- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
3
“என்ன ரதி இப்படிப் பண்ணிட்ட?” என்ற குரலில் தூக்கி வாரிப்போட திரும்பி சுற்றிலும் பார்த்தவளுக்கு, ‘இவன் தன்னிடம்தான் பேசினானா?’ என்ற சந்தேகமே வந்தது. அதன்பின் அவன் முகம் பார்க்க முயற்சிக்க, தனக்கு கீழுள்ள படியில் தன்னைப்போல் சாமியைப் பார்த்தபடி அமர்ந்திருந்ததால் பாதி முகம் மட்டுமே தெரிய, அதிலும் பாதியை அந்த கூலிங்கிளாஸும், ட்ரிம் செய்திருந்த தாடியும் மறைத்திருந்தது. குரலை மட்டுமே கேட்டவள், அவன் பேசப்பேச தன்னிடம்தான் சொல்கிறான் என்று புரியவே நிமிடங்களானது.
‘ரதி! எப்பொழுதாவது அன்பு மிகுதியில் அப்பா அழைக்கும் பெயர். தற்பொழுது அந்தப் பெயரில் கூட சின்னதாக வெறுப்பு இருந்தது. இந்தப் பெயர் இவனுக்கெப்படி?’ என்ற யோசனையில் அவனைப் பார்த்திருந்தாள்.
அவளைப் புரிந்தவனோ, “ரொம்ப யோசிக்காத ரதிமா. இனிமேல் இப்படிப் பண்ணாம படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு. உனக்கு எப்பவும் நான் இருக்கிறேன். எப்ப உன் முன்னாடி வரணும்னு ஒரு கணக்கு வச்சிருக்கேன். அதற்கு முன்னே என் முடிவை மாத்த வச்சிராத. அதேமாதிரி, உனக்கு ஒரு கஷ்டம்னு தெரிஞ்சா கண்டிப்பா வருவேன். இப்பவும் உன்னை நம்புறேன் உன் வாழ்க்கையை நீ கெடுத்துக்க மாட்டேன்னு” என்றவன் குரலில் உறுதியிருந்தது. அவள் பதிலுக்கு கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் எழுந்து சென்றுவிட்டான்.
சென்றவன் முதுகையே வெறித்தவளுக்கு முகத்தைக் காண முடியவில்லை. ‘உனக்கு எப்பவும் நான் இருக்கிறேன்! உன்னை நம்புறேன்! ஏன் அப்படிச் சொன்னான்?’ என்ற குழப்பத்தில் நிற்க, தாரிணி வந்து அழைத்த பின்பே நினைவிலிருந்து மீண்டவள், “வழி தெரிஞ்சிருச்சா?” என்றாள்.
“ஆமா பாக்கி. சீக்கிரம் வா. டூ ஹவர்ஸ்ல வந்துரலாம். மற்ற நாளோட இன்னைக்கு கூட்டம் கம்மிதானாம்” என்றதும் சரியென்று சம்மதித்து அவள் பின்னால் சென்றவள், தனக்கு அறிவுரை சொன்னவனைப் பற்றி தோழியிடம் சொல்ல மறந்திருந்தாள். ‘ஆனால், அந்தக்குரல் மறக்குமா!’
கைபேசியை அணைத்து கைப்பையில் வைத்து டோக்கன் பெற்று அங்கிருந்த கடையில் கொடுத்துவிட்டு, உள்ளே வரிசையில் சென்று சாமியை நெருங்கி, வேங்கடவனைப் பார்த்த அந்த நொடி எதுவும் வேண்டத் தோன்றவில்லை. யாரும் நினைவிலும் இல்லை. ஒருவித பரவசத்துடனும், தெளிந்த மனதுடனும் கண்களால் பார்த்து தன்னுள் நிறைத்துக் கொண்டிருந்தாள் அந்த ஸ்ரீனிவாசனை. இடிபாடுகளுடன் வெளியே வர மனம் வெற்றுக் காகிதமாய் தெளிவுடன் இருந்தது. வெளியே வந்து கைப்பையை வாங்கி கைபேசியை உயிர்ப்பிக்க செய்ய அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும் “எங்கமா இருக்க?” என்றான் படபடப்பாக.
அண்ணன் ப்ரவீணின் குரலில், “பஸ் எங்க நிற்கும்னு கேட்டுட்டு வர்றோம்ண்ணா” என்று அருகிலிருந்த சாமி புகைப்படங்கள் விற்கும் கடையை அடையாளம் சொன்னாள்.
“அங்கேயே நில்லு. இதோ இரண்டு நிமிஷத்துல வந்திருறேன்” என்று சொன்னாற்போல் வந்தவன், அவளின் அலங்காரத்தையும், அவளின் தோழியின் சாதா ஆடையையும் பார்த்ததுமே விஷயம் புரிய, “வா போகலாம்” என்றான் இறுகிய முகத்துடன்.
அவன் முகத்தில் அப்படி ஒரு வேதனை. இவளுக்காக எத்தனை உறவுகள், எத்தனை தியாகங்கள் செய்திருக்கிறார்கள். எதையும் உணராமல் தன் வாழ்க்கையை சிக்கலாக்க முடிவெடுத்தில் அதிக கோபம் வந்தது. பின், இத்திருமணத்திலிருந்து தப்பித்து விட்டதாக தோன்றினாலும், மனம் ஆறவில்லை அவனுக்கு. ஆனால், அதை நேரடியாக தங்கையிடம் காட்டவோ, வெறுக்கவோ அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. பார்த்துப் பார்த்து வளர்த்தவனாயிற்றே! அவளே அவனின் உயிர் என்றால் அது மிகையாகாது!”
“அ..அண்ணா அது..” என தயங்கிய தங்கை குற்றவுணர்வில் தலை கவிழந்தாள்.
“அம்மு எதுவும் பேச வேண்டாம். எதுக்கு தப்பு செய்யணும்? எதுக்கு தலை கவிழணும். என் தங்கை எப்பவும் நிமிர்ந்து நிற்கிறதுதான் எனக்கு பிடிக்கும்” என்று தோளணைத்து தன் கோபம் குறைத்து, “வா போகலாம்” என்றான் மென்மையான குரலில்.
இதையெல்லாம் பார்த்திருந்த தாரிணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏற்கனவே தன் அண்ணனைப் பற்றி சொல்லியிருக்கிறாள்தான். இருந்தாலும், தங்கையை இந்த கோலத்தில் பார்த்து அவள் மேல் கோபம் வந்த போதும் அதை மறைத்து, கோபத்தை முகத்தில் மட்டும் காட்டியவன் மறந்தும் குரலில் காட்டவில்லை. தங்கையின் தலைகுனிவு முகத்திலிருந்த கோபத்தையும் மறக்கடிக்க பொறுப்பான அண்ணனாய் மாறி தங்கையை தோள் தாங்கியவனை ஆச்சர்யமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் பார்த்தாள். ‘பாசக்கார பயபுள்ள’ என்று மனம் ஆசையாய் சடைத்துக் கொண்டது.
அவனோ தங்கையை விட்டு தோழியை முறைத்தான். முறைத்தான் என்பதை விட வெறுப்புடன் நோக்கினான் என்றே சொல்லலாம். அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது தாரிணி மேல். நட்பு என்ற பெயரில் நல்லது சொல்லிக் கொடுக்காமல் தப்புத்தப்பாக அறிவுரை சொல்லி, அவர்களின் வாழ்க்கையைக் கெடுக்கிறார்களே என்பதுதான்.
“அண்ணா இவ என் ஃப்ரண்ட். இவளும் என்னோடதான் வந்தா...” மேலே என்ன பேசியிருப்பாளோ, அதற்குள் வேகமாக பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து, அதிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்துத் தங்கையிடம் கொடுத்து, “அவங்களை பஸ்ல வரச்சொல்லிட்டு நீ வா” என்றபடி நடந்தான்.
“என்னது? தனியாவா?” என்றதில் ப்ரவீண் நிற்க, “அதெல்லாம் முடியாது நானும் அவளோடவே பஸ்ல வர்றேன்” என்றாள்.
கோபத்தில் தாரிணியை இன்னும் முறைத்தவன், “உன் ஃப்ரண்டையும் கூட்டிட்டு வா” என்றான் தங்கைக்குத் தெரியாமல் கடுகடுத்தபடி.
அவ்வளவு நேரம் அவனின் அண்ணன் பாசத்தை ரசித்திருந்தவள், தன்னை அலட்சியம் செய்தவன் மேல் கோபம் வர, “நான் உன்னோட கார்ல வரல பாக்கி. எனக்கு பஸ்சுக்கு மட்டும் பணம் கொடு. ஹாஸ்டல்ல போய் திருப்பித் தந்திருறேன். என்றாள் வீராப்பாக. ‘உன்னிடம் பணம் இருந்தால் அது உன்னோடு’ என்ற எண்ணத்தில்.
“நீ வேற ஏன்டி படுத்துற. வா” என்று காரில் ஏறச் சொல்லி ஓஎம்ஆர் ரோடு அருகிலிருக்கும் விடுதியில் இறக்கிவிட, “பாக்கி டேக் கேர்” என்றபடி உள்ளே சென்றாள்.
‘ஆமா. பண்றதெல்லாம் பண்ணிட்டு டேக் கேராம். யாருக்கு வேணும் உன்னோட டேக் கேர்’ என்று அவளை மனதிற்குள் திட்டிவிட்டு வீட்டிற்கு வந்ததும், “அம்மா இந்தாங்க உங்க பொண்ணு.” அவரிடம் ஒப்படைத்து அங்கிருந்த ஷோபாவில் அமைதியாக அமர்ந்தான்.
அவளின் கோலத்திலேயே புரிந்தவர் புதிராக புரியாமல், ‘ஏன்?’ என்பதுபோல் கண்களில் வலியுடன் பார்த்தார்.
தாயின் அந்த பார்வையில் மனம் அடிபட, “அம்மா நான் என்னோட படிக்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கத்தான் திருப்பதி போனேன். போன இடத்...” முடிக்குமுன் தாயின் அடி இடியாய் இறங்கியது.
முதல் அடிக்கு “அம்மா” என்றலறியவள் அதன்பின் மாறிமாறி வந்த அடிகளை வாயே திறக்காமல் அமைதியாக வாங்கிக் கொண்டிருந்தாள். தடுக்க நினைத்த ப்ரவீணை கண்களாலேயே தடுத்தார் சந்திரா.
“என்ன பண்ண இருந்திருக்க? உனக்காகன்னு ஒண்ணொன்னா பார்த்துப் பார்த்து செஞ்சதுக்கு நல்ல கூலி கொடுத்துட்டடி. சே.. இதுக்கு நீ என்னைக் கொன்னுருக்கலாம். உன்னை எப்படில்லாம் வளர்க்கணும்னு நினைச்ச உங்கப்பா ஆசையை, இப்படிக் கொன்னு புதைச்சிட்டு வந்துட்டியேடி. ஏன்? ஏன் இப்படிப் பண்ணின சொல்லு?” ஆத்திரத்தில் கத்த,
‘அப்பா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் தன் மனதில் உள்ளதை சொல்ல எண்ணியவள், அதன்பின் தன் தாயின் நிலை என்னாவதென்று அப்படியே விட்டு, தன் அமைதியைத் தொடர்ந்தாள்.
“சொல்லு ஏன் இப்படிப் பண்ணின? எப்படி இருந்த நீ.. ப்ச்... இப்படில்லாம் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைக்கல. வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்தி, “இது உனக்கு நல்லதுக்கில்லன்னு மட்டும் என்னால சொல்ல முடியும் பாகீ. உன்னை வளர்த்ததுல எங்க தப்பு பண்ணினேன்னு தெரியல. ஒரே பொண்ணுன்னு செல்லமா வளர்த்தாலும் நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான வளர்த்தேன். என் வளர்ப்பு தப்பா போயிருச்சின்னு இப்ப ஃபீல் பண்றேன். இந்த முகத்தை வச்சிக்கிட்டு எப்படிடி தப்புப்பண்ணத் தோணிச்சி?” கணவரின் குண இயல்பிலும் முகஜாடையிலும் பெண் இருப்பதாலேயே அப்படிக் கேட்டார்.
கண்டிக்கும் தாயை வலியுடன் ஒரு பார்வை பார்த்தவள், ‘உங்க வளர்ப்பு தப்புன்னு ஃபீல் பண்ற நீங்க, உங்க வாழ்க்கையே தப்பாகிப்போன கதை தெரிஞ்சா உடைஞ்சிருவீங்கம்மா. அதை மனசுக்குள்ள வச்சிக்கவும் முடியாம, உங்ககிட்ட சொல்லவும் முடியாம, நான் தவிக்கிறது எனக்குத்தான்ம்மா தெரியும். நீங்க இவ்வளவு கஷ்டப்படுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, என்னோட சோகத்தை என்னுள்ளே மறைச்சி இயல்பா இருக்க முயற்சித்திருப்பேன். என்னால நீங்க கஷ்பப்படுறதைப் பார்க்க முடியலம்மா. மனம் ஊமையாய் அழுதது.
“பேசுடி! உனக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொன்னால்தான தெரியும். எதுக்காக இந்த திடீர் க...” கல்யாணம் என்ற வார்த்தையே தொண்டைக்குள் அடைக்க, “ஏன் இப்படி ஒரு முடிவெடுத்த? சொல்லு ஏன்?” மகளை பிடித்து உலுக்கி, ஆத்திரம் அழுகையில் முடிந்தது.
இதுவரை அழுதே பார்த்திராத தாயின் கண்ணீர் அவளைக் கொல்லாமல் கொன்றது. ‘இப்ப என்னால அழற உங்களை, இனி என்னைக்கும் யாருக்காகவும் அழவிட மாட்டேனம்மா. தாயின் கண்ணீரைக் கண்டவள் மனதில் சபதமே செய்தாள். தாயிடம் சென்றவள் அவரின் கைபிடிக்க, அதை உணர்ந்த சந்திரா கையைத் தட்டிவிட்டார்.
“சாரிம்மா. நான் ஏன் இப்படிப் பண்ணினேன்னு காரணம் சொல்ல முடியாத சூழ்நிலையில இருக்கேன்” என்று தாயின் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தன் கையை மேலே வைத்து, “சத்தியம் பண்றேன்ம்மா. என் லைஃப்ல இனிமேல் இந்த மாதிரி ஒரு தப்பைப் பண்ணமாட்டேன். பண்ணமாட்டேன்றதை விட அதை நினைக்கவே மாட்டேன்ம்மா. என்னை நம்புங்க. உங்க பொண்ணு இனிமேல் படிப்புக்கு மட்டும்தான் இம்பார்டண்ட் கொடுப்பா. எனக்கான வாழ்க்கை முடிவு உங்க கையிலதான் இருக்கு” என்று தாயின் கைக்கு சிறு அழுத்தம் கொடுத்து மண்டியிட்டபடியே பேசினாள்.
மகளின் கண்களில் கண்ட உண்மையிலும், உடலிலுள்ள நிமிர்விலும் தன்னுடன் சேர்த்தணைத்து, “உன்னை நம்புறேன்டா. உன்னை நம்பாம வேற யாரை நம்பப்போறேன்” என்றார் கோபம் நீங்கியவராய். “சரி சாப்பிட்டியா?”
“இல்லம்மா. மேடம் சாப்பிடச் சொன்னா மாட்டேன்னுட்டாங்க. ஏன்னா இவங்க ஃப்ரண்ட் வேண்டாம் சொன்னாங்களாம்” என்ற ப்ரவீணின் குரலில் தாரிணி மேலுள்ள கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அண்ணா ப்ளீஸ். அவமேல எந்த தப்பும் இல்ல. அவ நல்லவ” என்றாள் தோழிக்காக.
“ஓ... அந்த நல்லவள் தான் திருட்டுக் கல்யாணம் பண்ணி வைக்க திருப்பதி வந்திருந்தாளா? நட்புன்னா என்னன்னு தெரியுமா அவளுக்கு?” என்றான் பற்களைக் கடித்தபடி.
“அண்ணா அவளோட பேச்சை விடுங்க. இப்ப நான் என்ன சொன்னாலும் கேட்கிற நிலைமையில நீங்க இல்ல. இதைப்பற்றி இன்னொரு டைம் பேசிக்கலாம்.”
“இன்னொரு டைமா தேவையில்லை. அவளோட ஃப்ரண்ட்ஷிப்பைக் கட் பண்ணிரு.”
“அதான் சொல்றேன்ல. தப்பு முழுக்க என் பேர்லன்னு. என்னோட ஃப்ரண்ட்ஸ் எந்த தப்பும் பண்ணல.”
“என்ன அவனையும் சேர்த்து காப்பாத்த நினைக்கிறியா? கண்டிப்பா என் கையில மாட்டும்போது பார்த்துக்கறேன்” என்றான் குரலில் கோபத்தைக் காட்டியபடி.
“உங்ககிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லை. “ம்மா நீங்களாவது நம்புங்கம்மா. அவ என்னைத் தடுக்கத்தான் செய்தா நான்தான்...” என்றாள் தாயிடம் தோழியைப் புரியவைக்கும் நோக்குடன்.
“கண்டிப்பா நான் நம்புறேன். இப்ப சாப்பிடவா. நீயும் தான்டா. வா ரொம்ப விரைச்சிக்கிட்டு நிற்கிற பாரு” என்றதும் மூவரும் உணவருந்தச் சென்றார்கள்.