- Joined
- Aug 31, 2024
- Messages
- 13
- Thread Author
- #1
அத்தியாயம் - 1
அமாவாசை இருளை மின் நிலைய உபயத்தால் மின் விளக்குகள் விரட்டி அடித்தது பொறுக்காமல், கரு மேகங்கள் திரண்டு வந்து மின்சாரத்தைத் தடைச் செய்திருந்தது. எதிரில் வருவது என்னவென்று கணிக்க முடியாத இருட்டில் சாலையின் ஓரம் முகம் மூடி உதயன் நடந்து கொண்டிருந்தான்.ஆமையாக மெல்ல நடந்த உதயன் இரயிலைப் போல் மெல்ல மெல்ல தன் வேகத்தைக் கூட்டியவன், சட்டென்று வேகத்தைக் குறைத்து நின்று தன் காதுகளைக் கூர்மையாக்கினான். ‘சரக் சரக்’ என்ற சத்தம் தன் பின்னாடி கேட்க, அருகிலிருந்த மரத்தில் தன்னை மறைத்துக் கொண்டு, சத்தம் வந்த திசை நோக்கிக் காதுகளைக் கூர் தீட்டினான்.
நாய் சருகுகளில் விளையாடும் சத்தமென்று சாலைக்கு வந்து மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பிடித்துக் கொள்ள, நனைந்தபடிப் பத்து நிமிட நடை நடந்து ஓரமாக நிறுத்தியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை இயக்கிப் புறப்பட்டான்.
கைப்பேசியில் உள்ள கூகுள் வரைபடத்தின் உதவியால் தான் செல்ல வேண்டிய இடத்தை வந்தடைந்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதும், இரவிலும் பளபளவென்று ஒளி வீசும் புத்தம் புதுக் கத்தியை வண்டியிலிருந்து எடுத்துத் தன் முதுகில் சொருகிக் கொண்டான்.
முகத்தில் கட்டியிருந்த கருப்புத் துணியை இறுகக் கட்டியபடியே, நீர் சொட்டச் சொட்ட ஓர் வீட்டின் வாசலில் வந்து நின்று, வீட்டை நிமிர்ந்து பார்த்து மெல்ல நகர்ந்து சுற்றுச் சுவர் கதவின் அருகில் நின்றான்.
கதவின் இடுக்கு வழியாக நாயும் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியும் இருக்கிறதா எனக் கண்களைச் சுழற்றி இல்லையென்று உறுதி செய்தபின் ஒவ்வொரு அடியாகக் கதவின் மேல் ஏறி மறுபக்கம் குதித்து, ஓசையின்றி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்துச் சென்று வீட்டின் வாசல் முன் நின்றான்.
வெளியில் நின்று பார்க்கும்போது இருட்டில் தெரியாத கருப்பு நிற நாய் கண்கள் பளபளக்கத் தன் முகத்தை நிமிர்த்தி உதயனைப் பார்க்க, அவன் மிரண்டு அசையாமல் நிற்க, நீர்யானை வாயைத் திறப்பது போல் கொட்டாவி விட்டு, உடலை விறைப்பாக வைத்துத் தளர்த்தியபடியே திரும்பிப் படுத்துக் கண்களை மூடித் தூங்கத் தொடங்கியது நாய்.
குரைத்து எல்லோரையும் எழுப்பி விடுமோ என்ற பயத்தில் நின்ற உதயன் ‘ஙே’ என முழித்தான். ‘ஒரு கிலோ கறியை எடுத்திரும்னு பார்த்தா… அதுபாட்டுக்குத் தூங்குது. இதையும் நம்பி வீட்டுக் காவலுக்கு வைத்திருக்காங்க.’ எனத் தனக்குள் சிரித்துவிட்டு, வீட்டினுள் செல்ல வழி தேடினான்.
பால்கனியை ஒட்டினாற் போலத் தண்ணீர் குழாய் செல்ல அதைப் பிடித்துச் சரசரவெனெ ஏறிப் பால்கனியில் குதித்தது. அங்கிருந்த கதவைத் திறக்க முயற்சிக்கத் தாழ்பாள் போடப்பட்டிருந்ததால், உள்ளே செல்ல வேறு வழியிருக்கிறதா எனக் கீழே இறங்கிச் சுற்றி வந்த உருவம், வேறு வழியின்றி ஒலி குறைப்பான் பொறுத்தப்பட்ட கையடக்க இயந்திர ரம்பத்தை எடுத்துத் தாழ்ப்பாளை அறுக்க ஆரம்பித்தான்.
இரண்டே நிமிடங்களில் வேலையை முடித்துச் சத்தமே இல்லாமல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அறை முழுவதும் இரவு மின் விளக்கின் ஒளி பரவியிருந்தாலும் கண்கள் இருட்டைப் பழகச் சில நொடிகள் எடுக்க அசையாமல் நின்றான்.
ஒரே இடத்தில் நின்று ஒவ்வொரு அறையும் எங்கு இருக்கிறது எனப் பார்த்தபடி, மெல்ல மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினான். நான்கு படிகள் ஏறியதும். கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும் மடமடவெனக் கீழே இறங்கி படிகளின் கீழ் ஒளிந்து கொண்டான்.
யாரோ முணுமுணுக்கும் சத்தம் கேட்கவும், காதைத் தீட்டி வைக்க, “தினமும் சொல்றேன் படுக்கிறதுக்கு முன்னாடி குடிக்கத் தண்ணி எடுத்து வைன்னு, எங்க கேட்கிறா? கல்யாணம் முடிஞ்சதிலிருந்து நான்தான் பாதி இராத்திரியில் எழுந்து வர வேண்டியிருக்கு” எனச் சலித்தபடி சென்றார் குடும்பத் தலைவர் பாலன்.
“ஏன் படுக்கிறதுக்கு முன்னாடி நான்தான் தண்ணி எடுத்து வைக்கனுமா? தினமும் என்னிடம் சொல்லிப் பாதி இராத்திரியில் பேய் மாதிரி உலாத்துறதுக்கு, நீங்களே எடுத்து வச்சிட்டுப் படுக்க வேண்டியதுதானே?” என்றார் குடும்பத் தர்ம பத்தினி ஈஸ்வரி.
“நான் ஒண்ணும் சொல்லலை. போப்போய்ப் படு. அப்புறம் பேய்னு பூசாரியைக் கூட்டிட்டு வந்தாலும் வந்திருவ” எனத் தன் புலம்பலை மீண்டும் தொடர்ந்தபடியே சமையல் அறைக்குள் சென்றார் பாலன்.
“ஆமா ஒரு நாள் நிசமாவே பேய் வந்து நிற்கப் போகுது, நான் நீங்கதான்னு அது கூடப் பேசிட்டு இருக்கப் போறேன்” தன் கிண்டலை விடாது பேசினார் ஈஸ்வரி.
“அதுபாட்டுக்கு உலாத்தினா உலாத்திட்டுப் போகுது. அதுகிட்ட உன் முகத்தைக் காட்டி அதோட வாழ்க்கையில் எதுக்கு விளையாடப் போற?” அர்த்த இராத்திரியில் மாடிப்படியின் கீழ் ஒருவன் மறைந்து இருப்பது தெரியாமல், இருவரின் கேலியும் கிண்டலும் குறையவில்லை.
“உங்களுக்கு இனிமே தண்ணி மட்டுமில்லை சாப்பாடும் கிடையாது” என்ற ஈஸ்வரி கதவைப் படாரென்று அடைத்தார்.
“அப்பப்பா என்ன கோபம்.” என்று புன்னகைத்த பாலன் சமையல் அறைக்குள் நுழைந்து, தண்ணீர் பருகிவிட்டு பாட்டிலிலும் நிரப்பியவர் படுக்கும் அறைக்குள் புகுந்தார்.
இருவரும் இனிமேல் வரமாட்டார்கள் என நினைத்த உருவம் மெல்ல வெளியில் வந்து மீண்டும் மாடிப்படியில் ஏறத் தொடங்கியது. மேலே மூன்று அறைகள் இருக்க, கூர்ந்து பார்த்துவிட்டு ஒரு அறையை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது. அறையின் தாழ்பாளில் கை வைக்கப் போக, கதவு தானாகத் திறக்க ஒரே பாய்ச்சலில் பாய்ந்து மீண்டும் கீழே சென்று மறைந்தான்.
“ஏன் கவி உனக்குச் சந்தேகம் கேட்க, நேரம் காலமே இல்லையா? எப்ப பாரு நடுச் சாமத்தில்தான் கேட்பியா?” எனத் தன் தோழியிடம் சலிப்போடு பொறிந்து கொண்டிருந்தாள் வீட்டின் இளவரசி தாரிகா.
எதிர்முனை அவள் தோழி அவசரப்படுத்த, “அட இரும்மா. புக்கை எங்க வச்சேன்னு தெரியலை. தேடிட்டு இருக்கேன்.” மேசையின் மீதிருந்த புத்தகம் கண்களுக்குத் தெரிய அதை எடுத்துத் திரும்பியவள் மாடிப்படியின் கீழே அசைவு தெரியவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
தாரிகாவிடமிருந்து எந்தச் சத்தமும் வராததால், அவள் தோழி கைப்பேசியில் அலறிக் கொண்டிருந்தாள். அவள் கத்தியது காதில் ஈயத்தைப் பாய்ச்சுவது போல் இருக்க, “ஐயோ! ஏன் இப்படிக் கத்தி கூப்பாடு போடுற? மாடிப்படிக்குக் கீழே யாரோ இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. அதான் பயந்துட்டேன். அழுக்குக் கூடையை அம்மா அங்க வச்சிருக்காங்க. அதைப் பார்த்துப் பயந்துட்டேன்” எனத் தோழியிடம் புலம்பியபடியே மேலே சென்றாள்.
தாரிகா சட்டென்று மாடிப்படிப் பக்கம் திரும்பியதும் அருகிலிருந்த அழுக்குத் துணி போடும் கூடைய முன்னாடி வைத்து மறைத்துக் கொண்ட உதயன், அவள் சென்றதை உறுதி செய்தபிறகு, வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தபின், தலையைத் தூக்கி மாடியில் பார்த்து யாருமில்லை என்றதும் மீண்டும் மேலே ஏறினான்.
ஏற்கனவே திறக்கப் போன அறையில் தாரிகா இருப்பது தெரிந்ததால், அடுத்த அறைக்குச் சென்று கதவைத் திறக்க முயற்சிக்க, முடியாமல் கைபேசியிலிருந்த விளக்கின் ஒளியால் கதவில் பூட்டு தொங்குவதைக் கண்டதும், அடுத்த அறையை நோக்கி எட்டெடுத்து வைத்தான்.
Last edited: