• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
5

ராகவனின் சொல்லை மறுக்க எண்ணிய ஆராதனா, “அங்கிள்” என்றழைத்தாள்.

அவள் குரலுக்குத் திரும்பியவர், “அந்தத் தகுதி எனக்கு இருக்கா தெரியல. இருந்தாலும் நீ அங்கிள்னு கூப்பிட்டது சந்தோஷமாயிருக்குமா” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, “தர்ஷினி” என்ற சத்தம் வர, அந்தத் திசையில் திரும்பிய குழந்தையைக் கண்டதும், குழந்தையின் பெற்றோர் என்று யூகித்துவிட்டான் சரண்.

“அங்கிள் நீங்க சீக்கிரம் கிளம்புங்க. குழந்தையோட அம்மா வர்றாங்கன்னு நினைக்கிறேன். அவங்க வந்தா எந்த அசம்பாவிதமும் நடக்கலாம். மத்ததை நாங்க சமாளிக்கிறோம்” என்று அவசரமாக அனுப்பி வைத்தார்கள். மீண்டும் நன்றி கூறி விடை பெற்றார் ராகவன்.

அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள், இருவருக்கும் கேட்டுக் கொண்டே இருந்தது. ‘ஜோடிப் பொருத்தமும், குணப்பொருத்தமும் சூப்பர்.’

குழந்தையின் அம்மா அருகில் வந்ததும், நினைவிலிருந்து கலைந்து சுதாரித்த ஆராதனா, அவளிடம், “நீங்க தான் இவளோட அம்மாவா?” என கேட்டாள்.

“ஆமா. ஏன் கேட்குறீங்க?”

“இல்லங்க மேடம். அப்படியே ரெண்டு போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கிறேன்.”

“ஹலோ! என்ன பேசுறீங்க? முன்னப்பின்னத் தெரியாதவங்ககிட்ட கொஞ்சம் கூட டீசண்டே இல்லாம பேசிட்டிருக்கீங்க” என்று குழந்தையின் தாய் பேசிக் கொண்டிருக்கும் போதே குழந்தையின் தகப்பனும் வர,

“என்ன பேசுறேனா. நாங்க மட்டும் வரலன்னா. உங்க குழந்தையோட நிலை என்னன்னு தெரியுமா? பார்க் வர்றது குழந்தைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்க்க. நீங்க வேடிக்கை பார்க்க இல்லை புரியுதா?” என்றாள் காட்டமாக.

“எ...என்னங்க சொல்றீங்க? என்ன நடந்துச்சி? இவளோட அப்பா கூடத்தான் அனுப்பி வச்சேன். ஆனா, திரும்பி வரும்போது இவர் மட்டும் தனியா வந்தார். இவர்கிட்ட கேட்டா, நான் எப்ப கூப்பிட்டுப் போனேன்னு சொல்லிட்டார். நான் கூப்பிட்டுப் போகச் சொன்னதைக் கவனிக்கவே இல்லையாம். அப்புறம் தான் குழந்தையைத் தேட ஆரம்பிச்சோம். என்னாச்சிங்க?” என்றவள் குரலில் என்னவோ ஏதோவென்ற பதற்றம்.

“நல்லாத் தேடுனீங்க போங்க” என்று அங்கு நடந்ததை ராகவன் பேரை மறைத்துக் கூறினாள்.

“ஐயையோ! என் குழந்தை. கடவுளே! இத்தனை பேர் இருக்கிற பொது இடத்தில் கூடவா, குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை?”

“ஆமா. இப்பக் கதறுங்க. ஏங்க பிள்ளைகளுக்குச் சாதாரண தொடுகைக்கும், தவறான தொடுகைக்கும் அர்த்தம் சொல்லித் தரமாட்டீங்களா? யார் என்ன அர்த்தத்தில் பார்க்கிறாங்க, முத்தம் கொடுக்கிறாங்கனு சொல்லித்தரணும். இப்பவே சொல்லிக் கொடுத்தால்தான, குழந்தைங்க வளர வளர பக்குவப்பட்டு, ஆண், பெண் உறவை பிரிச்சிப் பார்க்கத் தோணும். என்னதான் சொல்லித் தர்றீங்களோ குழந்தைகளுக்கு. இது ஆணும், பெண்ணும் சரிசமமா பழகுற காலம். இல்லைன்னு சொல்லலை. காலம் மாறினாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் மாறாதுங்க. மாறவும் கூடாது. அப்புறம் ஆதி மனிதன் காலத்துக்கு நாமும் போக வேண்டியதுதான். இனிமேலாவது பார்த்து ஜாக்கிரதையா இருங்க” என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினாள்.

