Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
அவனும் மழையும்
அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை கொட்டி தீர்க்கும் என்பது போல வானத்தில் ஒரு பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது .
அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.
“ இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப ..சீக்கிரம் ரெடி ஆகு .
இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை பெண் பார்க்க வர போறாங்க .”தாயார் சொல்லிவிட்டு நகர, இப்போதும் மனதிற்குள் ஒரு பதட்டம் .. தன்னை பார்க்க வரப்போவது யார் என்று இந்த நிமிடம் வரயிலுமே தெரியவில்லை.
மனமோ உள்ளுக்குள் பெரும் குரல் எடுத்து அழுது கொண்டிருந்தது .
வானில் இருந்து விழும் மழை எல்லாமே இவள் கண்களில் இருந்து பொழிவது போல ஒரு தோற்றம்..
‘கடைசியில நீயும் என்னை ஏமாத்திட்டல்ல சரண்..’மனம் பெரும் குரலெடுத்து கத்தியது.
படிப்பு முடிந்து மூன்று வருடம் தாண்டி விட்டது .வீட்டை விட்டு வெளியே எங்கேயும் சென்றது இல்லை.
ஏதோ ஒரு நம்பிக்கை மனதிற்குள் நிச்சயமாக அவன் தன்னை தேடி வருவான் என்று.. ஆனால் இனி வரப்போவதில்லை என்று மனம் பயப்பட ஆரம்பித்தது .அதற்கு காரணமும் இருந்தது ..
சிறு வயதிலிருந்து இந்த ஊரில் வசதியாக வாழ்ந்தவர்களில் இவர்களும் ஒருவர்..
அதனாலேயே நிறைய கர்வம் உண்டு.. இவளது குடும்பத்தாருக்கு.. சற்று ஏழ்மையோடு இருக்கும் யாரிடமும் இவளை பழக விட்டதில்லை ..
அதையும் தாண்டி ஒருவன் இவளின் அருகே நெருங்கி இருந்தான். பள்ளி தோழனாக கல்லூரியின் நண்பனாக என்று ஒரு கட்டத்தில் நட்பு காதலாக கூட மாறி இருந்தது.
சிறுவயதில் உரிமையோடு விளையாடியவன் தான். ஆனால் கல்லூரியில் அவன் வேறு ஒரு முகம் காட்டினான்.
கல்லூரிக்கு செல்கையில் அவன் இவளிடம் பேசியது கிடையாது .இன்னமும் சொல்லப்போனால் இவளை பார்த்த போதெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
முதல்முறையாக அவனை கல்லூரியில் பார்த்த நாளும் கூட ஞாபகத்தில் இருந்தது .இன்றைய நாளை போலவே அன்றைக்கும் கூட மழை பொழிந்து கொண்டிருந்தது விடாமல் ..
தொப்பலாக நனைந்தபடி தான் இவள் கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. முதலில் எதிர்கொண்டவனும் அவன் தான் .”என்ன பெரிய மௌனராகம் ரேவதின்னு நினைப்போ ..மழையில் அப்படி நனைஞ்சுட்டு வர்ற..
கொஞ்சம் உன்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியுதா.. கொஞ்சம் சுத்தி பாரு. எல்லாரும் உன்னை எப்படி பார்க்கிறாங்கன்னு பாரு.. அறிவில்ல இப்படித்தான் வருவியா” கோபமாக திட்ட அப்போதுதான் தன்னை சுற்றி நடப்பதையே கவனித்தாள் .
அத்தனை பேரின் கண்களும் இவளை தான் வட்டமிட்டு கொண்டிருந்தது.
சட்டென வேகமாக கையில் இருந்த புத்தகத்தை மார்புக்கு நேராக மறைத்தபடி இவனை பார்க்க ,”சின்ன வயசுல உனக்கு மழை பிடிக்கும் தான்..இல்லன்னு நான் சொல்ல மாட்டேன்.
நிறைய தடவை நீ நனைந்ததை நானும் பார்த்திருக்கிறேன். அதுக்காக ஓரளவுக்கு வளரும் போது எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா? இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்து பழகு.
இது ஒன்னும் உன்னோட ஊர் இல்ல. அங்க நீ எப்படி வேணும்னாலும் இருக்கலாம் . அங்கே யாரும் எதையும் கண்டுக்க மாட்டாங்க. ஏன்னா நீ அங்கே அவங்கள்ல ஒருத்தி, ஆனா இங்க அப்படி இல்ல .
இது சிட்டி இங்கே இருக்கிற மாதிரி தான் இருக்கணும் . இன்னொரு முறை இது போல ஒரு பைத்தியக்காரத்தனத்தை செய்யாத.. முதல்ல நேரா ஹாஸ்டல்ல போயி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா..
இதே மாதிரி செமஸ்டர் ஹாலுக்குள்ள வந்துடாத” கோபமாக சொல்லிவிட்டு நகர அவனை முறைக்க தான் தோன்றியது இவளுக்கு ..
அன்றைக்கு காலேஜிற்கு விடுமுறை எடுத்துக் கொண்டாள்.
நேராக ஹாஸ்டலில் சென்று உடை மாற்றியவள் திரும்பத் திரும்ப அவன் திட்டியதுதான் ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.
“முன்னாடி எல்லாம் நல்லா தானே பேசுவான் பிளஸ் டூ படிக்கும் போது வரைக்கும் கூட அப்படித்தானே.. இப்ப மட்டும் என்னவாம் ..ரொம்பத்தான் திமிரு பண்ணிக்கிறான்.” என மனதிற்குள் திட்டிக் கொண்டாள்..
அது அத்தோடு முடிந்திருக்கவில்லை, அடுத்த சில நாட்கள் தாண்டி இருந்தது.
அன்றைக்கு அருகில் இருந்த லைப்ரரிக்கு சென்றவள் சற்று உயரமாக இருந்த புத்தகத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
முயற்சி தான் செய்ய முடிந்ததே தவிர எடுக்க முடியவில்லை. .
அப்போது ஒரு வலியக்கரம் அந்த புத்தகத்தை எடுக்க இவளுக்கு உதவியது. எடுத்து இவள் புறமாக நீட்டியவன் இப்போதுமே முறைத்து தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவளுக்கு சுத்தமாகவே புரியவில்லை .சுற்றிலும் பார்த்தபடி இவனை பார்க்க, “புஸ்தகத்தை எடுத்துட்டேன்னா என்ட்ரி போட்டு வெளியே எடுத்துட்டு வா . உன்கிட்ட கொஞ்சம் பேசணும் “என்று சொல்லிவிட்டு வெளியேறி இருக்க ,இவளுக்கு ஒன்றும் புரியவில்லை .
சுற்றிலும் பார்த்தால் பெரியதாக கூட்டமெல்லாம் இல்லை .அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் அமர்ந்திருந்தது .
அந்த இடமே மிகவும் அமைதியாக இருந்தது.” என்ன பேச போறான் . மனதில் ஒரு ஆர்வம் தோன்றினாலுமே அவன் முறைத்து பார்த்துவிட்டு நகர்ந்ததை யோசிக்கையில், “ஏதாவது தப்பு பண்ணிட்டோமா.. இல்லையே அப்படி எதுவும் செய்தது போல தெரியல .அப்புறம் எதுக்காக முறைச்சிகிட்டு போறான் .”யோசித்த படியே தான் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தது.
அவன் எங்கே நிற்கிறான் என்று தேட ஆரம்பித்தாள்.
என்னவோ ..இவனை பார்க்கையில் எல்லாம் மழை லேசாக தூரத்தான் ஆரம்பித்தது.
அன்றைக்கும் லேசாக தூறல் போட ஆரம்பிக்க, சற்று நகர்ந்து அங்கிருந்த ஒரு மர நிழலில் நின்றிருந்தான்.
வேகமாக அவனுக்கு அருகே சென்றவள்” சொல்லுங்க என்ன பேசணும் “என்று கேட்க ,”உனக்கு அறிவே இல்லையா.. மேல் மாடி எப்பவுமே காலியா தான் வச்சிருப்பியா.. உருப்படியா ஒண்ணுமே செய்ய மாட்டேல்ல எல்லாம் பணம் இருக்கிற திமிரு “என்று திட்ட ஆரம்பிக்க ,
“இப்ப பணத்தமிரு எங்க வந்துச்சாம்.. நான் லைப்ரரில புத்தகம் எடுக்க வந்தேன் .இதோ எடுத்துட்டேன் .தேவையில்லாம எதுக்காக சத்தம் போடறீங்க. “
“ஆமா நீ எந்த மாதிரி டிரஸ் போட்டிருக்கற கொஞ்சம் பாரு “என்று நக்கலாக கேட்க ,அப்போதுதான் கவனித்தாள் ஜீன்ஸ் பேண்ட், இடுப்பு வரை கவர் ஆகின்ற ஒரு டீசர்ட் இதைத்தான் அணிந்து இருந்தது.
இவளுக்கு பெரியதாக வித்தியாசமாக தெரியவில்லை.
“ இந்த டிரஸ் போட்டுட்டு அவ்வளவு உயரமா இருக்கிற இடத்தில கையை தூக்கி புத்தகத்தை எடுக்கற, என்ன எல்லாருக்கும் காட்சி பொருளா இருக்கணுமா ..
இடுப்பு அப்படியே தெரியுது. எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ளணும்னு கூட தெரியாதா .இதுக்கு பேரு பணத்திமிர் தானே.. யார் என்ன கேட்டுட முடியுங்கறது “கோபமாக கேட்க ,
“நான் போடற உடை என்னோட சுதந்திரம்.. சும்மா அதுல வந்து தலையிட வேண்டாம். சரி நீங்க சொன்னது கரெக்ட் தான். எனக்கு அது தோணல. எனக்கு அந்த புத்தகம் வேண்டியதா இருந்தது. அதனால எடுக்க ட்ரை பண்ணினேன். என்னோட தப்பு தான் .இனி இதுபோல நடக்காது .அதுக்காக தேவை இல்லாம எதையும் வந்து பேச வேண்டாம். புரிஞ்சுதா ..
ஒரு ஊர்காரங்கன்னு பார்த்தா ரொம்ப தான்.. எப்ப பார்த்தாலுமே என்னை திட்டிட்டு தான் இருப்பீங்களா..”
“ ஏன் நீ அதுபோல தானே நடந்துக்கற” என்று கேட்க கோபத்தோடு தான் அங்கிருந்து நகர்ந்தது. ஏதோ ஒரு உரிமையாக பேசியதாக தோன்றியது இவளுக்கு..
தன்பிறகுமே அடிக்கடி காலேஜில் சந்தித்துக் கொண்டனர். எப்போதுமே ஏதோ ஒரு விஷயத்திற்காக அவனிடம் சண்டை இடத்தான் செய்தாள்..
ஆனால் அந்த சண்டையுமே இவளது மனதை பாதிக்கத்தான் செய்தது. என்ன காரணம் என்று தான் இவளுக்கு புரியவில்லை.
பள்ளிப் பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என்று கூட நிறைய முறை நினைத்தாள்..
ஆனால் இந்த சண்டையை தாண்டியும் ஏதோ ஒரு அக்கறை அவனிடத்தில் இவளை தொடரத்தான் செய்தது.
கல்லூரியில் ப்ராஜெக்ட் ஆகட்டும் அல்லது வேறு எந்த ஒரு விஷயமாகட்டும் எளிதாக இவளையும் தன்னுடைய டீம்மோடு சேர்த்துக் கொண்டான்.
இப்போதெல்லாம் அவனிடம் பேசவே சற்று பயம் தான் இவளுக்கு ..எப்போது என்ன சண்டையிடுவானோ என்று..
அந்த வாரம் தன்னுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு இருந்தால் சந்தியா .
திரும்ப வரும்போது பாதி வழியில் வந்து கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதத்தில் ஒரு பெரிய விபத்து அங்கே நடந்திருந்தது.
இவள் வந்து கொண்டிருந்த பஸ் எதிரில் வந்து கொண்டிருந்த இன்னொரு பஸ்ஸோடு நேருக்கு நேராக மோதி இருக்க, நிறைய பேருக்கு அடி பலமாகப்பட்டிருந்தது.
நல்வாய்ப்பாக இவளுக்கு பெரியதாக அடியில்லை.. காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்க ,அந்த நேரத்தில் பயத்தோடும் முதல் முதலாக அழைத்தது இவனுக்குத்தான்..
“சரண் வர்ற வழியில ஒரு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு .நான் இங்க இந்த இடத்தில் இருக்கிறேன் .எனக்கு ரொம்ப பயமா இருக்குது .எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா. உன்னால இங்க வர முடியுமா” என்று கேட்க.. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே பதறி அடித்து ஓடி வந்திருந்தான் .
நண்பன் ஒருவனிடம் வண்டியை வாங்கிக்கொண்டு இவளுக்கு எதிரே வந்து நின்றிருந்தான். இடையே இரண்டு முறை கூட ஃபோனில் அழைத்து “நான் வந்துகிட்டே இருக்கேன் .பயப்படாதே .அந்த இடத்திலேயே இரு.. இன்னும் கொஞ்ச நேரம் தான் .உனக்கு எதுவும் அடி படலையே.. இப்பதான் நியூஸ்ல பார்த்தேன். பதறாதே .”என்று சொன்னபடியே வந்து இவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
இடையே ஒரு தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி இவளுக்கு தேநீர் வாங்கி கொடுத்து இவளை ஆசுவாசப்படுத்தி தான் அழைத்துச் சென்றது .”இப்ப நான் என்ன பண்ணனும். உன்னோட வீட்டுக்கு கொண்டு போய் விடணுமா இல்ல நேரா ஹாஸ்டலுக்கு வர்றியா”.
“நாளைக்கு காலேஜ் இருக்கு எனக்கு பெருசா அடி எல்லாம் இல்ல. கையில தான் லேசா சீராய்புக்காயம். பயப்பட எதுவுமில்லை என்னை ஹாஸ்டல்ல விட்டுருங்க” என்று கூறினாள் ..
அப்போதுதான் சரணின் முகத்தைப் பார்த்தது .அவனது முகத்தில் அத்தனை பதட்டம் ,பயம் இன்னமும் என்னென்னவோ உணர்வுகள் இவளுக்கு அந்த நிமிடம் புரியவே இல்லை…
“வீட்டுக்கு சொன்னியா” என்று கேட்க,
“இல்ல பதட்டத்துல எதுவும் சொல்லல” என்றவள் வீட்டிற்கு அழைத்து சொல்லி இருந்தாள்.