- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
30
“நான் கொலை முயற்சி பண்ணல லாயர் சார்.”
“என்கிட்ட ப்ரூஃப் இருக்கு சித்தார்த். பார்க்குறீங்களா?”
“இல்ல நிஜமாவே நான் எதுவும் செய்யலை.”
“ஓ... அப்ப இதுக்கென்ன அர்த்தம்” என்று ஒரு ஆடியோவை ஓடவிட்டான் அரிச்சந்திரன்.
“ஹலோ! யார் பேசுறீங்க? என்னங்க பதிலைக் காணோம். ஹலோ ஆர் யூ தேர்?” சஞ்சித்தின் குரல் தெளிவாகக் கேட்க,
“நான் சித்தார்த்” என்று அழுத்தமாக வந்தது எதிர்க்குரல்.
“எந்த சித்தார்த்?”
“ம்... உன்னோட எமன்.”
“அப்படித் தெளிவா சொல்லுங்க எமன் சார். சரி இப்ப எதுக்கு போன் பண்ணியிருக்கீங்க? பாசக்கயிறோட வந்துட்டு இருக்கீங்களா என்ன?” என்றான் விளையாட்டாகவே.
“பாசக்கயிறு இல்லடா. பாசக்காரோட வந்துட்டு இருக்கேன்.” சித்தார்த் சொல்ல,
“ஆல்வேஸ் வெல்கம் எமன் சார்” என்றான் சிரிப்புடன்.
“சஞ்சித் ப்ளீஸ் பீ சீரியஸ். நட்சத்திரா என்னோட ஒய்ஃப். இந்தக் கல்யாணத்தை நிறுத்து.”
“பதினாலு வயசுக் கல்யாணம் சட்டப்படியும், தர்மப்படியும் செல்லாது எமன் சார். சோ, போகாத ஊருக்கு வழி தேடாம, அவளுக்கு வாழ வழிவிட்டு நீங்களும் உங்க வாழ்க்கையைப் பாருங்க” என்றான்.
“அவள் என் கௌரவம் சஞ்சித். கல்யாணத்தை நிறுத்தலன்னா உன்னைக் கொன்னுருவேன்” என்றான் மிரட்டலாய்.
அனைவரும் இதற்கு என்ன சொல்கிறாய் என்பதாய் சித்தார்த்தைப் பார்க்க, “அ...அது கோவத்துல அவரை மிரட்டணும்னு விட்ட வார்த்தை. நிஜமா அப்படி எதுவும் பண்ணலை” என்று தலைகவிழ்ந்தான்.
தொடர்ந்து ஆடியோவில், “வாங்க சித்தார்த் ஐம் வெய்ட்டிங். ஆனா, நதி உங்களுக்குக் கிடையாது. அதே மாதிரி எனக்கும் கிடையாது. அவள் அவளோட சந்துருவுக்குச் சொந்தம். அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பா” என்றிருந்தான்.
“என்ன உளர்ற? இரண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு யாருக்கோ சொந்தம் சொல்ற? என்ன என்னை டைவர்ட் பண்ணப் பார்க்குறியா?”
“டைவர்ட்டும் பண்ணல. டைவர்ஸும் பண்ணல” என்ற நக்கலான பதில் சஞ்சித்திடமிருந்து.
“என்ன சஞ்சித் நக்கலா? இதுக்கெல்லாம் ஏமாற வேற ஆளைப்பாரு. நான் உன்னை பாலோ பண்ணிட்டே இருப்பேன்.”
“பார்றா! அவ்வளவு பெரிய ஆளா நான். ப்ளாக் கேட்ஸ் பதிலா நீயா? சூப்பரு” என்றான் அப்பொழுதும் விளையாட்டைக் கைவிடாமல்.
