• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 1, 2024
Messages
60
அழகன் - 4


அவன் துண்டித்ததைக் கூட உணராது அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தாள் ஆதிரை. அனைத்திற்கும் பிள்ளையார் சுழியாய் நிற்பது கணவன் மட்டுமே என்பது புரிந்தது. அளவிட முடியா கோபம் கணவன் மேல். அதையெல்லாம் விட தற்பொழுது அடுத்து என்ன செய்ய என்ற குழப்பம். அந்த துச்சாதனன் சொன்னதைச் செய்தே ஆக வேண்டிய நிலை. அறைக்குள் மூச்சு முட்டுவது போல் தோன்ற, கொளுத்தும் வெயில் என்றும் பாராது தோட்டத்திற்குச் சென்றுவிட்டாள்.

‘இப்படி ஒரு அநியாயம் நடப்பதாக காவல்துறைக்கு செல்லலாம் தான். காவல் துறையும் உடனே நடவடிக்கை எடுக்கும். அறைக்குள் நடந்ததையே அம்பலத்தில் ஏற்றுவேன் என்பவன், எங்கு வேண்டுமானாலும் ஸ்பை வைத்திருப்பான். அவன் சொன்னது போல் செய்துவிட்டால்? வெறும் திருட்டு வழக்கு என்றால் பெரிதாக எடுத்திருக்க மாட்டாள். அவன் சொன்னதோ பெண் சம்பந்தப்பட்டது ஆகிற்றே. தன் தந்தையும், தமையனும் அந்த மாதிரி சூழ்நிலையில்...’ எண்ணியவள் மனம் கலங்கித்தான் போனது.

என்ன செய்வது என்று புரியா நிலையில் அழுதவாறு போனைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். இதோ இப்பொழுதும் அந்த வீடியோ ஓடிக்கொண்டிருப்பதாக கற்பனை அவளுக்கு. கணவன் பின்னால் வருவதைக் கூட உணராது அமர்ந்திருந்தாள்.

தங்கை பின்னால் வரவில்லை என்பதைப் பார்த்தவன், மனைவியின் பின்னால் நின்று அணைத்துக்கொண்டு, “இந்த வெயில்ல இங்க என்ன பண்ணுற? டைமாகுது பாரு. இப்ப போனா தான் டிராபிக் இல்லாம ப்ரீயா போகலாம். சுவிஸ் போனதும்...” என்று ஏதேதோ பேசி கனவுலகில் மிதக்க, கணவனின் கடைசி அணைப்பாக அதை சில நிமிடங்கள் அனுபவித்தவள், எல்லை மீறும் கணவனின் ரசனைப் பேச்சில் மூச்சடைக்க, சட்டென தன்னில் இருந்து அவனை விலக்கி விட்டாள்.

தன்னை சமாளித்து நின்றவன், “என்னாச்சி ஆதிரை? யேய் அழுதியா என்ன?” என பதறி அவள் அருகில் வர அவளோ விலகிச் சென்றாள்.

“என்னடா?” என்றவன் குரலில் அத்தனை காதல்.

“ஏ...ஏன் அப்படி செய்தீங்க?” எனக் கேட்டாள்.

“என்ன செய்துட்டேன்? உன்னை கட்டிப் பிடிச்சது தப்பா. அப்ப விடு” என்றவன் வேகமாக வந்து அவள் இதழில் அழுத்தமாய் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அந்த முத்தத்தின் ஆழத்தை அனுபவித்தவள், பின் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, கணவனைத் தள்ளிவிட்டு, “தொட்டீங்க அப்புறம் என்னை நானே அழிச்சிக்குவேன்” என்று என்றும் இல்லாத, இதுவரை அவள் பேசியே இராத குரலில் கத்தினாள்.

“ஆ...ஆதிரை! என்னாச்சிமா? ஏன் இப்படி பேசுற?” என்றவனுக்கு ஒருவேளை தான் செய்ய இருந்த செயல் தெரிந்து விட்டதோ என்றிருந்தது.

அதையே தான் அவன் மனையாளும் சொன்னாள்.

“ஏன் அப்படி செய்தீங்க? என்னை கல்யாணம் செய்துக்க என்னென்ன வேலை பார்த்திருக்கீங்க. கேள்விப்பட்ட நிமிடத்தில் இருந்து என்னை நானே வெறுக்குரேன்.”

“சாரிடி அது உனக்காக தான். நீ வேணும்னு தான்” என்று எந்த ஈகோவும் பார்க்காது, தனக்காக உடனே மன்னிப்பு கேட்டு இறங்கி வந்த கணவனை கட்டிக்கொள்ளத் தோன்றியது.

வெளியில் எதையும் காட்டாது, “ஏன் அப்படி செய்தீங்கனு சொல்லுங்க? முதல்ல நான் வேண்டாம் சொன்னதும் கொஞ்சம் பேசுனீங்க தான். அந்த சந்திப்போட நான் அதை மறந்துட்டேன். நீங்களும் எந்த விதமாவும் என்னை டிஸ்டர்ப் பண்ணலை. லைப்ரரில நாம சிக்கினது உங்க ப்ளான்னு இப்பதான் தெரியுது. என் அண்ணனை போலீஸ்ல மாட்ட வச்சி என்னை லாக் பண்ண நினைச்சிருக்கீங்க. நம்ம கல்யாணம் எதோ ஆக்சிடண்டலா நடந்தது நினைச்சேன். இப்ப தான் தெரியுது எல்லாம் ப்ரீப்ளான்னு. என் வாயாலயே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சிருக்கீங்கல்ல” என்றாள் அழுத்தமாக.

“ஆதிரை அ...அது நீ நினைக்கிற மாதிரி இல்ல. முதல்ல விசு உன்னதா...”

விளக்கம் சொல்ல வந்தவனை தடுத்தவள், “ஒரு பொண்ணு விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா விலகிப் போக வேண்டியது தான. என்னையே கல்யாணம் செய்துக்கணும் என்று என்ன தேவை? நான்தான் வேணும்னு அப்படி என்ன வெறி உங்களுக்கு?” என்ற நொடி அவள் கன்னத்தில் அவன் கைத்தடம் பதிந்தது.

“தப்பா பேசாதடி. பண்ணியது தப்பு தான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுட்டேன். இறங்கி வந்தா என்ன வேணும்னா பேசுவியா? முதல்ல வீட்டுக்குள்ள போடி” என்றான்.

“நீங்க என்னை அடிச்சிட்டீங்க. ஏ..ஏன் அடிச்சீங்க? நான் என்ன தப்பு செய்தேன்? உங்க தப்பை மறைக்க என்னை ஏன் அடிச்சீங்க?” என்றவள் கண்ணில் கண்ணீர். தன் வார்த்தையின் வீரியம் கணவனின் கைவண்ணத்தில் தனக்கே திரும்பி வந்தது, ஒரு வகை தண்டனை. அதையே பிடித்துக்கொண்டு தங்கள் பிரிவை எடுக்க முடிவெடுத்தாள்.

மனைவியின் கண்ணீர் கண்டு உள்ளம் கலங்கியவன், “யேய் சாரிடி. சாரி ஏன் இப்படிப் பேசுற? நான் தப்பு செய்யலை என்று சொல்லலையே. எல்லாம் உன்மேல உள்ள...”

“ஆசையினால அப்படின்னு சொல்லப் போறீங்க. தெரிந்தது தானே” என்றாள் கிண்டலாக.

கணவனின் அடுத்த வார்த்தை காதல் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவ்வார்த்தையை தட்டிவிட்டுப் பேசும் தைரியம் அவளுக்கு இல்லை. அவனைப் பேச விடாது செய்துவிட்டாள்.

“ஆதிரை முழுசா பேசவிடு. என்ன பிரச்சனை உனக்கு? ஆமாடி நீ வேணும்னு தான் நிறைய பண்ணினேன். அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே. எல்லாமே சரியா தான நடந்திருக்கு” என்றான் மெய்யழகன்.

