• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 23, 2024
Messages
22
விடியும்வரை கதைப்போமா - 1

“இன்னும் எத்தனை வாட்டி இந்த வேலையெல்லாம் நான் செஞ்சுகிட்டு இருக்கிறதோ தெரியல. ஒவ்வொரு வாட்டியும் வரவங்க எல்லாம் நல்லா தின்னுட்டு போறாங்களே தவிர உங்க தங்கச்சியை கட்டிக்கிட்டு போற மாதிரி எனக்குத் தெரியல. ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்கன்னு சொன்னாலும் கேட்கிறது இல்லை. என்ன ஒரு மனுஷியா கூட மதிக்கிறதே இல்ல. இந்தச் சின்ன வீட்டுல இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கிட்டு இருக்க முடியும்?? நமக்கும் ரெண்டு பிள்ளைங்க வரப்போறாங்க” என்று குழலி கத்திக் கொண்டிருக்க.

கவி அவள் வயிற்றில் நான்கு மாத சிசுவாக இருக்கும் இரண்டாவது குழந்தையைப் பார்த்தான்.

முதல் குழந்தை மூன்று வயது இருக்கும். இன்னும் பள்ளிக்கு கூடச் செல்லவில்லை. அதற்குள் பிள்ளைகளுக்குத் தனி அறை கேட்கிறாள் இவள். ஏதாவது பேசினால் பதிலுக்குப் பதில் பேசுவாள். அவளிடம் பேசுவதை விட அமைதியாக இருப்பது சிறந்தது என்று அவனும் எவ்வளவு நேரம் தான் வாயை மூடிக் கொண்டிருப்பது??.

“நான் பாட்டுக்குப் பொலம்பி கிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்குச் சும்மா இருக்கீங்க. உங்க அம்மா அப்படி இப்படின்னு எதையாவது செஞ்சுட்டு போயிடுறாங்க. ஆனா வர்றவங்களை உபசரிச்சு அவங்களுக்கு வேண்டியது எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சு, அப்பப்பா எனக்கு இடுப்பே உடைஞ்சு போயிடுது. முதல்ல எல்லாம் மாசத்துக்கு ஒருத்தர் வந்தாங்க. இப்ப வாரவாரம் வராங்க. சரி வந்தவனுங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிறானுங்களா?? அதுவும் கிடையாது. அது நொட்ட இது நொட்டன்னு சொல்லிட்டு போறானுங்க இதுக்கு எதுக்கு வரணும்?, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு தானே வரானுங்க. அப்புறம் வந்துட்டு நல்லா தின்னுட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனா என்ன அர்த்தம்?. யாரையாவது காதலிச்சு இருந்தா கூடப் பரவாயில்லை, அதுக்கும் உங்க தங்கச்சிக்கு துப்பில்லை. அப்படியே காதலிச்சு இருந்தாலும் இவளோட நிலைமையைப் பார்த்த பிறகு பிச்சுகிட்டு போய் இருப்பானுங்க” என்று அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டு இருந்தாள்.

அவன், செவிடன் காதில் ஊதிய சங்கு போல அமைதியாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தான். இதற்கெல்லாம் எத்தனையோ முறை கண்டித்தாகிவிட்டது, திட்டியாகிவிட்டது ஏன் வீட்டை விட்டு வெளியில் போ என்று விரட்டியும் ஆகிவிட்டது. வாசலிலேயே அழுது புலம்பி ஊரைக் கூட்டினாளே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. மொத்தத்தில் அவளை அவனால் அடக்க முடியவில்லை. அவள் அடங்கிப் போகும் ரகமும் இல்லை. மீறி எதையாவது செய்தால் அசிங்கப்படுத்தும் ரகம். அதனால் வேறு வழி இல்லாமல் அவன் தான் பொறுத்து போகிறான்.

சமையல் வேலையெல்லாம் செய்தது தாய் தான். இவள் எதற்காக இவ்வளவு நொடித்துக் கொள்கிறாள் என்று மனதில் சலிப்பாக இருந்தது.

