• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

துடிக்கும் ரோஜா - 1

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
13

அத்தியாயம் - 1
அமாவாசை இருளை மின் நிலைய உபயத்தால் மின் விளக்குகள் விரட்டி அடித்தது பொறுக்காமல், கரு மேகங்கள் திரண்டு வந்து மின்சாரத்தைத் தடைச் செய்திருந்தது. எதிரில் வருவது என்னவென்று கணிக்க முடியாத இருட்டில் சாலையின் ஓரம் முகம் மூடி உதயன் நடந்து கொண்டிருந்தான்.

ஆமையாக மெல்ல நடந்த உதயன் இரயிலைப் போல் மெல்ல மெல்ல தன் வேகத்தைக் கூட்டியவன், சட்டென்று வேகத்தைக் குறைத்து நின்று தன் காதுகளைக் கூர்மையாக்கினான். ‘சரக் சரக்’ என்ற சத்தம் தன் பின்னாடி கேட்க, அருகிலிருந்த மரத்தில் தன்னை மறைத்துக் கொண்டு, சத்தம் வந்த திசை நோக்கிக் காதுகளைக் கூர் தீட்டினான்.

நாய் சருகுகளில் விளையாடும் சத்தமென்று சாலைக்கு வந்து மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பிடித்துக் கொள்ள, நனைந்தபடிப் பத்து நிமிட நடை நடந்து ஓரமாக நிறுத்தியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை இயக்கிப் புறப்பட்டான்.

கைப்பேசியில் உள்ள கூகுள் வரைபடத்தின் உதவியால் தான் செல்ல வேண்டிய இடத்தை வந்தடைந்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதும், இரவிலும் பளபளவென்று ஒளி வீசும் புத்தம் புதுக் கத்தியை வண்டியிலிருந்து எடுத்துத் தன் முதுகில் சொருகிக் கொண்டான்.

முகத்தில் கட்டியிருந்த கருப்புத் துணியை இறுகக் கட்டியபடியே, நீர் சொட்டச் சொட்ட ஓர் வீட்டின் வாசலில் வந்து நின்று, வீட்டை நிமிர்ந்து பார்த்து மெல்ல நகர்ந்து சுற்றுச் சுவர் கதவின் அருகில் நின்றான்.

கதவின் இடுக்கு வழியாக நாயும் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியும் இருக்கிறதா எனக் கண்களைச் சுழற்றி இல்லையென்று உறுதி செய்தபின் ஒவ்வொரு அடியாகக் கதவின் மேல் ஏறி மறுபக்கம் குதித்து, ஓசையின்றி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்துச் சென்று வீட்டின் வாசல் முன் நின்றான்.

வெளியில் நின்று பார்க்கும்போது இருட்டில் தெரியாத கருப்பு நிற நாய் கண்கள் பளபளக்கத் தன் முகத்தை நிமிர்த்தி உதயனைப் பார்க்க, அவன் மிரண்டு அசையாமல் நிற்க, நீர்யானை வாயைத் திறப்பது போல் கொட்டாவி விட்டு, உடலை விறைப்பாக வைத்துத் தளர்த்தியபடியே திரும்பிப் படுத்துக் கண்களை மூடித் தூங்கத் தொடங்கியது நாய்.

குரைத்து எல்லோரையும் எழுப்பி விடுமோ என்ற பயத்தில் நின்ற உதயன் ‘ஙே’ என முழித்தான். ‘ஒரு கிலோ கறியை எடுத்திரும்னு பார்த்தா… அதுபாட்டுக்குத் தூங்குது. இதையும் நம்பி வீட்டுக் காவலுக்கு வைத்திருக்காங்க.’ எனத் தனக்குள் சிரித்துவிட்டு, வீட்டினுள் செல்ல வழி தேடினான்.

