நாளைக்கு குடும்பம் ,குழந்தை என்று வரும்போது பார்த்துக்குறதுக்கு நல்ல வேலை வேணும்ல .நல்ல ஜாப்பா செலக்ட் பண்ணனும் .

அதுக்காகவாவது நான் என்னோட ஃபுல் எபெர்ட்டையும் போடணும் “என்று கூறினான். சொன்னது போலவே பெரிய கம்பெனி ஒன்றில் வேலைக்கு செலக்ட் ஆகி இருந்தான். மாதம் கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம்.. பெங்களூரில் வேலை என்று வர அன்றைக்கெல்லாம் இவளுக்கு அத்தனை சந்தோஷம்..

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ஓடி வந்தவன் இவளை இறுக அணைத்து சற்றும் யோசிக்காமல் தலைக்கு மேலாக தூக்கி சுற்றி இருந்தான்..

“என்னடா என்ன இவ்வளவு சந்தோஷமா இருக்கிற..”

“ எனக்கு வேலை கிடைச்சிருச்சு கிட்டத்தட்ட 1.5 லட்சம் சம்பளம் உனக்கு சந்தோஷம் தானே.. நம்ம எதிர்காலத்துக்கு இது தாராளமா போதும்ல” என்று மகிழ்ச்சியாக கூறினான்.

“தாராளமா போதும்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள்..பிறகு நேராக கல்லூரி முடியவுமே அவரவர் வீட்டுக்கு சென்றனர் .

பத்து நாட்கள் கழித்து இவன் வேலைக்கு செல்வதற்கு முன்னால் இவளை சந்தித்தான்.

“ காலேஜில் படிக்கும் போது பெருசா தெரியல ..இப்போ ஊருக்கு வந்த பிறகுதான் நிதர்சனம் எனக்கு புரியுது .”

“என்னடா என்ன ஆச்சு .”

“இந்த அஞ்சு நிமிஷம் உன்னை பார்க்கறதுக்கே இங்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்குது “என்று கேட்க ,”ஊரோட வழக்கம் அதுதானே உனக்கு தான் தெரியும்ல.. தெரிஞ்சிட்டே சொல்ற .அதுதான் நீ சொல்லவும் நான் நேரா வந்துட்டேன்ல .”

“ஆனாலும் ஒளிஞ்சு ஒளிஞ்சு இப்படி பார்க்கணுமா என்ன ?”

“என்னதான் பண்ணலாம் சொல்லு.”

“ எனக்கு தெரியல “சற்று நேரம் யோசித்தவன் .”ரெண்டு நாளா இதைப்பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கேன் .”

‘என்ன யோசிக்கற நீ சொல்றதோட அர்த்தம் எனக்கு எதுவும் புரியல.. “

“எப்படிப் பார்த்தாலும் நம்ம கல்யாணத்துக்கு உன் வீட்ல சம்மதிக்க மாட்டாங்க “

“ஏண்டா அப்படி சொல்ற.. எனக்கு நம்பிக்கை இருக்குது என்னால பேசி கன்வின்ஸ் பண்ண முடியும் .நீயேன் நம்பிக்கையை தளர விடுற.. உனக்கு நல்ல ஜாப் இருக்கு நல்ல பையன் இதைவிட என்ன வேண்டும்? “

“என்னமோ உங்க அப்பா முன்ன மாதிரி தான் இருக்கிறார் .மாறவே இல்லை .நான் பணக்காரன் ,வசதியானவன் நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற மாதிரி.. “

“இப்ப என்னதான் சொல்ல வர்ற..”

“ நிச்சயமா உன் வீட்ல இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க.. நான் வேலைக்காக ஊருக்கு போகும்போது நீயும் என் பின்னாடி வந்துரு .”

“என்ன சரண் பேசிட்டு இருக்குற..நீ பேசுவது கொஞ்சம் கூட சரியில்லை. நிச்சயமா என்னால முடியவே முடியாது .”

“சாரி சந்தியா நான் பலமுறை யோசித்து பாத்துட்டேன். இதுதான் என்னோட முடிவு. நான் ஊரை விட்டு கிளம்பும்போது நீயும் என் கூட வரணும் .நீ என்னை உண்மையா காதலிக்கறதானே அப்படின்னா கிளம்பி வா “என்று சொல்லிவிட்டு சென்று இருந்தான்

அன்றிலிருந்து அடுத்த ஒரு வாரம் இவளுக்கு தூக்கம் இல்லை .சரியான சாப்பாடு இல்லை.மனம் முழுக்க பதட்டம். குறிப்பிட்ட நாளும் வந்தது.

ரயில்வே ஸ்டேஷனில் சரண் காத்திருக்க இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

எப்போதும் போலவே இவளது மனநிலையை எடுத்துக் கூறுவது போல அன்றைக்கு மழை விடாமல் தூறிக் கொண்டிருந்தது.

மழையில் நனைந்தபடி தான் இவள் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் சென்றது.

வீட்டில் ஏதேதோ பொய் சொல்லி சென்றவள்” நிச்சயமா என்னால உன் பின்னாடி வர முடியாது..”

“அப்படின்னா நீ என்னை காதலிக்கலையா.. பழகியது எல்லாம் பொய்யா “.

“அதெல்லாம் பொய்ணு யார் சொன்னாங்க.எல்லாமே உண்மை தான்.ஆனா அதே நேரத்துல என்னோட பெத்தவங்களை தலைகுனிய வச்சிட்டு என்னால உன் பின்னாடி ஓடி வர முடியாது.

நாளைக்கு காலையில விடியும் போது இவரோட பொண்ணு ஓடிட்டான்னு தகவல் இந்த ஊருக்குள்ள பரவ நான் விடமாட்டேன்.

