• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
குழந்தையின் உண்மையான அப்பா யாரெனத் தெரியும் என்று அனுரதி சொன்னதும், “எப்படித் தெரியும்? யார் சொன்னது?” பதற்றத்துடன் கேட்டார்.

“மதியழகன்! சன் ஆஃப் அபிராமி” என்றாள் அவர் கண்பார்த்து.

“எப்ப?”

“நேத்து நைட்” என்று அவன் வந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.

இரவு மழையில் நனைந்து தன்முன் நின்றவனைக் கண்டு அதிர்ந்தாலும், ‘ஒருவேளை குழந்தை பிறந்ததும் வாங்கிச் செல்ல வந்திருக்கானோ? அதற்குள் என்ன அவசரம்? பிறந்த குழந்தை தாய்ப்பால் இல்லையெனில் என்னாகும்?’ என ஒருவித வெறுப்பு வர அதை அடக்கி, “குழந்தை பிறந்ததும் வந்து வாங்கிட்டுப் போங்க. இப்ப இங்க நிற்க வேண்டாம். உங்க தம்பி வந்தா சங்கடப்படுவாங்க” என்றாள் வந்த வெறுப்பை அவனிடம் காட்டாது.

“ப்ளீஸ்... ப்ளீஸ்” என்று சைகையில் மதியழகன் அவளிடம் ஏதோ பேச முனைய, “என்ன பேசுறீங்க? புரியலை?” என்றாள்.

வேகமாக கைபேசியில் தட்டச்சு செய்து காண்பிக்க, “நான் பேசுறது யாருக்கும் கேட்காது. ஏன்னா எனக்குப் பேச்சு வராது. நான் உங்ககிட்டப் பேசியே ஆகணும்” என்றிருந்தான்.

“ஓ... எனக்குத் தெரியாது. ம்... இல்லையே ஷண்மதி அக்கா நீங்க பேசுவீங்கன்ற மாதிரில்ல சொன்னாங்க” என்று யோசனைக்குச் செல்ல,

அவன் திரும்பவும் தட்டச்சு செய்து காண்பித்ததில், “நான் சூஸைட் அட்டெண்ட் பண்ணினப்ப குரல் போயிருச்சி” என்றிருக்க, “சாரி. இதுவும் எனக்குத் தெரியாது” என சத்தமாகச் சொல்லி, ‘அத்தையோ, மிஸ்டர்.அறிவழகனோ ஏன் சொல்லலை? நீ எங்க அவர் அண்ணனைப் பற்றிப் பேசவிட்ட’ என்று மனசாட்சி திட்ட, அதை சாந்தப்படுத்தி, “என்ன விஷயமா வந்தீங்க?” என கேட்டாள்.

கோப்பு ஒன்றை அவளிடம் நீட்டி படிக்கச் சொன்னான். அவள் கேள்வியாய் நோக்க, “தயவு செய்து படிங்க” என்று தட்டச்சு செய்து காண்பித்தான்.

அதைப் படிக்க ஆரம்பித்தவள், “எனக்குப் புரியலை? எதோ டோனர்... ம்… குழந்தைக்கான அக்ரீமெண்டா?” சந்தேகமாய் கேட்க, இல்லையென தலையசைத்து பேப்பரில் இருந்த ஒரு வார்த்தையை விரல் வைத்துக் காண்பிக்க, அதில், ‘மதியழகனின் உயிரணுக்கள் கம்மியாக இருப்பதால், ஒரு குழந்தைக்கு அப்பாவாகுவது கடினம்’ என்று ஆங்கிலத்தில் இருந்தது. அதிர்ந்து அவனைக் கண்டவள், பின் வயிற்றைத் தொட்டுப் பார்க்க, அதன்பின் ஒரு காகிதத்தைக் கொடுத்தான்.

“வணக்கம்ங்க. நான் மதியழகன். என் மனைவியின், குழந்தை நம்மளோடது என்ற உளறல்ல, வீட்டில் எல்லாரிடமும் கேட்டேன். விடைதான் யாரும் கொடுக்கலை. அப்பதான் அம்மா, தம்பி பேசினதைக் கேட்டேன். நான் உயிரோட இல்லன்னும், என் குழந்தை... அப்படிச் சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன். உங்க வயித்துல வளர்றதாகவும் சொன்னதைக் கேட்டதும், நான் ரொம்பக் குழம்பிட்டேன். நானும் ஷண்மதி இப்படி சொல்றாளே, என்னன்னு திரும்பத்திரும்ப கேட்டும் பதிலில்லை. எல்லாரும் மழுப்பினாங்க. அதுக்கான தீர்வை நாமளே தேடுவோம்னு முடிவு பண்ணிட்டேன்.”