“நீங்க எனக்குச் செய்தது அநியாயம்னு உங்களுக்குத் தெரியலையா? சீட்டிங் பண்ணி மேரேஜ் செய்திருக்கீங்க. என்னால இங்க ஒரு நிமிஷம் கூட நிக்க முடியாது. நான் எங்க வீட்டுக்குப் போறேன்” என்று நகர்ந்தாள்.

மனைவியின் கைபிடித்து நிறுத்தியவன், “என்ன பேசுற ஆதிரை? அதென்ன வீட்ட விட்டுப் போறேன் சொல்லுறது. நீ என்னோடதான் இருக்கனும். வெளில போறேன் சொன்ன அவ்வளவுதான்” என்றான் முதல் எச்சரிக்கையாக.

“நீங்க செய்ததை சகிச்சிட்டு என்னால இங்க இருக்க முடியாது. உங்களை நல்லவர்னு நினைச்சி நான் என்னையே...”

“யேய்ய்...” என்று மெய்யழகன் கத்தியதில் அவள் நிறுத்த, இவர்கள் பேசுவதைக் கேட்டிருந்த அறிவழகனும், விசாகாவும் அரண்டு விட்டனர். “வாயை மூடு. இன்னொரு வார்த்தை பேசின தொலைச்சிடுவேன்” என்றான் விரல் நீட்டி மிரட்டி.

“சத்தமா பேசினா நீங்க செய்தது தப்பில்லைனு ஆகிடுமா?”

“தப்புதான். தப்பு இல்லன்னு நான் எப்ப சொன்னேன். அதுக்கு நீ பேசுறது அதிகம்டி. சொல்ல வர்றதை கேட்காம நீயா பேசிட்டு இருக்க. ஆமா உன்மேல் உள்ள ஆசையில் தான் எல்லா தப்பும் செய்தேன். இனிமேலும் செய்வேன். அதுக்கு என்னை ஜெயில்ல போடப்போறியா? இல்ல கால்ல விழச் சொல்லுறியா? எது நடந்தாலும் நீ இந்த வீட்டை விட்டுப் போக முடியாது. மீறிப் போனன்னு வை அதுக்கு உன் கால் இருக்காது” என்று மிரட்டினான்.

“அதையும் மீறிப் போனா?” என்றாள் கேள்வியாய்.

“ஹ்ம்ம்...” என மூச்சை இழுத்துவிட்டவன், “எதோ ஒரு முடிவுல இருக்க தெரியுது. என்ன சொல்லியும் பிடிச்சி நிறுத்த முடியாதுன்னு அழுத்தமா சொல்லுற. இப்ப நீ வீட்டை விட்டுப்போனா, அதுதான் நீயும் நானும் சந்திக்கும் கடைசி சந்திப்பா இருக்கும். இந்த ஒரு வாரம்...” சில நொடி மௌனத்தின் பின், “என் திட்டத்தில் கிடைச்ச லாபம்னு நினைச்சிக்கிறேன்” என்றான் அவளுக்கு வலிக்க வேண்டுமென்று.

வலிக்கிறதுதான். என்ன ஒன்று அவன் பேசிய பேச்சிக்கு அல்ல. அதைச் சொல்ல அவன் எடுத்துக்கொண்ட சில நொடி மௌனத்தில்.

“நீங்க பிசினஸ் மேன். அதான் உங்களுக்கு லைஃப் பிசினஸா தெரியுது. நான் எதிலும் எளிமையா வாழ நினைக்கிறவ. எனக்கு உங்களோட பாலிடிக்ஸ் செட்டாகாது. நான் வரேன்” என்று அவனைத் தாண்டிச் செல்ல, அப்பொழுதும் கைபிடித்தான் இறுக்கமாக.

அந்த இறுக்கம் சொன்னது, ‘என்னை விட்டுப் போய்விடாதே’ என்று. மரித்த மனதிற்கு ஆறுதல் சொல்லி, கணவனின் கையை விலக்கி வீடு நோக்கி நடக்க, எதிரில் மரித்தாற்போல் நின்றாள் விசாகா.

“அண்ணி இந்தக் கல்யாணம் என்னோட ஆசைக்காக நடந்தது. ப்ளீஸ் நீங்க இங்க இருங்க” என்ற சைகையை ஆதிரை பார்க்கவில்லை. பார்க்கவில்லை என்பதை விட, நாத்தனார் தன்னிடம் கெஞ்சுவது அவளுக்கு விருப்பமில்லை. செல்வது மட்டுமே ஒரே வழியாய் இருக்கையில், என்ன செய்து அவர்களை சமாதானப்படுத்துவது.

“அண்ணி அண்ணன் ரொம்ப நல்லவங்க. தெரியாம ஏதாவது செய்திருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க எங்கேயும் போகாதீங்க. நீங்க இல்லன்னா அண்ணன் இல்லை” என்றான் அறிவழகன் தனக்கேயான மென்மையான குரலில்.

எதையும் காதில் வாங்காது தங்கள் அறைக்குள் வந்தவள், சில வினாடிகள் அந்த அறையைச் சுற்றிலும் பார்த்து, அதில் இருந்த தங்கள் திருமண புகைப்படம் அருகே வந்து நின்றாள்.

“என்னை மன்னிச்சிருங்க அழகா. என்னோட சூழ்நிலை உங்களை ரொம்பவே இறங்க வச்சிடுச்சி. என் முன்ன உங்க தலை இறங்கலாம். நாம சரிபாதி ஆனவங்க. ஆனா, அந்த வீடியோவை மையமா வச்சி, வெளில உங்க தலை குனிஞ்சிடக்கூடாது. அதை நான் ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன். உங்க வாழ்க்கையை விட்டு நான் போகலாம். அவனால இதை மட்டும் தான் செய்ய முடியும். காலத்துக்கும் என் மனம் நிறைந்த மணாளனா நீங்க இருப்பீங்கன்னு, அவனுக்கு தெரியாதே. உங்களை மறக்க இரண்டு மாசம் டைம் குடுக்குறான் அவன். நம்ம உறவு ஈரேழு ஜென்ம பந்தம்னு தெரியாதே அவனுக்கு.”

“இந்த ஒரு வாரம் நாம வாழ்ந்த வாழ்க்கை போதும். ஒவ்வொரு நொடியும் அதை நினைச்சி வாழ்ந்திடுவேன். ஆனா, அவன் குடுத்த ரெண்டு மாச கெடு... என்ன செய்யப்போறேன் தெரியலை அழகா. எவனோ ஒருத்தன் பெண்ணாசை என்னை அழிக்குதா, இல்லை அவன் அதில் பழியாகுறானா தெரியாது. கண்டிப்பா அவன் கை பட்ட நொடி, அவன் இறப்பு நிச்சயம்” என்றாள் உறுதியாக.

மூச்சை இழுத்துவிட்டு நேரத்தைக் கடத்த விரும்பாது கையில் கிடைத்த துணிகள் வரை எடுத்து ட்ராலியில் அடக்கியவள், அதை இழுத்து கீழே வந்துவிட்டாள்.

“அண்ணி!” என்று ஆதிரையை தடுக்கச் சென்ற தங்கையின் கைபிடித்து, “அவ முடிவெடுத்துட்டு தான் சண்டையே ஆரம்பிச்சிருக்கா. அவளை விடு போகட்டும்” என்று தங்கையை தன்னருகே நிறுத்திக்கொண்டான்.

“அண்ணா... அண்ணி... எனக்கு அண்ணி வேணும்” என்றாள் அண்ணன் முகம் பார்த்து.

“அவளுக்கு நாம வேண்டாமாம் விசுமா” என்றவன் கண்கள் கலங்க முகத்தை வேறுபுறம் திருப்பியவன், “நான் மேல போறேன்” என்று சென்றுவிட, வெளியே செல்பவளின் நினைவுகளோ தன்னவன் மேல் மட்டும்.


அழகன் வருவான்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top