• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
207
உன் விழியோடு நானாகிறேன் -13


வானொலி நிகழ்ச்சியில் நேரலையில் கலந்துக் கொண்டு பேச ஆரம்பித்தான் ருத்ரன்.அவளுடான முதல் சந்திப்பை அழகாகச் சொன்னான்.

எதிர்பாராத சந்திப்பை இனிக்க பேசினான்.

அவனுக்கான எண்ணங்களைப் பற்றி தான்.இருவரும் ஒருவரையொருவர் நினைக்கத் தொடங்கினார்கள்.

மறுநாள் வேலைக்கு தயாராகிக் கொண்டவள் கரங்களில் வளையல் அணிந்துக் கொண்டாள்.எப்போதும் கைக்கடிகாரத்தை மட்டும் போட்டுக் கொள்பவள் இன்று நாலைந்து வளையல்களை போட்டுக் கொண்டவளின் முகத்தில் சின்னதாய் புன்னகையும் சேர்ந்துக் கொண்டது.

நேரில் சந்திக்காமல் இருந்தாலும் கைப்பேசியில் இருவரும் பேசியதோடு குறுஞ்செய்தியும் அனுப்பிக் கொண்டனர்.சில விஷயங்களைப் பற்றி பகிர்ந்தும் தங்களைப் பற்றி தெரிந்தும் கொண்டனர்.வியன்காவையும் பற்றி பேசாத நாளும் இல்லை.அவளிடமும் பேசுவான்.ஒரு வாரம் சென்ற நிலையில் ஆதிரையின் எண்ணிற்கு அழைத்தான் தர்ஷன்.

“ஹலோ”

“ம்ம்… சொல்லுங்க”

“ஆதி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“ஒரு வாரம் கழிச்சு என்னோட ப்ரெண்ட்டுக்கு ரிஷப்ஷன் இருக்கு உங்களால வர முடியுமா?”

அவளோ யோசனையோக “தேதி என்னைக்கு?”

“அடுத்த வாரம் இதே நாள்”

“அடுத்த வாரம் இதே நாள்ல எனக்கும் ஒரு பங்ஷனுக்கு போக வேண்டி இருக்கு”

“அப்படியா! எங்கே?”

இடத்தைச் சொன்னாள். அதைக் கேட்டவனோ “அந்த இடத்துக்கு தான் நானும் போறேன்” என்றான்.

இவளும் ஆச்சயரியமாக “அப்படியா! நீங்க மிஸ்டர் சிவா அவரோட மகனுக்கு நடக்கிற ரிசப்ஷன் பத்தியா சொல்லுறீங்க”

அவனும் அதே அதிர்ச்சியோடு “ம்ம்… ஆமாம் கல்யாணம் நடக்குறதே என் ப்ரெண்ட்டுக்குத் தான்”

“அப்படியா! எங்க கம்பெனியோட க்ளைண்ட் சிவா சார் அவரு வரவேற்புக்கு அழைச்சு இருக்காரு என்னோட ஹெட்டுக்கு அன்னைக்கு அவரு குடும்பத்துல முக்கியமான கல்யாணம் அதனால என்னையும் மற்றவங்களையும் போகச் சொல்லி இருக்காங்க என்னோடு ரெண்டு வொர்க்கர்ஸ் வராங்க”

“அப்படியா! நானே உன்னை வந்து பிக்அப் பண்ணிக்கிட்டுமா?”

“அதான் என்னோடு ரெண்டுபேரு வராங்கன்னு சொன்னேன்ல”

“அதனால என்ன? அவங்களையும் ஒன்னா அழைச்சுட்டு போகலாம்”

“எதுக்காக இவ்வளவும் செய்றீங்க?”

“ஏன் நான் செய்யக் கூடாதா?”

“அப்படி சொல்ல வரலை திடீர்னு எதுக்கு தான்னு கேட்கிறேன்”

“அங்கே எனக்கு தெரிஞ்சவங்களோடு உன்னோடு போகனும்னு ஆசை உன்னையும் அறிமுகப்படுத்தலாம் தான்”

“ஏன் இப்பவே”

“இன்னும் தாமதப்படுத்த விருப்பம் இல்லை ஆதி நீயும் வீட்ல நம்மளைப் பத்திச் சொல்லு” என்றான்.

அதற்கு மேல் அவனிடம் அவள் எந்த கேள்வியும் கேட்கவில்லை.திருமணம் முடிந்ததோடு அரவிந்த் அவளை எங்கேயும் அழைத்துச் சென்றதும் இல்லை.மற்றவர்களுக்கு இவளை அறிமுகப்படுத்தியதும் இல்லை.விருப்பம் இருந்தால் தானே எல்லாம் நடக்கும்.தேவையே இல்லை என்றான பிறகு முக்கியத்துவமும் இல்லை என்றானது.

ஆனால் அதற்கு மாறாக தர்ஷன் இருக்கிறான்.

“வியன் தனியா இருப்பாளா?”

“அம்மாகிட்டே விட்டுட்டு வரேன்”

“ம்ம்… சரி இன்னும் தயாராக இரு அடுத்து அம்மா,அப்பா எல்லோரையும் பார்க்கனும்”

“எதுக்கு இவ்வளவு அவசரம்?”

என்று அவள் கேட்டதும் அவனிடம் பதிலில்லை.அமைதியாக இருந்தான்.

“ஹலோ தர்ஷன்”

“ம்ம்… சொல்லுங்க”

“என்னாச்சு?”

“ஒன்னுமில்லை”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே!”

“என்ன சொல்ல முடியும்? அதான் அமைதியா இருந்துட்டேன்”

“நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை”

“உங்களுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலைன்னு நினைக்கிறேன் என்னுடைய தப்பு தான் கட்டாயப்படுத்தி இருக்கக் கூடாது” என்றான் தர்ஷன்.

அவள் பதில் சொல்லவில்லை.அமைதியாக இருந்தாள்.சட்டென்று எல்லாவற்றையும் வேகமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவளிடம் இல்லை.அவனும் வேகமாக பேசி விட்டான்.

இரண்டு பக்கமும் பெருத்த அமைதி.நேரம் கடந்தது.சட்டென்று அணைப்பை துண்டிக்க இருவருக்கும் விருப்பமில்லை.ஏதோ ஒரு இணக்கம் இருவரையும் தடுத்தது.ஐந்து நிமிடங்கள் கரைந்தது.இருவரின் மூச்சுச் சத்தம் மட்டும் கேட்டது.

ஒரே நேரத்தில் இருவரும் “சாரி” என்றனர்.இருவருக்கும் வியப்பு.இரண்டு பேரின் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

ஆதிரை “சாரி தர்ஷன் என் நிலைமையை உங்ககிட்ட சொல்லி இருக்கனும் என்னால…” என்று அவள் பேசுவதற்கு முன்பே அவனோ இடையினில் வந்து “சாரி ஆதி உன்னையும் என் பொண்ணையும் சீக்கிரமா பத்திரமா என்கிட்டயே வைச்சுக்கனும்னு நினைச்சுட்டேன் அதனாலத் தான் உன்னைப் பத்தி யோசிக்கலை” என்று அவள் சொல்ல வருவதற்கு முன் நிலைமையைப் புரிந்து தன் நிலையைச் சொன்னான்.

அவனைப் பற்றி புரிந்துக் கொண்டவள் “கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிக்கலாம் தர்ஷன் டைம் வேணும்”

“சரி அவசரம் இல்லை விருப்பம் இருந்தால் போகலாம்” என்றான்.

அன்பை பரிமாறி வெற்றிப் பெறுவதை விட சில நேரங்களில் அங்கே நமக்கானவர்களுக்காக தோற்பதிலும் அவர்கள் வெற்றிப் பெறுவதிலேயே இந்த அன்பு இன்னும் ஆழமாகிறது.

ஆதிரையும் தர்ஷனும் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வின் நிதர்சனத்தை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.யாரையும் எதிலும் கட்டாயப்படுத்துவதை அவர்களின் போக்கிலே விட்டு விடுவதும் ஒரு அன்பு தான் என்பதை புரிந்துக் கொள்ள தொடங்கினார்கள்.

அந்த விஷயத்தைப் பற்றி திரும்ப இருவரும் பேசவில்லை. ஒரு வாரம் கடந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் அன்று ஆதிரையின் அழைப்பிற்காக தர்ஷன் காத்துக் கொண்டிருந்தான்.

அவளோ அவனுக்கு அழைக்கவில்லை.மாறாக இவனும் தனது நண்பனின் திருமண நிகழ்வு என்பதால் அவனே தயாராகி சென்றான்.