பால்கனியை ஒட்டினாற் போலத் தண்ணீர் குழாய் செல்ல அதைப் பிடித்துச் சரசரவெனெ ஏறிப் பால்கனியில் குதித்தது. அங்கிருந்த கதவைத் திறக்க முயற்சிக்கத் தாழ்பாள் போடப்பட்டிருந்ததால், உள்ளே செல்ல வேறு வழியிருக்கிறதா எனக் கீழே இறங்கிச் சுற்றி வந்த உருவம், வேறு வழியின்றி ஒலி குறைப்பான் பொறுத்தப்பட்ட கையடக்க இயந்திர ரம்பத்தை எடுத்துத் தாழ்ப்பாளை அறுக்க ஆரம்பித்தான்.

இரண்டே நிமிடங்களில் வேலையை முடித்துச் சத்தமே இல்லாமல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அறை முழுவதும் இரவு மின் விளக்கின் ஒளி பரவியிருந்தாலும் கண்கள் இருட்டைப் பழகச் சில நொடிகள் எடுக்க அசையாமல் நின்றான்.

ஒரே இடத்தில் நின்று ஒவ்வொரு அறையும் எங்கு இருக்கிறது எனப் பார்த்தபடி, மெல்ல மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினான். நான்கு படிகள் ஏறியதும். கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும் மடமடவெனக் கீழே இறங்கி படிகளின் கீழ் ஒளிந்து கொண்டான்.

யாரோ முணுமுணுக்கும் சத்தம் கேட்கவும், காதைத் தீட்டி வைக்க, “தினமும் சொல்றேன் படுக்கிறதுக்கு முன்னாடி குடிக்கத் தண்ணி எடுத்து வைன்னு, எங்க கேட்கிறா? கல்யாணம் முடிஞ்சதிலிருந்து நான்தான் பாதி இராத்திரியில் எழுந்து வர வேண்டியிருக்கு” எனச் சலித்தபடி சென்றார் குடும்பத் தலைவர் பாலன்.

“ஏன் படுக்கிறதுக்கு முன்னாடி நான்தான் தண்ணி எடுத்து வைக்கனுமா? தினமும் என்னிடம் சொல்லிப் பாதி இராத்திரியில் பேய் மாதிரி உலாத்துறதுக்கு, நீங்களே எடுத்து வச்சிட்டுப் படுக்க வேண்டியதுதானே?” என்றார் குடும்பத் தர்ம பத்தினி ஈஸ்வரி.

“நான் ஒண்ணும் சொல்லலை. போப்போய்ப் படு. அப்புறம் பேய்னு பூசாரியைக் கூட்டிட்டு வந்தாலும் வந்திருவ” எனத் தன் புலம்பலை மீண்டும் தொடர்ந்தபடியே சமையல் அறைக்குள் சென்றார் பாலன்.

“ஆமா ஒரு நாள் நிசமாவே பேய் வந்து நிற்கப் போகுது, நான் நீங்கதான்னு அது கூடப் பேசிட்டு இருக்கப் போறேன்” தன் கிண்டலை விடாது பேசினார் ஈஸ்வரி.

“அதுபாட்டுக்கு உலாத்தினா உலாத்திட்டுப் போகுது. அதுகிட்ட உன் முகத்தைக் காட்டி அதோட வாழ்க்கையில் எதுக்கு விளையாடப் போற?” அர்த்த இராத்திரியில் மாடிப்படியின் கீழ் ஒருவன் மறைந்து இருப்பது தெரியாமல், இருவரின் கேலியும் கிண்டலும் குறையவில்லை.

“உங்களுக்கு இனிமே தண்ணி மட்டுமில்லை சாப்பாடும் கிடையாது” என்ற ஈஸ்வரி கதவைப் படாரென்று அடைத்தார்.

“அப்பப்பா என்ன கோபம்.” என்று புன்னகைத்த பாலன் சமையல் அறைக்குள் நுழைந்து, தண்ணீர் பருகிவிட்டு பாட்டிலிலும் நிரப்பியவர் படுக்கும் அறைக்குள் புகுந்தார்.

இருவரும் இனிமேல் வரமாட்டார்கள் என நினைத்த உருவம் மெல்ல வெளியில் வந்து மீண்டும் மாடிப்படியில் ஏறத் தொடங்கியது. மேலே மூன்று அறைகள் இருக்க, கூர்ந்து பார்த்துவிட்டு ஒரு அறையை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது. அறையின் தாழ்பாளில் கை வைக்கப் போக, கதவு தானாகத் திறக்க ஒரே பாய்ச்சலில் பாய்ந்து மீண்டும் கீழே சென்று மறைந்தான்.

“ஏன் கவி உனக்குச் சந்தேகம் கேட்க, நேரம் காலமே இல்லையா? எப்ப பாரு நடுச் சாமத்தில்தான் கேட்பியா?” எனத் தன் தோழியிடம் சலிப்போடு பொறிந்து கொண்டிருந்தாள் வீட்டின் இளவரசி தாரிகா.

எதிர்முனை அவள் தோழி அவசரப்படுத்த, “அட இரும்மா. புக்கை எங்க வச்சேன்னு தெரியலை. தேடிட்டு இருக்கேன்.” மேசையின் மீதிருந்த புத்தகம் கண்களுக்குத் தெரிய அதை எடுத்துத் திரும்பியவள் மாடிப்படியின் கீழே அசைவு தெரியவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தாரிகாவிடமிருந்து எந்தச் சத்தமும் வராததால், அவள் தோழி கைப்பேசியில் அலறிக் கொண்டிருந்தாள். அவள் கத்தியது காதில் ஈயத்தைப் பாய்ச்சுவது போல் இருக்க, “ஐயோ! ஏன் இப்படிக் கத்தி கூப்பாடு போடுற? மாடிப்படிக்குக் கீழே யாரோ இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. அதான் பயந்துட்டேன். அழுக்குக் கூடையை அம்மா அங்க வச்சிருக்காங்க. அதைப் பார்த்துப் பயந்துட்டேன்” எனத் தோழியிடம் புலம்பியபடியே மேலே சென்றாள்.

தாரிகா சட்டென்று மாடிப்படிப் பக்கம் திரும்பியதும் அருகிலிருந்த அழுக்குத் துணி போடும் கூடைய முன்னாடி வைத்து மறைத்துக் கொண்ட உதயன், அவள் சென்றதை உறுதி செய்தபிறகு, வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தபின், தலையைத் தூக்கி மாடியில் பார்த்து யாருமில்லை என்றதும் மீண்டும் மேலே ஏறினான்.


ஏற்கனவே திறக்கப் போன அறையில் தாரிகா இருப்பது தெரிந்ததால், அடுத்த அறைக்குச் சென்று கதவைத் திறக்க முயற்சிக்க, முடியாமல் கைபேசியிலிருந்த விளக்கின் ஒளியால் கதவில் பூட்டு தொங்குவதைக் கண்டதும், அடுத்த அறையை நோக்கி எட்டெடுத்து வைத்தான்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
13
கதவைத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டியவன், கட்டிலில் இரு கால்களையும் விரித்தபடி மல்லாக்க படுத்திருந்த வீட்டின் இளவரசன் கவினை கொலை வெறியோடு பார்த்தவன் அவனருகில் ஓசை இல்லாமல் நின்றான்.
தன் முதுகில் சொருகியிருந்த கத்தியை எடுத்துத் தன் முகத்தில் மெல்ல தடவி யோசித்தவன் அதே கத்தியால் கவினைத் தட்டி எழுப்பினான். அவன் கண்கள் மெல்ல அசைந்து திறக்க முடியாத இமைகளைச் சிறிது சிறிதாகத் திறந்ததும், அதிர்ந்து எழுந்து அமர்ந்தான்.

கவினின் சத்தம் வெளி வருவதற்குள் சற்றும் தாமதிக்காமல், கத்தியை அவன் நெஞ்சில் உதயன் சொருக, “அம்மா!” என்ற அலறலைத் தொடர்ந்து “வீல்!” என்ற சத்தம் கேட்க, மேலே வரும் காலடிச் சத்தங்கள் கேட்டதும், தான் வந்த வேலையை முடித்த உதயன் தன்னை மறைத்துக் கொண்டான்.

