- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
23
“நன்றியெல்லாம் இருக்கட்டும். எப்படிப் போகுது உங்க கதை?” என்றார் அபிராமி இலகுவான குரலில்.
“அது கதை இல்லை மீ காவியம். நேத்து இங்க வராததில் இருந்து தெரியலையா?” என்று மீசையை நீவ,
“எது, உன் மச்சினனோட வராண்டாவில் படுத்து எழுந்ததையா சொல்ற” என்றார் கேலியாக.
“அச்சோ மீ! கற்பனை ஓவரா இருக்கு. நானும் அவளும் ஒரே அறையில். என்ன நான் கட்டிலுக்குக் கீழ, அவள் மேல படுத்திருந்தா” என்றான்.
“நிஜமாவா?”
“ஆமாம்மா. ஐயாவைப் பார்த்து மேடம் மயங்கிட்டாங்க” என்று சட்டையைத் தூக்கிவிட,
“புளுகுனிப் பயலே” என்று மகனின் முதுகில் தட்டினார்.
“ஹலோ! உண்மையைச் சொன்னேன்.”
“அவள் மனசு மாறினா சந்தோஷம் அறிவா. உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் கவனமா பார்த்துக்க.”
“கண்டிப்பா பார்த்துக்குறேன்மா. சரி நான் கிளம்புறேன்” என்றான்.
“சாப்பிட்டுப் போடா.”
“சாப்பிட்டுட்டுதான் வந்தேன்ம்மா. அண்ணன்கிட்ட பேசிட்டுக் கிளம்புறேன்” என்று அண்ணனைத் தேடிச் சென்றவன், அவன் முகம் கலையிழந்து கிடப்பதைப் பார்த்து, “என்னண்ணா ரதி வீட்டுல நடந்ததை நினைச்சி வருத்தப்படுறியா? விடு பார்த்துக்கலாம்” என்றான் மற்றதை மறந்து.
“உனக்கு வருத்தமில்லையா?”
“ஏன் இல்ல? கூடப்பிறந்தவன் வீடு தேடி வந்திருக்கான். விருந்து உபச்சாரம் செய்யாம, கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையா விரட்டியிருக்கேன். என் மனசு எந்தளவு வேதனையடைந்தது தெரியுமா? அண்ணி...” என நிறுத்தி அண்ணன் முகம் பார்த்தவன், பின் தலைகுனிந்து, “சொன்னா தப்பா எடுத்துக்காத” என்று நிமிர்ந்து அண்ணனின் முகம் பார்க்க, அவனோ இல்லையென்பதாய் தலையசைத்து சம்மதம் கொடுத்தான்.
“அண்ணிக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்ணா. சில நேரங்கள்ல அவங்க மைண்ட் அப்நார்மலா இருக்கு. கொஞ்சம் நடைமுறை யதார்த்தம் புரிஞ்சா போதும்” என்றான்.
சரியென்று தலையசைத்த மதியழகன், தாய்க்கும், தம்பிக்கும் நடந்த பேச்சு வார்த்தையை நேரடியாகக் கேட்க இயலாது, “ஷண்மதி ஏன் எங்கள் குழந்தைன்னு சொல்றா?” என கேட்டான்.
“அ...அது அண்ணியோட கற்பனையா இருக்கும். இரண்டு கவுன்சிலிங் போனா சரியாகிரும்” என்றான்.
“இல்லை. மத்ததுல சரியா இருக்கிறவள் இந்த விஷயத்துல மட்டும் ஏன்? வாடகைத்தாய்னா கூட அது உன் ஒய்ஃபா இருக்க சான்ஸ் கிடையாது? ஏன்னா உன்னோடது லவ் மேரேஜ். அப்புறம் ஏன் அப்படிச் சொல்றா?” தம்பியின் மூலம் அனைத்தையும் அறிந்துகொள்ளப் பார்க்க, அவனோ விடாக்கண்டனாய், “அதை விடுண்ணா பார்த்துக்கலாம். இன்னும் கொஞ்ச நாள் போனா நானே சொல்றேன்” என்றான் அறிவழகன்.