“ஏன்னா, என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்றப்ப, வேற யாரோ உங்க லைஃப்ல விளையாடிட்டாங்களோ பயம். இரண்டு வருடம் குழந்தை இல்லாம, கர்ப்பப்பை எடுத்து, ப்ளாஸ்டிக் கர்ப்பப்பை வச்சின்னு ஷம்மு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா. சில வருடம் கழித்து வாடகைத்தாய் மூலம் குழந்தைன்னு வரவும், எனக்கே ஒரு பயம். நானே தனியா ஒரு ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ண, மூணு நாள்ல ரிசல்ட் வரும்னு சொல்லிட்டாங்க.”

“அன்னைக்கே தம்பியும் என்னை வற்புறுத்தி வேற ஹாஸ்பிடல்ல செக்கப் பண்ணினான். அவன் பார்த்த இடத்துல இரண்டு நாள்ல வரும்னு சொல்ல, அடுத்த இரண்டாவது நாளில் எல்லாமே பாசிட்டிவ்னு வந்தது. மனசுல ஒரு திருப்தியோட ஸ்பெர்ம் டொனேட் பண்ணிட்டேன். வீட்டுலயும் எல்லாருக்கும் சந்தோஷம்.”

“ஒரு வாரம் கழித்து முதல்ல பார்த்த இடத்துல ரிப்போர்ட் வாங்க வரச்சொன்னாங்க. தேவையில்லைன்னு விட்டுட்டேன். பிரைவேட் ஹாஸ்பிடல் இல்லையா, தொடர் போன். வேற வழியில்லாது ரிப்போர்ட் வாங்க போனா, உயிரணு கம்மியா இருக்கிறதால, குழந்தை பிறக்க வாய்ப்பு ரொம்பவே கம்மின்னு இடியை இறக்குறாங்க. அப்புறம் எப்படி அங்கே குழந்தைன்னு மனசு கேட்க, மறுமுறையும் அதே ட்ரீட்மெண்ட் எடுக்க, ரிப்போர்ட் என்னவோ எனக்கு நெகடிவாதான் வந்தது. என்ன பண்ணுறது தெரியலை. பைத்தியம் பிடிக்காத குறை. அதுக்கு மேல முடியாதுன்னு, என் சந்தேகத்துக்கு உடனே ரிசல்ட் கிடைக்குற மாதிரியான ஹாஸ்பிடல் போயி, திரும்பவும் டெஸ்ட் பண்ணினேன். ரிசல்ட் என்னவோ நான் பார்த்த ஹாஸ்பிடல்ல சொன்னதுதான். அந்த ரிசல்ட்தான் இது” என்று எழுதி இருந்ததில், தன் கையில் உள்ள காகிதத்தைப் பார்த்து பின் படிக்க ஆரம்பித்தாள்.

“ஒருவிதமான கோவத்தில், வலியில், இயலாமையில், விரக்தியில் எதைப்பற்றியும் யோசிக்காம சூஸைட் அட்டெண்ட் பண்ணிட்டேன். கோமாவில் இருந்து திரும்பி வந்ததும், உன் குழந்தைன்னு எல்லாரும் பேசினப்ப, எப்படி சாத்தியம்னு தோணிச்சி? திரும்பவும் குழப்பம். குழப்பம் தீர திரும்பவும் டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். முடிவென்னவோ உயிரணுக்கள் கம்மின்றதுதான். நேரே தம்பி கூட்டிட்டுப்போன ஹாஸ்பிடல்ல, அந்த தேதி சொல்லிக் கேட்டேன். எல்லாமே நார்மல்னு சொன்னாங்க. அப்ப இதென்னன்னு கிடுக்குப்பிடியா கேட்டப்ப, டாக்டர்.வர்ஷாவைக் கைகாட்டினாங்க.”

