- Joined
- Aug 31, 2024
- Messages
- 628
- Thread Author
- #1
3
வேலைக்குச் செல்ல இன்னும் நான்கு நாட்களே இருந்த சமயம், வீட்டில் ஆராதனாவின் பஞ்சாயத்து நடந்தது. கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அம்மா, அப்பாவை வற்புறுத்த, ‘என்ன செய்வது?’ என்ற யோசனையிலிருந்த கேசவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மனதினுள், ‘வேண்டாம்ப்பா. ப்ளீஸ் சம்மதிக்காதீங்க” என்ற வேண்டுதல் ஓடியது.
“ஆனா, செல்வி. அவள் வேலைக்குப் போகணும்னு சொல்றாளே” என்று மகளின் மனதில் பால் வார்க்க,
“அதெல்லாம் பொம்பளப்புள்ள அவ்வளவு தூரம் தனியா அனுப்புறது சரிவராது. எதுவும் வேண்டாம் அவளை ஸ்கூல் சேர்த்ததிலிருந்து எல்லாமே தாமதம்தான். இப்ப இருபத்தி நாலு வயசாகுது, நம்ம ஊர் பிள்ளைங்க இத்தனை வயசு வரை யார் இருக்கிறா? அதெல்லாம் வேலைக்கெல்லாம் போக வேண்டாம். கல்யாணம் பண்ணி அனுப்புற வழியைப் பாருங்க” என்று அப்பா பால் வார்த்த மனதில், அம்மா தீயை வார்த்தார்.
‘சே, என்னடா ஆராவுக்கு வந்த சோதனை’ என்று தனக்குள் புலம்ப, ‘இந்த நேரத்துல இந்த ரைமிங் வேற உன் மனசுக்குத் தேவையாடி ஆரு’ என்று மனப்போராட்டத்தை நிறுத்தி நிஜப் போராட்டத்திற்கு வந்தாள்.
அதே நேரத்தில் கீர்த்தனாவும், தாத்தாவும் உள்ளே வர, “அப்பா! அக்கா வேலைக்குப் போகட்டும். மேரேஜ் பிக்ஸ் பண்றப்ப பார்த்துக்கலாம் மற்ற பிரச்சனைகளை” என்றாள் நல்ல தங்கையாக.
“ஆமாடா கேசவா. கொஞ்ச நாள் அவ இஷ்டத்துக்கு விட்டுப்பிடி. கண்டிப்பா நல்லதே நடக்கும்” என்றார்.
“சரிப்பா. அப்படியே செய்றேன். எனக்கும் அவ சந்தோஷம் தான் முக்கியம். அவளை அழவச்சிட்டு நான் சந்தோசமாவா இருக்கமுடியும்? என்றார்.
“ஆமா. பச்சப் பாப்பா, மடியில வச்சித் தாலாட்டுங்க. என் சொல்லை மட்டும் கேட்டுறாதீங்க” என்று செல்வி புலம்பினார்.
அதேநேரம் உள்ளே வந்த கலைவாணி, “அண்ணா வள்ளியும் வேலைக்குப் போறேன்னு பிடிவாதமா இருக்கிறா. இப்ப என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. கல்யாணம் பேசினா வீட்டைவிட்டு வெளியே போயிருவேன்னு மிரட்டுறா” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார் கலைவாணி.
“வேதா அப்பா, என்னமா சொல்றாங்க?”
“அவங்களுக்கும் என்ன பண்றதுன்னு தெரியலண்ணா. குழப்பத்துல இருக்காங்க. இந்தப் பொண்ணு பண்ற கூத்துக்கு ஏற்ற மாதிரிதான் நாமளும் நடந்துக்க வேண்டியிருக்கு. வயசு ஏறிட்டுப் போகுதேன்னு, கொஞ்சமாவது வயசுக்கேத்த புத்தி இருக்கா. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் போச்சிதுன்னா மாப்பிள்ளை கிடைக்கிறதே கஷ்டம் கேசவன் அண்ணா. சொன்னா புரிஞ்சிக்கமாட்டேன்னுறா.”
