• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
190
உன் விழியாக நானாகிறேன் - 10


இரயிலில் ஏறி அமர்ந்ததும் கைப்பேசியை எடுக்கலாம் என்று நினைக்கும் போது அவளது மேலாளர் அழைத்து இன்னொரு நிறுவனத்தின் சில கோப்புகளை தயார் செய்ய சொன்னார்.அதனால் அதிலேயே நேரம் செல்ல களைப்பில் தூங்கியும் போனாள்.

விடியற்காலையில் வீட்டிற்கு வந்தவள் மீதம் இருந்த வேலையையும் முடித்து அதை மேலாளருக்கு அனுப்பி விட்டு தன்னுடைய அறையில் படுத்தவள் தூங்கிப் போனாள்.

நல்ல தூங்கி எழுந்தவள் பல்லை மட்டும் துலக்கி விட்டு சோர்வாக சாப்பிட அமர்ந்தாள்.அப்போது வியன்கா ருத்ரன் வாங்கி கொடுத்த பொம்மையை கையில் வைத்துக் கொண்டு “அம்மா எனக்காக வாங்கிட்டு வந்தீங்களா?”

“ஆமாம் நான் வாங்கலாம்னு நினைச்சேன் ஆனால் தர்ஷன் வாங்கி கொடுத்தாரு உன்னை ஒருநாள் பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க” என்றாள்.

அஞ்சலி எல்லாம் கேட்டு விட்டு “யாரும்மா அது?”

“அம்மா சிந்தியா ஹஸ்பென்ட் இருக்காருல்ல மதன் அவரோட ப்ரெண்ட் கல்யாணத்துல வைச்சு பேசினோம் திரும்ப பெங்களூர்ல பார்த்தேன் அவர் தான் வாங்கி கொடுத்தாங்க” என்றாள்.

அவளின் அம்மா எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.ஆதிரை “அம்மா சீக்கிரமா சாப்பாடு வைங்க ரொம்ப பசிக்குது” என்றாள்.

அவரோ சிரித்துக் கொண்டே காலை உணவையும் காபியையும் அவளுக்கு அருகில் வைத்தவர் “ஆதிரை நீ ரொம்ப அழகா இருக்கே” என்றார்.

இவளோ சாப்பாட்டை வாயில் வைத்தவள் புரியாமல் அம்மாவைப் பார்த்தாள்.உடனே விளையாடிக் கொண்டிருந்த வியன்கா “ஆமாம் அம்மா சிரிச்சிட்டே ரொம்ப அழகா இருக்கீங்கம்மா” என்றாள்.

இவளுக்கோ இவர்கள் பேசுவதை கேட்டு இருந்த சோர்வு போய் கோபம் வந்தது.

“அம்மா நானே இன்னைக்கு குளிக்காமல் வந்து சாப்பிட்டு இருக்கேன் என்னைப் போய் அழகா இருக்கேன்னு சொல்லுறீங்க நானே செம டயர்டுல இருக்கேன் நல்லா டிரஸ் பண்ணிட்டு வரும் போது ஒன்னும் சொல்ல மாட்டிங்க இப்போ என்ன?” என்றாள் கோபமாக…

அதைப் பார்த்து பாட்டியும் மகளும் சிரித்துக் கொண்டே “ஹய்யோ இப்போ யாரு சொன்னா?” என்று அஞ்சலி சொன்னதும் “இதோ உங்க போன்ல இருக்கிற போட்டோவ பார்த்து சொன்னேன்மா” என்று அவளுடைய கைப்பேசியை எடுத்து காட்டினாள்.

சிந்தியாவின் வரவேற்பு திருமண நிகழ்ச்சியில் அவளுடன் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படமாக இருந்தது.அதில் அவள் மட்டும் தான் இருந்தாள்.

அதை அனுப்பியது யார் என்று பார்த்தால் தர்ஷன் தான் அனுப்பி இருந்தான்.அதைப் பார்த்து விழிகளை விரித்தவள் “இது எப்போ வந்துச்சு?” என்றதும் வியன்கா “அம்மா உங்களோட ப்ரெண்டு அனுப்பி இருக்காங்க” என்றாள்.

