• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
4

இதுவரையிலும் அவன் தங்கை சாதனா தன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு முன் சுபாவிற்கு விபத்து ஆனதைக் கேள்விப்பட்டதும், தன் அண்ணனின் அழகிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருத்தி மனைவியாக வந்திருக்கிறாள் என்ற எண்ணம். தன் அண்ணனுக்கென்று ஒரு கனவுப் பெண்ணை உருவகப்படுத்தி, இப்படித்தான் வருங்கால அண்ணி இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தவளால், சுபாவின் விபத்து பற்றிக் கேள்விப்பட்டதும் அவளின் கனவு கலைந்ததில் கோபம். தன் படிப்பைக் காரணம் காட்டி திருமணத்திற்குச் செல்லவே இல்லை. அதன்பின் அவளுக்கே நேரம் கிடைக்கவில்லை. ஜீவாவிற்கு தங்கையின் விருப்பம் தெரிந்திருந்ததால், அவளை ரொம்ப வற்புறுத்தவில்லை.

சென்னையிலிருந்து பெங்களுர் வந்த அன்று நேரே சுபாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ஹாஸ்பிடலில் அனுமதித்திருந்ததால், தங்கைக்கு போன் செய்ய, வரமாட்டேன் என்றவளை ‘நீ வர்ற’ என்று வலுக்கட்டாயமாக வரவழைத்தான் ஜீவா. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்கள் எதிரில் மரியாதைக் குறைவாக நடக்க மாட்டாள் என்பதில் நூறு சதவீதம் நம்பிக்கை அவனுக்கு. அதனால் தைரியமாகவே வரவழைத்தான். மாமனார் வீட்டில் தன் தங்கையை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதே என்ற எண்ணமும் கூட.

அண்ணனின் நம்பிக்கையை பெரியவர்களிடம் நல்லவிதமாகப் பேசி காப்பாற்றியிருந்தாள் சாதனா. மனைவியைக் காண அழைத்துச் செல்லும் வழியிலேயே அண்ணனிடம் தன் சம்மதமில்லாமல் திருமணம் செய்ததற்கு சண்டையிட்டாள்.

“எதுவாயிருந்தாலும் இங்கேயே பேசி முடிச்சிருடா. உனக்கு ஏற்கனவே சொல்லிட்டேன் என்னால தான் அவளுக்கு ஆக்ஸிடெண்டானது. அவ ஏற்கனவே வலி, வேதனைன்னு ரொம்ப நொந்து போயிருக்கா. நீ எதுவும் மனசு சங்கடப்படுற மாதிரி பேசிறாத. ப்ளீஸ் எனக்காக” என்று கெஞ்சிய அண்ணனிடம்,

“ஓகே” என்று அரைமனதாக ஒத்துக்கொண்டாலும், முன்னப்பின்ன அறிமுகமில்லாத பெண்ணிடம் சண்டை போடும் ஐடியாவெல்லாம் சாதனாவுக்கு இல்லவே இல்லை. உள்ளே சென்று சுபாவின் முகத்தைப் பார்த்த சாதனா அதிர்ந்தே விட்டாள். அண்ணனிடம் பாவமாக ஒரு பார்வையை செலுத்த, அவனோ முகம் முழுக்க சந்தோஷத்துடன் நின்றிருந்தான். தலையிலடிக்காத குறையாக நின்றிருந்த தங்கையின் கைபிடித்து மனைவியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினான்.

சுபா கைநீட்டி, “நைஸ் டூ மீட்டிங் யூ” என்றாள் சிரித்தபடி. “அவளின் அந்தச் சிரிப்பில் ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்தாள் சாதனா. ஆனால் குரல்? சுபாவிற்கு முன்னைப்போல் அல்லாமல் ஓரளவு குரல் வர ஆரம்பித்திருந்ததால், மற்றவர்களுக்கு கேட்கும் அளவு இருந்தது. ‘ஹ்ம்... இது வேறயா குரலுக்கும் தடாவா. டேய் அண்ணா! ஏன்டா இப்படி? ஒருவேளை அவங்க சிரிப்பைப் பார்த்து மயங்கிட்டானோ. இந்த காலத்துப் பசங்க என்ன பண்றாங்கன்னு கணிக்கவே முடியலப்பா” என்று மனதினுள் அலுத்துக் கொண்டாள்.

