• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
வணக்கம் நட்புகளே

கண்ணில் ஒளி வீசுதடி

என்னோட ஐந்தாவது நாவல். உங்களுக்காக ரீரன் போடுறேன். படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
IMG-20240914-WA0002.jpg
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
ஓம் சரவண பவ



சொர்ணா சந்தனகுமார்



கண்ணில் ஒளி வீசுதடி



1



அழகென்ற சொல்லுக்கு முருகா!

உந்தன் அருளின்றி உலகிலே

பொருளேது முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா!

சுடராக வந்த வேல்முருகா!

கொடும் சூரரை போரிலே

வென்ற வேல்முருகா!

கனிக்காக மனம் நொந்த முருகா!

முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா!

காலை வேளையில் சென்னையிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த சிகப்பு நிற ஸ்கார்பியோவில் கண்மூடி அமர்ந்து டி.எம் சௌந்தர்ராஜனின் கணீர் குரலில் அழகன் முருகனின் பாடலைக் கேட்டு ரசித்தபடியே வந்தாள், “சுபஸ்ரீதேவி.”

மெல்ல கண்விழித்து தன்னருகில் இறுகிய முகத்துடன் ரோட்டை வெறித்தபடி கார் ஓட்டிக் கொண்டிருக்கும் தன் வருங்காலக் கணவனாகப் போகும் ஆனந்தை பார்த்தாள். ‘பாடலுக்கு ஏற்றார்போல் அழகாகத்தான் இருக்கிறான்’ என்றே மனதில் தோன்றியது.

அவன் அழகாக இருக்கிறான் என நினைத்தவளால், ஏனோ அவனை காதலாகப் பார்க்கவோ, மனதில் நிறைக்கவோ தோன்றவில்லை. ‘ஒரு வேளை அரேஞ்ச் மேரேஜ் என்பதால் பார்த்தவுடன் பிடிக்காமல், பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்குமோ?’ நினைத்த நிமிடம் அவள் அடித்த கௌண்ட்டில் அவளுக்கே உள்ளூர சிரிப்பு கிளம்பியது. அதை அவன் கண்டுவிடக்கூடாது என்பதற்காக வெளியே வேடிக்கை பார்த்தபடி மறைத்தாள். முதல்முறையாக அவனுடன் வெளியே வருகிறாள். வருகிறாள் என்பதை விட முதல்முறையாக அவன் முகத்தையே இப்பொழுது தான் தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாப்பிள்ளையுடன் தனியாக சென்று வர, பெற்றவர்கள் ஆயிரத்தெட்டு கண்டிசன்கள் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

கோவிலுக்கு அழைக்க வந்த ஆனந்திடம் வந்த சுபாவின் தந்தை வரதராஜன், “தம்பி! கோவிலுக்குப் போகணும்னு உங்கம்மா வந்து பர்மிசன் கேட்டதாலதான் என் பொண்ணை உங்களோட அனுப்புறேன். எங்களுக்கு இது பழக்கமில்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டிக்கப்போற பொண்ணோட வெளியே போறது, அது கோவிலுக்கே இருந்தாலும் சரி. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு, பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க. கோவிலுக்குப் போயிட்டு வேற எங்கேயும் போகக்கூடாது. நேரே வீட்டுக்குத்தான் வர்றீங்க” என்று இப்படிதான் இருக்க வேண்டும் என்பதாக அடித்துப் பேசி, “ஆமா எதுல போறீங்க?” என்றார்.

“என்னோட ஸ்கார்பியோல தான் மாமா.”

“சரி கோவிலுக்கு போனதும் போன் பண்ணுங்க” என்று அனுப்பி வைத்தார் வரதராஜன்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுபாவிடம், “என்ன சுபா முதல் தடவை என்னைப் பார்க்கிற மாதிரி பார்க்கிற?” என்று பேச்சை ஆரம்பித்தான் ஆனந்த்.

அவளுக்குத்தானே தெரியும் இன்றுதான் அவன் முகத்தை இவ்வளவு அருகிலும், முழுமையாகவும் பார்க்கிறாள் என்று. ஆண்களிடம் பேசக்கூடாது.. பழகக்கூடாது என சின்ன வயதிலிருந்தே தாய், தந்தை சொல்லிக்கொடுத்து வளர்த்ததை அட்சரம் பிசகாமல் கேட்டு வளர்ந்தவள் சுபஸ்ரீதேவி. அதை இன்றுவரை கடைபிடிக்கிறாள். பெற்றவர்கள் தனக்கு நல்லது மட்டுமே செய்வார்கள் என்பதால், அவளின் உலகம் எப்பொழுதும் அவள் குடும்பத்தைச் சுற்றியே இருக்கும்.

கட்டிக்கப் போகிறவன் என்ற முறையில் ஆனந்த் அழைத்த போதிலும், முதலில் மறுத்தவள் சுபா தான். ‘நான் கல்யாணத்துக்குப் பின்னாடி போய்க்கிறேன். இப்ப வேண்டாம்மா ப்ளீஸ்மா, அண்ணா இருந்தாலாவது அவனையும் கூட்டிட்டுப் போவேன். இப்படி முன்னப்பின்ன பழக்கமில்லாத ஆணோட போகமாட்டேன்’ என்று அடம்பிடித்தவளை...

‘அவர் உன்னைக் கட்டிக்கப்போற பையன்டா தேவி. நானே இதுக்கு சம்மதிக்க மாட்டேன்தான். ஆனா, அவங்க வீட்டுப் பெரியவங்க வந்து அதுவும் கோவிலுக்குன்னு கேட்கும் போது மறுக்க முடியல செல்லம். ப்ளீஸ் அம்மாவுக்காகடா. நல்ல பையன்தான் இருந்தாலும், மனசுல ஒரு கசப்பு வந்துட்டா, கல்யாணத்துக்குப் பிறகு தொட்டதெல்லாம் தப்பாகவே முடியும். இதுக்கு முன்னாடி அம்மா இப்படிச் சொல்லியிருக்கேனா போயிட்டு வாடா செல்லம்’ என்று மகளை சம்மதிக்க வைத்தவர், மகளின் கைபிடித்து நிறுத்தி,

‘என்னதான் உறவாகப்போகிறவர்னு இருந்தாலும், நீ கொஞ்சம் விலகியே இருக்கணும் பாப்பா. எப்ப எது நடக்கும்னு தெரியாது. நிரந்தரமில்லாத வாழ்க்கைட. நாமதான் கண்ட்ரோலா இருந்துக்கணும்’ என்று பொறுப்பான தாயாய் சொல்லி அனுப்பினார் சண்முகசுந்தரி.

‘எனக்கு ஒரு மாதிரி இருக்குமா. நான் வீட்லயே இருக்கேனே. அப்பா நீங்களாவது சொல்லக்கூடாதா?’ என தந்தையை சப்போர்ட்கு அழைத்தாள்.

‘எனக்குமே வேற வழி தெரியல பாப்பா?’

‘நீங்க யாராவது என்னோட வரலாம்லபா?’

‘அடுத்த வாரம் கல்யாணம் வச்சிக்கிட்டு நாங்க ஊரைச் சுத்திக்கிட்டிருந்தா வேலைக்காகுமா பாப்பா. நீ போயிட்டு வா’ என்றதும் தரையை உதைத்து, தன் விருப்பமின்மையைக் காட்டிவிட்டு அறைக்குள் சென்றாள்.

“என்ன யோசனை சுபா? கேட்ட கேள்விக்கு பதில் வரல? இன்னைக்குள்ள வந்திருமா?” கேலியாக கேட்ட ஆனந்திற்கு,

மெல்லிய புன்னகையை வெளியிட்டு, “இல்ல நான் பர்ஸ்ட் டைம் உங்களோட, உங்களோடன்றதை விட வெளி ஆ(ள்)ண் ஒருத்தரோட வரேன். அதான் யோசனை” என்று மனதிலுள்ளதை மறைக்காமல் சொன்னாள்.

“என்னது வெளி ஆணா? நான் உன்னைக் கட்டிக்கப்போறவன் சுபா. என்னை எப்படி வெளி ஆள்னு சொல்லலாம்?” என்றான் கோவமாக.

