- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
19
வேதவல்லிக்கு திருமணம் முடிந்த இந்த பத்து மாத இடைவெளியில் ஆராவைப் பற்றி வெற்றிவேல் முழுவதும் தெரிந்து கொண்டார். சரண், ஆராதனா கல்யாண விஷயங்கள் தவிர.
கீர்த்தனா படிப்பு முடிந்து, அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அபிநயாவிற்கு அபிஷேக் அவளின் வாழ்வில் மிக முக்கியமானவனாகிப் போனான். அவளின் தைரியம், தன்னம்பிக்கை எல்லாமே அவன் மட்டும் தான். அந்த அளவிற்கு அவளை தயார் செய்திருந்தான். அவளுக்கு அவன் முக்கியமானால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடியும் என்பதே காரணம்.
சரண், ஆராதனாவிற்கு இன்னும் நான்கு நாளைக்குள் முதல் திருமண நாள். மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக யாரும் அறியாமல் அவளின் மேஜையில் கடிதமும், பூவும் வைத்துச் சென்றான். அவன் வைத்துச் சென்றதை அப்பொழுது உள்ளே நுழைந்த சக்தி பார்க்க, டேபிள் மாற்றி வச்சிட்டானா?’ என்று நினைத்தவள், அதை எடுத்துப் பார்த்து படித்தாள்.
உனைக் கண்ட முதல் தருணம்,
ஆயிரம் கோடி தேவர்களும்,
அட்சதை போட்டு வாழ்த்தினரோ
எனக்கான தேவதை நீயென்று!
என் உடலும் மனமும்
உனைச்சுற்றியே வட்டமிட
உன் சுட்டு விழிப்பார்வைதனில்
எனையேத் தொலைத்தேனடி.
என் நேசமிகு நெஞ்சுக்குள்
நெருங்கியவளாய் நீயிருக்க,
உன் ஒற்றைப் புருவந்தூக்கி
எனை நெருங்கவிடாமல்
கொல்வதேனோ?
உன்னிடத்தில் எனைத் தேடி தேடியே,
நின் நிழலாக அலைகிறேனடி!
உன் தெற்றுப்பல் சிரிப்பழகில்
சிக்கிச் சிதறும் எனை
மீட்பாயா தேவதையே!
என்றென்றும்
உனக்கே மட்டுமானவன்.
கவிதையைப் படித்து முடித்தவள், அதே இடத்தில் வைத்துவிட்டு தன்னிடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு, மனமெல்லாம் குழப்பங்கள் சூழ்ந்தது. ‘எப்படி? எப்படி சாத்தியம்? எல்லாரையும் அக்கா, தங்கைன்னு கூப்பிடுறவர் ஒரே நேரத்துல ரெண்டு பொண்ணுங்க லைஃப்ல விளையாடுவாரா? இல்ல இருக்காது. வேற யாருக்காகவாவது வந்து வச்சிருப்பார்’ என்று தனக்குச் சாதகமானதாக நினைத்தாள்.
ஆராதனா வந்தமர்ந்ததும் காகிதத்தைப் பார்த்து கையில் எடுத்தவள், ‘யார்டா நமக்கு லெட்டர் வச்சது?’ என நினைத்து, பின்னால் திருப்பிப் பார்த்தாள். ‘அன்பு மனைவிக்கு அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துகள்’ என்றிருந்தது. பின், கவிதையைப் படித்தவள் முகத்தில் புன்னகை பெரிதாக, “கவிதை எல்லாம் வருமா மச்சான் உங்களுக்கு. பரவாயில்லையே நம்மாளும் ரொமான்ஸ் ஹீரோ தான்.”
ஆராதனாவின் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு, குழப்பம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஆனால், சரண் மேல் அவள் வைத்திருந்த மதிப்பு குறைய ஆரம்பித்தது.