“உன்னை... இன்னைக்கு உனக்கு சங்குதான்டா” என பல்லைக்கடித்து கோவத்துடன் சித்தார்த் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“அப்ப சஞ்சித் அத்தான் ஆக்சிடெண்ட்ல சாகலையா?” என்றாள் குரல் நடுங்க.
“அச்சோ! இல்ல நட்சத்திரா” என்றான் சித்தார்த் ஆடியோவைக் காண்பித்து.
“நதி அமைதியா இரு.”
“எதுக்கு அமைதியா இருக்கணும்? அது உயிர்ங்க. ஒரு குடும்பத்தோட சந்தோஷம் போயிருக்கு. அதுவும் எனக்காக! என்னைக் காரணமா வச்சி. மனசெல்லாம் வலிக்குதுங்க. ஒரு கொலை பண்ணிட்டு இப்படி இருக்க முடியுமா?” என்று சித்தார்த்தை வெறுப்பாக நோக்கினாள்.
“அக்கா! கொலை செய்யுறளவுக்கு போயிருக்க மாட்டாங்க. அந்தளவு மோசமான குணம் நம்ம குடும்பத்து ஆளுங்களுக்கு கிடையாது” என்று வெண்மதி கணவனுக்காகப் பேசினாள்.
“அப்ப இதுக்கென்ன அர்த்தம் பாப்பு?”
“நான் கூடதான் அண்ணனோட சண்டை போடுறப்பல்லாம் கோவத்துல, நான் உன்னைக் கொன்னுருவேன்னு சொல்வேன். அதுக்காகக் கொலை செய்திருவேனா? பேசிக்கலாம்கா” என்று கணவன்புறம் திரும்பினாள்.
“தேங்க்ஸ் வெண்மதி. எங்க நீ தப்பா எடுத்துக்குவியோன்னு பயந்தேன்” என்றான் மனதார.
“ஒருத்தரைப் பிடிக்கலைன்றதுக்காக அவங்க செய்யுறது எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டத்துல பார்க்கணும்னு கிடையாதுக்கா” என்று அவனைவிட்டு அக்காவிற்கு பதிலளித்தாள்.
திரும்பவும் “தேங்க்ஸ்” என்றவன் மனைவியின் நம்பிக்கையில் முகம் தெளிவாக நட்சத்திராவிடம் திரும்பி, “நான் அன்னைக்கு மிரட்டினது நிஜம். அவர் எல்லாத்தையும் ஜாலியா எடுத்துட்டுப் பேசினது கோவத்தை அதிகப்படுத்தின அதேநேரம், என்னோட கோவம் குறைஞ்சதும் உண்மை. நம்மளால ஏன் இப்படி இருக்க முடியலன்னு சின்ன ஏக்கமும் வந்தது நிஜம். கொன்னுருவேன் சொல்லி மிரட்டினாலும், லைட்டா ஆக்சிடென்ட் பண்ணி ரெண்டு நாள் பெட்ல இருந்தா, கல்யாணம் நின்னுரும் என்பது என்னோட நினைப்பு. அதனாலதான் அவரை ஃபாலோ பண்ணினேன்.”
“கார் வேகம் இருந்தாலும் கைகாலுக்குப் பதிலா உயிர் போயிட்டா என்ன செய்வன்னு, மனசாட்சி எச்சரிச்சிட்டே இருந்தது. ஆக்சிடெண்ட் வேண்டாம் பேசாம பொண்ணைக் கடத்திரலாம்னு முடிவு செய்து ஸ்லோ பண்ண நினைச்சப்ப, சஞ்சித் எதிர்ல வந்த கார்ல முட்டிட்டார். ஒரு நிமிஷம் அதிர்ச்சியில என்ன பண்றதுன்னு தெரியாம அவங்களைத் தாண்டிப் போயிட்டேன். இறங்கி என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ள ஆட்கள் வந்துட்டாங்க. சென்னை அதிகம் பழக்கமில்லாத இடம். சின்னதா சந்தேகம்னாலும் மொத்த கேஸையும் என்மேல தூக்கிப்போட்டு கேஸை முடிச்சிருவாங்க. அதுவுமில்லாம நான் எதுவும் பண்ணலையேன்ற நிமிர்வுன்னும் சொல்லலாம். அதான் எதையும் யோசிக்காமல் கிளம்பிட்டேன்” என்று விளக்கம் அளித்தான்.