“அவங்ககிட்டேயும் விவரம் கேட்டேன். வாயே திறக்கலை. யாரோட குழந்தையோ என் தம்பி மனைவி வயித்துல வளருது. அதை என்னோட வாரிசுன்னு சொல்லியிருக்கீங்க. இதுக்கே உங்க மேலயும், உங்க ஹாஸ்பிடல் மேலயும் கேஸ் போடுவேன்னு பயமுறுத்தினேன். அப்பதான் உங்களுக்கு நடந்த தப்பான ட்ரீட்மெண்ட் பற்றித் தெரிந்தது. அது இன்னும் கோவத்தைக் கொடுக்க, குழந்தையோட பயாலஜிகல் ஃபாதர் யாருன்னு கேட்டேன். அது வெளில சொல்லக்கூடாதுன்னு அவங்க மறுத்தாங்க. உங்க டீன் கூப்பிடுங்கன்னு சொல்லவும், யாருக்கோ போன் பேசப் போனவங்களைத் தடுத்து நிறுத்தி உண்மையைக் கேட்டேன். அவங்க சொன்ன பதிலில் அவ்வளவு அதிர்ச்சி.”

ஏன் அடுத்ததைப் படித்த அனுரதிக்குமே!

“அனுரதி வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா, உங்க தம்பி அறிவழகன்னு சொன்னாங்க” என்று படித்து முடிக்கையில் பலவித உணர்வுகள் அவளிடத்தில். முதலில் அதிர்வு, அடுத்து உண்மையை மறைத்த கோவம், அதன்பின் ஒரு ஆசுவாசம். மூச்சை இழுத்து விட்டவளுக்கு அப்படியொரு நிம்மதி. ‘கணவன் ஏன் சொல்லவில்லை?’ என்று நிதானமாக யோசித்தவளுக்கு ஆயிரம் காரணங்கள் கண்முன். ஏனோ நியாயத்தராசு கணவன் புறம் உறுதியாக நின்றது. மேலும் வாசிக்க ஆரம்பித்தாள்.

“அதிர்ச்சியில் எப்படின்னு கேட்டப்ப, உங்க சம்பந்தப்பட்ட ஃபைல்ஸ் எல்லாம் உங்க தம்பி கான்டாக்ட் நம்பர்ல இருக்கு. முதல் செக்கப்லயே உங்களுக்கான குறை தெரிஞ்சிருச்சி. ட்ரீட்மெண்ட் எடுத்தாலும் குறைந்தது நாலு வருடமாவது ஆகும்னு சொன்னோம். அவர்தான் தன்னோட அண்ணி நிலை பற்றிச் சொல்லி, என் அண்ணனுக்கு குழந்தை பெத்துக்க முடியும்னு ரிப்போர்ட் கொடுங்க சொன்னார். நான் முடியவே முடியாதுன்னு பிடிவாதமா மறுத்தேன்.”

“வாடகைத்தாய்னு ஆகிப்போச்சி, என்னோடது சரியா இருந்தா என் அண்ணன், அண்ணிக்கு ஒரு குழந்தை கிடைக்கும். யாரும் வந்து கேள்வி கேட்காம இருக்கிறது என் பொறுப்பு. என் அண்ணனுக்கு இது தெரிந்தா வாழ்க்கையையே வெறுத்துருவான். அவன் தப்பான முடிவெடுத்தா என்ன பண்ணுறது டாக்டர்? குடும்பமே சிதைஞ்சிரும். அதுக்கு இந்த முறை எவ்வளவோ பரவாயில்லை. அண்ணன், அண்ணியும் சந்தோசமா நிம்மதியா இருப்பாங்கன்னு ரொம்பவே கெஞ்சி, டீனுக்கே தெரியாமல்தான் இதை நடத்தியிருக்கான். என் தம்பின்னு சொல்ல அவ்வளவு பெருமையா இருக்கு.”

“உங்களுக்கு நடந்தது தவறான சிகிச்சையா இருந்தாலும், இரண்டு தவறும் சேர்ந்து, தவறாம உங்க வயித்துல வளர்ந்து உங்களைச் சேர்த்து வச்சிருச்சி. மனசு ரொம்ப நிம்மதியா இருக்குங்க. எனக்கு உண்மை தெரியும்ன்றது தம்பிக்குத் தெரிய வேண்டாம்னு டாக்டர்கிட்ட சொல்லிட்டேன். ஏன்னா, இதைக் கேட்கிற உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு. உங்க குழந்தை உங்களோடதாகவே வளரட்டும். தாயையும், பிள்ளையையும் பிரித்த பாவம் எனக்கு வேண்டாம். ஷம்மு... அவளை நான் பார்த்துக்குறேன். என் சந்தோசத்துக்காக விட்டுக்கொடுத்த, என் தம்பி சந்தோசம்தான் எனக்கு முக்கியம். நல்ல ஆரோக்கியத்தோட இருங்க” என்று முடிந்திருந்தான் மதியழகன்.