இவளும் இந்த காலத்துப் பொண்ணுதான! பயபுள்ள ஒருவேளை மறந்திருக்குமோ!

பின், மனமில்லாமல் கைகொடுத்து இரண்டொரு வார்த்தைகள் பேசி சிறிது நேரம் அண்ணனிடமும் பேசிவிட்டுக் கிளம்பி வெளியே செல்ல கதவைத் திறக்க, அதே நேரம் கதவின் மறுபக்கமிருந்து ப்ரேம் கதவைத் திறந்து உள்ளே வர முயற்சிக்க, முயற்சியின் விளைவாக சாதனாவின் நெற்றி கதவில் மோதி வலியெடுத்தது.

உள்ளே நுழைந்தவனைப் பார்த்தவள், வலியின் வேகமும், அண்ணன் மேலுள்ள கோபமும் சேர்ந்து, “அறிவிருக்கா. அதான் நான் திறக்கிறேன்ல அப்புறம் என்ன இழுத்துட்டு இருக்க? அப்படி என்ன அவசரம் உனக்கு? உங்களுக்கு தர்றேன்னு சொன்ன மகாராஜா கிரீடத்தை வேற யாருக்காவது குடுத்திருவாங்கன்னு வேகமா வர்றீங்களோ?” என கோபமாக மரியாதையை இறக்கியும் ஏற்றியும் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்க, ப்ரேம் திருதிருவென விழித்தான்.

ஹாஸ்பிடலை விட்டு கொஞ்ச நேரம் காற்று வாங்க வெளியே சென்றவன் திரும்பி வரும்போது, தங்கை அறையிலிருந்து வயதுப்பெண் ஒருத்தி வருவாளென்று கனவா கண்டிருந்தான். முதலில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் பேசிய பேச்சில் அவனுக்குக் கோபம் வந்து, “ஏய்! கொஞ்சம் நிறுத்து. என்ன விட்டா ஒரேயடியா பேசிட்டிருக்க. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்றான்.

அதற்குள் அருகில் வந்த ஜீவா, “என்னாச்சி?” என்று பொதுப்படையாகக் கேட்டான்.

“அண்ணா” என்று சாதனாவும், “மாப்பிள்ளை” என்று ப்ரேமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க... ‘தங்கச்சியா?’’ என்று ப்ரேமும், ‘மாப்பிள்ளையா?’ என்று சாதனாவும் அதிர்ந்து, பின் இருவரும் முறைப்பதை நிறுத்தி அசட்டு சிரிப்பை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

“ஹேய்! என்னைப் பார்த்தா லூசு மாதிரித் தெரியுதா? சண்டை போட்ட சத்தம் காதைக் கிழிச்சது. என்னடான்னு வந்து பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சாரி சொல்லிட்டு சிரிக்கிறீங்க?” என்றான் ஜீவானந்த்.

“அது ஒண்ணுமில்லண்ணா ரெண்டு பேருமே ஒரே நேரத்துல கதவைத் திறந்ததுல நெத்தியில அடிபட்டிருச்சி. அந்த கோபத்துல திட்டிட்டிருந்தேன்.”

“என்னது அடிபட்டிருச்சா?” என்று இரு ஆண்களும் ஒரே நேரத்தில் பதற, ஜீவா தங்கையின் நெற்றியைத் தேய்த்துவிட, அவளோ பதறியபடி நின்றிருந்த ப்ரேமைப் பார்த்தாள். ‘என் அண்ணன் பதறினா அது உடன்பிறந்த பாசம். இவங்க ஏன் பதறுறாங்க?’ என யோசிக்க...