பேசிக் கொண்டிருந்தவளை விழியகலாதுப் பார்த்துக் கொண்டிருந்த சரணுக்கு, திரும்பவும் பழைய நினைவுகள் மேலெழும்பின. அவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும், தன் தாய் சிறு வயதில் தனக்கும், தங்கைக்கும் கூறிய அறிவுரைகள் கண்முன் நிழலாடியது. இன்னும் கூடுதல் சுவாரஸ்யத்துடன் அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.

குழந்தையின் அப்பாவிடம் திரும்பியவன், அவர்களை ரொம்பக் கூனிக்குறுக வைக்க வேண்டாம் என்று நினைத்து, “இனிமேலாவது தொடுதல் பற்றிய வித்தியாசத்தைச் சொல்லிக் கொடுத்து வளருங்க சார். குழந்தை கூட வர்றது தெரியாம போயிருக்கீங்க. பார்த்துக்கோங்க சார். நம்மளைச் சுத்தி எல்லாருமே நல்லவங்களா இருக்கமாட்டாங்க. பக்கத்து வீட்டுக்கு அனுப்புறதா இருந்தா கூட கொஞ்சம் யோசிச்சி அனுப்புங்க” என்றவன் குழந்தையிடம் குனிந்து, “பாப்பா! அப்பா, அம்மா இல்லாம யார் கூப்பிட்டாளும், அவங்களோட நீங்க போகக்கூடாது. அது ரொம்பவே தப்பு. உங்களைக் கட்டிப்பிடிச்சாலோ, முத்தம் கொடுத்தாலோ அப்படிப் பண்ணாதீங்க சொல்லணும். இல்லைன்னா நேரே அப்பா, அம்மாகிட்ட வந்து சொல்லிரணும். சரியா?” என்று பக்குவமாய்ச் சொன்னான்.

புரிந்ததோ, இல்லையோ, இவ்வளவு நேரம் பேசாத குழந்தை, “சரிங்க அங்கிள்” என்றாள்.

குழந்தையைக் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன், “குட் கேர்ள்” என்றான்.

குழந்தையின் அப்பாவிடம் பேச ஆரம்பித்தது முதல், குனிந்து குழந்தைக்குச் சரிசமமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தவனையே பார்த்துக் கொண்டிருந்த, ஆராதனாவின் மனம் ஏனோ, அவளையும் மீறி அவனிடம் செல்ல சண்டித்தனம் செய்தது. பாட்டியின் முகம் கண்முன் தோன்றி அடக்கியது. உள்ளே எழுந்த ஏக்கத்தை என்ன செய்தும் அவளால் தடுக்க முடியவில்லை.

“ரொம்ப தேங்க்ஸ் சார். எங்க பேரண்ட்ஸ் எதுவும் சொல்லிக் கொடுத்து வளர்க்காததால, எங்களுக்கு அது பெரிய விஷயமாகவே தெரியலை. இனி ஜாக்கிரதையா இருக்கோம். என் பெயர் ஹரி. இங்க பக்கத்துல தான், காஃபி ஷாப் வச்சிருக்கேன். ரிலாக்ஸா இருக்க வந்த இடத்துல, கடையில் இருந்து போன் வந்தது. அதனாலதான் போயிட்டேன். என் ஒய்ஃப் சொன்னதை நான் கவனிக்காம இருந்திருக்கேன். உங்க நட்பு கிடைத்தது சந்தோஷம்” என்று பரஸ்பரம் கைகுலுக்கி விடை பெற்றார்கள்.

ஒரே நேரத்தில் இரு வேறு விதமான நட்பு கிடைத்த மகிழ்ச்சி மனதினில் இனிக்க, சரணிடம் திரும்பி நன்றாக பல் தெரிய சிரித்தபடி, “நானும் கிளம்பறேன் சார்” என்று சொன்னாள்.

