- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
7
அது நடந்து நான்கு நாள் கழித்து, மாலை நேரம், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு தோழிகள் இருவரும் நடந்து செல்லும் பொழுது, “டேய்! சரவணா. சரவணா நில்லுடா. எங்கடா போற? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்டா” என்று ஒருவன் ஆராதனாவின் பின்னால் இருந்து, முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தவனை அழைத்தபடி ஒருவன் வந்தான்.
அந்த பெயரைக் கேட்டதும் வேகமாக தலைதூக்கிப் பார்த்த ஆராதனாவிற்கு, அவள் கண்முன் ஒரு வாலிபன் துக்கம் நிறைந்த முகத்தோடு நண்பனைத் திரும்பிப் பார்த்தது தெரிந்தது.
“என்னடா சரவணா? ஏன் இப்படிப் பண்ற? நீ இப்படி இருக்கிறதால செத்தவங்க திரும்பி வந்துவிடப் போறாங்களா என்ன? நீ இப்ப எங்கேயும் போக வேண்டாம். ரொம்ப குழப்பத்துல இருக்கிற. வா மேன்சன் போகலாம்” என்றழைத்தான்.
“வேண்டாம்டா. என்னை விடு. நான் யாருக்காக வாழணும்? என் குடும்பத்தில் உள்ள எல்லாருடைய உயிரையும் பறிகொடுத்துட்டு, நான் ஏன் உயிரோட இருக்கணும்? எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சிடா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
“டேய்! அது ஒரு விபத்துடா. இப்படியெல்லாம் அழுதா வேலு அப்பாவும், மத்தவங்களும் திரும்ப வந்திருவாங்களாடா?”
அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆராதனாவிற்கோ சகலமும் அதிர்ந்தது. அதிர்ச்சியில் தோழியின் கையைப் பிடித்தவளை என்னவென்று பார்த்தாள் வேதவல்லி.
ஏனென்றால், தோழி திடீரென்று நின்றதும் திரும்பியவள், அருகில் புசு புசுவென்று ஒரு குழந்தை அவளைப் பார்த்து சிரிக்க, வேதவல்லி சகலமும் மறந்து குழந்தையின் குறும்புச் சிரிப்பில் கலந்து கொண்டு, அவளுடன் சைகை பாஷையில் உறவாடிக் கொண்டிருந்தாள். அவளின் அதிர்வுக்கு என்ன காரணம் என்று தோழியைப் பார்த்தவளுக்கு, அவளின் அதிர்ந்த முகமே பதிலாய்க் கிடைத்தது. அப்பொழுது தான் அந்த நண்பர்களின் பேச்சைக் கேட்டாள்.
“டேய்! உனக்கு நாங்க இருக்கோம்டா. ஆமா. உனக்கு வேற சொந்தங்கள் இருக்காங்களா? இருந்தா அவங்க ஏன்டா சாவுக்கு வரல? எதாவது சொன்னாதானடா தெரியும்.”
“இங்க இல்ல பாலாஜி. அவங்க திருநெல்வேலியில் தான் இருக்காங்க. அதுவும் இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியாது. தாத்தா, மாமா, அத்தை, மாமா பொண்ணுங்க ரெண்டு பேர் இருக்காங்கடா. எனக்கு அவ்வளவா விவரம் தெரியலடா” என்றான் கலங்கிய குரலில்.
“அவங்களைப் போயி பார்க்கலாம்ல சரவணா?”
அக்கறையாகக் கேட்ட நண்பனிடம், “இல்லடா வேண்டாம். நல்லாயிருக்கும் போது போயி பார்த்தா பரவாயில்லை. இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு அநாதரவா நிற்கிறப்பப் பார்க்க மனசில்லடா. நான் உங்களோடவே இருக்கேன். உங்க ரூமை ஷேர் பண்ணிக்கறேன். என்னோட கஷ்டத்தை அவங்ககிட்டத் திணிக்க நான் தயாரா இல்லடா. அதுவுமில்லாம எங்கன்னு போயி தேடுவேன்? விடுடா எல்லாம் விதிவிட்ட வழி. நாமளும் போவோம்” என்று தத்துவம் பேசினான் சரவணன்.