தம்பியவனை ஆழ்ந்து பார்த்தவன், தன் கேள்விக்கான பதிலை தானே தேடிக்கொள்ளலாம் என்று அவனை அனுப்பினான்.
கொயட் சாஃப்ட்வேர் கம்பெனி சென்று, இரவு எட்டு மணிபோல் அறிவழகன் மாமியார் வீடு வர, வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனுரதி கணவனைக் கண்டதும் எழுந்து அறைக்குள் சென்றாள். தன்னைக் கண்டதும் சென்றதால், என்னவென்பதாய் மச்சினனைக் காண, அவனோ தெரியவில்லை என்பதாய் உதடு பிதுக்கினான்.
சாரதா மருமகனை சாப்பிடச் சொல்ல, மனைவியுடன் சாப்பிடுவதாக அவன் சொல்லவும், “என்னன்னு தெரியலை. நாலு மணியில் இருந்து வாசலுக்கும் வீட்டுக்குமா நடக்குறா. உட்காருன்னு சொன்னா, குழந்தை ஆராக்கியமா பிறக்க நடக்கணும்னு, நீங்கதானே சொன்னீங்க அப்படின்னு நடையா நடக்குறா. தண்ணீர் கூட குடிக்கலை. அவளா சோர்ந்து போய் உட்கார்ந்தா. அப்பவும் கண்பார்வை வாசலை விட்டு அசையலை. இப்ப உங்களைப் பார்த்ததும்தான் உள்ள போறா. உங்க பொண்டாட்டியை சமாதானப்படுத்தி சாப்பிட கூட்டிட்டு வாங்க” என்று அனுப்பியவருக்கு அத்தனை நிம்மதி.
கணவன் வருகை உணர்ந்து ஜன்னலோரம் நின்ற அனுரதி, இல்லாத நிலவைத் தேடுகையில், அங்கே நட்சத்திரப் பெண்கள் சிண்சிமிட்டிக் கொண்டிருக்க, சட்டென்ற அதிர்வுடன் கூடிய சிலிர்ப்பு அவளிடத்தில்.
அனுரதியின் சிலிர்ப்புக்குக் காரணம் என்னவென்று அறிய, நட்சத்திரப் பெண்ணொருத்தி கண்சிமிட்டிப் பார்க்க, ரதிதேவியை மன்மதனவன் பின்னிருந்து பட்டும்படாமல் அணைத்து, ஜன்னல்வழி தன்னைப் பார்ப்பதைக் கண்டதும், வெட்கம் கொண்ட நட்சத்திரப் பெண்ணவளோ உருகி வேறிடம் ஓடிவிட்டாள்.
“என்ன மிஸஸ்.அறிவழகன், உன் அழகனைக் காணோம்னு தேடுனியா?” என கிசுகிசுப்பாகக் கேட்க, சட்டென்று அவனை உதறிடச் சொல்லி மூளை அறிவுறுத்தியது. மனமோ அவன்மேல் துளிர்த்திருக்கும் நேசத்தைத் தூண்டிவிட, ‘இது தான்தானா? கணவனை இந்தளவு தேடுகிறேனா? இத்தனை மணிநேரத் தேடுதல் ஏன் எனக்குள்? ஆசை கொள்கிறேனா அவன்மேல்?’ என நினைக்கையில், வயிற்றிலிருக்கும் குழந்தை உள்ளே துள்ள, அவனும் உணர்ந்தானோ! பிடியை சற்று அழுத்த, அவளோ வேகமாகத் துடித்த இதயத்தை, ஜன்னலைப் பிடித்திருந்த வலக்கரத்தை எடுத்துத் தடவிவிட்டுக் கொண்டாள்.