அவளை இவ்வளவு நேரமாகப் பலவித பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், ‘நான் கிளம்புறேன் சார்’ என்று சொல்லி தெற்றுப் பற்கள் தெரிய சிரித்தபடி தலையசைக்க, அந்தத் தெற்றுப்பல் சிரிப்பழகில் சொக்கித்தான் போனானோ சரண்! இதுவரை அவளின் குணத்தையும், பேச்சையும் மட்டுமே பார்த்து மயங்கியவன், முதல்முறையாக அவளின் அழகில் மயங்கி நின்றான்.

அவள் தன்னைவிட்டு நடந்து கொண்டிருப்பது புரிய மயக்கத்திலிருந்து வெளியே வந்தவன், “மிஸ்.ஆராதனா ஒரு நிமிஷம்” என்றான்.

‘இவன் ஏன் திடீர்னு கூப்பிடுறான்?’ என்று திரும்பிப் பார்த்தவள். “ம்... சொல்லுங்க சார். என்ன விஷயம்?” என கேட்டாள்.

அவள் முன் வந்து நின்று, “நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்கக் கூடாது. பட்டுன்னு அவசரப்படவும் கூடாது. அதுக்கு என் பாடி தாங்காது” என்று பெரியதாக எதையோ சொல்வதுபோல் நிறுத்தினான்.

ஆராதனாவிற்குள் பலவித எண்ணங்கள். ‘அச்சச்சோ! ஐ லவ் யூ சொல்லப் போறானா? அப்படி அவன் சொன்னா, நான் என்ன மாதிரி ரியாக்ட் பண்ணனும்? அடிக்கனுமா? அடங்கனுமா?’ என்று மனம் பலவாறு யோசிக்க, இதயத் துடிப்பு எகிறியது. இருந்தும் அதை மறைத்து, “அது நீங்க சொல்ற வார்த்தையில்தான் சார் இருக்கு” என்ற பதிலை அவளின் வாய் மொழிந்தது.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று சட்டென்று கேட்க, கோவத்தில் அவனைப் பட்டென்று அடித்திருந்தாள் அந்த திருநெல்வேலிக்காரி.

என்னதான் அவன் ஏதோ கேட்கப்போகிறான் என்றாலும், இவள் எதிர்பார்த்திருக்காத கேள்வியை அவன் கேட்டதும் பயத்தில் அடித்து, “லூசாலே நீ? சரியான கிறுக்கனா இருக்கா? என்னையப் பாத்து ஒரு அர மணிதேரம் இருக்குமாலே. நான் நல்லவளா, கெட்டவளா தெரியுமாலே ஒனக்கு. ஏதோ சமயத்துக்கு உதவி பண்ணியேனு நின்னு பேசுனா, சுத்த வெருவாக்கெட்டத்தனமா கேக்க. இதத்தான் ஒங்கம்மா சொல்லிக் தந்தாவளா?” என்று அவனை அரள வைத்தாள்.

அவளின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சரண், “ஒரு நிமிஷம். எனக்கு இந்த மாதிரித் திட்டுறதெல்லாம் வராது. உங்களை முதல்ல கோவில்ல வச்சிப் பார்த்ததும், சத்தியமா சொல்றேங்க, எனக்கு எங்க அம்மா முகம் தாங்க நியாபகம் வந்தது. நீங்க பேசுறது, உங்களோட வார்த்தைகள் ஒவ்வொண்ணும் எங்கம்மாவைத்தான் நியாபகப்படுத்திச்சி. எனக்கு எங்கம்மான்னா உயிர். அவங்ககிட்டச் சொல்லாம எதையும் செய்யமாட்டேன். காலையில உங்களைக் கோவில்ல பார்த்ததுமே சொல்லிட்டேன். அவங்களும் சிரிச்சி சம்மதம் சொல்லிட்டாங்க. இப்பச் சொல்லுங்க? என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?” என்றான்.

ஒரு நிமிடம் கையை இறுக மூடி உணர்வுகளை அடக்கியவள், அவனை அடித்தது தவறென்ற போதும், அவனது கேள்வியை மறுமுறை மனதிற்குள் சொல்லிப் பார்த்தாள். ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?’ மறந்தும் இரண்டாவது முறை சொல்லும் பொழுது கூட மாற்றவில்லை.