அதே நிலைதான் பிரேமிற்கும். ‘அந்தப் பொண்ணுக்கு அடிபட்டா நான் ஏன் பதறணும்?’ என நினைத்தவன், தன்னால் தான் அடிபட்டது என்ற பரிதாபமும், தங்கை நாத்தனார் என்ற அக்கறையும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, “சாரிங்க நான் வேணும்னே பண்ணல.” மனப்பூர்வமாக சாதனாவிடம் மன்னிப்பும் கேட்டான்.

“இட்ஸ் ஓகே. இதுக்கு ஏன் சாரி” என்றவளுக்கே, இவ்வளவு நேரம் இவனிடம் கத்திக்கொண்டிருந்தது நானா என்றிருந்தது. “அண்ணா எனக்கு எக்ஸாம் இன்னும் ஒன் வீக்ல முடியுது. நான் திரும்ப வருவேனா தெரியாது. என்னை எதிர்பார்க்காதே” என்று வெளியே செல்லும் பொழுது, ப்ரேமைப் பார்க்க வேண்டும்போல் தோன்றிய உணர்வில் ஆச்சர்யமாகி, பின் தோளைக்குலுக்கி நடந்து சென்றாள்.

“சாரி, மாப்பிள்ளை. என்னால் தான அவங்களுக்கு அடிபட்டிருச்சி?”

“ஆமா மச்சான். அதுக்கு முன்னாடி உங்களால தினம்தினம் ஒருத்தன் அடிபடுறேன் அதைச் சரிபண்ண மாட்டேன்னுறீங்களே?” என்றான் கவலையாக.

ஜீவாவின் வார்த்தையில் அதிர்ந்து பதறியபடி, “நானா? நான் என்ன பண்ணினேன் அடிபடுற அளவு?” என்று கேட்க...

“என்ன பண்ணல கேளுங்க? ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளைன்னு கூப்பிடுறீங்களே.. அதை விட்டுட்டு ஜீவான்னு கூப்பிட்டு வா போ சொல்லலாம். இல்ல மரியாதை குடுக்கணும்னா பெயர் சொல்லி வாங்க போங்க சொல்லலாம். நீங்க அப்படி செய்யுறது இல்லையே.”

“ஓஹ்... அவ்வளவுதானா நானும் என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன். ஆனா, அதையே நீங்களும் செய்யலாமே?” என எதிர்கேள்வி கேட்டான்.

“ஓஹ்... செய்யலாமே” என்று ப்ரேமைப் போல ஆரம்பித்து, “அப்புறம் என் பொண்டாட்டி வந்து எங்கண்ணா உங்களோட பெரியவங்க. நீங்க எப்படி பெயர் சொல்லலாம்னு கேட்டா நான் என்ன பண்றது?” என்றான் விடாது.

“என் தங்கச்சி பெயரைச் சொல்லி நீங்க எஸ்ஸாகுறீங்க? ஒகே” என்றான் சம்மதமாக.

“அப்புறம் மச்சான் என் தங்கை பேசினதை மனசுல வச்சிக்காதீங்க? அவ பேசினதை அடுத்த செகண்ட் அவளே மறந்திருவா. தன்மேல தப்பிருந்தா மன்னிப்பு கேட்கத் தயங்கமாட்டா.”

“ம்... அதான் நேர்லயே பார்த்தேனே. நல்ல பாலிசி தான். ஓகே ஜீவா நான் ஊருக்கு கிளம்பறேன். ஆபரேஷன் அன்னைக்கு இங்க இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன். அப்பா, அம்மா இங்கேயே இருக்கட்டும். அங்க வந்தாலும் நிம்மதியா இருக்க மாட்டாங்க” என்று சென்றவன், அதன்பிறகு சிகிச்சை அன்றுதான் வந்தான். அதுவும் உடனே ஊருக்குத் திரும்பும் அவசரத்துடன். ஆதலால், ஜீவாவின் வீட்டிற்கு செல்லும் அவசியமில்லாமல் போனது ப்ரேமிற்கு.

