New member
- Joined
- Nov 28, 2024
- Messages
- 11
- Thread Author
- #1
உறக்கம் கலைந்து எழுந்து கண்ணாடி முன் வந்து தன் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை பார்த்தவளின் முகத்திலோ புதிதாக திருமணமான பெண்ணுக்கு உரிய ஆர்வம் சந்தோசம் எதுவுமே இல்லாத உணர்ச்சிகளை துடைத்த முகம் போல் வெறுமையாக காட்சி அளிக்க, மாங்கல்யத்திலிருந்த தன் பார்வை அகற்றி கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை கண்டு விரக்தி புன்னகையை வீசியவளின் எண்ணமுமோ தன் கனவுகளை எண்ணியிருக்க அந்நேரம் அவள் திறன்பேசியில் மின்னஞ்சல் வந்ததில் எழுப்பிய சத்தம் கேட்டு நிகழ் உலகத்திற்கு வந்த பாவையோ தன் திறன்பேசியில் வந்த பதிவை காண,
"உங்களுக்கு நன்றாக பாட வருமா.. திரைப்படத் துறையில் பாடகராக கால் பதிக்க வேண்டும் என்பது உங்களின் கனவா.. அப்படிப்பட்டவர்களின் கனவை நிஜமாக்கவே ஸ்டார் மியூசிக் அசோசியேஷன் மூலம் புதிய திறமையான பாடகர்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் நடத்தும் ஆல்பம் சாங்கிற்கான ஆடிஷன் இதோ.. அதில் மூன்று சுற்று போட்டி வைத்து இறுதியாக மூன்றாவது சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று வெற்றியாளர்களுக்கு ஸ்டார் மியூசிக் அசோசியேஷன் மூலம் பல ஆல்பம் சாங் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்கும்.. இதனால் புகழ் பெற்ற உங்கள் குரல் வளத்தால் ஒரு படி மேல் சென்று திரைப்படத்துறையில் பாடகராக மாறும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை..
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உங்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்றால் உங்கள் பொன்னான குரலால் பிடித்தமான பாடல் ஒன்றை தேர்ந்தெடுத்து பாடி பதிவு செய்து, எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அப்படி அனுப்பி வைக்கப்படும் பாடல்களில் நாங்கள் தேர்ந்தெடுக்கும் 15 பாடல்களை பாடியவர்கள் மட்டுமே முதல் சுற்றில் பங்கு பெற முடியும்..
தாமதிக்காமல் நாங்கள் அளித்த இரண்டு மாத கால அவகாசத்துக்குள் உங்கள் குரலை அனுப்பி வைத்து, வருங்கால சிறந்த பாடகராகும் கோல்டன் ஆப்பச்சூனிட்டியை மிஸ் பண்ணிடாதீங்க" என்ற பதிவை முழுவதும் பார்த்தவளுக்கோ துளி துளியாக கண்களிலிருந்து நீர் வடிய, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நிதானத்திற்கு வந்தவளோ, கண்களை அழுத்தி துடைத்து கதவை திறக்க,
"என்னமா தேவகி.. நல்லா ரெஸ்ட் எடுத்தியா.. இப்போ தல வலி எப்படி இருக்கு.."
"இப்போ பரவாயில்ல அத்தை"
"இன்னைக்கு தான கல்யாணம் முடிஞ்சு இருக்கு.. இன்னும் சம்பிரதாயம் மறுவீடுன்னு அலைச்சல் இருக்கும் எல்லாம் முடிஞ்சி ஒரு வாரத்துல உங்க ரெண்டு பேரையும் சென்னை அனுப்பி வச்சிடுவோம்.. அது வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா"
"புரியுது அத்த.. நான் பாத்துக்குறேன்"
"சரிமா.. சாப்பிட்டுட்டு ஃப்ரெஷாகி ரெடியா இரு.. 10.30க்கு மேல நல்ல நேரம் நானே உன்ன கூட்டிட்டு போய்.. அவன் ரூம்ல விடுவேன்.." என்று கூறி மருமகளுக்காக கொண்டு வந்த உணவை அவளிடம் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.