வேலை விட்டு விடுதி வந்தவள், காற்றுக்காக ஜன்னல் திறக்க, எதேச்சையாக பூங்கா பக்கம் வேடிக்கை பார்க்க, ஒரு ஆண் சிறு பெண்ணிற்கு முத்தம் தொடர்ந்து கொடுத்தபடி நின்றிருந்ததைப் பார்த்தாள். உள்ளே திரும்பும் வேளையில் சந்தேகம் வந்து, தன் முழு கவனத்தையும் அந்த இடத்தில் வைத்தாள். அந்தக் குழந்தையின் தகப்பனாக இருக்கும் என்று உள்ளே செல்லத் திரும்பியவள், அந்த ஆணின் தொடுகை அசிங்கமானதாக, பார்க்க சகிக்க முடியாததாக இருந்தது.

குழந்தையை எண்ணி பயந்தவள், “வள்ளி! பார்க் வரை போயிட்டு வர்றேன்” என்று சுடிதார் துப்பட்டாவைத் தூக்கித் தோளில் போட்டு ஓடாத குறையாக பூங்காவைச் சென்றடைந்தாள். அங்கே அவள் கண்டது உண்மையென உறுதிப்பட, குழந்தையைத் தன்னருகில் இழுத்து அவனை அடித்திருந்தாள். நடுவில் சரணின் வரவில் ஒரு ஆண் துணை வந்ததில் ஒருபுறம் சந்தோஷம்தான். அதிலும் தன்னிடம் எதுவும் கேட்காமல் நடந்ததை அவனே யூகித்ததை மனதினுள் மெச்சிக்கொண்டாள்.

ஆனால், அவனின் இந்தக் கேள்வி, ‘ஏன் கேட்டான்? என்னைப் பார்த்துக் கேட்க எது தூண்டியது?’ காலையில் வேலைக்குச் சென்று திரும்பி வந்து முகம் கூடக் கழுவாமல், தலையும் கலைந்து இருப்பது அவளுக்கேத் தெரியும். ‘நான் அந்த அளவு பெரிய அழகெல்லாம் இல்லையே? தெரியாத பொண்ணுகிட்ட எப்படிக் கேட்கத் தோணிச்சி? அதுவும் நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். இல்லை எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? இப்படியான கேள்விகள் கேட்காமல், நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?’ என கேட்டிருக்க, இதனாலேயே அவன் மேல் இருந்த நல்லெண்ணம் வலுப்பெற்றது.

பின் அவனுக்குப் புரிய வைக்கும் பொருட்டு, தன்னை முதலில் நிலைப்படுத்திக் கொண்டாள். அவன் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்தவள் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனாள். அவனின் பார்வையில் தடுமாறியவளுக்கு அவனிடம் காலம் காலமாக பழகிய உணர்வு.

காலையில் வேதா சொன்னது நினைவு வந்தது. ‘ஹேண்ட்சம்.’ நிஜமாகவே ஆறடிக்கு இரண்டு இஞ்ச் மட்டுமே கம்மியான உயரம் இருக்கும். மாநிறம் தான். ஹைட்டுக்கு ஏற்ற உடற்கட்டு. டெய்லி ஜிம்முக்குப் போவானோ? என்று நினைக்கத் தோன்றும் அவனைக் கண்டால். மொத்தத்தில் பார்க்க அம்சமாக இருந்தான்.

சரணின் பார்வை ஆராதனாவின் பதிலுக்காய் ஏக்கத்துடன் அவள் மேல் படிந்திருந்தது.

‘இல்லை இது தப்பு ஆரு. நீ இங்க வந்த காரணமென்ன? பண்ற வேலை என்ன? கண்ட்ரோல், கண்ட்ரோல் யுவர் செல்ஃப்’ என்று நிதானத்திற்கு வந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்து “சாரி சார். எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நான் படிச்சி வேலைக்காக திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்ததே என்னோட அத்தானைத் தேடித்தான். அவங்க சென்னையில தான் இருக்காங்க. சின்ன வயசுலயிருந்தே எங்க பாட்டி, அத்தானைத்தான் கட்டிக்கணும்னு சொல்லியே வளர்த்துட்டாங்க. சரியோ? தவறோ? இப்ப எங்க பாட்டி உயிரோட இல்லை. அவங்க ஆசையை நிறைவேத்துறது என்னோட கடமை. எங்க அத்தான் பேமிலியைத் தேடிக் கண்டுபிடிக்கணும். நடுவுல மாற முடியாது. மாறுறதைப் பற்றி நான் யோசிக்கவும் இல்லை.”