“நீ சொல்றதும் சரிதான். வா மேன்சன் பக்கத்துலதான இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடு. தண்ணி அடிக்கிறவனா இருந்தா, அதை வாங்கிக் கொடுத்து உன்னை அமைதிப்படுத்தலாம். அநியாயத்துக்கு நல்லவனா இருக்க. விபத்துல ஒருத்தராவது மிஞ்சியிருக்கலாம்” என்று அங்கலாய்த்தபடி நண்பனை அழைத்துச் சென்றான்.
நடந்து அவர்களைக் கடந்து செல்லும் போது, “நான் நிம்மதியா தூங்கியே பல நாள் ஆச்சிதுடா. என்னைக்கு அவங்களைப் பறிகொடுத்தேனோ, அன்னைக்கே இந்த சரவணன் போயிருக்கணும். எல்லாம் என்னால தான்டா. என்னையும் தான் திருப்பதிக்கு கூப்பிட்டாங்க. நான் மாட்டேன்னு சொன்னேன். இப்படி திரும்ப வராத இடத்துக்கே போவாங்கன்னு தெரியாமல் போச்சேடா” என்று அழுதான்.
அவனின் அழுகையைப் பார்க்க சகிக்காமல், “போதும்டா. எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க” என்றபடி இருவரும் சென்றார்கள்.
அதுவரை இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு, ‘இது நிஜம் தானா? கண் முன்னாடி நடந்தது, நான் பார்த்தது, கேட்டது அனைத்தும்?’ ஒரு கணம் என்னவென்று புரியாமல் இருந்தவளை, வேதவல்லி உலுக்கி, “ஏன் அவனுங்களைப் பார்த்துட்டு இருக்க? அவங்களை உனக்குத் தெரியுமா? யேய் ஆரு! ஏன்மா ஒரு மாதிரியாகிட்ட? என்கூட நல்லாத்தான வந்த. என்னன்னு சொல்லுமா? என தவிப்புடன் கேட்டாள்.
“வள்ளி... வள்ளி...”
“என்னம்மா? என்னாச்சின்னு சொன்னாத்தான தெரியும்?”
“சரவணா அத்தான் வள்ளி.”
“சரவணான்ற பெயர்ல நிறைய பேர் இருப்பாங்கடி. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில பிரச்சனை இருக்கும். இவனுக்கு என்ன பிரச்சனையோ?”
“இல்லடி. எனக்குத் தெரியும். இது சரவணாதான். அவங்க குடும்பம் முழுசையும் விபத்துல பறிகொடுத்துட்டதா அழுதுகிட்டிருந்தாங்க. மாமா பேருல்லாம் சொன்னாங்க. எதுக்கும் விசாரிச்சிக்கலாம் வேதா.”
“சரிடி விசாரிக்கலாம். சேகர் அங்கிள்கு இந்த ஏரியால்லாம் பழக்கமா இருக்கும். விசாரிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்” என்றாள்.
மறுநாள் சேகர் மூலம் அந்த விடுதியில் (மேன்சன்) விசாரிக்க, அவன் சொன்னது உண்மை என்றானது. சரவணனோ, மாமானின் குடும்பம் கிடைத்தில் சந்தோஷமடைந்தான்.
ஆராதனாவிற்கோ, ஒருபுறம் சந்தோஷம் என்றால், இன்னொரு புறம் அத்தையின் குடும்பமே இல்லாமல் போய்விட்டதே என்று வருந்தினாள். ‘ட்ரெயினிங் டைம் முடிஞ்சதும், அப்பாகிட்டக் கூட்டிட்டுப் போயி அத்தானை நிறுத்திர வேண்டியதுதான். ஆனால், கல்யாணம்?”