சிகிச்சை முடிந்து மேலும் சில நாட்களிலேயே வீடு அழைத்துச் செல்ல முதன் முதலாக வரும் மருமகளை ஆரத்தி எடுத்து வரவேற்றார் வந்தனா. வீட்டினுள் நுழைய உறவினர்கள் வருகை ஒரு சிலரும் அருகிலுள்ளவர்களும் மாப்பிள்ளை, பெண்ணை பார்க்க வந்திருந்தார்கள். மனைவியிடம் குனிந்து, “நான் சொல்லும் பொழுது வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிடு போதும்” என்ற கணவனின் சொல்லை அப்படியே கடைபிடித்தாள்.

மற்றவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சுபாவின் பெற்றவர்களும் கிளம்ப, ஜீவா வீட்டினரும் ரொம்ப நாளாக தொழிலைக் கவனிக்காமல் இங்கேயே எப்படி இருக்கச் சொல்வது என்று சம்மதித்தார்கள்.

சுபாவிடம் வந்த சண்முகசுந்தரி ஒரு தாய்க்கே உரித்தான கவலைகளைச் சொல்லி, நல்ல விதமாக நாலு வார்த்தைகள் பேசிய பிறகே கிளம்பினார். விவேக் தானும் சென்னை வருவதாக சொல்லியிருந்ததால், ப்ரேம் அவர்கள் காரை எடுத்துச் செல்ல, விவேக்கின் காரில் சுபாவின் பெற்றோர்கள் கிளம்பினார்கள்.

அனைவரும் சென்றதும் “சாதனா எங்கம்மா?” என தாயிடம் விசாரிக்க... “உன் தங்கச்சி தான எக்ஸாம் முடிஞ்ச பிறகும் இன்னும் காலேஜையே சுத்தி சுத்தி வந்திட்டிருக்கா.” மருமகளைப் பார்க்க வரவில்லை என்ற கோபத்தில் சொன்னவர், பின் தணிந்து “ஸ்பெஷல் க்ளாஸ் இருக்காம். நீ தேவியை ரூம்கு கூப்பிட்டுப்போ. உன் தங்கை வருவா” என்றார்.

ஜீவாவின் அறை மாடியிலிருந்தது. சுபாவிற்காக தன்னுடைய ஜாகையை கீழே மாற்றியிருந்தான். மனைவியை உள்ளே அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்தவன், யோசனையாக இருந்தவளிடம்> “என்னடா யோசனையெல்லாம் பலமா இருக்கு?” என்றான் கனிவாக.

“இல்லங்க. நீங்கள்லாம் பேசுறதைப் பார்த்தா உங்க தங்கச்சிக்கு நம்ம கல்யாணம் நடந்ததுல விருப்பமில்லை போல. அவங்களுக்கு என்னைப் பிடிக்கலையா என்ன?” என கேட்டாள்.

“ஏன்மா அப்படிக் கேட்கிற?”

“இல்ல ஏதோ ஒரு ஃபீல். அவங்க என்னை அவாய்ட் பண்றாங்களோன்னு. முதல் நாள் வந்து பார்த்துட்டு போனபிறகு வரவேயில்லையே?”

“அவளுக்கு எக்ஸாம் நடந்ததுமா?”

“எக்ஸாம் நடந்தாலும் உள்ளுர்லதான இருக்காங்க? ஏன் வரல? முதல் நாள் வந்ததுகூட நீங்க வற்புறுத்திதானா?” என்று தன் மனதிலுள்ளதைக் கேட்க...