“ப்ளீஸ்! இனிமேல் இதைப்பற்றி பேசிட்டு என்கிட்ட வராதீங்க. உங்கமேல தனி மரியாதை வச்சிருக்கேன். அதை நீங்களே கெடுத்துக்காதீங்க. இந்த நினைப்பை இப்போதே உங்க மனசிலிருந்து தூக்கி எறிஞ்சிருங்க. நான் வர்றேன்” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தவள் அதிர்ச்சியில் நின்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“வேதா! நீ எப்படி இங்க வந்த?” என்றாள் தடுமாற்றத்துடன்.

“நானா?” என்று தோழியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவளின் கண்கள் தன்னை நேருக்கு நேராய் சந்திப்பதை தவிர்த்ததும், சின்னதாகச் சந்தேகம் எழுந்தது. ஆராதனாவின் தடுமாற்றம் வேதவல்லிக்கு எதையோ உணர்த்தியது. சரணையும் ஆராய்ந்தாள். அவ்வளவு பேசியும் தோழியையே பாவம் போல் பார்த்துக் கொண்டிருந்தான். ஆராதனாவிடம் திரும்பி, “சார் உங்கிட்ட பேச ஆரம்பிக்கும் போதே வந்துட்டேன். நீங்கதான் என்னைக் கவனிக்கவே இல்லையே?” அவள் சொன்னதும் கேட்டுக் கொண்டிருந்த ஆராவிற்குள் மெல்லிய அதிர்ச்சி பரவியது.

“அது ஒண்ணுமில்லை வேதா. சாருக்கு எதோ பிரச்சனையாம் சொல்லிட்டிருந்தார். வா நாம போகலாம்” என்று அவளை இழுத்துச் சென்றாள்.

ஆராதனாவின் பதிலில் அடிபட்ட பாவனையில் நின்று கொண்டிருந்த சரணை, பூங்காவின் வெளியே செல்லும் போது, ஒரு முறைத் திரும்பிப் பார்த்தாள். அவன் தான் பேசிய அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதை உணர்ந்தவளுக்கு, அவனின் நிலை அவளையுமே என்னவோ செய்தது. ‘அவனை நோக்கிச் செல்வேன்’ என்று சண்டித்தனம் செய்த மனதை, கைமூடி அடக்கிக் கொண்டு வந்தவளுக்குத் தெரியவில்லை. அது ஏற்கனவே அவனிடம் சரணடைந்தது.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வேதவல்லிக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ‘இவர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்ந்தால், அவர்களின் வாழ்வு சிறக்கும் என்று.’ அவனின் விண்ணப்பத்துக்கு அவன் கண்ணைப் பார்த்துப் பேசமுடியாமல் திணறிய தோழியின் நிலையை ஒருவாறு உணர்ந்தாள்.

முதல் முறையாக, ‘அந்த சரவணன் கடைசிவரைக் கிடைக்கக் கூடாது’ என்று மனதில் கடவுளை வேண்டினாள்.

ஆனால், அவளின் வேண்டுதலைப் பொய்யாக்கி சரவணனும் வந்து நின்றான் அவர்கள் முன்.

சரண் - ஆராதனா - சரவணன் முக்கோணக் காதல். ஜெயிப்பது யார்?

எப்படி அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டெடுத்தான்? எப்படிக் காரை ஓட்டி வீடு வந்து சேர்ந்தான் என்பதே அவனுக்குத் தெரியாது. அவ்வளவு அதிர்ச்சி அவனிடம். வரும் வழியில் தங்கையைக் கூப்பிடாமல் வந்ததும்தான் தன் தவறு புரிந்தது. தந்தையை அழைத்து தங்கையைக் கூப்பிட்டு வருமாறு சொன்னதும்,

“என்னடா தம்பி? உடம்புக்கு எதுவும் சரியில்லையா? ஏன் குரல் ஒருமாதிரி இருக்கு?” என்று கேட்டார்.

‘இல்லப்பா. மனசுதான் சரியில்லை’ என்று சொல்ல முடியாமல், “கொஞ்சம் தலைவலிப்பா” என்றான்.