தோழியின் முடிவில் சந்தோஷமடைந்தாலும், அவளின் அம்மாவின் பரிதவிப்பைப் பார்த்தவளால் சுயநலமாக யோசிக்க முடியவில்லை. தன்னால்தானே என்ற கோவம் தன் மேலேயே வந்தது. ‘சும்மா வீட்டுல உள்ளவங்க பேச்சைக் கேட்டு, அமைதியா இருந்த பெண்ணை, என் நட்பை காரணம் காட்டி அலைக்கழிச்சிட்டேனோ? நான் ஏன் இவ்வளவு சுயநலமா இருந்துட்டேன்?’ என்று ஒரு நிமிடம் யோசித்தவள் தோழியின் தாயிடம் திரும்பி, “நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன். நீங்க அவ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றாள்.
“உன்னால முடியுமா ஆரா?”
“முயற்சிதான் பண்ணிப் பார்க்கிறேனே. நீங்க இங்கேயே இருங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வர்றேன்” என்று சொல்லியபடியே தோழியைத் தேடிச் சென்றாள். வீட்டில் சோகத்தில் மூழ்கியிருந்த வேதவல்லியின் அருகில் சென்று அமர்ந்தவள்,
“ஏன்டி இப்படிப் பண்ற? நான்தான் உன்னை வீட்டுல சொல்றதைக் கேட்டு நடந்துக்கன்னு சொன்னேனா இல்லையா? அப்புறமும் என்னடி இதெல்லாம்? நான் வேலைக்குப் போறேன்னு சொன்னேன்னா, அதுல ஒரு காரணம் இருக்கு. நீ ஏன்மா என்கூட சேர்ந்து கஷ்டப்படணும்? உனக்குத் தலையெழுத்தா என்ன? உங்கம்மா உன்னோட ஃப்யூச்சர் பத்தி ரொம்ப கவலைப்படுறாங்க. ப்ளீஸ் வேதா ஒத்துக்கோ. பெத்தவங்க மனசைக் கஷ்டப்படுத்தாதே” என்றாள் கவலையுடன்.
“ஏன் நீ கஷ்டப்படுத்தல? நான் படுத்தினா பெருசா தெரியுதா? சரி. உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். இந்த ட்ரெயினிங் முடிய ஆறு மாசமாகும்தான? அதுக்குள்ள சென்னையிலேயே எனக்கொரு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லு. நான் மறுக்கமாட்டேன். இந்த ஐடியாவுக்கு சரின்னா எனக்கும் ஓகே. என் சார்பா நீயே போயி சொல்லிரு” என்று அனுப்பினாள்.
வீட்டில் அனைவரிடமும் வேதவல்லி சொன்னதைச் சொல்ல, அவர்களுக்குமே அந்த பதிலில் ஒரு திருப்தி இருந்தது.
“இதே மாதிரி உனக்கும் அங்கேயே பார்க்கலாமாடா? என்ற தகப்பனை முறைத்து, “அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. தோணும் போது சொல்றேன்.”
“உனக்கு எப்பதான் தோணும் சொல்லு. நாங்க காத்திருக்கோம்” என கோவமாகக் கத்திய தாயிடம் வந்த கீர்த்தனா,
“அம்மா! அவதான் சொல்றால்ல கொஞ்ச நாள் போயிட்டுத் தான் வரட்டுமே. நீங்க நிதானமா மாப்பிள்ளை பாருங்க. அவ அழகுக்கு, மாப்பிள்ளை நீ நான்னு போட்டி போட்டுட்டு வருவாங்கம்மா. விடுங்கம்மா அவ ஆசைப்பட்டதும் தான் நடக்கட்டுமே” என்றவள் சகோதரியிடம் திரும்பி. “பாரு உனக்காக எவ்வளவு பேசுறேன். கொஞ்சம் தண்ணியாவது தர்றியா? அப்படியே வாய் பார்த்துட்டு நிற்கிற?” என்றதும்,
ஓடி வந்து தங்கையைக் கட்டிக் கொண்டாள் ஆராதனா. “தேங்க்ஸ்டி. நான் உன்னோட சப்போர்ட் எதிர்பார்க்கலை” என்றாள் கலங்கிய குரலில்.