“அ...அது கல்யாணம் முடியுறது வரை நீங்க...” என்று முடிக்காமல் வார்த்தைகளை மென்று விழுங்கியபடி, “சாரி” என்றாள்.

அவள் விழுங்கிய வார்த்தைகள் முகத்திலறைய, ஆனந்திற்கு சட்டென்று முகத்தில் கடுமை ஏறி கார் பறந்தது.

“ஹையோ! ஏன் இந்த ஸ்பீடு போறீங்க? ப்ளீஸ் கம்மி பண்ணுங்க” என்று அவள் சொல்லச் சொல்ல கேட்கவில்லை ஆனந்த்.

“உனக்கு நான் வெளி ஆளா?” என்பதிலேயே இருந்தான். முறைப்படி சுபஸ்ரீதேவியின் புகைப்படம் தெரிந்தவர் மூலமாகத்தான் வந்தது.

தாய் புகைப்படம் கையில் கொடுத்து, “பிடிச்சிருக்கா சொல்லுடா? மேற்கொண்டு பேசலாம்” என்று சொன்னார்.

போட்டோவைப் பார்த்தவன் கண்கள் அதைவிட்டு நகருவேனா என்றது. நொடி கூட தாமதிக்காமல், “இந்தப் பொண்ணு ஓகேம்மா” என்றான்.

இவர்களை விட பெண் வீட்டார் வசதியாக இருந்ததால், முதலில் யோசித்தவர் பின், அவர்கள் கொடுக்காமல் பெண்ணின் புகைப்படம் நமக்கு எப்படி வருமென்று துணிந்து மகனுக்காக பெண் கேட்டார்.

வரதராஜனுக்கு, ‘பையன் பெங்களுரில் வேலை பார்க்கிறான். பார்க்க முகலட்சணமாக இருக்கிறான். விசாரித்த வரையில் நல்ல குணம்’ என்று கேள்விப்பட்டிருந்தார். தங்களின் அளவிற்கு வசதியில்லையென்றாலும், வசதி கம்மியானவர்களும் இல்லை. மத்திய சென்னையிலும் சொந்த வீடு இருக்கிறது. அந்த இடத்தில் வீடு இருப்பவர்கள் இப்போதைய நிலைக்கு கோடீஸ்வரனே!

பெண்பார்க்க வருவதாக சொல்லாமல் பையன் வீட்டினர் திடீரென வர, அதே நாள் தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு அண்ணன் ப்ரேமுடன் சென்றுவிட்டிருந்தாள் சுபா.

மறுமுறை நிச்சயதார்த்தத்தின் போதும் சுபாவின் குனிந்த தலை நிமிரவில்லை. ஆனந்திற்கு ‘இவளுக்கு நம்மைப் பிடிக்கவில்லையோ?’ என்ற சந்தேகம் வந்தது. அதெல்லாம் சுபா அடுத்து தோழியுடன் பேசிய வார்த்தையில் காணாமல் போய் மனம் நிம்மதியானது.

சுபாவினருகில் வந்த அவளின் தோழி அகிலா, “ஏய் லூசு! நீ மாப்பிள்ளைப் பையன் முகத்தைப் பார்த்தியா? இல்லையா?” என்று கேட்க,

இல்லையென்று தலையசைத்த சுபா, பின் குறும்புடன் “யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்ட அகி? அதுவும் என்னைப் பார்த்து? கல்யாணத்துக்கு முன்னாடி, அந்த தப்பைப் பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியாதா என்ன?”

“நெனைச்சேன் நீ இப்படித்தான் பண்ணுவேன்னு. பாருடி மாப்பிள்ளை, உன் கடைக்கண் பார்வைக்காக உன்னையே பார்த்திட்டிருக்காரு. நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்காம, நீ தலையைக் குனிஞ்சி தரையில புதையல் தேடிட்டிருக்க? நீயெல்லாம் அறுபதுகளில் பிறக்க வேண்டிய கேஸ்டி. தப்பிப்போய் தொண்ணூறுல பிறந்திட்ட” என சோகமாய் முகத்தை வைத்தபடி சொன்னாள்.