“இருப்பா. இதோ உடனே வர்றேன்” என்றவரிடம் வேகமாக, “வேண்டாம்ப்பா. மாத்திரை போட்டுட்டேன். குட்டிமாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவ கவலைப்படுவா. வந்ததும் சொல்லிக்கலாம்” என்றான்.

கட்டிலில் அமர்ந்து தாயின் புகைப்படத்தைக் கையிலெடுத்தவன், தாய் இறந்த இத்தனை வருடங்களில் இன்றுதான் அழுகிறான். காலையில் அவளைப் பார்த்துப் பிடிச்சிருக்குன்னு சந்தோசத்தில் உங்ககிட்டச் சம்மதம் வாங்கிட்டுதானம்மா போனேன். ஆனா, அதுக்குள்ள என்னென்னவோ ஆகிருச்சிம்மா. சாயங்காலமே என் தேவதையைக் கைநழுவ விட்டுட்டேனேம்மா. இத்தனை வருஷத்துல எனக்குன்னு ஆசைப்பட்டு, என் ஆயுளுக்கும் வேணும்னு நினைச்சவ, ஒரே வார்த்தையில என்னை மறந்திருங்க சொல்லிட்டாம்மா. என்கிட்டயே சொல்றாம்மா, இன்னொருத்தனைத் தேடிப்பிடிச்சி கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்னு. எப்படிம்மா அவளுக்கு மனசு வந்தது? அவ என்னைப் பார்த்த பார்வையில ஏதோ இருந்ததும்மா. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. ஆனா, அவங்க பாட்டியோட ஆசைக்காக மனசை மறைக்கிறாம்மா.”

“நான் ஆசைப்பட்டது தப்பாம்மா? இல்லையே. அவளைப் பார்த்ததும், உங்க முகம்தான்ம்மா மனசுல வந்தது. அப்பதான் தெரிஞ்சது, பிறந்த நாள் அன்னைக்கு நீங்க எனக்காக அனுப்பி வைத்த தேவதைன்னு. அவளைப் பார்த்ததும் எனக்கு உங்க முகம் ஏன்மா நினைவு வரணும்? அவள் என்னைப் பார்த்துச் சிரித்த அந்தச் சிரிப்புத்தான்ம்மா, என்னை மறந்து அந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டிச்சி. எதையும் யோசிக்காம கேட்டுட்டேன். கேட்ட பிறகு அது சரின்னும் தோணிச்சி. நான் தப்புப் பண்ணிட்டேன்ம்மா. வயசுப் பொண்ணுகிட்டப் போயி இந்தமாதிரி ஒரு கேள்வி கேட்டா, அடிக்காம கொஞ்சவா செய்வா? நெக்ஸ்ட் டைம் அவளைப் பார்க்கும் போது மன்னிப்புக் கேட்டுக்கறேன்மா. முடிஞ்சா அவ அத்தைப் பையனை நானே கண்டுபிடிச்சிக் கொடுக்கிறேன்ம்மா. ப்ராமிஸ்ம்மா. ஆனாலும், என்னால அவளை மறக்க முடியும்னு தோணலம்மா” என்றவன் கண்களில் கண்ணீர்.

அவனுக்கு அதிக துக்கம், அதிக சந்தோஷம் என்றால் அவன் கேட்கும் பாடலை வைத்தான்.

அம்மா அம்மா நீ எங்க அம்மா

உன்னை விட்டா எனக்காரு அம்மா

தேடிப் பார்த்தேனே காணோம் உன்ன

கண்ணாமூச்சியா வா நீ வெளில

தாயே உயிர் பிரிந்தாயே

எனைத் தனியே தவிக்க விட்டாயே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்

நான் பாடும் பாட்டுக்கு

தாயே நீ உன் கண்கள் திறந்திடு போதும்

கதவு தட்டப்படும் ஓசையில், பாட்டை நிறுத்தி தாயின் புகைப்படத்தை அதனிடத்தில் வைத்துவிட்டு, எழுந்து முகத்தைக் கழுவி, நன்றாகத் துடைத்து சோகத்தை மறைத்து கதவைத் திறந்தான்.

“என்னாச்சிடா?” என்று தந்தையும், “என்னாச்சி அண்ணா?” என்று தங்கையும் கேட்க,

மெல்லிய புன்னகையை வெளியிட்டு, “ஒர்க் டென்சன்ல சின்னத் தலைவலிப்பா. நான் பார்த்துக்கறேன்” என்றவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று வெற்றியை பயமுறுத்தியது.