“என்ன மிஸஸ்.அறிவழகன் பதிலையே காணோம்” என்றதில் தெளிவாகியவள், கணவன்புறம் திரும்பி அவனைத் தள்ளிவிட, “ஏ...ஏய்” என கீழே விழப்போனவன் கைகள் அவளை இறுக்கி அணைத்திருந்ததால், அவனுடன் சேர்த்து அவளும் கீழே விழப்போக, சட்டென்று சூழ்நிலை உணர்ந்து சுதாரித்தவன், தான் தரையில் விழுந்த நொடி, “அரவிந்த்” என்று கத்தி மனைவியைப் பிடித்திருந்த கையை விலக்கி, அவள் தோள்களைப் பற்றி பாதியில் நிறுத்திவிட்டான்.
அறிவழகன் கத்தி அழைக்கும் சத்தம் கேட்டு என்னவோ என்று தாயும், மகனும் பதறியபடி உள்ளே வர, அவர்களின் நிலை பார்த்த நொடி, அரவிந்த் வேகமாகச் சென்று அக்காவை சரியாகப் பிடித்து நிறுத்தினான்.
அதன்பின்னே சீரான மூச்சுவிட்ட அறிவழகன், அப்படியே தலையில் கைவைத்துப் படுத்துக்கொண்டான்.
“என்னாச்சி அனுமா? பார்த்து இருக்கக்கூடாதா? வந்து உட்காரு” என்று கட்டிலில் அமர வைத்து தண்ணீர் எடுத்துக் கொடுக்க, குடித்தபடி ஓரவிழியால் கணவனைப் பார்த்த கண்கள், அவனின் செயலில் சிரித்தது.
மகளிடம் ஏதோ சொல்ல வந்த சாரதாவிற்கு, அவளின் சிரிப்பு ஆயிரம் கதைகள் சொல்ல, மனதினுள் சிரித்து, மச்சானிற்கு உதவச் சென்ற மகனை அங்கிருந்து இழுத்துச் சென்றார்.
கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டு, மனைவியைப் பார்க்கத் திரும்பியவன், புருவம் தூக்கிப் புன்னகைக்க, தன்னை முறைத்தவளைக் கண்டு பல் தெரிய சிரித்து, ‘தூக்கு’ என்பதாய்க் கைநீட்ட, என்ன முயன்றும் முறைக்க முடியாமல் ரசிக்கத் தோன்ற, பிறரறியா புன்னகை அவளிதழில்.
மனைவியின் கண்கள் கண்டே அவளின் புன்னகையை அறிந்தவன், “தூக்கு ரதிமா” என்றான் மயக்கும் மாயவனாய்.
“நான்தான் ஒரே நேரத்துல இரண்டுபேரைத் தூக்க முடியாது சொன்னேன்ல” என்று கடிய, “அதுவும் சரிதான்” என்றவன் நேராகப் படுத்துத் தரையில் கை ஊன்றாது ஒரு துள்ளு துள்ளி எழ, ‘ஆ’வெனப் பார்த்திருந்தாள் அவனின் ரதி.
“சின்னப்பையன்ற நினைப்பா மேனேஜர் சார்? கைகால் பிடிச்சிக்கிட்டா என்ன செய்வீங்களாம்?” என்று அக்கறையைக் கேலியாக்கிக் கேட்க,
“ஆமா. எங்கம்மாவுக்கு நான் சின்னப்பையன்தான். கைகால் பிடிச்சிக்கிட்டா சுளுக்கு எடுத்து விடுங்க அனுரதி மேடம்” என்றான்.
“ஆசைதான். போயி வேலையைப் பாருங்க. வந்துட்டாங்க பிடிச்சிக்கிச்சி, இடிச்சிக்குச்சின்னு” என்று முனகினாள்.
“வேறு வேலை எனக்கு இல்லையே,
என்னைக் கொஞ்சம் தூக்கு நீ”
என்று பாட, சட்டென சத்தமாகச் சிரித்தவள், “அப்பக்கூட தூக்கதான் செய்யணும்ல.”