திரையின் பின்னால் மறைந்திருந்த உதயனின் மீது பார்வையைப் பதித்தப்படியே உயிரை விட்டிருந்தான் கவின். மற்றவர்கள் கவின் அறைக்குள் வருவதற்குள் மறைந்திருந்த உதயன் மெல்ல மெல்ல நகர்ந்து யாருக்கும் தெரியாமல் அவ்வீட்டிலிருந்து வெளியே பறந்தான்.

‘வீல்’ என்ற சத்தம் கேட்டதும் பாலனும் ஈஸ்வரியும் அடித்துப் பிடித்து மேலே ஏறி, தாரிகாவின் அறைக்குள் செல்ல, காதைப் பொத்திக் கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
தாரிகா தோளின் மீது ஈஸ்வரி கை வைக்கவும் மீண்டும் அலறியவளை அணைத்துக் கொண்டு, “என்ன ஆச்சும்மா, ஏன் கத்துன? எதையும் பார்த்துப் பயந்துட்டியா?” என்ற ஈஸ்வரியின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் திருதிருவென முழித்தாள்.

“என்ன முழிக்கிற? எதுக்குக் கத்தின?” பாலன் அதட்டலாகக் கேட்டார்.

“அம்மா, நான் கத்தலை. அண்ணன் கத்தினாங்க. அதான் நானும் கத்தினேன்” என்று கைகள் பயத்தில் நடுங்கியது.

“கவின் கத்தினானா! அவன் சத்தம் எங்களுக்குக் கேட்கவே இல்லை!” என்று மூவரும் அவன் அறைக்குள் ஓடினார்கள். பேய் அறைந்தது போல் உட்கார்ந்திருந்தவனை மூவரும் சேர்ந்து உலுக்கியதும் சுய நினைவுக்கு வந்தவன், தன் நெஞ்சுப் பகுதியில் தொட்டுத் தொட்டுப் பார்த்தான்.

“என்ன ஆச்சு கவின் நெஞ்சு வலிக்குதா? எதுக்கு நெஞ்சைத் தொட்டுப் பார்த்துட்டு இருக்க?” பாலன் அவன் மார்பில் தடவினார்.

“கத்தியால் குத்திட்டான்பா” எனப் பிதற்றினான் கவின்.

“அம்மா, ஒன்னு மூளை இருக்கனும். இல்லை, களிமண் இருக்கனும். அண்ணனுக்கு ரெண்டுமே கிடையாது. அதான் தூக்கத்தில் எழுந்து சத்தம் போட்டு என்னைப் பயமுறுத்தினதும் இல்லாம, கத்தியைத் தேடிட்டு இருக்காங்க” என்று ஈஸ்வரியின் காதில் தாரிகா கிசுகிசுக்க, அவர் முறைக்கவும் குனிந்து கொண்டாள்.

“கவின் என்ன உளறிட்டு இருக்க? எதுக்குக் கத்தின? முதலில் அதைச் சொல்லு” என ஈஸ்வரி அதட்டினார்.

“அம்மா, யாரோ என்னைக் கத்தியால்…” என்று இழுத்தவன் கண்களைத் திரும்பத் திரும்ப மூடித் திறந்து, தன் தலையைப் பிடித்து வலமும் இடமும் திரும்பித் திரும்பி யோசிக்க, ஒரு வாரத்திற்கு முன் நடந்த கொலையைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கியதால், அந்தச் சம்பவம் கனவாக வரத் தன்னையே கொலை செய்வது போல் கண்டதும் தூக்கத்தில் அலறியதைக் கூறினான்.

“அண்ணா, உங்களுக்கு ஐபிஎஸ் பதவி எப்படிக் கொடுத்தாங்க? தினமும் ஏதாவது கேஸைப் பார்த்துட்டு வந்து புலம்பறதே வேலையா போச்சு. இன்னைக்கு ஓவரா போய் உங்களையே போட்டுத் தள்ளிட்டானா?” எனக் கேலியாகக் கேட்க, அவள் தலையில் குட்டினான் கவின்.