‘கண்டிப்பாக முடியாது’ என்றே தோன்றியது. ஊருக்குப் போகும் பொழுது சரவணன் கிடைத்ததை தந்தையிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று தோழியிடமும் சொல்லி விட்டாள். அவன் குடும்பம் இல்லை என்பதை, நேரில் சொல்லி அவர்களைத் தேற்றுவதற்குத் தான் அங்கு கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியமென்று பட்டதால் மறைத்தாள்.
சரண் அவளைக் கல்லூரி எதிரில் பார்த்த பொழுதுதான், முதன் முறையாக அவனுடன் வெளியில் வந்திருந்தாள். அதுவும் சேகரின் துணையுடன். என்னதான் அத்தானாக இருந்தாலும், அவனைத் தொட்டுப் பேச விட மனம் இடம் கொடுக்கவில்லை. ஏனோ, அவனைத் தனக்கானவன் என்ற இடத்தில் வைக்கவும் மனமில்லை. அத்தை மகன் என்ற உறவிலேயே பழகினாள்.
“இன்று அவனை, அந்தச் சரணைப் பார்த்ததும் மனம் ஏன் தவிக்கிறது? அவன் பார்வையில் என்ன இருந்தது? என்னால் ஏன், அவனின் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச முடியலை? கடவுளே! இது என்ன விதமான தவிப்பு? யாருக்காக இத்தனை வருஷமாகக் காத்திருந்து, அவனுக்காக இங்கே வந்தேனோ, அவன் கிடைத்தும் என்னால உறவுக்கார என்ற உறவைத் தவிர வேற எதுவும் தோணமாட்டேன்னுது. என்னடா ஆராவுக்கு வந்த சோதனை” என்று புலம்பியபடி கண்ணயர்ந்தாள்.
மறுநாள் காலையில் வேகமாகவே எழுந்த சரண், நேற்று எண்ணியதை இன்று செயலாக்கும் முடிவோடு, சேகர் பெண்களை அழைக்க விடுதிக்குப் போகும் முன் சந்திக்கக் கிளம்பினான்.
“என்னண்ணா சீக்கிரம் கிளம்பிட்ட?” என்று காஃபியை நீட்டியபடி கேட்ட தங்கையிடம்,
“இன்னைக்கு வெளிய கொஞ்சம் வேலையிருக்குமா. நான் அதை முடிச்சிட்டுத் தான் ஆஃபீஸ் போகணும். நான் இன்னைக்கு கேன்டீன்ல சாப்பிட்டுக்கறேன்” என்றான்.
“ம்... சரிண்ணா” என்று ஒத்துக் கொண்டாலும், ஏனோ அண்ணனின் செயலில் வித்தியாசத்தை உணர்ந்தாள்.
“அண்ணா எதுவும் பிரச்சனை இல்லையே?” அண்ணனின் முகம் பார்த்தவளிடம், உண்மையைக் கூற முடியாமல் சற்றுத் தடுமாறி சமாளித்தவன், “பிரச்சனையா? அதுவும் என்கிட்டயா? நோ சான்ஸ். என்னைப் பார்த்தா வந்த பிரச்சனையெல்லாம், சே! போயும் போயும் இவன்கிட்டயா வந்தோம்னு ஓடிப் போயிரும். அப்புறம்” என்று அவளுக்குத் தினமும் அளிக்கும் அறிவுரை மழையைப் பொழிந்து, நான் நார்மலாக தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்து, அவள் சிரித்ததும், “அப்பாகிட்ட சொல்லிருமா” என்று விடைபெற்றுச் சென்றான்.
சேகர் விடுதி வாசலுக்குள் நுழையும் முன், அவரைப் பிடித்தவனிடம் என்னவென்று அவர் கேட்க, அங்கிள் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். ஆனா, அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல. சின்ன ஹெல்ப் பண்ணனும் அங்கிள்” என்றான் பீடிகையுடன்.