இவளோ பதற்றமாய் வியன்காவின் கையில் இருந்த கைப்பேசியை வாங்கிப் பார்த்தாள்.அதில் தர்ஷனிடம் கடைசியாக பேசி விட்டு அவன் பதில் குறுஞ்செய்தியில் இவளுடைய புகைப்படத்தை அனுப்பி இருந்தான்.

அதை தான் வியன்கா பார்த்ததோடு தன் அம்மாவிடம் காட்டி இருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டாள்.அடுத்து தர்ஷன் “ஆதி எங்கே இருக்கீங்க?” என்ற குறுஞ்செய்திக்கு இவள் தூங்குவதை புகைப்படம் எடுத்து அனுப்பி இருப்பதும் அதற்கு அவனோ எந்த பதிலும் அனுப்பாமல் இருந்திருக்கிறான்.இதை அனைத்தையும் பார்த்தவள் வியன்காவை பார்த்தாள்.

“நீ தான் மெஸேஜ் அனுப்பினியா?” கொஞ்சம் கோபமும் பதற்றத்தோடும் கேட்டாள்.

“ஆமாம் அம்மா நான் தான் அனுப்பினேன் உங்க ப்ரெண்ட்னு சேவ் பண்ணி வைச்சு இருக்கீங்க சிந்தியா ஆன்ட்டினு அனுப்பினேன்” என்றாள்.

இவளால் பதில் எதுவும் பேச முடியவில்லை.இதுவரை வியன்கா இப்படி செய்ததும் இல்லை.ஒருவேளை தன் மேல் தான் தவறோ? என்று எண்ணியவள் ப்ரெண்ட் என்று இருந்த பெயரை ருத்ரன் என்று மாற்றி வைத்தாள்.

வேறு எந்த பெயராக இருந்தாலும் அவள் குறுஞ்செய்தி அனுப்பாமல் இருந்திருப்பாள் என்று புரிந்துக் கொண்டவள் வேக வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு தன் அறையில் போய் படுத்துக் கொண்டவள் ருத்ரனுக்கு “நான் சென்னைக்கு வந்துட்டேன் ருத்ரன்.என் பொண்ணு சிந்தியான்னு நினைச்சு உங்களுக்கு தெரியாமல் மெஸேஜ் அனுப்பி இருக்கா சாரி அதோடு நீங்க எங்கே இருக்கீங்க?” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் “மீட்டிங்ல இருக்கேன் எனக்குத் தெரியும் பிறகு பேசுறேன்” என்று பதில் அனுப்பி இருந்தான்.

அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை திரும்ப திரும்ப படித்தாள்.ஏனோ மனம் முழுவதும் ஒருவித ஆவலையும் விருப்பத்தையும் சேர்ந்து ஒருபுது உணர்வைத் தந்தது.

அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு வேலையின் பளு காரணமாக அவள் அதற்கு பதில் அனுப்பி இருக்கவில்லை.ஆனால் ருத்ரனோ இவளை ரொம்ப முக்கியமான நபராக நினைத்து தானே அதுவும் வேலையின் இடையே அவளுக்கு பதில் அனுப்பியது அவள் இதயத்தை லேசாக அசைத்து பார்த்தது.

‘'நான் என்ன அவ்வளவு முக்கியமான நபரா?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அடுத்து ஒரு புகைப்படத்தை அனுப்பினான்.அவள் எப்படி ஒரு மேசையின் மேல் கைவைத்து புகைப்படம் அனுப்பினாளே அதே போல் அனுப்பினான்.

அதைப் பார்த்து சிரித்த இமோஜியை அனுப்பினாள்.

என் உள் நெஞ்சு
சொல்கின்றது பூவோடு பேசாத
காற்றென்ன காற்று ஒரு
பூஞ்சோலை கேட்கின்றது.
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்…

அதற்குப் பிறகு எந்த அழைப்பும் இல்லை குறுஞ்செய்தியும் இல்லை.ஆதிரை வேலையாக இருந்திருப்பான் என்று இருந்து விட்டாள்.