மகனை ஆழமாகப் பார்த்த வெற்றி, ‘இவனுக்கு இன்னும் அந்த பிரச்சனை இருக்கா? நான் எல்லாம் சரியாகிடுச்சின்னுல்ல நினைச்சிட்டிருக்கேன். கடவுளே அப்படி எதுவும் இருக்கக் கூடாது. என் பிள்ளை எப்பவும் நார்மலான பையனா இருக்கணும்’ என மனதில் நினைத்து மகனைப் சரணைப் பார்த்த வெற்றி, “பிறந்த நாள் அதுவுமா அம்மா நினைப்பு வந்திருச்சாடா?” என்று கேட்டவருக்கே அவரின் குரல் அந்நியமாகப்பட்டது.

‘ம்...’ என்று தலையாட்டி தந்தையைக் கட்டிக்கொண்டான்.

நியாவும் கண்கள் கலங்க அப்பாவின் மேல் சாய்ந்து கொண்டாள். நீர்வரத் துடித்த கண்களைக் கட்டுப்படுத்திய வெற்றி, பிள்ளைகள் இருவரையும் சமாதானப்படுத்தி, இருவரையும் சமையலில் இழுத்தடிக்க, தந்தையின் முயற்சி தெரிய சின்னவர்களும் தங்களைத் தேற்றி, சின்னச் சின்ன கலாட்டாக்களுடனும், பேச்சிக்களுடனும் தாயின் நினைவை உதறச் செய்து உறங்கவும் வைத்தார் வெற்றி.

ஆராதனா தூக்கம் வராமல் யோசனையுடன், உருண்டு புரண்டு கொண்டு இருக்க, அதட்டித் தூங்கச் சொன்னாள் வேதவல்லி. தோழியிடம் பூங்காவில் நடந்ததைப் பற்றி எதையும் கேட்கவில்லை.

ஆராதனாவிற்குக் கண்ணை மூடினாலே சரணின் கலங்கிய முகமும், அவன் கேட்டக் கேள்விகளுமே திரும்பத் திரும்ப வர, செய்வதறியாது திகைத்தாள்.

அவளின் அவஸ்தையை ஒருவாறு யூகித்த வேதவல்லி கொஞ்சம் இவளை விட்டுப் பிடிக்கலாம் என்று உறங்கினாள்.

ஆராவின் கனவுக்குள்ளும் சரண் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான்.

அலுவலகத்துக்கு வந்த சரண் முன்பு போல் யாரிடமும் பேசுவது இல்லை. கண்ணில் இருந்த சோகத்தைப் பார்த்த அவனின் உதவியாளர் வசந்தி, “என்ன சரண்? ஏன் ஒருமாதிரி இருக்க? உன் முகமே நாலுநாளா சரியில்ல. எதாவது ப்ராப்ளமா? என்கிட்ட சொல்லு. முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்றேன்” என்றாள்.

“இல்லக்கா அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் முகம் டல்லாயிருக்கு.”

“பொய் சொல்றன்னு நல்லாவேத் தெரியுது சரண்.”

‘என்ன பதில் சொல்வது? அப்பா, தங்கையிடமே இதுவரை சொல்லாததை எப்படிச் சொல்வது. இவங்க கண்டுபிடிச்சிக் கேட்கிற அளவு இருக்குன்னா, வீட்ல என்னை ஏன் எதுவும் கேட்கலை? இனி என்னை நானே கண்ட்ரோல் பண்ணனும்’ என்று தனக்குள்ளே பேசி முடிவிற்கு வந்தான்.

“என்ன யோசனை? என்ன சொல்லி மழுப்பலாம்னா?”

“அச்சோ! இல்லக்கா. நீங்களே கண்டுபிடிச்சிக் கேட்குறீங்கன்னா, வீட்ல ஏன் யாரும் எதுவும் கேட்கலைன்னு யோசிச்சேன்.”

“உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு கேட்டிருக்கமாட்டாங்க. நீயும், உன் தாடியும். எப்பவும் போல இரு. பி பாசிட்டிவ் மேன். சியர் அப்” என்று வசந்தி சொன்னதும்,

“தேங்க்யூ அக்கா. இனிமேல் இதுமாதிரி இருக்க மாட்டேன்” என்றவன், யாருக்காகவும் இதுவரை நடித்தே இராதவன், முதன் முதலாக வாழ்க்கையில் நடிகன் என்ற அரிதாரம் பூசினான். மற்றவர்களுக்காகத் தன் துக்கத்தை மறந்து, இல்லை மறைத்து நடிக்க ஆரம்பித்தான்.