“சஞ்சித் விஷயத்துல தப்பு செய்யாமலேயே உங்களைத் தூக்குக்கு அனுப்பியிருக்க என்னால முடியும் சித்தார்த். உங்ககிட்ட பழகினவரை தப்பானவரா தெரியல. அதான் இந்த ஆதாரம் கோர்ட்டுக்குப் போகாமல் பார்த்துக்கிட்டேன். இருந்தாலும் நீங்க செய்யவிருந்த தவறு உங்களுக்குத் தெரியணுமே சித்தார்த். அதுக்குதான் இந்த ஆடியோ வச்சிருந்தேன்.”
“தேங்க் யூ லாயர் சார். சஞ்சித்கிட்ட அப்படிப் பேசியிருக்கக்கூடாதுன்னு ஒரு குற்றவுணர்ச்சி அப்பப்ப எழும். நல்ல மனுஷன். அவர்கிட்ட பழகுற சந்தர்ப்பம் இல்லாமலே போச்சிது” என்றான் வருத்தமாய்.
“உங்க ஒய்ஃப்கு உங்கமேல நிறைய நம்பிக்கை இருக்கு. அதை கடைசிவரைக் காப்பாத்துங்க. நாங்க கிளம்புறோம். போகலாமா நதி?”
“போகலாம்ங்க. சாரி சித்தார்த். கொஞ்சம் பேசிட்டேன்” என்றாள் வருந்திய குரலில்.
“நீ அடிச்சா கூட தப்பில்லை நட்சத்திரா. நான் அந்தளவுக்கு கொடுமைப்படுத்தியிருக்கேன்” என்றான்.
“அந்தக் கொடுமையெல்லாம் எங்க வெண்மதி திருப்பித் தருவா அண்ணா. உங்கமேல உள்ள நம்பிக்கையில்தான் உங்க சார்பா கேஸ் எடுத்தேன். அவளுக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. அதைக் காதலா மாத்துறது உங்க சாமர்த்தியம். நாங்க வர்றோம்” என்று மூவரும் கிளம்ப, கதவைத் தாளிட்டு உள்ளே வந்த சித்தார்த்திற்கு, மலைபோல் மனதிலிருந்த பாரம் மனைவியின் வார்த்தையில் மணலாய் சரிய, ஆர்வமாய் அவளைக் கண்டான்.
அவன் பார்வை உணர்ந்து, “அண்ணி சொல்ற மாதிரிலாம் எனக்கு உங்களைப் பிடிக்கலை. நியாயம்னு தோன்றியதைப் பேசினேன். அவ்வளவுதான்!”
“பரவாயில்ல நான் ஐ லவ் யூ. நீ மட்டும் அதைச் சொல்லிராத” என்றான்.
“சொன்னா என்ன செய்வீங்களாம்?”
“சொல்லாதேன்னு சொன்னா சொல்லாதேதான். சொன்னா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது” என்றான் குரலை உயர்த்தி.
“நான் சொல்வேன்” என்று அவளும் குரல் உயர்த்த,
“நீ ஐ லவ் யூ சொல்லவே கூடாது சொல்லிட்டேன்.” பதிலுக்கு அவனும் கத்தினான்.
“ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஆயிரம் முறை சொல்வேன். என்ன செய்ய முடியும் உங்களால?” என்று வேகத்தில் உணராது கத்தினாள்.