அந்த சமயம் தங்கையின் மேல் கோபமாக வந்தது. வீட்டுக்கு வந்த பெண்ணை, அதுவும் உடல்நலம் சரியில்லாத பெண்ணை வருத்துகிறாளே என்று. இருந்தாலும் தங்கையை விட்டுக்கொடுக்க மனமில்லாமல், “இதை எப்படி சொல்றதுன்னு தெரியல. நான் சொன்னா அதை நீ எப்படி எடுத்துப்பன்னும் தெரியலமா. அவளுக்கு நம்ம கல்யாணத்துல விருப்பமில்லை” என்றான்.

ஏனென்பது போல் சுபாவின் முகம் கேள்வியாய் சுருங்க, “அ...அது உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சி தான. அதுவும் முகத்துல அடின்னதும் அண்ணனுக்கு ஈக்வலா பொண்ணு அழகா இருக்க மாட்டாங்களேன்ற வருத்தம் ஒருபுறம். உனக்கு கண்ணு தெரியாதுன்ற விஷயம் இன்னொரு புறம். சின்னப் பொண்ணுதான இப்பத்தான் படிப்பையே முடிச்சிருக்கா. இனி தான் ஆளுங்களைப் படிக்க ஆரம்பிப்பா. கொஞ்ச நேரம் உன்கிட்டப் பேசினாள்னா புரிஞ்சிக்குவா. அவளைத் தப்பா எடுத்துக்காதம்மா. அவ நல்லவதான். உன் விஷயத்துலதான் கொஞ்சம் சொதப்புறா.”

“அதுக்கு ஏன்ங்க இத்தனை விளக்கம்? என்னோட நாத்தனாரை நானே பார்த்துக்கறேன். ஆமா, அப்ப என்முகம் ரொம்ப மோசமாகவா இருந்திச்சி?”

“இல்லடா சின்னச்சின்ன காயம் தான்.”

“இல்ல பொய் சொல்றீங்க? சின்ன காயத்துக்காகவெல்லாம் யாரும் ஃபேஸ் சர்ஜரி வரை போக மாட்டாங்க.”

“ஓகே... ஓகே ஐம் சரண்டர் ஃபார் யூ. காயம் கொஞ்சம் பெருசு, கொஞ்சம் சின்னது ஓகேவா.”

“நீங்க என்னைக் கிண்டலடிக்கிறீங்களா?”

“நான் உன்னைக் கிண்டலடிக்காம வேற யாரை கிண்டலடிக்க முடியும். வேற பொண்ணை கிண்டலடிச்சா ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள தள்ளிடுவாங்க. நான் அந்த ரிஸ்க் எடுக்கமாட்டேன்பா” என்று பயந்தவன்போல் கூறி, “சரி நீ படுத்துக்கறியா கண்ணுக்கு மருந்து போடுறேன் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்று மனைவியை படுக்க வைத்து மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்த மருந்தை எடுத்து அவளருகில் வந்து, கண்களில் துளி விட அவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
சுபாவின் கண்களிலிருந்த புண்கள் மறைந்தாலும், கண்ணாடி போலான சதைகள் அவ்வப்பொழுது விழித்திரையை மறைத்து வைத்திருந்தது. அதையும் மீறி அந்த கண்களில் என்ன கண்டானோ! மனைவியிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டவன், ‘எதுக்கும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெய்ண்டெய்ன் செய்யணும்டா ஜீவா’ என மனதிற்குள் சொல்வதாக நினைத்து கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டான்.

“என்ன டிஸ்டன்ஸ்? யார்கிட்ட மெய்ண்டெய்ன் பண்ணப்போறீங்க?”

‘ஆஹா! அவ்வளவு சத்தமாகவா பேசிட்டோம். சமாளிப்போம்’ என்று வடிவேலு ஸ்டைலில் நினைத்து, “அதொண்ணுமில்லடா. என் ஃப்ரண்ட் ஒருத்தன் ஒரு பொண்ணை லவ் பண்ணினான். பேரண்ட்ஸ்கிட்ட சம்மதம் கேட்காமலேயே எங்க கல்யாணம் பண்ணித் தரமாட்டாங்களோன்னு அவனே கற்பனை பண்ணி கூட்டிட்டுப் போயிட்டான். பேரண்ட்ஸ்கு தெரியாம அப்படிப் பண்ணினதால எனக்கு கோபம். அதான் அவன்கிட்ட டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேன்” என்று உளறினான்.