இந்த நான்கு நாட்களாக சக்தியும் அவனுக்கு என்ன கவலை என்று தெரியாமல் குழம்பியவள், தோழியை அழைத்து, “ஷோபி மேனேஜருக்கு என்ன பிரச்சனை? ஏன் முகம் டல்லா இருக்குன்னு கேட்டுட்டு வாயேன்?” என்றாள்.

“அதுக்கு வேற ஆளைப்பாரு. அவர்கிட்டப் போயி நேரே கேட்கச் சொல்லுறியே உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? அப்படியே போனாலும் என்ன கேட்கச் சொல்ற? சார் சார். சக்தின்னு ஒருத்தி, ரொம்ப நாளா உங்க மேல தீராக் காதலோட, பழைய காலத்து சங்கத்தலைவி மாதிரி காத்துக்கிட்டிருக்கா. நீங்க கவலையா இருக்கீங்கன்னு அவள் சாப்பிடலை. தூங்கலை. நீங்க காரணம் சொன்னா சரியாகிருவான்னு கேட்கச் சொல்றியா?” என்று நக்கலாகக் கேட்க,

“நீ என்னோட ப்ரண்ட்தான? என்ன வேணும்னாலும் கிண்டல் பண்ணிக்கோ. ஆனா, நான் சொன்னதைக் கேட்டுட்டு வாடி ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.

“சே! காதல்னு வந்துட்டா ஏன்டி இப்படி இருக்கீங்க. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. போய்ப் பார்க்கிறேன் முடிஞ்சா பேசுறேன்.” சக்தி முறைப்பதைப் பார்த்து, “முடியலன்னாலும் பேசுறேன் தாயே” என்று சென்றாள்.

அவள் அறை அருகே செல்லும் போதுதான் சரண் நடிகன் ஆனது. அதைப் பார்த்து வந்து தோழியிடம், “ஏய்! உன் ஆளு முகம் டாலடிக்குதுடி. ப்ராப்ளம் சால்வ்னு நினைக்கிறேன்” என்றதும் தான் சக்தியின் மனம் தெளிந்தது.

மதியம் கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு சக்தி திரும்பி தன் சீட்டில் அமரும் பொழுது, அவளின் கணினி அருகில் கடிதத்துடன் ஒரு பூவும் இருந்தது. சுற்றிலும் தேடியவளின் கண்ணில் சரண் விழ, மனம் முழுக்க சாரல் அடிக்க சந்தோஷத்துடன் கடிதத்தைப் பிரித்தாள்.

சிவனில் பாதி சக்தியெனில்,

சக்தியின் பாதி நானன்றோ!

நின் கடைக்கண் பார்வைக்காகக்

காத்திருக்கும் ஜீவன்

இந்தச் சிவனல்லவா!

உன்னில் பாதியாக நானும்,

என்னில் பாதியாக நீயும்,

உறவாக மாறி

உயிருக்குள் கலந்து

காதல்கொள்ள வாராயோ!

இப்படிக்கு

உன்னில் பாதியானவன்.

கவிதையைப் படித்து முடித்ததும் சந்தோஷத்தில் அப்பொழுது தன் வந்த தோழியை அணைத்து விவரம் சொன்னாள்.

ஷோபிகாவால் நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்பக் கேட்க,

“ஏன்டி? நான் பொய் சொல்றேன்னு சந்தேகப்படுறியா?”

“இல்லடா. இதுல நேம் கூட இல்லை. வேற யாராவது வச்சிருக்கலாம்ல?”

“ஆனா, நான் பார்த்தேனே. அவர் இங்க இருந்து போனதை.”

“எனக்கென்னவோ! இன்னும் சந்தேகமாகதான் இருக்கு. எதுக்கும் நல்லா யோசி. இல்லையா நேரடியா கேட்டுத் தெரிஞ்சிக்கோ” என்றாள்.

“ம்... சரி பார்க்கலாம். நெக்ஸ்ட் இதை மாதிரி வரும் போது” என்றாள்.
 
Top