“என்னப்பா எதாவது பிரச்சனையா?”
“பெருசா எதுவுமில்லை. நீங்க தப்பா நினைக்கக் கூடாது. நீங்க இந்த டைம் கூப்பிட்டுப் போவீங்களே ரெண்டு பொண்ணுங்க. அவங்கள்ல ஒரு பொண்ணை நான் ஒரு பையனோட பார்த்தேன். அத்தையோட ஹாஸ்டலில் இருக்கிற பொண்ணு. தப்பா யாரையும் செலக்ட் பண்ணி அவஸ்தைப்படக் கூடாதேன்னு தோணிச்சி. இதை அவங்ககிட்ட நேர்ல கேட்க முடியாது .அதனால தான் உங்ககிட்ட விசாரிக்கிறேன்.”
“ப்பூ... இவ்வளவு தானா? நானும் என்னவோன்னு நினைச்சேன். அவன் அந்தப் பொண்ணோட அத்தைப் பையன். நான்தான் விசாரிச்சி சொன்னேன். இதுவரை ரெண்டு டைம் வெளிய போயிருக்காங்க. நான் தான் கூப்பிட்டுப் போயிருக்கேன். பொண்ணு செம உஷார். அவளைப் பற்றின பயம் தேவையில்லை” என்றார்.
“அப்ப அவன் அந்தப் பொண்ணோட அத்தைப் பையனா?” என்று திரும்பவும் கேட்டான். அவனுக்குள் ஒரு நப்பாசை. அப்படி இருந்துவிடக் கூடாது என்று.
“ஹ்ம்ம்.. அப்படி இல்லபா. அவன் திருநெல்வேலிக்காரன் தான். அப்பா பேரு வேலு. இந்தப் பொண்ணு சொல்றதைதான் அவனும் சொன்னான். ஆனாலும், மனசுல சின்ன உறுத்தல். அவனை எங்கேயோ பார்த்த நியாபகம். அது நல்லவனாவா? கெட்டவனாவா தெரியல?” என்றார்.
“அங்கிள் அவனுக்குத் தெரியாம ஒரு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி வையுங்க. எதுக்கும் நானும் விசாரிக்கிறேன். இங்க இருக்கிற வரை அவங்க ரெண்டு பேரும் அத்தையோட பொறுப்பு. ஆனா, அத்தைக்கு நான் பாதுகாப்பு. மறக்காம போட்டோ எடுத்து அனுப்புங்க. நான் வர்றேன்” என்று கிளம்பினான்.
சேகரிடம் பேசிவிட்டு வந்த பின்புதான் அவன் மனம் கொஞ்சம் நிம்மதியானது. அலுவலகம் நுழையும் போதே சிரித்த முகமாக வந்தான். அவனுக்காகவே, அவனுக்கு முன்னரே வந்த சக்தி, அவனின் சிரித்த முகத்தை ரசித்தபடி அமர்ந்திருக்க, சரணுக்குப் பின்னால் வந்த சிவா அவனைத்தான் பார்த்து சிரிக்கிறாள் என்று நினைத்துத் துள்ளிக் குதித்தான்.
சேகர் சொன்னது போல், இரண்டு நாட்களில் சரவணனின் புகைப்படம் சரணிடம் வந்து சேர்ந்தது.
இன்றுடன் ஆராதனா வேலைக்குச் சேர்ந்து ஐந்து மாதமாகிறது. இன்னும் ஒரு மாதம்தான் பயிற்சி. முடிந்ததும் இதே கம்பெனியில் தொடர்ந்து வேலை செய்யலாம். இல்லையெனில் வேறு கம்பெனியில் சேருவது நம் இஷ்டம் என்று இருந்தாது.
ஆராதனா, வேதவல்லி இருவருக்கும் இந்த கம்பெனி பிடித்திருந்தால், வேறு எங்கும் செல்ல விருப்பமில்லாமல் இருந்தார்கள்.