மிகப்பெரிய மண்டபத்தில் முக்கியமான பிரமுகர்கள் அழைத்திருந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வந்திருந்தனர்.

தர்ஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகினில் வாசலுக்கு வரும் போது ஆதிரை அவனுடைய கைப்பேசி எண்ணிற்கு அழைத்தாள்.இவனும் யோசனையோடு அழைப்பை எடுத்தவன் “ஹலோ”

“தர்ஷன் பங்ஷனுக்கு வந்துட்டீங்களா?”

“ஆமாம்”

“நானும் அங்கே தான் வந்துட்டு இருக்கேன் நாம நேர்ல சந்திக்கும் போது என்கூட வொர்க் பண்ணுற கோ வொர்க்கர்ஸ்ஸையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தனும்”

அவள் அப்படிச் சொன்னதும் அவன் முகத்தில் புன்னகை பரவியது.

“பிஸியா?”

“இல்லை சொல்லுங்க”

“அப்புறம் திரும்ப வரும் போது நான் உங்களோடு தான் வருவேன்” என்றாள்.அதைக் கேட்டதும் தர்ஷனுக்கு ஆதிரையின் இந்த அணுகுமுறை பிடித்திருந்தது.ஒன்றாக வராமல் நிகழ்ச்சியில் வைத்து எல்லோரிடமும் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்துவதான யோசனை சரியாக இருந்தது.

தர்ஷன் தன் நண்பர்கள் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே ஆதிரை தன்னுடன் வேலைச் செய்பவர்களோடு வந்தாள்.அங்கே அவள் முதலில் பார்த்தது அரவிந்த் மற்றும் அவனது மனைவி.

அங்கே அவனைப் பார்க்கவும் ஆதிரைக்கு முகமே மாறிப்போனது.அவளைப் பார்த்த அரவிந்த் தன் மனைவியின் காதருகே ஏதோ மெதுவாகச் சொன்னான்.

உடனே அவள் நேராக ஆதிரையின் அருகே வந்தவள் சிரித்துக் கொண்டே தன் கரங்களை முன்னால் நீட்டியவள் “ஹாய் ஐ எம் நேஹா நீங்க அரவிந்த்தோட எக்ஸ் வைப்பா எப்படி இருக்கீங்க?” என்றதும் அவளோடு வந்தவர்கள் எல்லாம் அவளை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.ஆதிரைக்கு அவனைப் பார்த்ததுமே கைகள் நடுங்க ஆரம்பிக்கவும் அப்படியே நின்றாள்.

அரவிந்த்தின் திட்டமே எந்த வேலையை வைத்து அவள் தன்னை அவமதித்தாலோ அந்த வேலையில் இருக்கும் போதே அவமானப்படுத்த வேண்டும் என்பது தான்.

ஆதிரையுடன் வேலைச் செய்பவர்களுக்கு அவள் விவகாரத்தானவள் என்பது மட்டும் தான் தெரியும்.தனிப்பட்ட. விஷயங்களை எல்லாம் அவள் தெரியப்படுத்துவது இல்லை.ஆனால் எல்லாம் தலைகீழாகிப் போனது.

ஆதிரை அமைதியாக நிற்கவும் நேஹா விடாமல் “ஏன் என்கிட்ட பேச விருப்பம் இல்லை நானே எந்த ஈகோவும் இல்லாமல் பேசுறேன் ரொம்ப திமிரோ? அதான் அரவிந்த் உன்னை வேணாம்னு விட்டுட்டு வந்துட்டாங்களா?” என்றதும் அவனைப் பற்றிப் பேசினாலே ஆதிரைக்கு பயம் பற்றிக் கொள்ளும் அப்படி இருக்க திடீரென்று அவனுடைய மனைவி பேசவும் என்னச் சொல்வதென்று தெரியாமல் திணறிப் போய் நின்றாள் ஆதிரை.சுற்றியிருந்தவர்கள் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்தனர்.

அப்பொழுது திடீரென்று ஏற்பட்ட சலசலப்பை கவனித்த தர்ஷன் என்னவென்று பார்த்தான்.அங்கே ஆதிரை நிற்பதை பார்த்தவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் “ஆதி ஆதி இங்கே என்ன செய்றே” என்று அழைத்தவாறே அவளருகில் போய் நின்றான்.