அகிலாவின் அங்கலாய்ப்பில் சிரித்தவள், “போடி நல்ல பொண்ணா வளர்றது ஒண்ணும் தப்பில்ல. எனக்கு இதான் பிடிச்சிருக்கு. அதே டைம் அப்பா, அம்மாவிற்கும் பிடிச்சிருக்கு. கல்யாணத்திற்குப் பிறகு ஃபுல் அன்ட் ஃபுல் ஹஸ்பண்டோட தான இருக்கப்போறேன். வாழ்நாள் முழுக்க அவங்க முகத்தையே பார்த்திட்டிருக்கேன் போதுமா” என்றவள் தோழியிடம், “அம்மா அடிக்கடி சொல்வாங்க அகி. தாலி கழுத்துல ஏறுறதுவரை எதுவும் நிரந்தரமில்லைமா. நாம எப்பவும் நிதானமா இருக்கணும்னு. நிறைய நியூஸ் பார்த்திருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன். எத்தனை கல்யாணம் மணமேடை வரை வந்து கூட நின்றிருக்கு தெரியுமா? மனசுல ஆசையை வளர்த்து எதாவது அசம்பாவிதம் நடந்து அவஸ்தைபடுறதைவிட, ஆசையை வளர்த்துக்காம இருக்கலாம்.”

“ஸோ, கல்யாணத்துக்குப் பிறகு என் ஹஸ்பண்டை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்கும் தெரியும். நீ தேவையில்லாம யோசிச்சி உன் மூளையை பாய்ல் பண்ணாத. பாவம் உனக்கிருக்கிறதே இத்துனூண்டு” என்று கேலி செய்ய...

தோழியை செல்லமாக அடித்து, “ஏதோ கல்யாணப் பொண்ணுன்றதால உன்னை விடுறேன். இல்ல?”

“இல்லன்னா என்னடி பண்ணுவ?”

“ம்... என்ன பண்ணுவேனா! இருடி டெமோ காண்பிக்கிறேன்” என்று சுபாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அகிலா.

“ச்சீ... லூசு எல்லாருக்கும் முன்னாடி” என்று கன்னத்தைத் துடைத்தவள் முகச்சிவப்பை பார்த்த ஆனந்த் மயங்கித்தான் போனான். அத்துடன் அவனின் சந்தேகமும் தீர்ந்தது. ஷப்பா... வேற எதுவும் ப்ராப்ளம் இல்ல. கொஞ்சம் ஓல்ட் டைப். அதுக்காக முகம் கூடவா பார்க்கக்கூடாது.’

திருமணத்திற்கு முன் சுபாவுடன் தனியாக சந்திக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைக்குமா? என்று நினைத்த ஆனந்திற்கு கிடைக்காது என்றே தோன்றியது. ‘ம்கூம்... இது வேலைக்காகாது’ என்று தாயிடம் சென்று அவரைப் பேசிப்பேசியே கரைத்து, சம்பந்திகளிடமும் பேசவைத்து தனியே செல்ல ஒரு வழியாக அனுமதி வாங்கினான். மகனிடமும் சம்மதம் கேட்ட பின்னரே அனுமதியளித்தார் வரதராஜன்.

சுபாவைத் தன்னுடன் அனுப்புவதற்கு அவர் கொடுத்த ஆயிரத்தெட்டு அறிவுரையில் காதில் ரெத்தம் வராத குறைதான். ‘கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படின்னா.. கல்யாணத்துக்குப் பிறகு’ என விழித்தான்.

அவனுக்குத் தெரியவில்லை? திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளைகளை மாமனார் என்றும் எதிர்த்துப் பேசியதில்லை. மாறாக, இன்னும் மதிப்புடன் நடத்துவார்கள் என்று.

“மாமா நான் பத்திரமா கூட்டிட்டு வர்றேன்” என்றே அழைத்துச் சென்றான் தன் சொல்லை காப்பாற்ற முடியாமல் போகப்போவதை அறியாமல் போனானோ!