“இந்த நேரம் ஏன் அந்த விஷயம் தோணிச்சி?”

‘ஹையோ! இவ கேள்வி கேட்காம இருந்தா நல்லாயிருக்குமே!’ “அதைவிடுமா அடுத்த வாரம் கண் செக்கப் பண்ணிட்டு வந்திரலாமா?” என்றான்.

“இதுக்காக இங்கயிருந்து சென்னை அலையணுமா? உங்களுக்கு ஆஃபீஸ் இருக்குமே?”

“இதுக்கு ஏன்மா சென்னை போகணும்? இங்க பக்கத்துல தான் இருக்கு.”

“ஓ... நான் சென்னைன்னு நினைச்சிட்டேன்.”

ஹா...ஹா... என்று சிரித்தவன்,” நீ அப்படி நினைச்சிட்டியா? டாக்டர்.கேசவ் தான்மா இங்க உள்ள டாக்டர்கிட்ட செக் பண்ணிக்கச் சொல்லி எழுதிக் குடுத்துட்டார். டூ மன்த் கழித்து சென்னை போயி கம்ப்ளீட் செக்கப் ஒண்ணு பண்ணிக்கலாம். அதுக்குள்ள பார்வை வந்திடும்னு நினைக்கிறேன்.”

“ஷப்பா... ரொம்ப நல்லதுங்க. எங்க உங்களை ரொம்ப அலைக்கழிக்கிறேனோன்னு தோணிச்சி. இப்ப ஓகேங்க.”

“கண்ணு கொஞ்சம் கொஞ்சமா தெரியுற டைம் தேவி. கண்ணுக்கு வேலை குடுக்காத. கண்ணுல கண்ணாடி போட்டுக்கோ. சாதாரணமா பார்த்தா கண்ணுல கூச்சம் இருக்கும். அப்புறம் கண்ணீர் வரவே கூடாது. அது ஆனந்தக் கண்ணீரா இருந்தாலும்.”

“உங்களுக்கு குசும்பு ஜாஸ்திங்க.”

“என்ன பண்றதுமா. நான் குணத்துல எங்கப்பா மாதிரியாம்” சொல்லி இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போதே, “ஜீவா, தேவியைக் கூப்பிட்டு வா என வந்தனா” அழைக்க, “இதோ வர்றேன்மா” என தாய்க்குப் பதிலளித்து,” நீ வரவேண்டாம் தேவி. இப்பத்தான் மருந்து விட்டிருக்கு நான் என்னன்னு கேட்டுட்டு வர்றேன்” என்று கிளம்பியவனை, “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினாள்.

“சொல்லுமா?” என நின்றவனிடம், இல்ல “உங்க பெயர் ஆனந்த் தான? ஏன் எல்லாரும் ஜீவா சொல்றாங்க?” என்று திருமணமான தினத்திலிருந்து மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டேவிட்டாள்.

“ஓ... உனக்கு என்னோட ஃபுல் நேம் தெரியாதுல்ல. ஜீவானந்த் என்னோட நேம். வீட்ல எல்லாருக்கும் ஜீவா. வெளில ஆனந்த்” என்றான்.

“ஓ... சாரிங்க ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம்னு தோணிச்சி.”

“இட்ஸ் ஓகேமா” என்று அவளருகில் வந்தமர்ந்தவன், மெல்ல கன்னம் வருட, கணவனின் அந்த செயலில் உடல் சிலிர்க்க அமர்ந்திருந்தவளிடம்... “கையைத்தான பிடிக்கக்கூடாது சொன்ன, அதான் கன்னம் தொட்டேன். தப்பா? தப்புன்னா சொல்லு இனி இந்த ஏரியாவையும் தொடலை” என்றவனின் கைகள் அவள் கன்னம் விட்டு இறங்கவில்லை.