எனக்கு நம்பிக்கை இருக்குது .என் வீட்ல சொல்லி என்னால சம்மதிக்க வைக்க முடியும். உனக்கு உன் பேர்ல நம்பிக்கை இருந்ததுனா நீ திரும்ப என்னை தேடி வா .

நீ சொன்னல்ல நான் ஏழை எனக்கு பெருசா வசதி இல்ல என்னை ஏத்துக்க மாட்டாங்கன்னு சொல்றல்ல.. என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்னென்ன தகுதி வேணும்னு நினைக்கிறாயோ அந்த அளவுக்கு உயர்ந்துட்டு நீ வந்து என்னை பாரு .அப்ப தைரியமா இந்த ஊர் முன்னாடி என்னை அழைச்சிட்டு போ .உன் பின்னாடி கைய பிடிச்சிட்டு உரிமையோட வருவேன்.

நிச்சயமா யாருக்கும் சொல்லாம ஓடி வர மாட்டேன் “என்று அழுதவள் வீட்டை நோக்கி திரும்ப ஓடி வந்து இருந்தாள்.

அன்றைக்கு சென்றவன் அதன் பிறகு இவளை தொடர்பு கொள்ளவும் இல்லை .இந்த ஊருக்கு அவன் வரவும் இல்லை .

ஒரு வருடம் இரண்டு வருடம் என காத்திருந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் முடிவே செய்து விட்டாள்.

‘ இதுக்கப்புறம் அவன் என்னை தேடி வரப்போறதில்ல .பெங்களூர்ல வேலை அங்கே ஏதாவது ஒரு பொண்ணு அவனுக்கு ஏத்த மாதிரி செட் ஆகி இருக்கும் .

எங்கேயோ நிம்மதியா சந்தோஷமா இருக்கட்டும் “என மனதை தேற்றிக்கொண்டாள்.

மனதிற்குள் மரமாக வளர்ந்த காதல் கருகிப்போனது யாரிடமும் சொல்லாமல் மொத்தமாகவே மறைத்து இருந்தாள்.

அவசர அவசரமாக இவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர் .மனம் ஊமையாக சரணை நிலைத்து அழுதாலுமே வருவது எதாகினும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனநிலைக்கு வந்திருந்தாள்.

சற்று நேரத்தில் எல்லாம் மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர் என்று சொல்ல இவளை அழைத்துக் கொண்டு முன்னால் சென்று நிறுத்தினர் .நிமிர்ந்து கூட பார்க்கவில்லை பார்க்கத் தோன்றவும் இல்லை..

சில நிமிடங்கள் நின்று விட்டு அறைக்குள் வந்திருந்தாள். பேச்சு வார்த்தைகள் முடிந்து மாப்பிள்ளை வீட்டினர் அனைவருமே புறப்பட்டு இருந்தனர்.

அங்கு வந்தவர்கள் யார் என்னென்ன பேசினார்கள் எதுவுமே அவளுக்கு மனதில் பதியவில்லை .

ஏன் எந்த குரலுமே இன்னமும் காதல் கேட்டதுபோல கூட தோன்றவில்லை.

ஏனோ தன் மீது ,சரணின் மீது ,தன் குடும்பத்தார் மீது என எல்லோரின் மேலும் கோபம் வந்தது.

கோபத்தோடு வீட்டிற்கு பின்னால் இருந்த தோட்டத்திற்கு சென்று இருந்தாள்.

இப்போது மழை சற்று வலுக்க ஆரம்பித்தது .அப்போது வேகமாக இவளுடைய தாயார் வந்தவர்.. “ மாப்பிள்ளைக்கு ஏதோ அவசரமான வேலைன்னு கொஞ்சம் லேட்டா தான் வந்திருக்கிறார். .

அவங்க எல்லாம் கிளம்பி போயிட்டாங்க . மாப்பிள்ளை உன்கிட்ட பேசணும்னு சொல்லி வந்து நிற்கிறார் .என்ன பண்ணட்டும்.. நீ என்னடான்னா மழையில நனைஞ்சுட்டு பின்னாடி வந்து நிற்கிற.. இரு நான் மாப்பிள்ளை இங்க அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு நகர, இப்போதுமே திரும்பிப் பார்க்கும் எண்ணம் இல்லை.

அப்போது குடை ஒன்று இவள் மழையில் நனையாதவாறு பிடிக்க சட்டென திரும்பி பார்க்க அங்கே சரண் புன்னகை முகத்தோடு நின்று இருந்தான்.

“ என்ன பொண்டாட்டி வர மாட்டேன்னு நெனச்ச இல்ல.. இதோ உன் வீட்டிலேயே சம்மதம் சொல்ற அளவுக்கு வந்துட்டேன்.

என் வீட்டில் இப்பதான் சொன்னாங்க பொண்ணு ஒரு வார்த்தை கூட பேசலைன்னு ..

உன் வீட்ல எல்லாம் சம்மதம் சொல்லிட்டாங்க தெரியுமா “என்று கேட்க முதல்முறையாக வழிகின்ற கண்ணீரோடு அவனை இருக்க அணைத்துக் கொண்டாள்..

“பயந்துட்டேன் தெரியுமா நீ என்னை ஏமாத்திட்டதா நினைச்சேன்”. கண்ணீர வழிய மகிழ்வோடு கூற.. மழையும் கூட மகிழ்ச்சியோடு இப்போது இன்னும் வேகம் எடுத்தது.

முற்றும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ராஜி 💐 💐 💐
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
புரிதலுடனான ஒரு காதல். கதை நல்லாயிருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ராஜி💐💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top