ஒரு வழியாக அனைவரும் சம்மதித்து, சுபாவைப் பார்த்தவன் கண்களைத் திருப்ப முடியாமல், அவளையே பார்த்துக்கொண்டு “போகலாமா?” என்றழைத்தான்.

சம்மதமாகத் தலையசைத்து, பின் சீட்டில் வந்தமர ஆனந்தின் முகம் ப்யூஸ் போன பல்பானது. ‘அடிப்பாவி, உனக்காக என்னென்ன காரணமெல்லாம் கண்டுபிடிச்சி, எல்லாரோட கால்ல, கையிலயும் விழாத குறையா கேட்டு உன்னைத் தனியா கூட்டிட்டுப் போறேன், இப்படிப் பின்னாடி போய் உட்கார்றாளே. உனக்குத் தேவைதான்டா ஆனந்த்’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
தாம்பரம் தாண்டி சிங்கபெருமாள்கோவில் வரும் வரை பொறுமையாக இருந்தவனால், அதற்குமேல் பொறுக்க முடியாமல் ஏரியா தாண்டி வண்டியை ஓரமாக நிறுத்தி சுபாவை முன்னே அழைத்தான்.

“இல்ல வேண்டாம் நான் பின்னாடியே இருக்கிறேன். முன்னாடி வரமாட்டேன்” சுபா மறுக்க, டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி வந்து “முன்னாடி வா சுபா. ஏன் விலகி விலகிப்போற சுபா? இன்னும் ஒரு வாரத்துல நமக்கு கல்யாணம். அதுக்கு முன்னாடி உன்கிட்ட தப்பா நடந்துக்கிற ஐடியால்லாம் எனக்கில்லைமா” என்றான் சிரித்தபடி.

ஆனந்தின் பேச்சில் முதலில் அரண்டவள், அவன் சிரிப்பைக் கண்டதும் தன்னைக் கேலி செய்கிறான் என நினைத்து மனம் கொஞ்சம் சமன்பட, “தப்பா நடந்துக்குற ஐடியா இல்லாம இருக்கிறது தான் உங்களுக்கும் நல்லது. எனக்கு இதே கம்பர்டபிளா இருக்கு. நீங்க போய் காரை எடுங்க” என்றாள்.

“எம்சிஏ படிச்ச பொண்ணு மாதிரியா பிஹேவ் பண்ற? ஏதோ பட்டிக்காடு மாதிரி..” சட்டென்று குரலை உயர்த்தி கத்தியவன், நிறுத்தி, “இப்ப நீ முன்னாடி வரல உன் கையைப் பிடிச்சி இழுத்து முன்னாடி உட்கார வைப்பேன். இல்லன்னா? நீ வர்றதுவரை உன்னோட நானும் பின்னாடியே உட்கார்றேன் எப்படி வசதி?” கதவைத் திறக்க ரெடியானான்.

பயத்தில் காரின் மறுபுறம் ஒதுங்கியவள், “இல்ல வேண்டாம்? நா...நானே வர்றேன். நீங்க என்னைத் தொடக்கூடாது. ஓகே” என்றாள்.

“வேற வழி” என்று பெருமூச்செறிந்து ‘ரொம்ப கஷ்டம்டா ஆனந்த். இவளோட கடைசி வரைக்கும் இப்படியேவா வாழ்க்கை ஓடப்போகுது’ என தனக்குள்ளேயே முனகி முன்பக்க கதவைத் திறந்துவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

இருவரும் அமர்ந்ததும் வண்டி வேகமெடுக்கையில், அவனிடம் ஒட்டிவிடக் கூடாதென்று சீட்பெல்ட் போட்டு கவனமாக கதவோரத்தில் ஒண்டிக் கொண்டாள். அதைக் கவனித்தவன், ‘அப்படி என்ன அவளை ரேப்பா பண்ணிடப் போறேன். இப்படி கதவோரத்தில் ஒண்டிட்டு இருக்கா.’ அவள் பேசமாட்டாள் என்று தெரிந்து அந்தக் காலை வேளையில் பாப் மியூசிக் போட்டவன் விரல்கள் தாளமிட ஆரம்பித்தது.