நிமிர்ந்து மதியழகனைப் பார்க்க, புன்னகைத்தவன், “ஹேப்பி” என்றான் வாயசைத்து.

இப்பொழுது அவளுக்கும் அவன் மொழி புரிய கண்கலங்க, “ம்... ரொம்பவே” என்றாள்.

“குட். எதையும் யோசிக்கக்கூடாது. என் தம்பி மாதிரி ஒரு ஹஸ்பண்ட் வரம். வரத்தை பொக்கிஷமா பார்த்துக்கோங்க. நான் வர்றேன்” என்று செல்ல, அடுத்த சில நிமிடங்களில் அறிவழகன் வர உரிமையாகக் கட்டிப்பிடித்திருந்தாள்.

இதோ மருத்துவர் முன் அனைத்தையும் சொல்லி, “நீங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கே எதையோ மறைக்குறீங்கன்னு தோணிச்சிது டாக்டர். கேட்டா சொல்லமாட்டீங்கன்னு கேட்கலை” என்றாள்.

“உன் புருசன் என்னை சென்டிமெண்டால லாக் பண்ணிட்டாரே அனுமா. உன் கஷ்டம் பார்த்து எப்படியாவது உன்கிட்ட சொல்லணும்னு வெறி. ஆனா, அறிவழகன் குடும்பத்தை நினைச்சதும் ஊமையாகிட்டேன். தன் குழந்தையை அண்ணன் குழந்தைன்னு சொல்றப்ப, உன் ஹஸ்பண்ட்கு வராத வலியா சொல்லு. உன்னையும் பார்த்து, ஷண்மதியையும் சமாளிச்சி, கடைசி ஸ்கேன் வந்தப்ப, உங்களை வெளியில உட்கார வச்சிட்டு அவரை ரொம்ப பேசிட்டேன்” என்று தான் திட்டியதைச் சொல்லி, “ரொம்பவே அழுதுட்டார் அனுமா.”

“டாக்டர்!” என்றாள் தவிப்புடன்.

“எனக்கே கஷ்டமாகிருச்சி. கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை மாதிரிதான். ஷண்மதியையும் சமாளிச்சி, உன்னையும் விட்டுக்கொடுக்க முடியாம, என்ன பண்றதுன்னு தெரியாத இரண்டுங்கெட்டானா இருக்கிறது கொடுமைல அனுமா.”

“ஆமா டாக்டர். ரொம்பவே” என்றவள் கண்களிலும் கண்ணீர்.

அவள் கண் துடைத்து, “குழந்தை பெத்த உடம்பு அழக்கூடாது. அழுதா ஜன்னி வந்திரும். எப்பவும் சந்தோஷமாயிரு. உன் ஹஸ்பண்ட் சொன்ன மாதிரி, அடுத்த வருடம் இதே நாள் அடுத்த குழந்தை வந்திருக்கணும். சரியா?”

“டாக்டர்” என சங்கடத்துடன் வெட்கப்பட்டவளிடம், “இந்த அனு ரொம்ப அழகா இருக்கா. உன் சிரிப்பைப் பார்க்குறதே அதிசயம்னு நினைச்சா, இப்படி வெட்கப்பட்டு, நாணம் கொண்டு சிணுங்கி, ப்பா... உன் ஆத்துக்கார் பார்த்தா ஆள் காலி” என்றார் கேலியாக.

“டாக்டர்! நீங்க போங்க. தப்புத்தப்பா பேசுறீங்க” என்றாள் சிணுங்கல் மாறாது.

“இப்ப வெளில போயி உன் அவரை அனுப்புறேன். அவர்கிட்ட உன் சிணுங்கலைக் காட்டு” என்று வெளியே செல்லக் கிளம்பியவர் எதோ யோசித்தபடி, “அனுமா! குழந்தை” என நிறுத்தினார்.

“அதுக்கான முடிவை நான் நேற்றே எடுத்துட்டேன் டாக்டர். அதை செயல்படுத்துறது மட்டும்தான் பாக்கி. மிஸ்டர்.அனுரதிகிட்டயும் கேட்டுக்கணும்” என்றாள்.

“நீ முடிவெடுத்துட்டாலே போதுமே மிஸஸ்.அறிவழகன். உங்க அழகன் மறுபேச்சு பேசமாட்டார்” என்று புன்னகையுடன் வெளியே சென்று அவர்களை அனுப்பினார். அதற்குள் குழந்தையை நகர்த்தி ஆடையை சரி செய்திருந்தாள் அனுரதி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
இன்று குழந்தை பிறந்து முப்பதாவது நாள். பெயர் வைக்கும் விழாவை சாரதா இப்போது இருக்கும் வீட்டில் வைத்திருப்பதால், குடும்பத்தினர் தாண்டி மருத்துவர்.வர்ஷா, மாலினி குடும்பம் மட்டுமே வந்திருந்தனர்.

இந்த ஒரு மாதத்திற்குள் ஷண்மதியிடம் நிறைய மாற்றங்கள். குழந்தையைப் பார்க்க வந்தவள் வேறெதுவும் பேசாது, குழந்தையை மட்டும் கொஞ்சிவிட்டு சென்றுவிட்டாள். அவளின் அமைதி அனைவருக்கும் ஆச்சரியமே!

காரணம் என்னவோ மதியழகன்தான். ‘குழந்தை வேண்டுமா? நான் வேண்டுமா? முடிவு உன் கையில்’ என்று தன் முடிவைச் சொல்லி, மனைவியின் பதிலுக்காகக் காத்திருந்தான். குழந்தை குழந்தையென்று பைத்தியமாய் அலைந்தவளிடம், நானா? குழந்தையா? என்றால் என்ன செய்வாள் அவளும். மனம் குழம்பி, மூளை செயலாற்ற மறுத்து, சில மணி நேரங்கள் அப்படியே கழிய, “ஏன் இப்படியொரு கேள்வி?” நேருக்குநேர் கணவனிடம் வந்து நின்றாள்.

“உன் முடிவில்தான் என் பதில் இருக்கு ஷம்மு. நாம மட்டும்தான் நம் குடும்பம். இதில் குழந்தை கிடையாது. இந்த முடிவுக்கு தெளிவா வர முடிந்தால் சொல்லு. குழந்தைதான் வேணும்னா நான் உனக்கு இல்லை” என்றான் நிதானமாக தெளிவான மனதுடன்.

“ஏ...ஏன் இப்படி?” என்று அழுகுரலில் கேட்டாள்.

“சிலதுக்கு விளக்கம் இருக்காது ஷம்மு. முடிவுதான் முக்கியம்” என்றதில் அன்றும் மறுநாளும் ஷண்மதியின் அமைதியே தொடர, மனைவி மனநல மருத்துவரிடம் சென்று வந்திருக்கிறாள் என்று தெரிந்து மனம் வருந்தினாலும், அமைதியாகவே இருந்தான் மதியழகன்.

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் காலை கணவன் முன் வந்தவள், “எனக்குக் குழந்தை வேண்டாம். நீங்க போதும். உங்களோட அந்தத் தற்கொலை முடிவிற்குக் கூட குழந்தைதான் காரணம் தோணுது. அந்த நேரத்துல என்னையும் கொஞ்சம் நினைச்சிருக்கலாம். சரி விடுங்க. நான் அந்தளவு உங்களுக்கு முக்கியமில்லை போல. ஹ்ம்..., உங்களை இழந்துதான் குழந்தைன்னா, எனக்கு அது தேவையில்லை” என்ற மனைவியின் தெளிவான பதிலில் வேகமாக மனைவியைக் கட்டிக்கொண்டான்.

முதுகில் ஈரத்தன்மை உணர்ந்ததுமே, அவனைத் தன்னிடமிருந்து விலக்கி, “என்னாச்சிங்க? ஏன் இந்தக் கண்ணீர்? இத்தனை காலம் அழுததெல்லாம் போதாதா? உங்களுக்கு நான் தேவையில்லாமல் இருக்கலாம். எனக்கு நீங்கதான் முக்கியம்” என்று கணவனின் தவறைச் சுட்டிக்காட்டியவள் கண்ணீர் துடைத்து, “என்ன பிரச்சனை?” என கேட்டாள்.

“ஐம் சாரி ஷம்மு” என திரும்பவும் கட்டிக்கொண்டு, பின் தன் இரு கைகளால் அவள் முகம் ஏந்தி, “என்னை மன்னிச்சிரு. இதை நான் திரும்ப வந்ததும் கேட்டுருக்கணும். ஆனா, ப்ச்... நான் சுயநலமா இருந்துட்டேன். நான் இல்லைனா என் குடும்பம் என்னாகும்னு யோசிக்கலை. உன்னை, அம்மா, தம்பி, மாமான்னு என்னைச் சார்ந்தவங்க யாரையும் நினைக்காம, என்னோட கஷ்டம்தான் உலகத்துலயே பெருசுன்னு அப்படியொரு முடிவெடுத்துட்டேன். உன்னை ரொம்பவே... எனக்கு என்ன சொல்லுறது தெரியலை ஷம்மு. இனி எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் தப்பான முடிவெடுக்கமாட்டேன். இது சத்தியம் ஷம்மு. ஐ லவ் யூ” என்றான் உணர்ந்து.

ஏனோ ஷண்மதியின் மனபாரமும் சற்றே குறைய, “சரி விடுங்க. நம்ம நேரம்னு போக வேண்டியதுதான். ஏன் அந்த முடிவுக்கு வந்தீங்கன்ற காரணம் தெரிஞ்சிக்கலாமா?” என்றதும் அங்கிருந்த அலமாரியிலுள்ள கோப்பு ஒன்றை எடுத்து வந்தவன், அதில் இருந்த காகிதத்தை எடுத்து, அதிலும் குறிப்பிட்ட சில இடத்தைக் காண்பித்துக் கட்டிலில் தலைகவிழ அமர்ந்திருந்தான்.

கணவன் தொட்டுக் காண்பித்த இடம் தாண்டி, அனைத்தையும் முடித்தவள் அமைதியாக அவன் அருகில் வந்தமர்ந்து தோள்சாய்ந்து, “இதை என்கிட்ட சொல்லியிருக்கலாமே. புரிஞ்சிக்கலைன்னா இரண்டு அடிபோட்டாவது நிஜத்தை உணர்த்தியிருக்கலாம். அதுக்காக அவ்வளவு பெரிய முடிவெடுப்பீங்களா? எனக்குக் கூடதான் கர்ப்பப்பை பிரச்சனை. நான் யாரை நோக. சொல்லுங்க? இல்லைன்னா உங்களை மாதிரி...” அடுத்து சொல்லும் முன் அவள் வாய்மூடி, கண்பார்த்து, “சொல்லாத ப்ளீஸ்” என்றவன் இறுக்கி அணைத்துக்கொண்டான்.

எதோ யோசித்தவளாய் கணவனை விலக்கி, “அப்ப அனு வயித்துல இருக்கிற குழந்தை?” என நிறுத்தினாள்

அவன் நடந்ததைச் சொல்ல, “நமக்காகவா?” என்றாள். கணவனின் ஆமென்ற தலையசைப்பில், “அனு பாவம்ல. தற்செயலா நீர்க்கட்டி ட்ரீட்மெண்ட்கு வந்த பொண்ணைப் போய், ப்ச்... குழந்தை நம்ம இரண்டு பேரோடதுன்னு நினைச்சி, நான் வேற அவளை ரொம்ப நோகடிச்சிட்டேன்ங்க. உன் வயித்துல இருக்கிறது என்னோட குழந்தைன்னு சொல்றப்பல்லாம் எப்படி இருந்திருக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா. கடவுள் எதோ சாபம் கொடுத்து நம்மை அனுப்பிட்டான் போல. ஒருத்தராவது ஆரோக்கியமா இருந்திருக்கலாம்” என்றாள் வருத்தமாக.

மனைவியின் முகம் பார்த்து, “இல்ல ஷம்மு நாம நிறைய புண்ணியம் செய்திருக்கோம். அதான் நம்ம உறவுகள் நல்லவிதமா அமைஞ்சிருக்கு. அறிவு... என்ன மனசு அவனுக்கு? அவன் தம்பியா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்” என்றான்.

அனுரதிக்கு நடந்த கொடுமை பற்றியோ, அதற்குப் பின்னான மருத்துவ சிகிச்சையில் நடந்த குழறுபடி பற்றியும், வர்ஷா மதியழகனிடம் கூறியிருக்கவில்லை. அது எப்பொழுதும் ஒரு சிலருக்கான இரகசியம் மட்டுமே!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top