இரவு நேரத்தில் திரும்ப அழைத்தான்.தனியாக தன் அறைக்கு சென்று அங்குள்ள மெத்தையில் அமர்ந்தபடி மெதுவாக “ஹலோ”

“ஆதி சாரி திரும்ப பேச முடியலை வேலையா இருந்துச்சு”

“பரவாயில்லை எதுக்கு சாரி எல்லாம் கேட்குறீங்க?”

“சாப்பிட்டீங்களா”

“ம்ம்… நீங்க?”

“சாப்பிடத் தான் வந்து இருக்கேன் வீடியோ கால் பண்ணவா? இங்கே ரொம்ப அழகான இடம் இருக்கு உங்களுக்கு காட்டலாம்னு தான் கால் பண்ணேன்” என்றான்.

இவளும் “எதுக்கு?”

“நீங்க தான் நாம பேசும் போது எங்கேயும் போனதில்லைன்னு சொன்னீங்க அதான் வீடியோ கால்ல பேசினால் நீங்களும் பார்ப்பீங்களே தான் நான் கால் பண்ணுறேன்” என்று உடனே வீடியோ அழைப்பில் அழைத்தான்.

ஏதோ ஒரு தயக்கம் அவளுள் வந்தது.இருந்தாலும் பேசுவோம் என்ற ஒரு தைரியத்தில் வீடியோ அழைப்பை எடுத்தாள்.

அவனோ எதிரே இருந்த கூட்டத்தையும் அங்கே கொட்டிக் கிடந்த கடைகளையும் காட்டினான்.

அதைப் பார்த்து அவளுக்கு ஒரே வியப்பாக இருந்தது.இவ்வளவு கடைகளா? என்று இருந்தது.அப்போது வியன்கா பின்னால் நின்றுப் பார்த்து விட்டு “அம்மா அங்கே பாருங்க அந்த வளையல் கடை எவ்ளோ அழகா இருக்குல்ல” என்ற போது திரும்பிப் பார்த்தாள்.

வியன்காவின் விழிகளில் அப்படி ஒரு ஆவல் இருந்தது.அவளின் சத்தம் கேட்டதும் தர்ஷன் “ஹலோ வியன்” என்றதும் வியன் முன்னால் வந்து “நீங்க தான் என் அம்மாவோட புது ப்ரெண்ட் தர்ஷனா?”

“ஆமாம் எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“ரொம்ப ஈஸி அம்மா சிந்தியா ஆன்ட்டிக்கு அப்புறம் உங்ககிட்டத் தான் பேசுறாங்க என்கிட்டயும் சொன்னாங்க தாங்ஸ் தர்ஷன் ஆனால் ஒரே மாதிரி ரெண்டு பொம்மை வாங்கி இருக்கீங்க” என்றாள்.

உடனே ஆதிரை “தர்ஷன் சொல்லக் கூடாது அங்கிள் சொல்லு”

உடனே வியன்கா “உங்களுக்கு ப்ரெண்ட்டுனா எனக்கும் ப்ரெண்ட் சரிதானே” என்று குழந்தை மாறா பேச்சோடு கேட்டாள் வியன்கா.

உடனே தர்ஷன் “சரி தான் வியன் சொன்னால் சரியா இருக்கும்” என்று அவளுக்கு ஆதரவாக பேசினான்.

“நீங்க எங்கே இருக்கீங்க?”

“நான் டெல்லில இருக்கேன்”

“ஓ…வாவ் தாஜ்மஹால் போனீங்களா? அப்புறம் என்று யோசித்தவள் கோட்டை அது பெயரு” என்ற போது

“செங்கோட்டையா?”

“ஆமாம் நான் ஸ்கூல்ல படிச்சேன் டெல்லில நிறைய இடம் இருக்காமே!” என்று அவள் உலகத்தில் புதியதாக இருக்க நிறைய கேள்விகள் கேட்டாள்.