“போ. நான் போறேன்” என்று அவன் எட்டெடுத்து வைக்க, சட்டென்று அவன் கை அவள் கைக்குச் செல்லவும் அதிசயமாய் அவன் மனைவியைப் பார்க்க, “போ... போறேன்... இந்த வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீங்க. அது விளையாட்டா இருந்தாலும் கூட” என்றவள் அதன் பின்னே கணவன் கையை தான் பிடித்திருப்பதை உணர்ந்து பட்டென விடுத்து, “சாப்பிடப் போகலாம்” என்று எழ,
“ம்... அப்படியே ஒரு வாக்” என்று உடன் நடந்தான்.
இரவு உணவு முடித்து சொன்னதுபோல் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்து முடித்து, வீட்டினுள் வந்து முகம் கழுவி, அனுரதி கட்டிலில் படுக்க, அறிவழகன் கீழே அமர்ந்து, “மிஸஸ்.அறிவழகன்! ஒரு ரெக்வஸ்ட்?” என்றான்.
அவன்புறம் திரும்பிப் பார்த்தவாறு படுத்தவள், “ரெக்வஸ்ட்? என்கிட்டயா? சரி கேளுங்க” என்றாள்.
“அ...அது...” சற்று முன் உணர்ந்த குழந்தையின் ஸ்பரிசம் கேட்க நினைத்தவன் பின் மறுத்து, “ஒண்ணுமில்லை” என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.
புரியாது அவன் முதுகைப் பார்த்திருந்தவள், “என்ன ஒண்ணுமில்லை? ஏதோ கேட்க வந்து படுத்துட்டீங்க?” என்று இயல்பாய் அவள் பேச, அவனுக்குதான் இயல்பு மாறிப்போனது. தன் கைகள் உணர்ந்த அந்த மெல்லிய அசைவு இன்னும் வேண்டுமென்ற ஆசை இருந்தாலும், அவளிடம் உரிமையாகக் கேட்க தயக்கம். சற்று முன் ஏதோ ஒரு தூண்டுதலில் கட்டிப்பிடித்து விட்டான். எல்லா நேரமும் அப்படி இருக்காதே. கேட்க வந்ததை மறைத்து, “என்ன சொல்ல வந்தேன்னு மறந்திருச்சி. நீ தூங்கு ரதிமா” என்றான்.
அதற்கு மேல் கேட்காது அவளும் உறங்கிவிட, உறங்கும் அவளைப் பார்த்திருந்தவனுக்கு திருட்டுத்தனமாகக் குழந்தையைக் கொஞ்ச மனமில்லை. ஏதோ யோசனையில் படுத்திருந்தவனும் தூங்கிவிட்டான்.
அதோ இதோ என்று அனுரதிக்கு ஒன்பதாம் மாதம் முடியப்போகிறது. பிரசவம் எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம் என்ற சூழல். நிறைய முறை கணவன் எதோ கேட்க வருவதும், பின் தயங்கி மருகிச் செல்வதுமாய் இருக்க, முதல் சிலமுறை கவனிக்காது இருந்தவள் அதன்பின் கவனிக்க, முதலில் எதுவும் புரியவில்லை அவளுக்கு.
சமீபமாக நடைபயிற்சியின் போது, அவன் பார்வை வயிற்றை மையம் கொள்வதை உணர்கிறாள். ஆனால், அவனை நெருங்கவிடத் தயக்கம். கைபிடித்து நடப்பது, தடுக்கினால் தாங்குவது என்பது அவர்களுக்குள் இயல்பான விஷயம்தான். இருந்தும் கணவன் ஆசை புரிந்தும், சம்மதிக்க மனம் வரவில்லை. இவ்வளவிற்கும் அவள் ரசிக்கும் முதல் ஆண்மகன். அவனின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மிகவும் பிடிக்கிறது. அதைக் காதல் என்றால் ஒத்துக்கொள்ளமாட்டாள். காதல் இன்னமுமே காமத்திற்கான அடித்தளம் என்றிருக்கிறாள் பெண்.
அவ்வப்பொழுது மாமியாரின் வருகை. அடிக்கடி மாலினியின் வருகை என்று முடிந்தளவு தனியாக விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.