அபிஷேக் அபிநயாவிற்கான கடைசிகட்ட சிகிச்சைக்கான ஆலோசனையில் அவனின் அப்பா ஈஸ்வர், சரண், ராஜா இவர்களின் கூட்டணியில், இடம், நேரம், மருத்துவ ஊர்தி, உடனடி மருத்துவர், காவல்துறை பாதுகாப்பு என அத்தனை தயார் செய்தார்கள்.
சரணுக்கு தங்கையின் உயிருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற பயம். “ஒண்ணும் ஆகாதுடா” என்று சொன்ன அபிஷேக் தனக்குமே சேர்த்து சொல்லிக் கொண்டான். வேறு விதமான பின் விளைவுகளும் வந்துவிடக் கூடாதென்று கடவுளை வேண்டினார்கள்.
சரண், ஆராதனாவுக்கு அழைத்து விஷயம் சொல்ல, அந்த நிமிடத்தில் இருந்து கடவுளிடம் தஞ்சமடைய ஆரம்பித்தாள்.
அனைவரின் திட்டப்படி ஞாயிறு மாலை நான்கு மணியளவில் தங்கையிடம் வந்த சரண், “குட்டிமா பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவில் போகணும் கிளம்பி வா” என்றான்.
“என்னண்ணா திடீர்னு அவ்வளவு தூரம் தாண்டி?”
“இல்லமா. இன்னைக்கு காலையில் இருந்தே எனக்கு அம்மா நியாபகமா இருக்கு. தற்செயலா அங்க போயிட்டு வந்தா என்னன்னு தோணிச்சி. அதான் உன்னைக் கூப்பிடுறேன். இன்னைக்கு ஷாப் ஹாஃப் டேதான? நீயும் எங்கேயும் போறதில்லை. கிளம்புறியா?”
“இதோ ஒரு பதினைந்து நிமிஷம்ணா” என்றவள் பத்தே நிமிஷத்தில் கிளம்பி வந்து, “வாண்ணா போகலாம். ஆமா ராஜா வரலையா?” என்று தம்பியைக் கேட்டாள்.
“யாரு அவனா? எப்ப அசோக் வந்தானோ அதில் இருந்து என்னை டீல்ல விட்டுட்டான்மா. இப்பல்லாம் நான் தனியாதான் எங்கயும் போறேன்” என சோகமாக சொல்ல,
“அண்ணா போதும். ஓவரா பண்ணாத. அவனாவது உன்னை விட்டுட்டுப் போறதாவது. யாருகிட்ட கதையடிக்கிற? இதெல்லாம் நம்ப நான் குழந்தை இல்லை” என்றாள்.
“நிஜம்மா. இப்பக் கூட பாரு, நான் கேட்டதுக்கு நானும், மச்சானும் பெசன்ட் நகர் பீச் போறோம். யூ ஆர் டூ லேட் ப்ரதர். மீ ஆல்சோ என்கேஜ்ட்” சொல்றான்.
அண்ணனின் பேச்சில் சிரித்தவள், “சீக்கிரம் வாண்ணா போகலாம்” என்று கிளம்பி கோவில் வந்து, அம்மனை தரிசித்து விட்டு ஓரிடத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு வந்த ஆராதனாவைப் பார்த்தவன் முகம் அதிகபட்ச மின்சார ஒளியைப் பாய்ச்ச, அண்ணனின் பார்வை சென்ற இடத்தைக் கவனித்தவள் ஆராதனாவைப் பார்த்து “ஹாய்! இங்க... இங்க பாருங்க” என்று அழைத்தாள்.
பதிலுக்கு ஹாய் சொன்னவள் கணவனைக் கவனிக்காமல், அபிநயாவிடம் நலம் விசாரித்து சாமி கும்பிட்டு வருவதாகச் சொல்லிச் சென்று, சிறிது நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தவளைப் பார்த்த சரண், மனைவிக்கு கண்களால் சைகை செய்தான். ஆராதனா புரியாமல் விழிக்க, தங்கைக்குத் தெரியாமல் கன்னத்தைக் காண்பித்தான்.