“தெரியாத்தனமா காதலிச்சிட்டேன். இப்ப அதுக்கான தண்டனையை அனுபவிக்கிறேன்” என்று மனதிற்குள் புலம்பத் தான் முடிந்தது.

அது இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட மாடி வீடுகளின் தொகுப்பு. அதில் ஒன்றில் தான் அவர்கள் வீடு இருந்தது.சொந்த வீடு தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு தந்தை வாங்கியது. தந்தை இப்பொழுது உயிரோடு இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு காலம் ஆகிவிட்டார். அதுவும் கோர விபத்தில். அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால், இந்த நிலை தங்கள் யாருக்கும் வந்திருக்காது என்று தோன்றியது.

மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிதானமாகத் தான் சென்றார். ஆனால் எதிரில் வந்த லாரி தான் பிரேக் பிடிக்காமல் அவர்மீது வேகமாக மோதியது. அதில் தலை குப்புற விழுந்தவர். லாரியின் டயரிலேயே சிக்கி சிதைந்து போனார். அவர் உடலைப் பார்க்கும்போது அவன் கதறி அழுதது இன்னும் அவன் மனக்கண்ணில் இருந்தது. தங்கையாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று அவன் வேண்டாத கடவுள் இல்லை. அவனுடைய செல்லத் தங்கை இன்றளவும் செல்லத் தங்கையாக தான் இருக்கிறாள். தாய் தங்கை மனைவி என்று மூவரையும் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை இருந்தது. அதற்காக எல்லா நேரத்திலும் பொறுத்து போகமாட்டான். அவன் சில நேரத்தில் வீறு கொண்டு எழுந்து எதையாவது பேசி வைத்தால். மறுநாள் தன் தாய்க்கு என்ன கிடைக்கிறதோ என்னவோ அவர் முகமே சரி இருக்காது. கேட்டாலும் அவர் பதில் சொல்லமாட்டார். வேலைக்குச் செல்கிறவன் எப்பொழுதும் வீட்டில் இருக்க முடியாது. வீட்டில் இருக்கும் இருவரும் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. மனைவியையும் விட முடியாது, தாயையும் விட்டுக் கொடுக்க முடியாது. இரு தலைக்கொல்லி எறும்பாகத்தான் தவித்துக்கொண்டிருந்தான். இங்குப் பெரும்பாலான ஆண்களின் நிலை இதுதான். அதில் சிலர் மனைவியை ஏற்றுக்கொண்டு தாயை நிற்கதியாக நிற்க வைத்து விடுகின்றனர். அது காலத்தின் கொடுமை தான். ஆனால் கவி அதுபோல இல்லை. தாய் தங்கை இருவரின் மீதும் மிகுந்த பாசம் உடையவன். அதேபோல மனைவியின் மீதும் காதல் அதிகமாகவே இருந்தது.

ஆறு வருட காதல். அவளைத் தவிக்க விடாமல் திருமணமும் செய்து கொண்டான். ஆனால் அவள் அதைப் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது இதுபோல விஷ அம்புகளால் கொத்திக் கொண்டிருக்கிறாள்.

இத்தனைக்கும் தங்கைக்கான நகைகள் இருந்தது. அவளுக்காகத் தந்தை சேர்த்து வைத்த பணமும் இருந்தது. அது அவர் திருமணத்திற்கு தாராளமாகப் போதும். அது இல்லாமல் அவளும் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறாள். மாதம் இருபது ஆயிரம் என்று சம்பாதிக்க ஆரம்பித்து இப்போது அது முப்பது ஆயிரத்தில் வந்து நிற்கிறது. பணத்திற்கு கஷ்டப்படும் வீடு இல்லை அவர்களது என்றாலும். பெண் பார்க்க வருகிறவர்கள் சாப்பிட்டுவிட்டு போகும் சொற்ப பட்சணங்களுக்காக இவள் புலம்புகிறாளா அல்லது இன்னும் தங்கைக்குத் திருமணம் முடியவில்லை என்று புலம்புகிறாளா என்று அவனுக்கே புரியவில்லை. எப்படி என்றாலும் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவது தன்னுடைய கடமை. தன் தாய் தன்னிடம் எதிர்பார்ப்பதும் அது ஒன்றுதான்.

“கவிச்சந்திரா, உன் பொண்டாட்டிக்கு நான் இங்க இருக்கறது பிடிக்கல. தங்கச்சிக்கு திருமணம் முடிஞ்சிட்டா என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுடு. நான் அங்க சந்தோஷமா இருந்துப்பேன். நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா இருந்தா எனக்கு அது மட்டுமே போதும்” என்று கூறிய தாயை பாதூரமாகப் பார்த்தான்.

சிறுவயதிலிருந்து தனக்காகத் தியாகங்கள் மட்டுமே செய்து வளர்ந்தவர். இப்பொழுதும் தன் நிம்மதிக்காகத் தன் சந்தோஷத்திற்காகத் தியாகம் செய்ய அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அவரை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை.

“அம்மா ப்ளீஸ்மா அப்பா கிட்ட என்னோட லவ்வ பத்தி சொல்லிக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கம்மா” என்று அவன் கெஞ்சி நின்று இருக்க. அவர்தான் ஏதேதோ சமாதானங்களை கூறி அவர்கள் இருவருக்கும் முன் நின்று திருமணத்தையும் நடத்தி வைத்தார். காரணம் அவர்கள் இருவரின் ஜாதியும் வெவ்வேறு. அது தந்தைக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. குடும்பத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்பார்கள் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தட்டி கழித்தார். ஆனால் இவன் விடாப்பிடியாக இருந்து அவளைக் கரம் பற்றினான்.

அவள் இன்னும் பிதற்றி கொண்டே இருக்க. அவள் முன்பு வந்து நின்றவன். “உனக்கு வாய் வலிக்கலையா?? நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா அதை மறந்துடாத” என்று கூறினான்.

“என்ன சாபம் விடுறீங்களா?? அது உங்களுக்கும் பொண்ணு தான் இப்படி கேட்க உங்களுக்கு வெக்கமா இல்ல?” என்று மீண்டும் படபடக்க. அவன் காதைக் குடைந்து கொண்டே தங்கையின் அறையை நோக்கிச் சென்றவன், தட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.

கண்ணாடியின் முன்பு சிலைபோல் அமர்ந்திருந்தாள் ஆராத்யா. தன் அண்ணனைப் பார்த்ததும் சிரிக்க முயன்று தோற்றாள்.

“ரெடி ஆயிட்டியா ஆரூ?. ரொம்ப அழகா இருக்க” என்று முகம் மலர்ந்து கூறினான் கவி சந்திரன்.

அவளிடம் விரக்தியான புன்னகை மட்டுமே. கையைப் பிசைந்து கொண்டு இருந்த தன் தாயின் அருகில் வந்து அமர்ந்தான்.

“அவள் பேசினதெல்லாம் கண்டுக்காதீங்க. சரியான ஓட்டை வாய். அவள் ஊமையாகி இருந்தா நான் சந்தோஷப்பட்டு இருப்பேன்” என்று கூறிய நொடி.

அவனுடைய தாய் விசாலாட்சி அவன் வாயைப் பொத்தினார். “என்ன பேச்சுக் கவி இது எல்லாம்??. ஒரு பொண்ணுக்கு இந்த நிலைமை ஆனதுக்கே நாம எவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இவளைக் காப்பாத்துறதுக்குள்ள நாம எவ்வளவு தவிச்சோம். ஹெல்மெட் போட்டுட்டு இருந்ததனால உயிர் தப்பிச்சாள். இல்லன்னா?” என்று நிறுத்தினார்.

ஆராத்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் விழுக்கென்று வந்துவிட்டது. எழுந்து வந்து தன் தமையனின் தோள்மீது கோபமாக அடித்தாள்.

“தவறு, நீ பேசுவது தவறு” என்று தலையை ஆட்டி அவனுக்குப் பார்வையால் உணர்த்தினாள்.

“இவள் இப்படி பேசிக்கிட்டே இருந்தா எனக்கு அவளை அரையனும்னு தோணுது. பொம்பள பிள்ளை மேல கை வைக்கக் கூடாது நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு தங்கச்சி இருக்குன்னு நானும் எவ்வளவுதான் கட்டுப்படுத்திக்கிறது?“ என்று அவன் மெல்லிய குரலில் தான் கூறினான்.

அதில் கூட அவள் காயப்படக் கூடாது என்று நினைத்தான். ஆனால் அவள் தான் அவனை மட்டும் அல்லாமல் அவன் குடும்பத்தையே காயப்படுத்திக் கொண்டிருக்கிறாள். ஆழ்ந்த பெருமூச்சை விட்டவனுக்கு அவன் தவறு புரிந்தது.

காதைப் பிடித்துக் கொண்டு சாரி கேட்டான். அவன் தலையைக் கலைத்து விட்டாள் தங்கை.

இருவருக்கும் ஐந்து வருட வித்தியாசம் இருந்தாலும் இருவரும் அவ்வளவு அன்னியோன்யமான அண்ணன் தங்கை. கணவன் மனைவிக்குத் தான் அப்படி சொல்ல வேண்டுமா என்ன? சகோதர சகோதரிகளுக்கும் சொல்லலாம். அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக அவர்களைக் கூறலாம். அவ்வளவு அன்பு. அண்ணனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியவளே முதலில் அவள் தான். தமையனுக்கு துணையாகவும் நின்றாள். திருமணத்திற்கு முன்பு வரை நன்றாகப் பழகிக் கொண்டிருந்தவள் தான். ஆனால் கடந்த இந்த ஒன்றரை வருடங்களாக அவர்களுக்குத் தான் சுமையாக மாறிப்போனதை வலிக்க வலிக்க உணர்ந்து கொண்டிருந்தாள் ஆராத்யா.

தங்கைக்குத் திருமணம் முடித்துத் திருமணம் செய்கிறேன் என்று அவன் காத்திருக்க தயாராகத் தான் இருந்தான். ஆனால் குழலியின் வீட்டில் அடம் பிடித்தார்கள், அவசரப்படுத்தினார்கள். வேறு வழி இல்லாமல் தங்கைக்கு முன்பே அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலையானது. அவள் அப்பொழுது கல்லூரியின் முதல் ஆண்டு தான் படித்துக்கொண்டிருந்தாள். எப்படியும் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று ஆராத்யாவே சமாதானங்கள் கூறி அவனின் திருமணத்திற்கு வழி வகுத்திருக்க.

இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிக் கொண்டிருந்தது.

கட்டிலின் மீது அமர்ந்திருந்தவனின் அலைபேசி ஒளிர்ந்தது. எடுத்தவன். பேசிவிட்டு தன் தாயை பார்த்து “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. நான் போய் அழைச்சிட்டு வரேன்” என்று அந்த அறையை விட்டு வெளியில் செல்ல. அவன் மனைவி அவனை முறைத்து கொண்டு நின்று இருந்தாள்.

“பேசுனது கேட்டுடுச்சோ?’ என்று மனதிற்குள் நினைத்தபடியே அவளிடமும் அதையே கூறிவிட்டு அவசரமாக வெளியில் சென்றான். பத்து நிமிடங்களில் பெண் பார்க்க வந்திருந்த அனைவரையும் வீட்டின் உள்ளே அழைத்துக் கொண்டு நுழைந்தான் கவிச்சந்திரன்.


பெரிதாகக் கும்பல் இல்லை. வயதானவர்கள் மூன்று பேர் இருந்தனர். நடுத்தர வயதில் இரண்டு பேரும் முப்பதுகளில் ஒருவனும். அவன் கையில் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. அவன் தான் மாப்பிள்ளை என்று புகைப்படத்தில் பார்த்த ஞாபகம் இருந்தது.
 