“ம்... ம்ஹூம்” என்று நாற்புறமும் தலையை ஆட்டி கடைசியில் சம்மதமாக தலையசைத்து, “கையையும் பிடிச்சிக்கலாம் நோ அப்ஜெக்ஷன்” என்றதும், அவளின் பாவனையிலும், வார்த்தையிலும் சிரித்தவன், “தேங்க்ஸ்டா நான் அம்மாவைப் பார்த்திட்டு வந்திடுறேன்” என்று மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான்.

கணவன் வெளியே சென்றுவிட்டதை உணர்ந்தவள், கணவன் முத்தமிட்ட கன்னம் தொட்டு, ‘அடப்பாவி! நோ அப்ஜெக்ஷன் சொன்னா, எல்லாத்துக்கும் சேர்த்து சொன்ன மாதிரி முத்தம் குடுத்துட்டுப் போறீங்களா. கில்லாடி தான் ஜீவா நீங்க. ஐ லைக் யூ’ என்றாள் மனதினுள்.

ஆம் அவளுக்கு பழைய ஆனந்தை விட இந்த ஜீவாவை ரொம்ப பிடித்திருந்தது. அவனின் பழகும் தன்மை, கலாட்டா பேச்சுக்கள், தன்னிடம் காட்டும் அக்கறை அனைத்தும் பிடித்திருந்தது. கணவனின் முதல் முத்தம் எங்கே மறுத்து அல்லது அடித்துவிடுவேனோ என்று வேகமாக வெளியேறியவனையே நினைத்திருந்தாள்.

பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்குமோ என்று நினைத்த ஜீவா! இவனுடனான தன்வாழ்வு எப்படியிருக்குமென பயந்த ஜீவா! நெஞ்சம் ஏற்க மறுத்த ஜீவா! அந்த ஜீவனாகிய ஜீவானந்த் அவள் நெஞ்சம் முழுவதும் பரவி ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான்.

வெளியே சென்றவன் சிறிது நேரத்தில் உள்ளே வந்து மனைவியின் முகத்தை ஆராய, அதில் கோபமில்லையென்று தெரிந்ததும், “தேவிமா! அம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்க. நான் தான் கண்ணுக்கு மருந்து போட்டுட்டு வந்திருக்கேன். என்கிட்டயே குடுங்க நான் ஊட்டிவிடுறேன்னு வாங்கிட்டு வந்திட்டேன். அப்படியே சாய்ந்த மாதிரி உட்காரு. நான் ஊட்டிவிடுறேன்” என்று எதுவும் நடக்காததுபோல் பேசினான்.

இங்கு சுபாவோ குழம்பிக் கொண்டிருந்தாள். ‘இவங்க கொஞ்சநேரத்துக்கு முன்னாடி முத்தம் குடுத்தாங்களா? இல்லையா? இவ்வளவு கேசுவலா எதுவுமே நடக்காத மாதிரி எப்படி?’ என்று யோசிக்க, அவளின் முகத்தில் தோன்றிய பாவனைகளைப் பார்த்தவன் மௌனமாக சிரித்து, “என்ன தேவி ஊட்டிவிடுறேன்னு கேட்டதுக்குப் பதில் வரல? முகத்துல ஏகப்பட்ட எக்ஸ்ப்ரஷன் தான் தெரியுது” என்றான்.

“ஹான்! என்ன கேட்டீங்க ஜீவா?” என்று கேட்க...

டக்கென்று முகம் பளிச்சிட அவளைப் பார்த்தவன், “தேவி எங்க இன்னொரு டைம் சொல்லு?”

“என்ன சொல்லச் சொல்றீங்க? என்ன கேட்டீங்க ஜீவா சொன்னேன்” என்றவள் அப்பொழுது தான் கணவனின் பெயர் சொல்லியழைத்ததை உணர்ந்து டக்கென்று நாக்கைக் கடித்து “சாரி” என்றாள்.