அவனோ சிரித்துக் கொண்டே “நான் அங்கே எல்லாம் போகலை நான் இப்போ கடைக்குத் தான் வந்து இருக்கேன்”என்றான்.

“ஓஓஓ…சரி சரி”

“நீங்க வந்து இருக்கீங்களா?”

“இல்லை நான் போனது இல்லை”

“அப்போ நான் வியனை அழைச்சுப் போய் சுத்திக் காட்டட்டுமா?” என்றதற்கு

யோசித்தவள் “நான் உங்களை இன்னும் பார்க்கலையே தெரியாதவங்க கூட அம்மா எங்கேயும் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க”

“ம்ம்… சரி சீக்கிரமா நாம நேர்ல சந்திக்கலாம் அம்மாவும் வந்தா?”

“ஹே…ஹய்… நானும் வரேன்” என்றாள் சிரித்துக் கொண்டே…

இருவருக்குமான உரையாடலில் ஒருநொடி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள்.வியன்கா தேவையாக இருந்தால் தான் பேசுவாள்.அவள் இவ்வளவு பேசியிருப்பதை பார்க்கும் போது அவளால் நம்ப முடியவில்லை.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
190
வியன்காவிடம் தர்ஷன் “உங்களுக்கு என்ன கலர்ல வளையல் வேணும்?” என்று கடைக்கு அருகில் கொண்டு போய் காட்டினான்.

வியன்கா தன் அம்மாவிடம் “அம்மா நான் வளையல் வாங்கட்டுமா? நீங்க அப்புறம் காசு அனுப்பிடுங்க சரியா?” என்றதற்கு அவனோ “நான் எவ்வளவு கேட்டாலும் வியன் தருவீங்களா?”

“ம்ம்… முடியாது வளையல் எவ்வளவோ அது தான் தர முடியும்” என்று அவனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்.

அவனோ “சரி சரி” என்றதும் “ஒழுங்கா காட்டுங்க கலர் சரியா தெரியலை”என்று ஒரு அதட்டல் வேறு.

அவனோ சிரித்துக் கொண்டே “ம்ம்… ஓகே ஓகே” என்று அவளிடம் காட்டினான்.

இது எப்படி? அது என்ன? என்று பல கேள்விகளை கேட்டு இரண்டு வளையலை தேர்வு செய்து விட்டு “சீக்கிரம் வாங்கிட்டு வாங்க பாய்” என்று அங்கிருந்து ஓடி விட்டாள் வியன்கா.

ஆதிரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.தர்ஷன் சிரித்துக் கொண்டே “உங்களுக்கு என்ன கலர் வேணும் ஆதி?”

அவளோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் “ஆதி ஆதி” திரும்பவும் அழைத்தான்.

அவளோ முகமாறுதலுடன் “சொல்லுங்க”

அவளின் முகமாற்றத்தைக் கண்டவன் “என்னாச்சு ஆதி ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”

அவளோ “தர்ஷன் நான் அப்புறமா பேசட்டுமா?” என்றாள்.

தர்ஷன் பொறுமையாக… “சரிங்க ஆதி உங்களுக்கு எதாவது சொல்லனும்னா தயங்காமல் சொல்லுங்க” என்றாள்.

சரியென்று அழைப்பை துண்டித்தாள்.வியன்காவின் இன்னொரு துடிப்பான கிண்டல் பேச்சு எல்லாம் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.அவள் இப்படித் தான் தானே தவறாக எண்ணி விட்டோமோ! என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

ஆயிரம் சொல்ல முடியாத யோசனைகள் வந்து மொத்தமாய் நின்றது.தன்னுடைய விருப்பத்திற்காக அவளுடைய அன்பையும் வெளிப்படுத்தும் விதத்தை மாற்றி வைத்திருக்கிறோமோ? நீ இப்படித் தான் இருக்க வேண்டும் வியன்காவை கட்டாயப்படுத்துகிறோமோ! என்று எண்ணங்கள் வந்து போனது.ஆனால் இதற்கு காரணமானவனோ வேறு வாழ்க்கையை தேடிக் கொண்டு அவனுக்கு பிறந்த இன்னொரு குழந்தைக்கு எல்லாம் கிடைக்கிறது என்ற கோபமும் இயலாமையும் அவளை இன்னும் வேதனைப்படுத்தியது.

நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று அழைப்பை துண்டித்தது அவனுக்கும் கவலையாக இருந்தது.வெளிப்படையாக கேட்க முடியாத நிலைமையில் இருந்தான் தர்ஷன்.அந்தளவிற்கு அவர்களுக்கான பழக்கம் என்பது இல்லையே! என்று நினைத்தான்.

ஆதிரை யோசனையாக அமர்ந்திருப்பதைப் பார்த்த அவளது அம்மா அஞ்சலி அருகில் வந்து அமர்ந்து “ஏன்ம்மா முகமே சரியில்லை”

“அம்மா வியன்காவுக்கு என்னால முடிஞ்ச வரை எல்லா சந்தோஷத்தையும் நான் கொடுக்கிறேன் அம்மா ஆனால்…” என்று இழுத்தாள்.

மகளின் நிலைமையை ஓரளவு புரிந்துக் கொண்டவர் “எல்லா சந்தோஷமும் கொடுக்கலாம் ஆனால் அவளுக்கான அப்பா என்கிற உறவை உன்னால தர முடியாதும்மா” என்றதும் விழிகளில் கண்ணீர் நிரப்பிக் கொண்டது ஆதிரைக்கு.

“அம்மா நான் வேணும்னு அப்படி செய்யலைம்மா”

“எனக்குத் தெரியும் ஆதிரை. சில இடங்கள்ல அம்மா இல்லாத குறையை அப்பாவுல நிவர்த்தி பண்ண முடியாதும்மா”

“ஆனால் அப்படி நினைச்சு ஆரம்பிக்கிற வாழ்க்கை கடைசில ஏன்டா இந்த புது உறவை ஏத்துகிட்டோம்னு நினைக்க வைக்குதும்மா” என்று ஆதிரை சொன்னதும் அதைக்கேட்டு சிரித்தவர் “உண்மை தான் முதல் தடவை நடந்த தவறு திரும்ப செய்யக் கூடாது என்பதற்குத் தானே அதை திருத்தி சரி செய்யறது தானே முறை இந்த தடவை ஒன்றுக்கு பலமுறை யோசித்து பழகி கூட எடுக்கலாமே! எல்லாம் மனசை பொறுத்து இருக்கு ஆதிரை” என்றார்.

அவளோ ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்க “என்னாச்சு ஆதிரை நீ திடீர்னு இப்படி யோசிக்க காரணம்?”

பெங்களூரில் அரவிந்த்தை சந்தித்தது அவன் குடும்பம் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.அமைதியாக இருந்தார்.“அந்த இடத்துல நான் ஒருநிமிசம் வியன்காவை தான் நினைச்சேன்” என்றாள்.

“புரியுது ஆதிரை அவ்வளவு அநியாயம் செய்த அவன் நல்லா இருக்கான் உனக்கென்ன வியன்காவுக்கும் அந்த குறை சீக்கிரம் மறைஞ்சு போகும் ஆதி கவலைப்படாதே! இருந்தாலும் உன்னோடு முடிவும் முக்கியம்” என்றார்.

ஆதிரை என்னச் செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் உட்கார்ந்தாள்.அப்பொழுது தர்ஷனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

“என்னன்னு தெரியலை ஆதி நீங்க சரியாக பேசலை ஏதோ எனக்கும் மனசே சரியில்லை இதுவும் கடந்து போகும் அவ்வளவுதான் வாழ்க்கை” என்று அனுப்பினான்.

அவன் அனுப்பிய குறுஞ்செய்தியில் மொத்த கவலையும் தீர்ந்தது போல் இருந்தது ஆதிரைக்கு.என்னவென்று தெரியாமல் அவனின் ஆறுதல் மொழிகள் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மனதை லேசாக ஆரம்பித்தது.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top