அதுவரை யாருமில்லாத இடத்தில் தனியாக இருப்பதைப் போல் உணர்ந்த ஆதிரை தர்ஷனின் குரலைக் கேட்கவும் அவனைப் பார்த்தாள்.அவனோ எந்த தயக்கமும் இல்லாமல் ஆதிரையின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டபடி நிற்கவும் இதைப் பார்த்து நேஹா மற்றும் அரவிந்த் மட்டுமல்லாது எல்லோருக்கும் பெருத்த அதிர்ச்சியாகிப் போனது.

ஆதிரை திணறலாக தர்ஷனைப் பார்த்தாள்.அவனோ நேஹாவை முறைத்தப்படி “மிஸஸ் நேஹா என்னோட பியான்ஸீகிட்டே என்ன விளக்கம் கேட்கனும்னு நினைக்கிறீங்க?” என்றான் சற்றே கோபமாக.

அவளோ இந்த கேள்வியை எதிர்பாராததால் “சா…சார் சார் அது வந்து”

“இனிமேல் எதுவாக இருந்தாலும் என்கிட்ட கேளுங்க இப்போ முடியலைன்னா பிரச்சினை இல்லை அப்புறமா நாளைக்கு கம்பெனில வைச்சு பேசிக்கலாம்” என்றான்.

நேஹா தலையைக் குனிந்துக் கொண்டு “சாரி சார் எந்த கேள்வியும் இல்லை சாரி மேம்” என்று நேராக அரவிந்த் அருகில் போய் நின்றுக் கொண்டாள்.தர்ஷன் சொன்ன பதிலைக் கேட்டு இப்போது ஆதிரை அதிர்ச்சியாகி அவனைப் பார்த்தாள்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
207
அவனைப் பற்றி எல்லாம் அறிந்துக் கொண்டவள் தர்ஷன் வானொலியில் மட்டும் வேலைச் செய்வதாக நினைத்தவள் மேற்கொண்டு என்ன வேலை செய்கிறான்? என்று இதுவரை அவள் கேட்டதும் இல்லை அவன் அதைப் பற்றி சொன்னதும் இல்லை.

அரவிந்த் அப்படியே உறைந்துப் போய் நின்றான்.இத்தனை நாட்களாக ஆதிரையை ரொம்ப கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் நினைத்தவனுக்கு இவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கும் அதுவும் நேஹா வேலைச் செய்யும் நிறுவனத்தின் தலைவரான தர்ஷனை ஆதிரைக்கு தெரிந்ததும் அதுவும் தனக்கு மனைவியாகப் போகிறவள் என எல்லோர் முன்னிலையில் தர்ஷன் சொன்னதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தர்ஷன் ஆதிரையிடம் “என்னை உன்கூட வந்தவங்ககிட்ட அறிமுகப்படுத்த மாட்டியா?”

அவளோ “ஹான்…” என்றவள் அங்கிருந்தவர்களைப் பார்த்து வராத சிரிப்பை வரவழைத்தவள் “இவங்க தர்ஷன் என்னோட பியான்ஸி கூடிய சீக்கிரம் திருமணம் செய்யப் போறோம்” என்றதும் அவனோ “ஹலோ” என்றவன் அவர்களும் அவனிடம் தங்களை அறிமுகப்படுத்தினார்கள்.

அப்பொழுது ஆதிரையோடு பெங்களூர் வந்தப் பெண்ணவள் “உங்களைத் தானே அன்றைக்கு ஹோட்டல் வாசல்ல வைச்சு நான் பார்த்தேன்” என்றாள் சிரித்துக் கொண்டே…

அவனோ கொஞ்சமும் தயங்காமல் “எஸ் நான் தான் அது ஆனால் அப்போ ப்ரெண்ட் மட்டும் தான் இப்போ வேற” என்று சொல்லி சிரித்தான்.

அவன் பேசுவதும்,சிரிப்பதும் முகபாவனையோடு மதிப்பான உடையோடு நிற்பவனைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகத் தான் ஆதிரையைப் பார்த்தார்கள்.அவளோடு வந்தவர்கள்.

தர்ஷன் “நீங்க பேசிட்டு என்ஜாய் பண்ணுங்க நானும் ஆதிரையும் என் ப்ரெண்ட்டை பார்க்கப் போகிறோம்” என்று ஆதிரையை கோர்த்திருந்த கரங்களோடு அழைத்துச் சென்றான்.