கோவத்தில் முகம் சிவக்கத் தான் சொன்னதை உணராது நின்றிருந்த மனைவியின் அருகில் வந்து, “என்ன செய்வேன்னா கேட்ட? நானும் ஐ லவ் யூ சொல்லி...” பேசிக்கொண்டே ஒரு கையால் அவளை தன்னுடன் அணைத்து, மறு கையை கூந்தல் நுழைத்து, மதியவளின் மதிமுகம் தனை அருகில் இழுத்து, இதழோடு இதழ் சேர்த்து அழுந்த ஒரு முத்தம்!
அதிர்ந்து! தெளிந்து! முறைத்து! கடைசியில் முத்தத்தின் பிடியில் அவனுடன் தானும் சிறிது சிறிதாகக் கரைய “ஐ லவ் யூ வெண்மதி” என்ற கிசுகிசுப்பான வார்த்தைகள் அவள் காதோரம் கேட்டது.
அதை ரசித்தாளோ! கண்மூடிய நிலையிலேயே, “ஐ ஹேட் யூ” என்ற வார்த்தை அவளிடமிருந்து மென்மையாக வர, “நானும்” என்று இன்னும் இறுகக் கட்டிக்கொண்டான்.
“நிஜமாவே என்னை லவ் பண்றீங்களா?”
அவளைத் தன்னிடமிருந்து விலக்கி முகம் நிமிர்த்தி அலைபாயும் கண்களுள் தானும் பாய்ந்து, “என்மேல நம்பிக்கையில்லையா? நான் உன் அத்தான் வெண்மதி.”
“இருந்தாலும் பயமாயிருக்கு.”
“ஏன்டா?”
“தெரியலைங்க.”
“உன்னை லவ் பண்றதா சொன்னது வெறும் வாய் வார்த்தையில்லை. உள்ளத்திலிருந்து உணர்ந்து சொல்றது. அந்த வார்த்தையை விளையாட்டுக்குப் பயன்படுத்துற அளவு.. நான் பக்குவம் இல்லாதவன் கிடையாது. சரி உன் பயம் போக நான் என்ன செய்யணும்?”
“ஜட்ஜ் கொடுத்த ஒன் மன்த் நாம ஃப்ரண்ட்ஸ். நம்மை நாமே புரிஞ்சிக்க.. தாம்பத்தியம் தவிர்த்த மீதி நாட்கள்.”
“அப்புறம்?”
“அப்புறம் ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்.”
“என்னை... சாரி இந்தக் கருங்குரங்கைப் பிடிச்சிருக்கா?”
“ஹையோ அதெப்படி உங்...” அவளை முடிக்க விடாது, “தெரியும். லாயர் உங்க வீட்டுக்கு வந்தப்ப உள்ள அனைத்தும் நானறிவேன். காதல்ன்ற மாயவலையில் சிக்கியிருந்த என்னை, நீ பேசிய வார்த்தைகள்தான் உண்மையை உணர்த்தி யோசிக்க வச்சது வெண்மதி.”
“நீங்க யோசிச்ச லட்சணம்தான் கடத்தினதிலேயே தெரியுதே.”
“பொண்ணு மாறிருச்சோன்னு அப்பவே எனக்கு சந்தேகம்தான். அது எவ்வளவு அழகான தவறுன்னு இப்ப உணர்ந்தாலும் வருத்தம் கிடையாது. அதே டைம் உன்கிட்ட மன்னிப்பு கேட்கமாட்டேன். வேணும்னா தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்” என்றான்.
“நானும் தேங்க்ஸ் உங்களோட அழகான தவறுக்கு” என்று அவன் நெற்றித் தளும்பைத் தொட்டுப்பார்க்க,
“நீதான்னு தெரியும்” என்று மனைவியின் அசட்டு முகச்சுளிப்பில் சிரித்தபடி கட்டிக்கொண்டு, நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
இருவேறு இதயங்கள் ஒரே நேர்கோட்டில் நடையிடத் துவங்கியதோ! கடவுளின் ஆசி அவர்களுக்கு என்றும் இருக்கட்டும்.