அவர் சென்றதும் உணவு தட்டுடன் படுக்கையில் அமர்ந்தவளுக்கோ, இன்றே வாழ்க்கையை தொடங்க வேண்டுமா என்று நினைக்கையில் உணவு தொண்டைக் கீழ் இறங்க மறுக்க, வேறு வழியின்றி சாப்பாடை முழுங்கி உள்ளே தள்ளியவளுக்கோ, அதற்கு மேல் அழுகை கட்டுப்படுத்த முடியாததால் வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து ஷவர் மூலம் வரும் தண்ணீரை திறந்துவிட்டு தண்ணீருடன் கண்ணீரையும் சேர்த்து கொட்டினாள்.
குளித்துவிட்டு வெளியே வந்து காட்டன் புடவையை கட்டிக்கொண்டு சிறிய ஒப்பனையில் தன்னை அலங்கரித்துவிட்டு மாமியாரின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.
சரியாக நல்ல நேரம் தொடங்கவும் பால் செம்புடன் மருமகளின் அறைக்கு வந்தவரோ பால் செம்பை மருமகளின் கையில் கொடுக்க, அவளோ மாமியார் காலை தொட்டு வணங்கியதும்
"நல்லா இருமா.. ரெண்டு பேரும் இன்னையிலிருந்து திருமண வாழ்க்கைய தொடங்கி தீர்க்காயுசுடன் சந்தோஷமா வாழனும்" என்று கூறி ஆசீர்வதித்து, மருமகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரை அனைத்தும் கூறி தன் மகனின் அறைக்கு வழியனுப்பிவிட்டு விடை பெற, பெண்ணவளும் படப்படப்புடனே கணவனின் அறைக்குள் நுழைந்தாள்.
தன்னை வரவேற்ற வெற்று அறையில் கண்களை சுழலவிட்டவாறு படுக்கை அருகே வந்த கணம், அவளின் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிற்றுக்கு சொந்தக்காரனான கதிர்வேலன் குளியல் அறையிலிருந்து வெளியே வந்து மெல்ல அடி எடுத்து பெண்ணவளை நோக்கி நகர, அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதே இதயம் ஏறி இறங்கி துடிக்க, பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவள் எதிரே வந்தவனோ "நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று தான் கூறியதை கேட்டு மெல்ல கண்களை திறந்தவளை கண்டு "உக்காரு" என்பது போல் படுக்கையில் கண்ணை காட்ட, அவளும் பயந்தவாறே அமர்ந்து நிமிர்ந்து அவனை நோக்க,
"ஓகே.. நான் சொல்ல வேண்டிய விஷயத்த நேரடியா சொல்லிடுறேன்.." என்று இதழ் குவித்து ஊதியவனோ "எனக்கு இப்போ வர கல்யாணத்துல கொஞ்சமும் இன்டர்ஸ்ட் இல்ல.. வீட்டுல ஃபோர்ஸ் பண்ணினதுனால தான் வேற வழியில்லாம ஓகே சொல்ல வேண்டியதா போச்சு.. இன்டரெஸ்ட் வந்தா.. நானே உன்ன தேடி வருவேன்.. அதுவர நீ உன் வேலைய பாரு.. நான் என் வேலைய பாக்குறேன்" என்று காட்டத்துடன் கூற,
அவன் குரலில் பதறியவளோ "புரியுது.." என்று திக்கி திக்கி கூற,
"குட்.. இன்னும் ஒரு வாரத்துல சென்னை கிளம்பிடலாம்.. அதுக்கு அப்புறம் நீ எப்போவும் போல காலேஜ் போகலாம்.. தென்.. நானே உன்ன காலேஜ்ல ட்ராப் பண்ணி பிக்அப் பண்ணிப்பேன்.. எனி டவுட்ஸ்"
"இல்லை" என்ற ரீதியில் தலையசைத்தவளிடம் "ம்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீ தூங்கு" என்று கூறிவிட்டு புத்தகம் மற்றும் மடிக்கணினியுடன் ஓரமாக அமர்ந்துவிட, ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டு படுக்கையில், ஒருபுறம் படுத்தவளோ திறன்பேசியை கையில் எடுத்து பாடகருக்கான வந்த பதிவின் மின்னஞ்சலையும் கணவனையும் கேட்கலாமா வேண்டாமா என்று ரீதியில் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தவளின் எண்ணமோ இதுவரை தான் பாட்டு பாடியதில் பெற்ற வெற்றி நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னே தோன்றியதை நினைத்தவாறே அப்படியே உறங்கியும் போனாள்.