பாப் மியூசிக்கில் முகத்தைச் சுழித்தவள், “எனக்கு இதெல்லாம் பிடிக்கல. அதிருது மாத்துங்க” என்றாள்.

சரி கட்டிக்கப் போற பொண்ணு முதல்முறையா அவளாக வாய்திறந்து கேட்டிருக்கிறாளே என்று வேறு சிடி தேட, “சாமி பாட்டு போடுங்க” என்று அடுத்த கட்டளை பிறப்பித்தாள்.

‘ஸ்... ஸப்பா... இதுவேறயா.’ கைக்கு கிடைத்த சிடியை எடுத்து ஓடவிட, அவள் பாட்டை ரசிக்க, அவன் விதியே என்று ரோட்டை வெறித்தபடி கார் ஓட்டினான்.

அப்பன் முருகனின் பாடலை ரசித்துக் கொண்டிருந்தவள், காரின் வேகம் அதிகரித்ததை உணர்ந்து பயத்தில், “ப்ளீஸ்! ஸ்லோவா போங்க எனக்கு பயமாயிருக்கு. நான் வேணும்னா வண்டி ஓட்டட்டுமா? இல்லன்னா என்னை இங்கேயே இறக்கி விடுங்க. நான் அப்பாவை வரச்சொல்லி போய்க்கிறேன்” என்று பயத்தில் உளறினாள்.

சுபாவின் வார்த்தையில் ஆனந்திற்கு கோபம் ஏற காரும் பறந்தது. அந்த வேகத்திலும் ஆதரவிற்காகக் கூட அவனின் கையை அவள் பிடிக்கவில்லை என்றதும் அந்த கோபமும் சேர்ந்தது அவனுக்கு.

அவனைக் கண்டு முதன்முறையாக பயந்தாள் சுபா. இவனோடான என் வாழ்க்கை எப்படியிருக்கும். தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டு, நல்லதற்காக சொல்லும்; சொல் சிறிதும் கேட்காதவனை சற்று மிரட்சியுடனேயே பார்த்திருந்தாள்.

தற்செயலாக அவளைப் பார்த்த ஆனந்த், அவள் கண்களில் கலவரத்தைக் கண்டதும் தன்னையே நொந்து கொண்டான். காதலில் கிறக்கமாக தன்னைப் பார்க்க வேண்டிய பார்வையில், முழுக்க பயத்தைக் காணவும் சற்று இளகியவன், கொஞ்சம் வேகம் குறைத்து, “சாரி சுபா நீ என்னை மூணாவது மனுசன்னு சொன்னதும் கோபம் வந்திருச்சி, என்கிட்ட சரியா பேசவும் மாட்டேன்றியா. சாரி” என்றான்.

“அதான் நிஜம். கல்யாணம் முடியுறது வரை நீங்க மூணாவது மனுசன் தான். அதுக்காக இப்படியா பயமுறுத்துவீங்க? எங்கண்ணாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்” என்றவள் குரலில் அப்படியொரு கலக்கம்.

“என்னடி? எப்பப்பாரு அப்பா, அண்ணான்னுட்டு இருக்க. ஏன் எங்களையெல்லாம் உங்க குடும்பத்துல ஒருத்தனா நினைக்கமாட்டீங்களோ? என்னைப் பார்த்தா ஆளா தெரியலையா?” என்று கோபம் ஏற அவனறியாமல் கார் வேகமெடுத்தது.

“என்ன? ‘டி’ போட்டு பேசுறீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி உரிமையெடுத்துப் பேசுறதெல்லாம் எனக்கு பிடிக்காது?”

“உனக்கு என்னதான் பிடிச்சிருக்கு? இதைப் பிடிக்கிறதுக்கு” வார்த்தையில் சலித்தவன், ‘இதுக்கு இவளைக் கூப்பிட்டு வராமலேயே இருந்திருக்கலாம். இப்ப இவளை என்ன செய்யலாம்?’ என மனதினுள் நினைத்தவன் கவனம் ரோட்டில் இல்லாமல் போனது.

“எனக்கென்ன பிடிச்சிருக்குன்னு, கல்யாணத்துக்குப் பிறகு பார்த்துக்கலாம். இப்ப ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுங்க? எனக்கு பயமாயிருக்கு” என்றாள்.