“தேங்க்ஸ்லாம் வேண்டாம். என்னோட பேரைக் காப்பாத்து போதும்” என்றாள் சகோதரியின் கண்ணீர் துடைத்து.
“அது சரிம்மா தெரியாத இடம் எங்க தங்குவீங்க? பொண்ணுங்களை பாதுகாப்பான ஒரு இடத்துல தங்க வைக்கணும். என்ன பண்ணலாம்” என்று யோசித்துக் கொண்டிருந்த கேசவன் மனதில், பால்ய சிநேகிதன் ஒருவன் நினைவு வர, அந்த நிமிடமே தொலைபேசியை எடுத்து நண்பன் மணியிடம் பேசி, பெண்களின் வேலை விவரம் சொல்லி, தங்க இடம் கேட்டார் கேசவன்.
“என் வீட்டுல பையன் இல்லாம இருந்திருந்தா, பொண்ணுங்களை என் வீட்டுலேயே தங்க வச்சிருப்பேன்டா” சரி எந்த இடத்தில் வேலை?” என்று வேலை விபரத்தையும் கேட்டார்.
“தாம்பரம் பக்கத்துல இருக்கு.”
சற்று யோசித்த மணி, “தாம்பரம் தாண்டின்னா, ஹான்! அங்க ஒரு லேடீஸ் ஹாஸ்டல் இருக்குடா. ஹாஸ்டல் பெயர் தனலக்ஷ்மி லேடீஸ் ஹாஸ்டல். அங்க தாராளமா தங்க வைக்கலாம். மதுரைக்காரவங்க. நல்லா பாசமா பார்த்துக்குவாங்க. எல்லா ஹாஸ்டல்லயும் ரூல்ஸ் இருக்கும். ஆனா, இங்க கொஞ்சம் கன்டிஷன் அதிகமா இருக்கும். நம்ம பொண்ணுங்க அதை பாலோ பண்ணினா போதும்” என்றார்.
பெயரைக் கேட்டதுமே கேசவன் மனதில் சந்தோஷப் பூ பூத்தது. “மணி நாலு நாளைக்குள்ள வேலையில் சேரணும். நான் இரண்டு நாளைக்குள்ள வர்றேன். கொஞ்சம் பிள்ளைகளுக்கு வேலைக்குப் போற இடத்துல இருந்து, ஹாஸ்டல் வரை உள்ள தொலைவு முதல்ல பழக்கப்படுத்தணும்” என்றவர் மணியிடம் முகவரி வாங்கி, போனை வைத்துத் திரும்பி அனைவரிடமும் விஷயத்தைச் சொல்ல, பெரியவர்களுக்கு கொஞ்சம் திருப்தியானது.
பெற்றவர்களின் ஆயிரத்தெட்டு அறிவுரைகளையும் வாங்கிக் கொண்டு, இனிதே சென்னையை வந்தடைந்து மகளிர் விடுதியிலும் சேர்ந்தார்கள்.
விடுதி நடத்துனர் ‘ராணி கணேஷ்’ நாற்பத்திரெண்டு வயதிலிருக்கும் பெண்மணி. நல்ல களையான முகம். எதிரில் இருப்பவர்கள் என்ன விதமான மனிதர்கள் என்பதை, முதல் பார்வையிலேயே தரம் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர். அவரின் பார்வையில் ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், சிறிதும் யோசிக்காமல் இடம் காலி இல்லை என்ற வாசகத்தைப் படித்து திருப்பி அனுப்பிவிடுவார்.
ஆராதனாவையும், வேதவல்லியையும் அவருக்கு ரொம்பவே பிடித்தது. ஆராதனாவைப் பார்க்கும் போது மட்டும் நெருங்கிப் பார்த்துப் பழகிய முகமாகத் தோன்றியது. இரண்டு நிமிடப் பேச்சில் பெண்களை அளவெடுத்தவர், இருவரும் எல்லா விஷயத்திலும் உஷாராகத் தோன்ற உடனே அனுமதித்தார்.