தேவகி லட்சியம் கனவு உயிர் அனைத்துமே பாட்டு பாடுவது தான் சிறு வயதிலே அன்னையை இழந்தவள் ஆதலால் தந்தையே தாயுமாக இருந்து அவளை வளத்தார்.
படிக்கும் வயதிலே பாட்டின் மீது ஆர்வம் வந்ததால் தந்தையின் அனுமதியோடு இசை சமந்தப்பட்ட அனைத்தையும் பள்ளி பருவத்திலே கற்று தேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து அனைத்திலும் வெற்றி வாகை சூடினாள்.
அவள் கல்லூரியில் கால் பதித்த சமயம் பாடுவதில் ஈர்ப்பு பெருகி திரைப்படத்துறையில் பாடகராக வேண்டும் என்று ஆசை வந்து, அந்த ஆசையே கனவாக மாறி வாழ்க்கை லட்சியமாக மாறியது.
தேவகி நன்றாக படிக்கும் பெண், படித்து கொண்டே சினிமா துறையில் பாடகராக கால் பதிக்க தேவையான முயற்சிகளை செய்ய தொடங்கினாள்.
அதோடு வீட்டிற்கு ஒரே பிள்ளை தாய் வேறு இல்லாத காரணத்தினால் கல்லூரி பருவம் முடிய கண்டிப்பாக தந்தை திருமணம் செய்து வைத்துவிடுவார்,
திருமணம் வாழ்க்கைக்குள் நுழைந்தாள் அனைத்தும் தோல்வி அடைந்து விடும் ஆதலால் கல்லூரி பருவத்திலே எப்படியாவது லட்சியத்தை அடைந்து விட போராடியே ரெண்டு வருட கல்லூரி படிப்பை முடித்து மூன்றாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் போது, அவளின் ஜாதகத்தில் இந்த வருடத்தில் திருமணம் முடிக்கவில்லை என்றால் ஆறு வருடம் கழித்து தான் திருமணம் நடக்கும் என்று ஜோசியர் கூறியதை கேட்டு மகளுக்கு வரன் பார்த்ததில் மகளின் ஜாதகத்திற்கு கதிர் வேலனின் ஜாதகம் பொருந்தியதில், மகளை வற்புறுத்த அவளோ படித்து முடிக்கும் வரையாவது திருமணத்தை தள்ளி வைக்க கோரி கெஞ்ச, அவர் முடிவில் மாற்றம் இல்லாததால்,
இப்போது திருமணம் செய்து கொண்டு லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் கவலையுடனே கல்யாண மறுவீடு எல்லாம் முடித்துவிட்டு குடும்பத்தினரிடம் விடை பெற்று கணவனுடன் சென்னை வந்து சேர்ந்தாள்.
மறுநாள் கணவனின் காரில் கல்லூரி வந்தடைந்தவள் முதல் வகுப்பிற்கு நேரமானததால் கணவனிடம் கூட கூறாமல் வேகமாக அவளின் வகுப்பை நோக்கி சென்று அமர்ந்த, சிறிது நிமிடத்தில் தன் வகுப்பிற்கு பேராசிரியராக வந்த கணவனை கண்டு விழிகள் விரித்து உறைந்து விட, மனைவின் செயலை கண்டு இதழ் கடித்து சிரிப்பை கட்டுப்படுத்திவிட்டு, தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்.