பாலன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து, “இதைக் குடிச்சிட்டுப் படு. நல்லா தூக்கம் வரும். ஐஏஎஸ் படிக்கப் போய்ட்டு ஐபிஎஸ் ஆகி வந்து நிற்க. போலீஸ் வேலை வேண்டாம்னுச் சொன்னேன் கேட்கலை. இப்பவும் ஒன்னும் இல்லை. நீ அந்த வேலையை விட்டுட்டு வேற வேலை பாரேன்” என்றார் பாலன்.

“அப்பா, அந்தக் கேஸைப் பற்றி நினைச்சிட்டே படுத்தேன். அதான் கனவா வந்திருக்கு. எதுனாலும் நமக்குன்னு வரும்போது பயம் இருக்கும்தானே? அதான் அலறிட்டேன்” எனப் பாலனைச் சாமாதானம் செய்தான்.

“தூக்கத்தில் பயந்து கத்துற அளவுக்கு அப்படி என்ன கேஸ்?” எனத் தாரிகா கேட்க,
கொலை நடந்த விதத்தைத் தான் கனவாகக் கண்டதைச் சொன்னதும், மூவரும் திறந்த வாய் மூடாமல் இருந்தனர். தாரிகா தன் தாயின் கையைப் பிடித்தவள், “அம்மா, நான் தனியா படுக்கலை. உங்க கூடப் படுத்துக்கிறேன். கத்தி இதயத்தைத் குத்திட்டுப் போயிருக்கிறதை நினைக்கும் போதே நெஞ்சு படபடன்னு அடிக்குது. நேரில் பார்த்த அண்ணன் கத்தாமல் என்ன செய்வாங்க” ஈஸ்வரியின் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.

மற்ற மூவரும் சிரிக்க, “கொலைகாரனைப் பற்றி ஏதாவது துப்புக் கிடைச்சுதா?” பாலன் கேட்க,

‘ம்ம்கூம்’ என்று மூச்சை இழுத்த கவின், “காதல் வேண்டாம் நித்திரைக் கொள் இதயமேன்னு எழுதி வச்சிட்டுப் போயிருக்கான். கத்தி, எழுதி வைத்த பேப்பர்தான் தடயம். ரெண்டிலும் கைரேகையும் இல்லை. வேற எந்தத் தடயமும் இல்லை. வேடிக்கை என்னன்னா கொலை பண்ணிட்டு ஃப்ரிட்ஜிலிருந்து மாவு எடுத்துத் தோசை ஊற்றிச் சாப்பிட்டுட்டு நிதானமா போயிருக்கான். ராத்திரி மூனு மணிக்கு என்ன பசியோ! காலையில் திரும்பவும் ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்க்கனும்பா.”

“தோசை ஊற்றிச் சாப்பிட்டானா! நல்ல வேளை கொலை பண்ணவனைச் சமைச்சு சாப்பிடாம இருந்தானே. போனவாரம் கூட நியூஸில் பார்த்தேன் ஒருத்தன் ஒருத்தியைக் கொலை பண்ணிட்டு அவ மூளையை வறுத்துச் சாப்பிட்டான்னு. அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.” எனச் சிரித்தபடித் தன் தாய் ஈஸ்வரியின் மடியில் கண்ணயர்ந்து விட்டாள் தாரிகா.


ஈஸ்வரி அவளுடன் படுத்துக் கொள்ள, கவினும் பாலனும் கீழ் உள்ள அறையில் உறங்கினர். காலை விடிந்ததும் விடியாததுமாகக் கவினின் கைப்பேசி அலறியது. இரவு தூக்கம் இல்லாததால் நடைப்பயிற்சிக்கும் செல்லாமல் அசந்து தூங்கிய கவின் கைப்பேசியின் சத்தத்தில் மெல்ல அசைந்து காதில் வைத்தவன் பதறியடித்து எழுந்து அமர்ந்தான்.
 
Last edited:

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top