இவர்கள் மேடை ஏறவும் மேடையில் மணமகனாக நின்றுக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் தர்ஷனை ஆச்சரியமாக பார்த்தான்.இதுவரைக்கும் எந்த திருமண நிகழ்ச்சிக்கும் வராதவன் இப்போது அதுவும் ஒரு பெண்ணோடு வருவதைக் கண்டவன் அவனோடு நண்பர்களும் அவர்களை அதுவும் ஆதிரையைப் பார்த்தார்கள்.

அளவான உடம்போடு நேர்த்தியாக புடவை உடுத்தி மையிட்ட பெரிய கண்களோடு மெலிதான புன்னகையோடு பின்னலிட்ட சடையோடு நிமிர்வான நடையோடு பார்க்க பேரழகியாக இல்லாவிட்டாலும் கண்ணுக்கு அழகியாக தர்ஷனின் கரங்களைப் பிடித்துக் கொண்டிருந்தவளை பார்த்தார்கள்.

நேராக மணமகனின் கையைப் பிடித்து “திருமண வாழ்த்த்துக்கள் இவங்க தான் ஆதிரை என்னோட பியான்ஸி” என்றான் சிரித்துக் கொண்டே.

அப்பொழுது பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த இவனோடு வயது சேர்ந்த சிலபேர் தர்ஷனைப் பார்த்து “இவங்களுக்கு உன் விஷயம் எல்லாம் தெரியுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்கள்.

அவர்களது கிண்டலான பேச்சில் இருந்த எகத்தாளத்தை புரிந்துக் கொண்ட ஆதிரை “அதைப் பற்றி தெரிந்து தான் அவரை நான் இன்னும் விரும்ப ஆரம்பிச்சேன் கூடிய சீக்கிரம் எங்க கல்யாணம் நடக்கப் போகுது” என்றாள் தர்ஷனே எதிர்பாராத நேரத்தில்…

அவள் சொன்ன பதிலைக் கேட்டு சிரித்தவன் அவன் திரும்பிப் பார்க்கவும் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த அவனது உதவியாளர் ஒரு சிறு பையை அவனிடம் கொடுத்தார்.அதை வாங்கி ஆதிரையின் கையில் கொடுத்தவன் “ஆதி நாம அன்னைக்கு செலக்ட் பண்ணோம்ல கிப்ட் அது இவனுடைய மேரேஜ்காகத் தான் உன் கையால கொடு” என்றான்.

அதைப் பார்த்து அவளுக்கு இன்னும் ஆச்சரியம்.அதை வாங்கி அவர்களிடம் கொடுத்து விட்டு சிரித்த முகமாய் இருவரும் புகைப்படத்தில் நின்று விட்டு கீழே இறங்கினர்.ஆதிரைக்கு இப்போது பதற்றத்தில் வேகமாக மூச்சிரைத்தது.

அதுவரை அடக்கி வைத்திருந்தவளுக்கு இப்போது கையில் நடுக்கம் வேறு சேர்ந்துக் கொண்டது.

அவளது நிலைமையைப் பார்த்தவன் “என்னாச்சு ஆதி?”

“ரொம்ப டென்ஷனா இருக்கு” என்ற போது வியர்வை வழிந்தது.

பக்கத்தில் இருந்த அவனது உதவியாளர் தண்ணீரை வந்து கொடுத்தார். அதை வாங்கி அவள் வேகமாக குடித்தாள்.அவளின் முதுகின் மேல் கைவைத்து அவளை சமாதானம் படுத்தினான்.

மெதுவாக “நாம வெளியே போலாமா?”

அவள் சரியென்பது போல் தலையாட்டினாள்.உடனே அவளை தன்னோடு அணைத்து பிடித்தவாறே அழைத்துச் சென்றான் தர்ஷன்.

அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த்துக்கு உள்ளுக்குள் லேசான திருப்தியாக இருந்தது.அவனைப் பார்த்ததும் அவளுக்குள் இருந்த பயம் அப்படியே வெளியே தெரிந்தது ஆதிரைக்கு.

அரவிந்த் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அவன் மனைவி நேஹா “அரவிந்த் அந்தப் பெண்ணைப் பத்தி நினைக்கிறதை இதோடு விட்டுடு ஏன்னா அவ தர்ஷனோட பியான்ஸி என்னால அந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு எல்லாம் போக முடியாது உன்னோட தனிப்பட்ட கோபத்துக்கு எல்லாம் நான் பலியாக முடியாது அந்த பொஸிஷன்க்கு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் எனக்குத் தான் தெரியும் அதோடு நம்ம சொகுசு வாழ்க்கை கேள்வி குறியாகிடும் அவ வேண்டாம்னு தானே என்னை கல்யாணம் செய்தே அப்புறம் என்ன?” என்றாள் கோபமாக…

அவனோ அவளை பார்த்து முறைக்கவும் திரும்ப முறைத்த நேஹா “நீ சொன்னேன்னு நான் அவளை அவமானப்படுத்த போனேன் ஓரளவு முடிச்சாச்சு அவ்வளவு தான் இதுக்கு மேல இந்த விஷயத்துல நீ தலையிட்டா நான் என் அண்ணன்கிட்டே சொல்லுவேன்” என்றாள்.

அவனோ அங்கே பெங்களூரில் பெரிய ரவுடியாக இருக்கிறான் அதனால் அதோடு அமைதியாகி “சரி நான் இனி பேச மாட்டேன்” என்று முடித்துக் கொண்டான் அரவிந்த்.அவன் நிலைமை அப்படி இருந்தது.

எப்போதும் அவளை துன்புறுத்தி அடித்து விடுவான்.அதனால் அவனை பார்த்ததும் ஒரு பயத்தோடு எல்லோரின் முன்னிலையிலும் அவளை அசிங்கப்படுத்த முனைந்ததும் என்னசெய்வதென்று தெரியாத ஒரு பதற்றம்.அதோடு தர்ஷனைப் பற்றிய உண்மை எல்லாம் சேர்ந்து ஒருவித மனஅழுத்தத்திற்கு உள்ளானாள் ஆதிரை.

தர்ஷன் தன் காரை திறந்து ஆதிரையை உட்கார வைத்து அவனும் உட்கார்ந்துக் கொண்டவன் ஓட்டுநரிடம் வண்டியை ஓட்டச் சொன்னான்.

காரில் ஏறி அமர்ந்தவள் முகத்தை பொத்திக் கொண்டு குனிந்து அழத் தொடங்கினாள்.

இதை சற்றும் எதிர்பாராத தர்ஷன் “என்னாச்சு ஆதி?” என்ற போது அவளிடம் பதிலில்லை.அவளது முதுகை ஆதரவாக தட்டிக் கொடுத்தவன் “நான் எதாவது தப்பு செய்துட்டேனா ஆதி என்னன்னு சொல்லு? ஏன் இப்படி அழுறீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான்.

உடனே விழிகள் முழுவதும் கண்ணீரோடு “என்னால முடியலை தர்ஷன் அந்த பழைய வாழ்க்கையை நினைக்காமல் இருக்க முடியலை இன்னைக்கு அவனைப் பார்த்ததும் அவன் செய்த கொடுமை எல்லாம் என் கண்முன்னே நிற்கிறது என்னால அதை தாண்டி வர முடியலை நான் உடைஞ்சு போகிறேன்” என்று திரும்ப ஓஓவென்று அழும் போது எதுவும் சொல்லாமல் சட்டென்று அவளை அணைத்துக் கொண்டான்.

அவனின் இந்த திடீர் செய்கையில் அப்படியே உறைந்து போனாள் ஆதிரை.அவளை அணைத்தப்படி தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தவன் “ஆதி இனிமேல் நீ அரவிந்த்தைப் பற்றி நினைக்கும் போது நான் அணைத்துக் கொண்டதும்” என்று நிறுத்தியவன் அவளிடம் இருந்து விலகி தன் கரங்களினால் ஆதிரையின் முகத்தை ஏந்தியவன் நெற்றியில் தன் உதடுகளால் ஒரு முத்தம் வைத்தவன் “இந்த முதல் அணைப்பும் முதல் முத்தம் மட்டும் தான் நினைவிருக்கனும் சரியா?” என்று தன் கரங்களால் அவளது முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டான்.எல்லாம் அவளுக்கு புதிதாக இருந்தது.

“ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு என்னோட இத்தனை வருட வலியை உன்னோட ஒரு வார்த்தையில் சரி செய்துட்டே ஆதி” என்றான் அவளை மீண்டும் அணைத்தப்படி…

என் நெஞ்சின் ஓசைகள் உன்
காதில் கேட்குதா? நான் தூவும்
பூவிதை உன் நெஞ்சில்
பூக்குதா?

அவளோ நடந்த அதிர்ச்சியினில் விழிகளை விரித்து அப்படியே இருந்தாள்.

 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top