New member
Joined
Dec 23, 2024
Messages
22
தங்கைக்கு இருபத்தி நான்கு வயது தான் ஆகிறது. ஆனால் இவனுடைய வயது??. பார்த்தால் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. இதில் இரண்டாம் தாரம் வேறு. அதுதான் அவனுக்குப் பெரிதாக இடித்தது. ஆனால் தங்கை சம்மதம் கூறி விட. இவனும் விசாரித்தவரையில் மாப்பிள்ளைபற்றி எதுவும் தவறாகக் கேள்வி படாததால் ஒருவாராக மனதை தேற்றிக்கொண்டு பெண் பார்க்க வர வைத்திருந்தான்.

விசாலாட்சியும் குழலியும் முக மலர்ந்து வரவேற்றனர் அனைவரையும் அமர வைத்தனர். பெண்கள் இருவர் தான் இருந்தார்கள் அவர்களைத் தரையில் அமர வைத்தார்கள்.

வயதில் மூத்தவராக இருந்தவர் வாய் திறந்தார். இவன்தான் என் மகன் அபிமன்யு. காலேஜ்ல ப்ரொபசரா இருக்கான். இது அவனோட பையன் ஆத்ரேஷ். இது என்னோட மனைவி இது என்னோட மகள் அவளோட புருஷன். இது என்னோட தங்கச்சி” என்று அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் அபிமன்யுவின் தந்தை பாண்டியன்.

அவனும் அதே போல அறிமுக படலத்தை முடித்துவிட்டு சம்பிரதாயமான பேச்சுக்களுக்கு பிறகு பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள். கவி தாயைப் பார்க்க. அவரும் குழலியும் சேர்ந்து ஆராத்யாவை அழைத்து வந்தார்கள்.

ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்திருந்தாலும். ஒப்பனை இல்லாத அழகு அவளுடையது. மிக மிக சாதாரணமாகத் தான் இருந்தாள். கோயிலுக்குச் செல்வது போல அடக்கமான அழகு. அம்பிகாவுக்கு மிகவும் அவளைப் பிடித்து விட்டுத் தான் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.

சம்பிரதாயமாக வணங்கி விட்டு அனைவருக்கும் தேநீரை கொடுத்துவிட்டு அவள் ஓரமாக நின்று கொண்டிருக்க.

“இங்க வாம்மா இங்க வந்து உட்காரு?” என்றார் அம்பிகா.

அவளும் அமைதியாக வந்த அவர் அருகில் அமர்ந்தாள்.

“உன் பேர் என்னமா?’ என்று கேட்டார். அவள் திகைத்து விழித்து விட்டு அண்ணனைப் பார்க்க.
“ஆராத்யா” என்றான் கவிச்சந்திரன்.

“படிச்சிட்டு வேலைக்குப் போறேன்னு சொன்னாங்க கேம்பஸ் கிடைச்சிடுச்சாமே??. எந்தக் கம்பெனில போற? எவ்வளவு சம்பளம்? “ என்று கேட்டார். அதற்கும் பதிலைக் கவிச்சந்திரனே கூறினான்.

“ஏங்க பொண்ணு குரல் எப்படி இருக்குன்னு கேட்கலான்னு கேள்வி கேட்டா??, நீங்களே பேசிகிட்டு இருக்கீங்களே? இதெல்லாம் தரகர் சொல்லாமலா நாங்க வந்து இருக்கோம்? “ என்று கேட்ட நொடி. அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

ஆராத்யாவிற்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்து விட்டது.

“என்னங்க சொல்றீங்க?? பொண்ணுக்கு ஆக்சிடென்ட்ல குரல் போய்டுச்சுன்னு தரகர் உங்க கிட்ட சொல்லலையா? “ என்று பரிதவிப்புடன் விசாலாட்சி கேட்க.

“என்ன??, குரல் போயிடுச்சா?“ என்று அதிர்வுடன் கேட்டனர். அதுவரை பெண்ணைப் பார்க்காத அபிமன்யு நிமிர்ந்து பார்த்தான்.


மிக அழகாக இருந்தாள். ஆனால் அவள் முகத்தில் அப்பட்டமான கலவரம். இவளுக்குக் குரல் இல்லையா?, பேச வராதா?? என்று அவனும் அதிர்வுடன் தான் பார்த்திருந்தான்.
 
Last edited:
Top