“ஹேய்! ஏன் சாரி கேட்கிற, என்னோட நேம் சொல்ல என் ஒய்ஃப்கு இவ்வளவு நாள் ஆகிருச்சே. உனக்கு டேலணட் பத்தல ஜீவான்னு என்னை நானே திட்டிட்டிருக்கேன் தெரியுமா?”

அப்பாவியாய் சொன்னவனை... ‘கேடி’ என மனதினுள் திட்டி “தேங்க்ஸ்” என்று வெளியே சொன்னாள்.

“அதை நீயே வச்சிக்க.! இந்தா வாயைத்திற இதையும் நீயே வச்சிக்கோ” என்று அவளை உண்ண வைத்து, பத்து நிமிட இடைவெளிக்குப் பின் மாத்திரை கொடுத்து, “ரெஸ்ட் எடுமா ஈவ்னிங் தோட்டத்துக்குப் போகலாம்” என்றான்.

‘தோட்டமா? எங்கயிருக்கு?’ என்று கேட்கப்போக... ‘ம்ஹூம்... போகும் போது பார்த்துக்கலாம்’ என அதைவிடுத்தாள்.

மாலையில் வீட்டின் இடது பகுதியிலுள்ள தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல, அங்குள்ள பலவகைப் பூக்களின் சுகந்தமும், மரங்களின் குளுகுளு காற்றையும், கண் இல்லாமலேயே தன் மனக்கண்ணால் ரசித்து, “தோட்டம் சூப்பராயிருக்குதுங்க!” என்று சர்டிபிகேட்டும் கொடுத்தாள்.

அருகிலுள்ள திண்டில் உட்காரவைத்து மனைவியினருகில் அமர்ந்தவன், “உனக்குப் பிடிக்கும்னு தோணிச்சி தேவி. அதான் இங்க கூப்பிட்டு வந்தேன். காற்று கொஞ்சம் அதிகமாயிருக்கு. கண்ணைத் திறக்காத. கண்ணுல தூசி விழப்போகுது. ம்கூம்... இது சரிவராது இப்படியே ஒரு நிமிஷம் உட்காருமா வந்திடுறேன்” என்று வேகமாக வீட்டினுள் சென்று, சொன்ன நேரத்திற்கு திரும்ப வந்தவன் கையில் ஒரு கூலிங்கிளாஸ் கண்ணாடி இருந்தது. அதை மனைவியின் கண்ணில் அணிவித்து, “இப்ப சூப்பர்” என்றான்.

அந்த அன்பில் ஒரு நிமிடம் மயங்கித்தான் போனாள் சுபா.

“இந்த தோட்டத்துல உள்ள பூச்செடிகள் சாதுவோட கலெக்ஷன்ஸ். அவ ப்ரண்ட் வீடு தெரிஞ்சவங்க வீடுன்னு யார் வீட்ல என்னென்ன வித்தியாசமான செடிகள் இருக்கோ, எப்படியாவது கேட்டு வாங்கிட்டு வந்து நட்டிடுவா. அதே மாதிரி தரமாட்டேன்னு சொன்னாங்கன்னு வையி..” என நிறுத்த...

“என்ன? என்ன பண்ணுவாங்க?” என்ற மனைவியின் ஆர்வத்தில், “சொல்றேன்மா.. சொல்றேன்” என்று பிட்டைப்போட்டு, “தரமாட்டேன்னு சொன்னாங்கன்னா... சுட்டுட்டு வந்திருவா” என்று ஜீவா சிரிக்க, கணவனுடன் சேர்ந்து சுபாவும் சிரித்தாள்.
சிரித்தபடியே திரும்பிப் பார்த்தவன் தன்னை முறைத்தபடி நிற்கும் தங்கையைப் பார்த்து “சாது” என்றான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top