அவளின் பயத்தைப் போக்குவதாக நினைத்து ஆறுதலளிப்பதற்காக அவளின் கையைத் தொடவர...

அதில் அதிர்ந்தவள், “ஏய்! என்ன பண்றீங்க? இந்த தொட்டுப் பேசுற வேலையெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்ல. மரியாதையா என்னை இறக்கி விடப்போறீங்களா இல்லையா? இதுக்குத்தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன். எங்கப்பாவும், அம்மாவும் கேட்கல” என்று வார்த்தையை கடித்துத் துப்பினாள்.

அவளின் பேச்சில் மனதில் பெரியளவு அடிவாங்கினான் ஆனந்த். ‘சே... என்ன பொண்ணு இவ. இவளுக்கே என்னோட வர விருப்பமில்லையா? இவளையா பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். இந்தப் பட்டிக்காடு கேரக்டரை கடைசிவரை எப்படி சகிச்சிட்டு வாழ்றது. சென்னை சிட்டியில் வளர்ந்த பெண்போல் தெரியலையே’ என மனதினுள் சலித்தான்.

ஆனந்த் ஓரளவு சென்னை நாகரீகத்தில் ஒழுக்கமாக வளர்ந்திருந்தாலும், அக்கம்; பக்கத்துப் பெண்கள், தன்னுடன் பயின்ற பெண்கள் அனைவரும் சகஜமனப்பான்மையுடன் பார்த்ததும் சிரிப்பது, நட்பாக இரண்டொரு வார்த்தைகள் பேசுவது என்று வளர்ந்தவனால், அப்பா, அம்மா, அண்ணன் மட்டுமே உலகம். ஆண், பெண் உறவிற்கென்று ஒரு எல்லையிருக்கிறது, அதில் தொட்டுப் பேசுவதென்ற வார்த்தைக்கே இடமில்லையென வளர்ந்த சுபாவை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“இப்படியேதான் இருப்பியா சுபா?” என்றான் தன் கலக்கத்தை மறைத்து. அவனுக்கு புரிந்தது ‘நல்ல பெண்தான். ஆனால், தன்னுடைய குணத்திற்கும் அவளுக்கும் ஒத்துவருமா?’ என்று தான் குழம்பினான்.

எதிரெதிர் குணங்கள் இணையலாம். ஒரே குணமுள்ள தன்னை எந்நேரமும் மாத்திக்க முயற்சிக்காத இவர்கள் இணைந்தால்?

அவனின் எண்ணத்தை ஓரளவு யூகித்தாள் சுபா. “நான் தப்பில்லையேங்க. எனக்குன்னு ஒரு எல்லையிருக்கு. அதுக்காக நான் பட்டிக்காடும் இல்லை. மேரேஜ் பிறகு உங்களோடதான் காலத்துக்கும் இருக்கப்போறேனே. அப்புறம் ஏன் இந்த பயணம்? எனக்கென்னவோ நீங்க தான் ஏதோ கேம் ஆடி என்னை கூப்பிட்டு வந்திருக்கீங்கன்னு தோணுது?” என்று ‘தானும் படித்தவள் தான் மனிதனின் மனங்களையும் சேர்த்து’ என நிரூபித்து அவன் முகம் பார்க்க, அவனின் முகமாறுதல் உண்மையைச் சொல்லியது. “அப்ப நான் நினைச்சது உண்மைதான் இல்லையா?” என்றாள்.

“ஆமா. நான்தான் ப்ளே பண்ணினேன் தான். கல்யாணம் பேசின பிறகு, அவனவன் கட்டிக்கப்போற பொண்ணோட உலகத்தையே சுத்தி வர்றான். ஆனா, நீ என் முகத்தையே இன்னைக்குத்தான் முழுசா பார்க்கிற?” என்று கடுப்புடன் கூறினான்.