விடுதியில் இருவருக்கும் ஒரே அறை தயார் செய்துக் கொடுத்து, பெண்களைப் பற்றிய பயம் வேண்டாம் என்று ராணி சொன்ன நம்பிக்கையும், பெற்றவர்களை தைரியமாக, நிம்மதியாக அங்கிருந்து செல்ல வைத்தது.
சென்னை:
வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த சரண், சிக்னலில் நிற்கும் போதுதான் பார்த்தான், ஏதோ தெரிந்த முகமாக இருக்கிறதே என்று. நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், ஒரு பெண்ணிடம் சிரித்துப் பேசியதைப் பார்த்தவன் கண்ணில் சிறு பளிச்சிடலுடன், “மாட்டிக்கிட்டீங்களே மாமா” என்று சிரித்துக் கொண்டே காரை எடுத்தான்.
அப்பா, தங்கையுடன் வீட்டிற்கு வந்து, சமையல் முடித்து சாப்பிட்டு அனைவரும் படுக்கச் செல்ல, தன் அறைக்குச் சென்ற சரண், தன் தாயிடம் அன்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து பின் உறங்கினான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவன், கதவு தட்டும் ஓசையில் எழுந்து, தூக்கத்திலேயே கதவு திறக்க, சரியாக இரவு பனிரெண்டு மணி அலாரம் அடித்தது.
“ஹேப்பி பர்த்டே டூ யூ. ஹேப்பி பர்த்டே டூ யூ. ஹேப்பி பர்த்டே டூ யூ” என்று கோரஸ் குரல்களுடன் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல, ஒரு நிமிடம் சந்தோஷத்தில் வாயடைத்துப் போனான். வருடா வருடம் இதைப் போலவே கொண்டாடினாலும், தனக்கேத் தனக்கான இந்த நாளில், தன் குடும்பம் முழுவதும் வந்து வாழ்த்தும் நாள் அல்லவா இது. தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமா என்று அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினான்.
“அண்ணா என்னை மட்டும் ஏன் விட்டுட்ட? என் கால்லயும் விழு.”
“குட்டிமா விழுந்திருவேன். உன் அண்ணன், உன் கால்ல விழுந்தா உனக்குத்தான அசிங்கம். பரவாயில்லைன்னா சொல்லு. நான் விழுறேன்” என்றான்.
“ஹையோ! அண்ணா! சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னா, ரொம்ப சீன் போடுற. போதும், முதல்ல கேக் வெட்டு. வா வா வா” என்றாள்.
கேக் வெட்டி தந்தைக்கும், தங்கைக்கும் ஊட்டியவன், மற்றவர்களுக்கும் கொடுக்க, அனைவரும் வாழ்த்துச் சொல்லி தங்களின் பரிசுகளைக் கொடுத்தார்கள்.
என்றாவது ஒரு நாள் கூடுவதால், இரவே அவர்களின் கச்சேரி வரவேற்பறையில் ஆரம்பித்தது.
தாத்தா, பாட்டி கலகலப்பான பேர்வழியாக இருந்தாலும், பெரிய அத்தை ராஜி, வெற்றியை விட பத்து வயதுப் பெரியவர். சின்ன வயதிலேயே கணவர் இறந்தும், தம்பியின் உதவியை நாடாமல், கணவர் ஆரம்பித்த சிறு குடிசைத் தொழிலை, அவரின் நினைவாக நடத்தி, இன்று ஒரு இருபது பெண்களை வைத்து தன் தொழிலை நடத்தி வரும் ஒரு குட்டித் தொழிலதிபர். தாயையும், தந்தையையும், தன் கூடவே தன் துணையாக வைத்துக் கொண்டதால், தொழிலின் காரணமாக போக்குவரத்து கம்மியானது.
ராஜியின் மேல் சின்னவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். அதனால், அவர்கள் மரியாதை நிமித்தம் கலகலப்பாகப் பேச மாட்டார்கள்.
ஆனால், சின்ன அத்தையிடம் அப்படியில்லை. பெயரைச் சொல்லி கிண்டலடிக்கும் அளவு கலகலப்பானவர்கள்.
“அத்தை உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று ஆரம்பித்தான் சரண்.