அவள் கன்னத்தைத் தடவியபடி இவர்களை நெருங்க, ‘அடப்போடி. உனக்கு சைகையில சொல்றதுக்கு நானே பண்ணியிருக்கலாம்” என்றெண்ணி, “குட்டிமா இதோ வந்திடுறேன்” என்று செல்லும் போதே மனைவியின் கைபிடித்து ஆள் இல்லாத இடமாக கூப்பிட்டுப் போனான்.
“ஏய் ஜாடையில சொன்னா புரியாதா?”
“என்ன புரியாதா? சொல்ற விதமா சொன்னா புரிஞ்சிருக்கும். உங்களுக்குச் சொல்லத் தெரியலைன்னு சொல்லுங்க.”
“ம்... சொல்ற விதமாவா, இரு செஞ்சே காண்பிக்கிறேன்.” தன் கைக்குட்டை எடுத்து அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே, கன்னத்திலுள்ள குங்குமத்தைத் துடைக்க, கணவனின் பார்வை ஈர்ப்பில் கண்மூடி திறந்து மென்மையாகப் புன்னகைத்தாள்.
“ஸ்... சிரிக்காத சொல்லியிருக்கேன்ல?”
‘ஹா...ஹா...’ என சத்தமாகச் சிரித்தவள். “வாய்விட்டுச் சிரிச்சா தான இந்த டயலாக் வரும். இப்ப என்ன? உதட்டோரச் சிரிப்புக்கும் சிரிக்காதன்னு கமண்ட் வருது” என்றாள் கேலியாக.
அவர்களின் பேச்சின் நடுவில் குறுஞ்செய்தி வர எடுத்துப் பார்த்தவன், “தனு வா. எல்லாரும் ஸ்பாட்ல தான் இருக்காங்க” என்றான்.
“எல்லாம் நல்லபடியா முடியும்ங்க. எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சித் தருவாங்க இந்த அம்மன்” என்றாள் ஆறுதலாக.
முதலில் சரண் பின்னால் ஆராதனா வர, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அபிநயாவிற்கு அவளின் முகச்சிவப்பு சொன்ன சேதி திருப்தியாக, ‘எங்க அண்ணனுக்கு பெர்பெக்ட் மேட்ச். குட் செலக்ஷன் அண்ணா’ என்று மனதினுள் பாராட்டினாள்.
சிறிது நேரத்தில் ராஜாவிடம் இருந்து அழைப்பு வர, எடுத்த அபிநயாவிற்கு, ராஜாகிட்ட இருந்து எனக்கு போன் வருது. மெசேஜ் தான பண்ணுவான். இதென்ன புதுசா’ என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்க, “அண்ணா எங்கி இருக்கீங்க? சீக்கிரமா பெசன்ட் நகர் பீச் வாங்கண்ணா? இங்க ஒரு அசம்பாவிதம் நடக்குது. என்னால தடுக்க முடியலை. மச்சானுக்கு...” என்று முடிக்காமல் அழுதான்.
“ஏன் அண்ணா பதில் பேசாம இருக்க?” சில நொடி அமைதி தொடரவும், “அக்கா நீயா? சாரிக்கா. அண்ணன்னு நினைச்சி உனக்குப் போட்டுட்டேன். அண்ணன் பக்கத்துல இருந்தா கொடுக்கா” என்றதும் அண்ணனிடம் கைபேசியை நீட்டியவள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.
“என்னடா குட்டிமா?” என்றவனிடம், பேசுமாறு சொல்ல, பெயர் பார்த்து, “ராஜா என்னடா? ஏன் குட்டிமா அழறா?” என்றவனை தடுத்து சொல்ல வேண்டியதைச் சொல்லி வைக்க, சரணும் அதிர்ச்சியில் இருந்தான்.
“தனு நீ குட்டிமாவைக் கூப்பிட்டு அத்தைகிட்ட விட்டுரு. நான் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்” என்றான் தவிப்பான குரலில்.
அபிநயா ‘நானும் வருவேன்’ என்று அடம்பிடிக்க,
“குட்டிமா! உனக்கு தண்ணினா ஆகாது. உனக்கு எதுவும் ஆகிட்டா, நான் என்ன செய்வேன்? அங்க என்ன பிரச்சனைன்னு தெரியலை. நான் பார்த்துட்டு போன் பண்ணிச் சொல்றேன்.”
“இல்ல நானும் வர்றேன். என்னையும் கூப்பிட்டுப் போண்ணா. டைம் ஆகுது” என்று பரிதவித்தாள்.
“நீயும் வர்றியா தனு” என்று கேட்க, ‘சரி’ என தலையசைத்தவள், அபிநயாவின் கண்களைத் துடைத்து “ஒண்ணும் இல்லை அபி. பயப்படாம வா” என்றாள்.
அவர்கள் கார் இலகுவாக எடுக்குமிடத்தில் இருக்க, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை நான்கு நிமிடங்களில் கடந்து, கடற்கரையை அடைய, அவசர அவசரமாக இறங்கி நடக்க ஆரம்பித்தவள், கடல் தண்ணீரைப் பார்த்ததும் கால்கள் அசையாமல் அதே இடத்திலேயே நின்றாள். அவளுக்கு ஆகாத, அவளின் தாயின் உயிர் வாங்கிய தண்ணீர். அவளை மேலே முன்னேற விடாமல் தடுத்தது.
சரண் தங்கையின் அருகில் வந்து, “எதோ கூட்டமா தெரியுதுடா. வா போகலாம்” என்று கூப்பிட, தன் தயக்கத்தையெல்லாம் விட்டு அவளின் அபியைத் தேடி ஓடினாள். அங்கு அவள் கண்ட காட்சி, அவள் உயிரையே பிழிந்தெடுக்கும் காட்சி.
அவளருகில் வந்த ராஜா ஆறு ஏழு வயது உள்ளக் குழந்தையைக் காண்பித்து, “அக்கா அந்தக் குழந்தையை தண்ணீர் இழுத்துட்டுப் போயிருச்சி. பக்கத்துல யாரும் இல்லாததால மச்சான் காப்பாத்தப் போனாங்க. காப்பாத்தவும் செஞ்சிட்டாங்க. அங்க சுழல் மாதிரி ஏதோ ஒண்ணு இருக்கு. யாரும் பக்கத்துல வராதீங்கன்னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு மூழ்கிடக் கூடாதுன்னு கழுத்திலேயே உட்கார வச்சிட்டாங்க.”
அவன் சொன்னதை காதில் வாங்கினாளா தெரியாது. அபிநயா அபிஷேக்கைப் பார்த்தாள். “அபி.. அபி வா” என்று வாய் திறந்து கத்தினாள். ஆனால், சத்தம் வரவில்லை. சுற்றுப்புறம் மறந்து கத்தினாள். தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்முன், தாயின் முகம் தோன்றியது.
தன் கண்முன் உயிர் பிரிந்த தாயின் முகம் தெரிய, “அபி... அபி” என அரற்றிக் கொண்டிருந்தவள், “அம்மா... அம்மா” என்று முனக ஆரம்பித்தாள். அவள் கண்களிலிருந்து அபிஷேக் சுத்தமாக மறைந்தான். அவன் கண்களைப் பார்த்தவளுக்கு கடைசியாகத் தாயின் உயிர் பிரிந்த அந்தக் கண்கள் நினைவு வர, “அம்மா அம்மாஆஆ” என்று தண்ணீருக்குள் ஓடியவளை சரணும், ராஜாவும் பிடிக்க, “என்னை விடுங்க. நான் அம்மாகிட்ட போகணும்” என்று மெல்லிய குரலில், ஆம் குரல் மெல்லிதாக வந்தது. “என்னை விடுங்க. அம்மா இதோ வர்றேன்ம்மா. அம்மாஆஆஆ...” என்றலறியபடி மயங்கிச் சரிந்தாள்.