மெல்லிய புன்னகையை வெளியிட்டவள், “நான் வாழ்க்கையை ப்ராக்டிகலா பார்க்கிறேன். நீங்க கொஞ்சம் அட்வான்ஸ்டா போறீங்க. ஊர் உலகத்தைப் பார்த்துக்கிட்டிருந்தா நம்ம பிழைப்பு நாறிடும் சார். இன்னும் ஒரு வாரம்தான். நீங்களே விரட்டினாலும், உங்களை நான் விடமாட்டேன். நீங்க எங்க கூப்பிட்டாலும் உங்களோட வரப்போறேன்” என்றாள் புன்னகையுடன்.

“வரலன்னா உன்னை யார் விடுறது” என்று சிரித்தபடி திரும்பியவன் சாலையில் கவனத்தைப் பதிக்க, செங்கல்பட்டு தாண்டி செல்கையில் காருக்குள் திரும்பவும் அமைதி நிலவியது. ‘ஹ்ம்... வேடிக்கை பார்க்கவே வந்திருப்பா போல’ என மனதில் நினைத்து, ‘லைஃப் லாங் இவள்தான்னு முடிவாகிருச்சி அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் போவோமே’ என்று முடிவு செய்தவனுக்கு அது எதுவரை என்பது தான் குழப்பமே.

பொதுவாக தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் எண்பது கிலோமீட்டருக்கும் மேலே வேகத்தில்தான் செல்லும். ஆனந்த் தன் வருங்கால மனைவியிடம் கார் ஓட்டும் திறனையும் காட்ட வேண்டுமென்று நூறு கிலோமீட்டர் வேகம் தாண்டிச் சென்று கொண்டிருக்க, அவனைச் சொல்லி பிரயோஜனமில்லை என்று ரோட்டில் கவனத்தை வைத்தாள் சுபா.

முன்னால் வீடு கட்டும் கம்பி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருக்க, அதை க்ராஸ் செய்வதற்காக ஆனந்த் காரை வளைக்க, அவன் காரை முந்திக் கொண்டு பின்னாலிருந்து வந்த இன்னோவா கார் வேகமாக தாண்டிச் சென்றது. வினாடிகளில் சுதாரித்த ஆனந்த் காரைத் திரும்பவும் லாரியின் பின்னாலேயே திருப்பி எழுபது கி.மீட்டர் வேகத்திற்கு வேகத்தைக் குறைத்தான்.

இவர்களைத் தாண்டிச் சென்ற இன்னோவா காரின் வேகமும் குறைந்து, இவர்களின் காருக்கு இணையாக முன்னே சென்று கொண்டிருந்தது. அதை தாண்டிச் செல்ல முயன்று முடியாமல் தோற்றுப்போனான் ஆனந்த்.

“நான் அப்பவே சொன்னேன்ல மெதுவா ஓட்டுங்கன்னு” என்று சுபா அவனிடம் சண்டைக்கு வர, அவளிடம் திரும்பி “இதெல்லாம் ஒரு ஜாலிதான் சுபா” என்றவன் சாலையில் கவனத்தைத் திருப்ப, முன்னால் சென்று கொண்டிருந்த மினிலாரி எதிர்பாராவிதமாக திடீர் ப்ரேக் போட, அதை எதிர்பார்த்திராத ஆனந்தோ, அதிர்ந்து உயிர் பயத்தில் இனி அவ்வளவுதான் என்று தலைகவிழ்ந்தான்.

தேசிய நெடுஞ்சாலையில் காரைக் கையாலாமல் அவன் ஏன் திடீரென தலைகவிழ்ந்தான் என்று சுபா நேரே பார்க்க, அதன்பின் சுபஸ்ரீதேவி மற்றும் ஆனந்தின் அலறல் சத்தங்கள் மட்டுமே அங்கு கேட்க, அதுவும் சிறிது நேரத்தில் அடங்கியது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
எம்மா நீ 50 ஸ் கதாநாயகி🤭🤭🤭😀😀🤗🤗🤣🤣🤣... நல்லா தானே போயிட்டு இருந்துச்சு😩😩😥😥
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
எம்மா நீ 50 ஸ் கதாநாயகி🤭🤭🤭😀😀🤗🤗🤣🤣🤣... நல்லா தானே போயிட்டு இருந்துச்சு😩😩😥😥
50 ஸா ஆத்தீஈஈஈ...‌
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top