கல்லூரி நேரம் முடியவும் மனைவியுடன் காரில் வீட்டை நோக்கி அமைதியாகவே பயணித்து கொண்டிருந்தவனோ
"என்னப்பத்தி.. உன் அப்பா எதுவுமே சொல்லலையா" என்று சாலையில் கவனத்தை பதித்த கணவனை கண்டு ஒரு நொடி புரியாமல் விழித்தவள், பின் அவன் எதை கேட்கிறான் என்பதை உணர்ந்து இரு பக்கமும் தலையாட்ட,
அதில் மெல்ல புன்னகைத்தவனோ "என் பெயராவது தெரிஞ்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா" என்று நக்கலாக கேட்டதில் தலை குனிந்தவளை கண்டு முகம் இறுகியதில் அமைதியாக, பின்
"ஐ அம் கதிர்வேலன்.. நான் உன் காலேஜ்ல புரோபோஸரா ஒன் இயரா வொர்க் பண்றேன்.. என்னோட கிளாஸ் அதிகமா ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ்க்கு மட்டும் தான்.. அதுனால நீ அதிகமா என்ன பாத்துருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்" என்று கூற, அவன் கூறியதை அமைதியாக பெண்ணவளும் கேட்டுக் கொண்டாள்.
இப்படியே இருவரும் அதிகம் பேசிக்கொள்ளமல் கல்லூரி சென்று வருவது வீட்டியிலுள்ள வேலைகளை சமமாக பிரித்து இருவரும் செய்வது என்று நாட்கள் நகர நகர பெண்ணவளுக்கோ கணவனின் மேல் நல்ல அபிப்ராயம் வர, பெண்ணவள் அவனுடன் நட்பாக பேசினாலும், அளவாக பேசியே நிறுத்தி விடுவான்.
அதோடு மனைவின் மாதவிடாய் காலங்களில் அவளுக்கு தேவையானதை கண்ணும் கருத்துமாக செய்து தாய் குழந்தையை அரவணைப்பது போல் அரவணைத்து கொண்டான்.
இப்படியே மூன்று மாதங்கள் கழிந்திருக்க, கணவனின் செயலிலும் பேசிலும் பண்பிலும் கவரப்பட்டு அவளை அறியாமலே ஈர்ப்பு ஏற்பட்டது
வழக்கம் போல் விடுமுறை நாளில் கணவனுடன் பகிர்ந்து செய்யும் வேலையெல்லாம் செய்துவிட்டு கல்லூரி பாடங்களை படிக்க அமர்ந்த சமயத்தில் தன்னிடம் சிறிய பார்சலை நீட்டிய கணவனை என்ன என்று நிமிர்ந்து பார்க்க,
"பிரிச்சி பாரு"
அவளும், அதை வாங்கி பிரித்ததுமே அதிர்ந்து விழித்தவளின் கண்களில் துளி துளியாக விழுந்த கண்ணீருடனே
"வாழ்த்துக்கள் திருமதி தேவகி கதிர்வேலன் ஸ்டார் மியூசிக் அசோசியேஷன் ஆல்பம் பாடலுக்கான போட்டியில் தேர்ந்ததெடுத்த 15 பாடல்களை பாடியவரில், நீங்களும் ஒருவர் என்று மகிழ்ச்சியுடன் கூறி கொள்கிறேன்.
போட்டிக்கான முதல் சுற்றிற்கு ரெண்டு மாதமே கால அவகாசம் அதோடு நாங்கள் கீழே குறிப்பிட்டிருக்கும் போட்டிக்கான இடம் நேரம் அனைத்தையும் நினைவில் கொண்டு வருகை தந்து, அடுத்த சுற்றிலும் வெற்றி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இப்படிக்கு ஸ்டார் மியூசிக் அசோசியேஷன்" என்று வாசித்து முடித்த நொடி கணவனை இறுக்கி அணைத்து அழுதே விட்டாள்.
Last edited: